படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, April 23, 2004

பொட்டலத்தில் சூழமை

சில நாட்களுக்கு முன்பு வாங்கிய பொருளொன்றின் பொட்டலத்தின் பின்புறம் அச்சடிக்கப்பட்டிருந்த சூழமை (Environment-ற்கு இணையான தமிழ்ச் சொல்லாக இராம.கி அவர்கள் திண்ணையில் குறித்திருந்ததை இன்று தற்செயலாகக் கண்டேன்; நன்றாகப்பட்டதால் உபயோகித்துப் பார்க்கிறேன். இதுகாறும் தெரிந்த வார்த்தைகள் - சூழல், சூழியல், சுற்றுப்புறச் சூழல் போன்ற சிலவைதான்) குறித்த சில தகவல்கள் கவனத்தை ஈர்த்தன.

முதலாவது, இப்பொட்டலத்தில் பிவிசி (பாலி வினைல் குளோரைடு) இல்லை. தற்காலத்தில், பிவிசி நம்மூரில் சகட்டு மேனிக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பிளாஸ்டிக் ஆயிற்றே, இதைப்போய் இல்லை என்று சொல்கிறார்களே என்று பார்க்க, பிறகு புரிந்தது இதன் மகத்துவம். பிளாஸ்டிக்குகளிலேயே அதிக அளவில் சூழமையைக் கெடுப்பது பிவிசி-தான் என்கிறார்கள். கிட்டத்தட்ட மறுசுழற்சியே செய்ய இயலாத பிவிசியின் வாழ்க்கைச் சுழற்சியின் எல்லா கட்டங்களிலும் - ஆக்கம், பயன்பாடு, அழிவு - குளோரினை அடிப்படையாகக் கொண்ட நச்சு வேதிப்பொருட்கள் வெளியிடப்படுகின்றன. இதன் விளைவாக, புற்றுநோய் முதலான கடும் உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன. முடிந்தவரையில் மாற்றுக்களை உபயோகிக்கப் பரிந்துரைக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் பலவுடன், சில அரசாங்கங்களும் (வளர்ந்த நாடுகளில்தான்!) பிவிசி உபயோகத்தை விட்டொழிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளனவாம். நம்மூரில் பரவலாக பிவிசி உபயோகப்படுத்தப்படுவதற்கு அதன் நீடித்த உழைப்புத்தன்மை மற்றும் குறைந்த விலை காரணம் என்று நினைக்கிறேன். கூடவே உடல் நலத்தையும், சூழமையையும் கருத்தில் கொண்டால் சரி.

இரண்டாவது, இக்காகித அட்டை தயாரிக்கும் பொருளில், கரும்புச் சக்கையிலிருந்து எடுக்கப்பட்ட மரமற்ற கூழும் கலந்துள்ளது. அட!

கடைசியாக, ஆவியாகும் கரிம வேதிப் பொருட்களற்ற (VOC-Volatile Organic Compound), தாவர எண்ணையால் தயாரிக்கப்பட்ட மையால் அச்சடிக்கப்பட்டது. பரவாயில்லையே! ஆ.க.வே.பொ [இடையில் புள்ளிகள் இல்லாமல் எழுதினால் 'ஆகவேபொ' :-) ] பற்றி நல்ல பல தகவல்களை இங்கே காணலாம். வேதியியல் வாத்தியார்கள் இவற்றைப் பற்றியெல்லாம் இணையத்தில், தமிழில் எழுதி வைப்பார்களாக!

No comments: