படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, September 26, 2004

இந்தியாவும் ஐநா பாதுகாப்புக் குழுவும்

சமீப காலங்களில் ஐநா பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடம்பெறக் கோரி இந்தியா முயற்சித்துக்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. எதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளத் தலைப்பட்டபோது தெரிந்து கொண்ட விஷயங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஐந்து நிரந்தர உறுப்பினர்களை அடங்கிய ஐநா பாதுகாப்புக் குழு, உலகைச் சரியான வகையில் பிரநிதித்துவப்படுத்தவில்லை என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து. ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதன் மூலம், அது ஜனநாயகத்துவம் மிக்க, அதிக பிரதிநிதித்துவம் கொண்ட, மேலும் வலுவான அமைப்பாக விளங்கும் என்கிறார்கள். அதற்காகக் கூறப்படும் காரணங்களில் சில:

இந்தியா ஒரு பில்லியனுக்கும் (நூறு கோடி) அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது (உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இது ஆறில் ஒரு பகுதி).
உலகின் மிகப்பெரிய, நிலையான, இயங்கும் ஜனநாயக நாடாக விளங்குகிறது.
வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
அளவில் பெரியதும், நுட்பியல் வல்லமையும் பெற்ற பலமான இராணுவத்தைக் கொண்டுள்ளது.
உலகின் ஆபத்தான சில பகுதிகளில் ஏற்கனவே இந்திய இராணுவம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

ஐநா பாதுகாப்புக் குழுவானது ஐந்து நிரந்தர (அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா), பத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஆயுள் இரண்டாண்டு காலம்; ஒரு வருட இடைவெளியை அடுத்து மீண்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு. இந்தியாவும் சில முறை தேர்ந்தெடுக்கப்பட்டதுண்டு.

ஐநாவின் மற்ற அமைப்புகளெல்லாம் அரசாங்கங்களுக்கு பரிந்துரைகளையே வழங்க இயலும், ஆனால் பாதுகாப்புக் குழுவிற்கு மட்டுமே உள்ள அதிகாரத்தின்படி உறுப்பு நாடுகள் அதன் முடிவுகளைக் கண்டிப்பாக செயல்படுத்தியாக வேண்டும். பாதுகாப்புக் குழுவின் முடிவுகளை ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்த ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஐநா பாதுகாப்புக் குழுவின் செயல்பாடுகளும் அதிகாரங்களும்

ஐநாவின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கிணங்க உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல்;
பன்னாட்டு நெருக்கடியைத் தோற்றுவிக்க வழிகோலும் பிரச்சனைகள் அல்லது சூழ்நிலைகளை ஆராய்தல்;
அவ்வாறான பிரச்சனைகளுக்கு ஒத்துப் போகும் அல்லது தீர்க்கும் வழிகளைப் பரிந்துரைத்தல்;
ஆயுதங்களை ஒழுங்கமைக்கும் அமைப்பை உருவாக்கத் திட்டங்களை வரைதல்;
அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஓர் அச்சுறுத்தல் அல்லது படையெடுப்பைக் கண்டறிந்து அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாமெனப் பரிந்துரைத்தல்;
படையெடுப்பு நடவாதிருக்க அல்லது தடுக்கும் பொருட்டு பொருளாதாரத் தடைகள் மற்றும் இதர நடவடிக்கைகளை எடுக்க மற்ற உறுப்பினர்களை அழைத்தல்;
படையெடுப்பாளரின் மீது இராணுவ நடவடிக்கையெடுத்தல்;
புதிய உறுப்பினர்களின் சேர்க்கையைப் பரிந்துரைத்தல்;
பொதுச் செயலாளரை நியமிக்க ஐநா பொதுச்சபைக்குப் பரிந்துரைத்தல், பொதுச்சபையுடன் சேர்ந்து பன்னாட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தல்.

இங்கிலாந்து பிரதமர் இந்தியாவிற்கான ஆதரவை சென்ற வாரத்தில் மறுஉறுதி செய்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா, பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்காவும், சீனாவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா ஆதரவு தெரிவித்தால் இந்தியாவின் இடம் உறுதியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவைத் தவிர ஜப்பான், ஜெர்மனி, (பிரேசில், தென்ஆப்பிரிக்கா?) ஆகிய நாடுகளும் நிரந்த உறுப்பினராகக் கோரியுள்ளனர்.

தொடுப்புகள் சில:

ஐநா பாதுகாப்புக் குழு

ஐநா பொதுச்சபை
http://www.meadev.nic.in/opn/2000may/27hin.htm

Tuesday, September 21, 2004

புதிய எழுத்து - <'ஸ'வைவிட softஆனது>

பத்ரி சேஷாத்ரியின் சமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல் பதிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கான பதிலும்.

கேள்வி: "தமிழக அரசு பரிந்துரைத்துள்ள யுனிகோடு அகரவரிசை அட்டவணையில் E34 நிரலைக் (column) கவனித்தீர்களா? அதில் உள்ளது என்ன எழுத்து?"

பத்ரி சேஷாத்ரி: "அது 'ஸ' உச்சரிப்பு. 'ஸ'வைவிட softஆனது (அப்படித்தான் எனக்கு ஞாபகம்!). கிரந்த எழுத்துகளிலிருந்து வருவது. இப்பொழுதைக்கு 'ஸ1' என்று இதைக் குறிப்போம்.

பொதுவாக ஸ, ஜ, ஷ, ஹ என்றுதான் (நாகரியில்) வரிசைப்படுத்துவது வழக்கம். ஸ1 உச்சரிப்பு என்னைப் பொருத்தவரை தமிழுக்குத் தேவையில்லை. பாருங்கள்... உங்களுக்கு அது என்ன எழுத்தென்றே தெரியவில்லை! பலருக்கும் அப்படியே!

ஸ, ஜ, ஷ, ஹ வே தேவையில்லை எனச் சொல்வாரும் உளர்!

ஆனால் இந்த வரிசையில் புதிய 'ஸ1' ஐக் கொண்டுவந்து வரிசையை மாற்றி அமைத்து,் குழப்பி... தமிழக அரசின் திட்டம் எனக்குப் புரியவில்லை."

இப்படியொரு எழுத்தை யார், எப்போது அறிவித்தார்கள் அல்லது அறிமுகம் செய்தார்கள் என்றே தெரியவில்லை.

Sunday, September 19, 2004

நொய்யல்

வீட்டிலிருந்த தமிழக வரைபடத்தைக் கண்டுகொண்டிருந்த போது நொய்யலாற்றை நோக்கி கவனம் சென்றது. கோயமுத்தூரினருகே அது இருந்ததாலோ!

காட்டாறான நொய்யல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெள்ளிங்கிரி மலையிலிருந்து (இம்மலைக்கு ஏறிச்செல்வோரும் உண்டு; சென்று வந்தவர்கள் எழுதுக) துவங்கி (இதன் வழியில் கோவை, திருப்பூர் ஆகிய நகரங்கள்
அமைந்துள்ளன), கிட்டத்தட்ட 180 கி.மீ பயணித்துக் காவிரியில் கலக்கிறது. நான் பார்த்த வரையில் இதில் மழைக்காலத்தில் மட்டுமே கலங்கிய வெள்ள நீர் சில நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும்; மற்ற சமயங்களில் பேருந்தில் செல்லும்போது எட்டிப்பார்த்தால் நாணல் செடிகளினூடே சாக்கடை நீர் ஓடுவதுதான் தெரியும். கீழுள்ள படத்தில் ஆற்றின் தடத்தைச் செந்நிறத்தில் சுமாராகக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.



கோவைக்கு அருகே இவ்வாற்றின் கரையிலுள்ள பேரூர் என்ற ஊரில் புகழ்பெற்ற பட்டீசுவரன் என்ற சிவன் கோவில் ஒன்றுள்ளது (அதனுள்ளில் உள்ள மண்டபம் ஒன்றிலிருக்கும் அற்புதமான சிற்பங்களை சில மனித ஜந்துகளிடமிருந்து காப்பாற்ற கம்பி வலை போட்டு வைத்திருக்கிறார்கள்!). ஒரு காலத்தில், ஆலயத்திற்கு செல்லும் மக்கள் அருகிலுள்ள நொய்யலாற்றில் முழுகிவிட்டுப் போவார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அங்கு சென்ற போது, பெருங்குழியில் கலங்கிய நீர் தேங்கியிருந்ததை மட்டும்தான் காணமுடிந்தது. அதைப் பார்த்தால் ஆறென்று சொல்லத் தோன்றாது.

கோவையில் சாக்கடை கலக்கிறதென்றால், திருப்பூரில் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் நச்சு வேதிப்பொருட்கள்! திட்டமின்றி விரிவடைந்துகொண்டிருக்கும் இந்நகரங்களால் மக்களுக்கு எந்த அளவிற்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றனவோ, அந்த அளவிற்கு (கூடுதலாகவும்) சூழியல் சீர்கேடுகளின் பலன்களும் கிடைத்துக் கொண்டுள்ளன. இதைப் பற்றி தமிழில் ஒன்றும் பெரிதாக வாசிக்கக் கிடைக்கவில்லை (இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுத நம் பத்திரிக்கைகள் இளிச்சவாயர்களா என்ன!); ஆனால் ஆங்கிலத்தில் கொஞ்சம் கிடைத்தது (சில தொடுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன).

மழை நீர் சேகரிப்பைப் பற்றி இன்று பரவலாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலும் அதைச் சுற்றிலும் உள்ள 19 ஏரிகள் (இப்பொழுது 11தான் உள்ளன), ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு மழைக்காலத்தில் நொய்யலாற்றில் மிகுந்து வரும் நீரால் நிரம்பி, அப்பகுதியின் பாசனம் மற்றும் நிலத்தடி நீராதாரங்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததாம். எல்லாம் பழங்கதையானது இன்று. அக்கால மக்கள் சிந்தித்துச் செயற்படுத்திய இவ்வரிய அமைப்பை தொழிற்நுட்பத்தில் முன்னேறியதாக தம்பட்டமடித்துக்கொள்ளும் இக்காலத்தவர்களாகிய நாம் தொலைத்துவிட்டுத் தவிக்கிறோம். ஆறுகளைச் சாக்கடைகளாகவும், நச்சுக் கழிவுப் பாதைகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

மேலும் வாசிக்க சில இணைப்புகள்

http://www.hinduonnet.com/thehindu/mp/2003/05/19/stories/2003051900900100.htm
http://www.siwi.org/waterweek2003/Workshop%208%20Oral(30).htm
http://www.rainwaterharvesting.org/Crisis/river-noyyal.htm

Saturday, September 11, 2004

இரண்டு பாடல்கள்

அருமையான படப்பாடல்கள் இரண்டு. ஒன்று, வேற்று மொழிப்படத்தில் வரும் தமிழ்ப் பாடல்; மற்றொன்று, தமிழ்ப்படத்தில் வரும் வேற்று மொழிப்பாடல். இரண்டு பாடல்களின் கடைசிப்பகுதி தத்தம் மொழிகளில்!

1. மணிச்சித்திரத் தாழு - ஒரு முறை வந்து பார்த்தாயா? - சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்
2. மகாநதி - எங்கேயோ தெக்கு திசை - கமல்ஹாசன்

நான், நானேதான்!

நான்!

ஒருக்காலும் இல்லை, நான் தான்! என்னால் தான்!

என்னது நீயா? அட, நானப்பா!

நானுந்தான்!

யார் சொன்னது? அவரால்தான்!

நாங்களுந்தான்!

நம்மால்தான்!

எல்லோராலுந்தான்!

ஏய், நாந்தாங்கறேன்!