படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, April 13, 2004

காணப் பொறுக்கவில்லை

கையில் குறுந்தடியை வைத்துக்கொண்டு 'பேஸ் பால்' விளையாடலாம். ஆனால் அதைப் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு உயிர்களைத் தாக்கிக் கொன்றால் எப்படியிருக்கும்! அப்பா, நினைத்துப்பார்க்கவே கொடுமையாக உள்ளது. மனிதனால் மட்டுமே இத்தகைய காரியங்களைச் செய்ய முடிகிறது.

கனடாவிற்கும் நியூஃபெளண்ட்லாந்திற்கும் இடையிலமைந்திருக்கும் செயின்ட் லாரன்ஸ் குடாவிலுள்ள சிறு பனித்தீவுகளில் தீவுகளில் வாழும் சீல்களுக்கு உண்மையிலேயே இது போதாத காலம். அதுவும் உலகிற்கு வந்து ஒரு சில மாதங்களேயான சின்னஞ்சிறியன, மாக்களிடமிருந்து தப்ப முடியாமல் எளிதில் சிக்குண்டு உயிரிழக்கின்றன.

தொ.கா. செய்தியொன்றில் ஒரு சில விநாடிகள் கண்ட (அவற்றைத் துரத்தித் துரத்தி அடித்துக் கொல்லும்) அக்காட்சி மனதை என்னவோ செய்தது. இவற்றை ஏன் கொல்கிறார்கள்? பெருகும் தோல் சந்தை. கூறப்படும் மற்றொரு சாக்கு, பல்கி வரும் சீல்களின் எண்ணிக்கையால் அப்பகுதியிலுள்ள மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்க்கை மற்றும் உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்!

20 ஆண்டுகளுக்குமுன் இவ்வாறு நடந்த கொடுமையான வதைகளை விலங்கின ஆர்வலர்கள் மக்களிடம் எடுத்துச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், அமெரிக்கா மற்றும் மே.ஐரோப்பிய நாடுகளில் சீல் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதாலும், வேறுவழியின்றி கனடா அரசாங்கம் ஒரு சில தடையுத்தரவுகளைப் பிறப்பித்ததையடுத்து சீல்களின் இறப்பு பெருமளவிற்கு குறைந்ததாகத் தெரிகிறது. இப்பொழுது ரஷ்யா, போலந்து உட்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் சீலின் தோலுக்கு கிராக்கி கூடுவதால், கனடா அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த, மீண்டும் 'வேட்டை' விஸ்வரூபமெடுத்துள்ளது.

கோழி, ஆடு, மாடு, பன்றி, மீன், சீல்.........மனிதா, பாவம் விலங்குகள்.

No comments: