படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, April 17, 2004

மற்றுமொரு படுகொலை

'பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடரும் போர்' என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் மற்றொரு படுகொலையை இன்று காஸாவில் நிகழ்த்தியுள்ளது. கொல்லப்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான அப்துல் அஜீஸ் ரான்டீசி (சென்ற மாதம்தான் ஷேக் யாசின் கொல்லப்பட்டார்). கேள்விக்குரிய தற்கொலைத் தாக்குதல்களை முன்னின்று நடத்தும் இவ்வமைப்பின் கொள்கைகள் சில (இஸ்ரேல் என்ற நாட்டையே அங்கீகரிக்க முடியாது போன்றவை) நடைமுறைக்கு ஒத்துவராதவை. இருப்பினும், இன்றைய படுகொலை ஹமாஸின் பலத்தைக் குறைக்க இஸ்ரேலுக்கு உதவுவது போலிருக்கலாம், ஆனால் மேலும் பிரச்சனைகள் வளரவே இது வழிசெய்யும். வருங்காலத்தில் யாசர் அராபத்தை இவர்கள் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'வல்லானி'ன் துணை இருக்கும்வரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தற்கொலைத் தாக்குதல்களையும், வன்முறைகளை மட்டுமே எதிர்த்துப் பேசுவோர், பேசும் நாடுகள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளையும், அடக்குமுறைகளையும் கண்டித்தும், அமைதி முயற்சிகளை முழுவீச்சிலும் நடத்தியிருந்தால் இப்பிரச்சனை என்றோ தீர்க்கப்பட்டிருக்கக்கூடும்; பாவப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு விடிவும் பிறந்திருக்கும். இன்னும் அது நடக்காததால் உண்மையிலேயே இவர்கள் அமைதியை விரும்புகிறார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இப்பகுதியில் அமைதியைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ!

No comments: