படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, April 11, 2004

இப்படியாக ஈஸ்டர் விடுமுறை

கடந்த சிலநாட்களாக மப்பும் மந்தாரமாகவும் உள்ள வானம், வெளியில் செல்லாதே வீட்டிலேயே இரு என்று தடுத்து, சென்ற வருட ஈஸ்டர் விடுமுறையை நினைவுகூற வைத்தது. அச்சமயத்தில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அருங்காட்சியகத்திற்கு சென்று வந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். திரும்பும் சமயத்தில் அவ்வளாகத்திலிருந்த கடையை நோட்டம்விட்டபோது, நம் ஊர் சமாச்சாரத்தைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்று உடனே வாங்கத்தூண்டியது.

1984ல் கிராமத்தில் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த டீக்கடை 'பெஞ்சில்' மக்கள் அமர்ந்துகொண்டு நாளேட்டை (தினமலர் என்று நினைக்கிறேன்) வாசித்துக்கொண்டிருந்தபோது, அருகில் நின்று அதன் முன்பக்கத்தில் வெளியாகியிருந்த வெள்ளைத்துணிகள் போர்த்திக் கிடத்தப்பட்ட சடலங்களின் படங்களைக் கண்டது இன்னும் லேசாக நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் அடிக்கடி காதில் விழுந்தது 'விஷவாயுக் கசிவால் பல்லாயிரக்கணக்கான மரணம்' என்பதுதான். அதற்குமேல் விரிவாக அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பே அமையவில்லை (சொல்வாரும் இல்லை, கேட்பாரும் இல்லை), இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை.

டொமினிக் லாப்பியர் (ஃப்ரான்ஸ்), சேவியர் மோரா (ஸ்பெயின்) ஆகிய இருவரின் பலமாத உழைப்பில் வெளியாகிய 'Five Past Midnight In Bhopal' (Scribner UK, ISBN 0-7432-2035 8) என்ற புத்தகம் அது (இதழியல் புலனாய்வுப் புத்தகம் என்றுகூடச் சொல்லலாம்). போபாலில் நடந்த அக்கோரச் சம்பவத்தை பல்வேறு தகவல்களுடன் மூன்று அத்தியாயங்களில் நயமாக விவரித்துள்ளனர்.

முதல் அத்தியாயம், ஒரிசாவின் கிராமம் ஒன்றில் வாழ்ந்த இரத்தின நாடார் என்பவரது குடும்பத்திலிருந்து தொடங்குகிறது. ரயில் தண்டவாளங்களையொட்டி வாழும் சேரிகள் (அதன்பின்னுள்ள பல தகவல்கள் முதன்முதலாகத் தெரியவந்தது), போபால் நகரின் பழமை, அதன் கலாச்சாரம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்கச் செயல்பாடுகள் மற்றும் அதன் இந்தியத் திட்டம் என்று எழுதப்பட்டுள்ள பல சம்பவங்கள் புத்தகத்தைக் இலேசில் கீழே வைக்கவிடுவதில்லை.

இரண்டாவது அத்தியாயத்தில் சம்பவம் நடந்ததற்கு அடிப்போடும் முக்கிய காரணங்கள் அலசப்பட்டுள்ளன. மீத்தைல் ஐஸோசயனேட்(MIC) என்ற வாயுதான் 16,000 முதல் 30,000 மக்களை மாளச்செய்தது.

கடைசி அத்தியாயம், நடந்திருக்கக் கூடாத அப்பேரழிவு எப்படி நடந்தது என்பது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்தை போபால் மருத்துவர்கள் எதிர்கொண்ட விதம், எரிகிற வீட்டில் பிடுங்க முயன்ற அரசியல்வாதிகள் மற்றும் அமெரிக்க வழக்கறிஞர்கள், கார்பைடு நிறுவனத்தின் நிலைப்பாடு என்று விரிகிறது.

விஷவாயுவால் தாக்குண்டவர்கள் பலருக்கு இன்னும்கூட சரியான நிவாரணமோ, விமோசனமோ கிடைத்ததுள்ளதாகத் தெரியவில்லை. விரிவாக எழுதப்பட்ட நேர்த்தியான ஆவணமிது.

இன்று வாசிக்கத் துவங்கியிருக்கும் மற்றொரு புத்தகத்தைப்பற்றிப் பிறகு எழுதிவைக்கிறேன்.

No comments: