படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, December 21, 2009

பிரச்சனைகள் பலவிதம்

இல்லாதவனுக்குத் தேடல் பிரச்சனை, இருப்பவனுக்குக் காப்பது பிரச்சனை. ஓன்று பிரச்சனைகளை தேடிக் கொள்கிறோம் இல்லை அவை வந்து சேர்கின்றன.

சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட நாடு என்பதை அறிவோம். அதன் எல்லைகளின் திக்குக்கேற்ப மொழிகளும் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு மற்றும் மையப்பகுதிகளில் ஜெர்மனும், மேற்கில் ஃபிரெஞ்சும், தெற்கில் இத்தாலியனும், கிழக்கில் வெகு சொற்ப அளவில் ரொமான்ட்சும் பேச்சு வழக்கிலுள்ளன. பெரும்பான்மை மொழியாக இருப்பது ஜெர்மன். ஜெர்மனை டாயிட்ச் (Deutsch) என்றே சொல்வார்கள். டாயிட்சும், டச்சும் (Dutch) வெவ்வேறு மொழிகள். முன்னது ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா முதலான நாடுகளிலும், பின்னது ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன.

சுவிஸிலும் வட்டார வழக்குகள் உண்டு (வட்டார வழக்கில்லா மொழி இருக்குமாவென்று தெரியவில்லை). ஜூரிக் மாநிலத்தில் (மாநிலம் இங்கு கான்டோன் என்று சொல்லப்படுகிறது) பேசப்படுவது ஜூரி டாயிட்ச் என்றும், தலைநகர் உள்ள பெர்ன் (Bern) மாநிலத்தில் வழங்குவது பெர்ன் டாயிட்ச், இத்யாதி என வட்டாரத்திற்கு ஏற்றவாறு பேசப்படுகிறது. ஒன்றுக்கொன்று பலுக்கலில் வேறுபடுவதால் சில சமயங்களில் ஓரு வட்டாரத்தினரது சில சொற்களும், சொலவடைகளும் மற்றவருக்கு எளிதில் விளங்கிவிடுவதில்லை. இந்நிலையில் வேற்று நாட்டவரின் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஜெர்மன் நாட்டவரும் இதில் விதிவிலக்கல்ல. துவக்கத்தில் சற்றே தடுமாறினாலும் காலப் போக்கில் சமாளித்துக் கொள்கின்றனர். நல்ல வாழ்க்கைத் தரம், பணி, குறைந்த வரி (அவர்கள் நாட்டைக் காட்டிலும்) முதலான காரணங்களுக்காக ஜெர்மனியிலிருந்து சுவிஸிற்கு இடம் பெயர்பவர்கள் நிறைய. மருத்துவம், வங்கி, போக்குவரத்து, ஊடகம், மார்கெட்டிங், விற்பனை, பொறியியல் என சகல துறையைச் சார்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். அயல்நாடுகளிலிருந்து வந்து சுவிஸில் குடியேறுபவர்களில் ஜெர்மானியர் அதிக அளவில் இருப்பதாக ஓரு கணக்கு.

இவர்களின் மொழி, டாயிட்சாக இருப்பினும் (அதை உயர் டாயிட்ச் என்பார்கள்), உள்ளூர் மொழியிலிருந்து தெளிவாக வேறுபடுவது கண்கூடு. மொழியைப் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாட்டாலோ அல்லது நிறைய வேலைகளை வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றனர் என்ற ஓரு பொதுப்புத்தியாலோ ஜெர்மானியர்கள் மேல் சிவிஸில் ஓரு சாராரிடம் ஓரு வகையான வெறுப்புணர்வுண்டு, அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளப்படுவதில்லையாயினும். முன்பு பழைய யுகோஸ்லாவியர்களின்பால் இவ்வகையான வெறுப்பிருந்ததாகச் சொல்வார்கள்.

சமீப காலத்தில் இவ்வெறுப்பு சிலருக்கு நேரடியாக மிரட்டல் கடிதங்கள் வந்து சேருமளவிற்கு வளர்ந்துவிட்டதாகச் செய்தி. அசம்பாவிதங்கள் ஓன்றுமில்லையென்றாலும் சிலர் அஞ்சி வாழவேண்டியுள்ளது. இப்பிரச்சனையால் நாட்டிற்குத் திரும்பியோரும் உளராம்.

பிரச்சனைகள் இல்லாத மனிதனோ, இடமோ உண்டா?