படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, March 21, 2010

ஆல் இண்டியா ரேடியோ-1

இன்றுள்ளதைப் போல் நினைத்தவுடன் ஒரு பொருள் கிடைத்தோ, வாங்கியோவிடக்கூடிய காலமல்ல அது. காலணி, மிதிவண்டி, வானொலிப்பெட்டி என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அதனாலேயோ என்னவோ ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பும், சொல்லக்கூடிய வாழ்நாள் காலமும் இருந்தது. விளைவாக அப்பொருளும், அது சார்ந்த நிகழ்வுகளும் ஏதோவொரு வகையில் நினைவுகளாகத் தொடர்ந்து கொண்டுள்ளன.

80களின் துவக்கத்தில் வீட்டிற்கு முதல் வானொலி அண்ணன் வாயிலாக வந்தது. அதற்கு முன்பு ஒன்று இருந்ததாவென்று கேட்டுக் கொண்டதில்லை, எனக்கு அதுதான் முதலாகத் தெரிந்தது. அளவான வடிவத்திலிருந்த ஃபிலிப்ஸ் நிறுவனத் தயாரிப்பு. எப்பொருள்களுக்கும் அதன் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் அளவுக்கு மீறிய கவனிப்பு இதற்கும் கிடைத்தது. வேகமாகத் திருப்பாதே, மெதுவாக 'பேன்டை' மாற்று, நிறுத்தியதும் மின்சாரத்தைத் துண்டி......என இன்று நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை அதட்டல் அறிவுரைகளை அன்றைக்கு நமக்கும் கிடைத்தது.

நான் பிறப்பதற்கு முன்பு ஆகாசவானி என்று சொல்லிக்கொண்டிருந்தார்களாம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக அது ஆல் இண்டியா ரேடியோவாகிவிட்டது. கேட்டதில் நிறைய கோவை வானொலிதான். கரகரவில்லாமல் நன்றாகக் கேட்டதன் காரணமாயிருந்திருக்காலாம். ஆல் இண்டியா ரேடியோ, கோயமுத்தூர் வானொலி நிலையம், 300.3m, 999khz அலைவரிசையில் இன்றைய நிகழ்ச்சிகளைக் கேட்கலாம் என்று அதிகாலையில் ஒரு குரலுடன் நாள் துவங்கும்.

குறளோ, பக்தி சிந்தனையொன்றோ சொல்வார்கள். அதற்குப் பிறகு பாமாலை வரும். இதைப் பலகாலம் பாலாமை எனச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். இரண்டு பாட்டுகள் இந்துக்களுக்கு, ஒன்று முஸ்லிம்களுக்கும், ஒன்று கிறிஸ்தவர்களுக்குமென நன்றாகவே இட ஒதுக்கீட்டைச் செய்திருந்தனர். 6.30க்கு விவசாயிகளுக்கான சில தகவல்கள் 10-15 நிமிடங்களுக்கு வரும். தொடர்ந்து மாநிலச் செய்திகளுக்கு சென்னை அஞ்சல் என்று சொல்லிவிடுவார்கள்.

நிகழ்ச்சி நிரல் சொல்லிவிட்டு 7.15 வரை நிலைய வித்துவான்களை வைத்து ஏதேனும் கச்சேரி செய்வார்கள். பாடிக் கொண்டிருக்கும் போதே 'ஆகாசவானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி' அதற்கப்புறம் செய்திகளைவிட அக்குரலே 10 நிமிடங்களுக்கு கேட்போரைக் கட்டிப் போட்டுவிடும். ராஜாராமும் நன்றாகப் படிப்பார்.

செய்தி முடிந்ததும், வட்ட முகம், நீண்ட கழுத்து, பூப்போட்ட சட்டையுடன் காணாமல் போனவரைக் கண்டுபிடித்துத் தெரிந்தால் வேறெங்கோ சொல்லிவிடச் சொல்வார்கள். அடுத்த அரைமணி நேரத்திற்கு இளையபாரதம் போன்று ஒரு நிகழ்ச்சி. இச்சமயத்தில் பெரும்பாலான நேரம் திருச்சி நிலையத்திற்குத் திரும்பியிருப்போம், நாளின் முதல் திரைப்பாடல் அங்கு ஒலிக்கும். அரிதான சமயங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவை.

8 மணி முதல் 8.20 வரை இந்தி, ஆங்கில செய்திகளை டெல்லியிலிருந்து வாசிக்கச் செய்து வானொலிக்கு ஓய்வு கொடுப்பார்கள். மீண்டும் கோவை நிலையத்தில் திரைப்பாடல்களுடன் குதூகலமாக 40 நிமிடங்கள் செல்லும். பிற்காலத்தில் வந்த விளம்பரங்கள் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தன. காலை முடிந்தது.