படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, November 10, 2006

பாலை

குழந்தைகள் அட்சய பாத்திரம்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருந்துகொண்டே இருக்கிறது. தாத்தா-பாட்டி வாங்கிக் கொடுத்த குட்டி பொம்மை விலங்குகளை ஒரு சிறிய பைக்குள் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து விளையாடுவாள் மகள். கூட ஆடுவதற்கு என்னையும் அழைப்பாள். நான் முதலில் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும், பிறகு ஒவ்வொரு விலங்காக பையிலிருந்து எடுத்து அவள் மறைத்துக் காட்டும் போது அதை என்னவென்று சொல்ல வேண்டும். சமயத்தில் கூடவே ஏதேனும் ஓர் உரையாடல்.

"இது யானை?" (நான்)
"ம் இல்லை இது பனிக்கரடி"
"இது எங்கே இருக்கும்?"
"பனியில் இருக்கும்"
"சரி அடுத்தது..(கண்ணை மூடித்திறந்த பின்பு) வரிக்குதிரையா?"
"ஆமாம்"
"இது?"
"காட்டில் வாழும்"
"ஒட்டகச்சிவிங்கி?" (ஒட்டைச் சிவிங்கி, ஒட்டகச் சிவிங்கி இதில் எது சரி?)
"இல்லை, இது ஒட்டகம்"
"எங்கே வாழும்?"
"பாலையில்"
!!
இப்படியாகத் தொடர்ந்த ஆட்டத்தில் பாலை என்ற சொல்லையே அவள் ஒன்றிரண்டு முறை கையாண்டது சிந்திக்க வைத்தது. பாலைவனம் என்று நீட்டிச் சொல்வதைக் காட்டிலும் பாலை என்று சொல்லே அழகாய் இருக்கிறது. ஐவகை நிலங்களின் பெயர்களைப் பள்ளியில் படிக்கும்போதும் பாலை என்றுதானே வருகிறது. பாலையுடன் இந்த 'வனம்' எப்படிச் சேர்ந்தது என்பது வியப்பாயுள்ளது. வனம் என்றால் நமக்குத் தெரிந்தவரை அதற்குப் பொருள் காடு. காடென்றால் பொதுவாக நிறைய மரம், செடி, கொடிகள், விலங்குகள் என்றிருக்கும். பாலையில் எங்கு வந்தது வனம்? இது பொருளற்ற கேள்வியாகக்கூட இருக்கலாம். ஆனால் விளையாடிய நேரத்தில் அப்படியொரு சொல்லைக் கையாண்டு நம்மையும் சிந்திக்க வைத்தவளுக்கு நன்றி! இனிமேல் நானும் பாலையென்றே சொல்லிக்கொள்வேன்.

Wednesday, October 11, 2006

சாவுகள் குறைவுதான்!

குண்டு வெடிப்பாலோ, துப்பாக்கிச் சூட்டாலோ அல்லது வேறு ஏதாவது வன்முறையாலோ மக்கள் சாகாத நாளில்லை என்றாகிவிட்டது சபிக்கப்பட்டுவிட்ட நாடொன்றில். எத்தனை பேர்தான் உயிரிழந்திருப்பார்களோ என்ற கேள்வி அவ்வப்போது மனதில் எழுந்தாலும் வரையரையில்லாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளில் அதற்கான பதிலைத் தேட ஒருவித விரக்தியே மிஞ்சுகிறது.

இன்றைக்கு வந்திருக்கும் ஒரு செய்தியின்படி அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்று எடுத்த கணக்கின்படி ஈராக்கில் அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு 655,000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏகத்திற்குப் புளுகி, தாக்குதலை உண்டாக்குவதற்கான வழிகளைத் தந்திரமாக வலிய ஏற்படுத்திக் கொண்டு, எதிர்பேதுமில்லாமலேயே தாக்கி அழித்து, அவ்வாறான ஓராயுத்தையும் கண்டறியாமல், பின்பு அல்கயிதாவுடன் தொடர்பு என்று ஆர்ப்பரித்துக் கொண்டு அதற்கும் சான்றில்லாமல், உலகிலேயே இந்த நாடுதான் மகா மோசமானது, தீயசக்தி அது இதுவென்று பிதற்றி ஒரு நாட்டையே ஒருவிதத்தில் குதறி அழித்துவிட்டார்கள்.

முந்தைய ஆட்சியாளர்கள் உத்தமர்கள் அல்லர்தான், இருப்பினும் ஒருவேளை அவர்களே அதிகாரத்தில் இருந்திருந்தாலுங்கூட இந்த அளவிற்குச் சாதாரண மக்கள் உயிரிழந்திருக்கமாட்டார்கள். புஷ் கூறுவதுபோல மேற்சொன்ற கணக்கெடுப்பு நம்பத்தகுந்ததாகவே இல்லாவிட்டாலும், சொல்லப்பட்ட எண்ணிக்கையில் 25 விழுக்காடுகூடவா சரியாக இருக்காது? தன் நாட்டில் பூனைக்குக் காய்ச்சல் வந்தாலே டமாரமடித்து உலகறியச் செய்துவிடும் 'மேலை' நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றிப் பெரிதாகக் கவலையொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை. வாழ்வே சாவாகிவிட்ட இம்மக்களுக்கு விடிவு அருகிலிருப்பதற்கான சாத்தியக்கூறுகள்கூட குறைவாகவே உள்ளது.

Tuesday, August 22, 2006

இசை ஆர்வலர்களுக்கு...

"இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனியை அளித்த சாந்தோம் தமிழ் மையம், Mozart Meets India என்னும் 60 நிமிட ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்தின் சங்கராபரணம், சிந்துபைரவி, காபி, பிலஹரி, பந்துவராளி, ஹம்ஸாநந்தி போன்ற ராகங்களை மேற்கத்திய இசையுடன் இழையூடவைத்து, பாம்பே ஜெயஸ்ரீ, ஓ.எஸ்.அருண், கத்ரி கோபால்நாத், எம்பார் கண்ணன், ஏ.கே.தேவி, எல்.கிஷோர்குமார் போன்றவர்களுடன், 75க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை ஃபாதர் ஜகத் காஸ்பர்ராஜ் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு இசையமைத்த நெல்லை ஜேசுராஜின் பெயரை இனி அடிக்கடி கேட்கப்போகிறோம். இது கர்னாடக சங்கீதத்தின் குவி மையமான மியூஸிக் அகாடமியில் ஒலிக்கவிருக்கிறது. ஒரு மியூஸிக் வீடியோவும், ஓப்பெராவும் அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்." என்று எழுத்தாளர் சுஜாதா தனது 'கற்றதும்... பெற்றதும்...' பகுதியில் (ஆனந்த விகடன்-20.08.2006) எழுதியுள்ளார். இசை நிகழ்ச்சி நடக்கப்போகும் மற்றும் 'ஆல்பம்' கிடைக்கப்போகும் தேதிகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை.

Thursday, August 10, 2006

தமிழ் மண்ணே வணக்கம்! (21)

13.08.2006 ஆனந்த விகடனின் "தமிழ் மண்ணே வணக்கம்!" பகுதியில் வந்துள்ள பத்திரிக்கையாளர் ஞாநியின் கட்டுரை பின்வருமாறு (ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருப்பின் அது நகலெடுத்து ஒட்டும்போது வந்ததாக இருக்கும்):

பாரிமுனைப் பகுதி. பள்ளி முடிந்து, சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சட்டக் கல்லூரி சந்திப்பின் அருகே ஒரு பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுகின்றன. பைக் ஓட்டி வந்த இளைஞர், பைக்கிலிருந்து சில அடிகள் உயரே தூக்கி எறியப்பட்டு விழுகிறார். இதைக் கண்ணெதிரே காணும் பள்ளிச் சிறுவர் கூட்டத்தில் ஒரு சிறுவன் உற்சாகமாக எம்பிக் குதித்து “ஹை... சூப்பர் ஆக்ஸிடென்ட்!” என்று கூவுகிறான்.

ராஜபாளையம் அருகே மம்சாபுரம் என்ற கிராமம். தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் குழந்தைகள் (அவர்களைத் தொழிலாளர் என்று சொல்வதே தவறு.) அந்திமயங்கும் வேளையில் கிராமத்துக்கு பஸ்ஸில் திரும்புகிறார்கள். உடனே வீட்டுக்கு ஓடாமல், குழந்தைகள் நலச் சங்கம் நடத்தும் மாலைப் பள்ளிக்கு ஆர்வத்துடன் ஓடுகிறார்கள். வகுப்பறைச் சுவரில், ஓர் அட்டை நிறைய காலிப் பெட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. எது... என்ன... எதற்காக என்று குழந்தைகள் பதில் சொல்கிறார்கள்.

‘இது டூத் பேஸ்ட்.. இது எதற்கு?’

‘பல் தேய்க்க.’

‘ஏன் பல் தேய்க்க வேண்டும்?’

‘பல் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.’

‘இது என்ன பெட்டி?’

‘சிவப்பழகு கிரீம்!’

திடுக்கிட்டு அந்தக் கறுப்பு நிலாக்களிடம் கேட்கிறேன். ‘இது எதற்கு?’ சிவப்பாவதற்குத்தானாம். ‘விலை என்ன தெரியுமா?’ பைசா சுத்தமாக சரியாகச் சொல்கிறார்கள். ‘யாரெல்லாம் வாங்குகிறீர்கள்?’ உயரும் கைகளெல்லாம் வளையல்கள் அணிந்த கறுப்புக் கரங்கள். நாளெல்லாம் தீக்குச்சி அடுக்கிய கைகள்.

‘பையன்கள் உபயோகிப்பதில்லையா?’

‘பொண்ணுங்கதான் சார் செவப்பா இருக்கணும்’ என்று பத்து வயசுப் பையன்கள் சொல்கிறார்கள்.

தஞ்சாவூரில் ஒரு உயர் நடுத்தர வகுப்பு வீட்டுக்கூடம். உயிர்ப்புள்ள டெலிவிஷன் முன்னால் சிலைகள் போல அம்மா, மகள், அண்ணன், பாட்டி. காம இச்சையின் உச்சத்தில் ‘தீப் பிடிக்க தீப் பிடிக்க...’ நிகழும் உடலிணைவின் அடையாள அசைவுகளுடன் ஆண், பெண் பிம்பங்கள் ஆடுவதை, உயிருள்ள சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கின்றன. திடீரென உடல் உபாதையில் தங்கை குரலெழுப்புகிறாள். ‘அண்ணா, நேப்கின் வாங்கிட்டு வந்து தர்றீங்களா?’அம்மாவும் பாட்டியும் அண்ணனும் இப்போது திடுக்கிடுகிறார்கள். அண்ணன் முகத்தில் தர்மசங்கடம். அம்மா முகத்தில் அருவருப்பு. பாட்டி, பேத்தியைக் கண்டிக்கிறாள். ‘யார்கிட்ட எதைக் கேட்கறதுன்னு இல்ல? பக்கத்துலதானே கடை. நீயே போ!’ மறு நொடி, டி.வி&யில் மூழ்குகின்றன மூன்று தலைகள். அங்கே தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

இதுதான் இன்றைய தமிழ்ச் சமூகம். ரத்தமும் வலியும் புரியாத பள்ளிச் சிறுவன்; படிக்க வேண்டிய வயதில் கூலி வேலை பார்த்துக் கிடைத்த கூலியில் வீட்டுக்குக் கொடுத்தது போக மிஞ்சிய சில்லறையைச் சேமித்து அழகு கிரீம் வாங்கச் செலவழித்து, எப்படியும் சிவப்பாகிவிட விரும்பும் ஏழைச் சிறுமிகள்; ஆபாச நடனத்துக்கு நடு வீட்டில் இடம் தருவோம், ஆனால், ஆரோக்கியம் பற்றிய பேச்சை ஒழுக்கக் கேடாகத்தான் நினைப்போம் என்று குழம்பிய மனதுடன் முழுக் குடும்பம்.

எப்படி நேர்ந்தது இது? யார் இதற்குப் பொறுப்பு? குடும்பம் முதல் அரசியல் வரை அதிகாரத்தில் உள்ள எல்லாரும் பொறுப்புதான் என்றாலும், அத்தனை பேருடைய சிந்தனையையும் சிந்திக்கும் முறையையும் வடிவமைக்கும் சக்தி எது?

மீடியா!

குறிப்பாகப் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும்தான். இன்று இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பத்திரிகைகள் விற்கும் மிகச் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொலைக்காட்சிப் பெட்டிகள், கேபிள் இணைப்புகள் மிக அதிகமாகப் பரவியிருக்கும் ஒரு சில மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது.

ஆனால், தமிழர்களுக்குப் படிக்கக் கிடைப்பது என்ன? பார்க்கக் கிடைப்பது என்ன? ஒரு சில விதிவிலக்குகளை விட்டுவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் குப்பைதான்.

டெலிவிஷனின் வருகையும், வீச்சும் தமிழ்ப் பத்திரிகை உலகத்தை நிலைகுலையச் செய்தன. டெலிவிஷனுடன் போட்டி போடுவது எப்படி என்ற மலைப்பில், பொழுதுபோக்கு அம்சங்களை அதிகமாக, பிரமாண்டமாக நாமும் தர வேண்டும் என்று திசை மாறிப்போயின. பத்திரிகைகளின் பலமே அகல உழுவதைவிட, ஆழமாக உழுவதற்கான சாதனம் அது என்பதுதான். இந்த பலத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தடுமாறத் தொடங்கின பத்திரிகைகள்.

டெலிவிஷனோ, தான் தனியே ஒரு சக்தி வாய்ந்த சாதனம் என்பதை மறந்து, சினிமாவின் குளோனிங் ஆட்டுக் குட்டியாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் இடம் பெறும் அளவுக்கு சினிமா ஆக்கிரமிப்பதில்லை. சினிமாவுக்கு என்று தனி சேனல்கள் உண்டே தவிர, எல்லா சேனலும் சினிமா கொட்டகையாக மாறும் அவலம் இங்கு மட்டும்தான்.

டெலிவிஷன் சொந்தமாகத் தயாரிப்பது தொடர்கள். பத்திரிகை சாதனத்திலிருந்து இரவல் வாங்கிய தொடர்கதை வடிவத்தில் டெலிவிஷன் அளிப்பது என்ன? சமூகத்தில் இருக்கும் அத்தனை கசடுகளையும் ரசிக்கத்தகுந்த விஷயங்களாகப் பார்வையாளர்களுக்கு முன்வைக்கின்றன. துரோகம், பொறாமை, கள்ளக் காதல், பெண்ணடிமைத்தனம் என்று சமூக மனித பலவீனங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டும் நமது மூளைக்குள் பதிவு செய்யப்படுகின்றன. கலையும் பொழுதுபோக்கும் மனிதரை இன்னும் உற்சாகப்படுத்தி, மனதை லேசாக்கி, கசடுகள் நீக்கி இன்னும் மேன்மையானவராக மாற்றுவதுதான்.

ஊடகங்களின் திசை தவறிய தடுமாற்றங்கள் எல்லாமே ஒரே ஒரு காரணம் காட்டி மட்டுமே நியாயப்படுத்தப்படுகின்றன. தொழில் நடத்த வேறு வழியில்லை. இப்படிச் செய்யாவிட்டால் விளம்பரம் கிடைக்காது. எது செய்தால் லாபமோ அதில் ஈடுபடலாம் என்பது சுயநலம். எது சரியோ அதைச் செய்வோம்; அதை லாபகரமாக எப்படிச் செய்வது என்று வழிகள் கண்டுபிடிப்போம் என்ற முனைப்பே பொதுநலம், சுயநலம் இரண்டையும் ஒன்றுக்கொன்று முரண் இல்லாமல் சாதிக்கும் வழியாகும்.

ஆனால், பத்திரிகைகளிடம் சில தர்மங்களை எதிர்பார்க்கிறார்கள் வாசகர்கள். சமூகத்தில் எதெதுவோ கெட்டுப்போய்விட்டது; அவை எப்படியோ போகட்டும்... ஆனால், பத்திரிகைகள் கெட்டுப்போய்விடக் கூடாது என்ற எதிர்பார்ப்பு இன்னமும்கூட வாசகர் மனங்களில் பொதிந்திருக்கிறது.

வேறு எந்தத் தொழிலையும்விட, பத்திரிகைத் தொழில்தான் மக்கள் நலன்களுக்குக் கேடயமாக விளங்கும் தொழில் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திர உரிமைக்கே அடித்தளமாக இருக்கிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முதல் செய்தித்தாளைத் தொடங்கிய ஹிக்கி, அதை ஆங்கிலேய அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தத்தான் தொடங்கினார் என்ற சரித்திர உண்மையே இந்த நம்பிக்கைக்கும் ஆரம்பம்.

ஆனால், நடைமுறையில் இன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிலையங்களும் முற்றிலும் நுகர்வோருக்கான பண்டங்களைத் தயாரிக்கும் தொழில்களாக ஆக்கப்பட்டுவிட்டன. சோப், ஷாம்பு, சமையல் எண்ணெய் போல பத்திரிகையும், டெலிவிஷனும் ஒரு சரக்கு என்றாகிவிட்டது.

சமூகத்தின் தர்மங்கள், அறநெறிகளுக்கெல்லாம் மனசாட்சியாக இருந்த, இருக்க வேண்டிய பத்திரிகைத் தொழிலும், டெலிவிஷனும் சரக்காகும்போது, வாசகரும் பார்வையாளரும் நுகர்வோராக மாற்றப்பட்ட பின்னர், அந்த நுகர்வோர் எப்படிப்பட்ட நுகர்வோராகச் செயல்படுகிறார்கள்?

தெருமுனை மளிகைக் கடையில் ஒரு கிலோ சர்க்கரை வாங்கினால், அதில் 200 கிராம் ரவை கலந்திருந்தால், நுகர்வோராக என்ன செய்வோம்? கொதித்தெழுந்து கடைக்காரரிடம் போர் நடத்தி, நீதி கேட்போம். ஆனால், நமது பத்திரிகைகளும், டெலிவிஷன்களும் இதே போன்ற கலப்படச் சரக்குகளை அளிக்கும்போது என்ன செய்கிறோம்? கண்டுகொள்வதே இல்லை.

அதுவும் முழு உண்மையல்ல. கண்டுகொள்வதும் தப்புத் தப்பாகக் கண்டுகொள்கிறோம். ஒரு பத்திரிகையில், ஒரு பிரபல நடிகரின் அடுத்த காதலி கேரளத்தி-லிருந்து இறக்குமதியாகும் புது நடிகை என்று ‘துப்பறிந்து’ செய்தி வெளியிட்டால் பத்திரிகை அலுவலகத்துக்கு 200 வாசகர் கடிதங்கள் வந்து குவிகின்றன. அதே இதழில் இன்னொரு பக்கத்தில், தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், இன்னும் மூன்று ஆண்டுகளில் இங்கொரு தார் பாலைவனம் உருவாகப்போகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்ட கட்டுரைக்கு, வாசகரிடமிருந்து வரும் கடிதங்கள் இருபதுகூட இல்லை.

சராசரி நடுத்தர தமிழ்க் குடும்பத்தின் இன்றைய நிலை என்ன? கடன் வாங்கிக் கஷ்டப்பட்டுக் கட்டும் வீட்டில் ஃப்ரிஜ் வைக்க ஒரு அறை, வாஷிங் மெஷினுக்கு இன்னொரு அறை, டி.வி. வைக்க மர கேபினெட். ஆனால், வீட்டில் படித்தவர்கள் நான்கு பேர் இருந்தாலும், எல்லாருக்குமாகச் சேர்த்து புத்தகங்கள் வைக்க முன்று அல்லது நான்கு தட்டு உள்ள அலமாரி தான். அதிலும் ஒரு தட்டை, கலைப் பொருட்கள் என்ற பெயரில் தூசி படிந்த கிளிஞ்சல் குவியல்கள் ஆக்கிரமித்திருக்கும். மாதம் நூறு ரூபாய்க்குப் பத்திரிகைகள் வாங்குவதும், இன்னொரு நூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவதும் குடும்ப வருமானம் 20 முதல் 25 ஆயிரம் வரை உள்ள நடுத்தரக் குடும்பங்களுக்கு நிச்சயம் சுமையல்ல. ஆனால், வீட்டில் பொருளாதாரத் தட்டுப்பாடு வருவது போல் தோன்றினதுமே, முதலில் வெட்டு பத்திரிகைக்குத்தான். காபிக்கோ, டீக்கோ அல்ல! நூறு ருபாய்க்கு பத்திரிகை வாங்குவதற்கு பதில் கேபிள் இணைப்பு கொடுத்துவிட்டால் போதும் ஐம்பது சேனல் கிடைக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், அந்த ஐம்பது சேனலில் அறிவியல், சரித்திரம், சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கென்றே இருக்கும் சேனல்களைப் பார்ப்பது பாவச் செயல் என்று கருதுகிறது தமிழ்ச் சமூகம். சினிமா, தொடர் இரண்டைத் தவிர, தமிழ்ச் சமூகம் விரும்பும் ஒரே டி.வி. நிகழ்ச்சி, ஓயாமல் யாராவது பேசிக்கொண்டே இருக்கக்கூடிய அரட்டை, பட்டிமன்ற பாணி நிகழ்ச்சிகள்தான். தமிழர்களைப் போல ஓயாத பேச்சின் ஒலியிலேயே தன்னை அழித்துக்கொண்டு அறிவுத் தற்கொலை செய்யும் சமூகம் உலகில் வேறெங்கும் இல்லை.

கடந்த தலைமுறைகளில், தமிழ் மீடியாவுக்கு ஆழம் இருந்தது. சமூக அக்கறை இருந்தது. ஆனால், அதனிடம் நவீனத் தொழில்நுட்பமும், தேர்ச்சியும் இருக்கவில்லை. அடுத்த தலைமுறையிடம் தொழில்நுட்பமும் தேர்ச்சியும் வந்த வேளையில், அது சமூக அக்கறையையும், ஆழமான தேடலையும் தொலைத்துவிட்டது.

இன்று தமிழில் பிழையில்லாமல் எளிய வாக்கியங்களை எழுதும் ஆற்றல் உடைய இளைஞர்களைத் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. கற்பனையும் படைப்புத் திறனும் உடைய இளைஞர்கள் பலரும், மசாலா சினிமா தயாரிக்கும் மெஷினுக்கு நரபலியாக நிவேதனம்செய்யப்படுகிறார்கள். மசாலா சினிமாவில் ‘ஜெயிக்கும்’ ஒவ்வொரு இளைஞரின் காலடிக்குக் கீழேயும் நூறு அறிவாளி இளைஞர்களின் பிணங்கள் மிதிபடுகின்றன. இதை மாற்றாவிட்டால், தமிழ்ச் சமூகம் தாய்ப் பாலே குடிக்காமல் பவுடர் பாலிலேயே வளர்ந்த சவலைக் குழந்தையாக இன்னும் இளைத்துப்போகும்.

எட்டாம் வகுப்பிலிருந்தே ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தினசரி பத்திரிகைகள் படிக்கவும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து பார்க்கவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கான மதிப்பெண் தேர்வு முறையில் சேர்க்கப்பட வேண்டும். மீடியாவைப் புரிந்து கொள்ளவும், நுகரவும், ரசிக்கவும், அலசவும், கண்டிக்கவும், போற்றவும் தமிழ்க் குழந்தைகள் கற்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் பெரியவர்களாகும்போது, பத்திரிகை படிப்பதற்கும் டி.வி. பார்ப்பதற்கும் மாற்றாக தினம் மூன்று வேளை ஒரு கேப்ஸ்யூல் விழுங்கினால் உலக அறிவும், பொது அறிவும் கிட்டிவிடுமா என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்த விமர்சனமும் இல்லாமல், கிடைப்பதை நுகர்ந்து வாழும் சமூகம் பிணங்களின் சமூகமாகிவிடும். மோசமான மீடியா ஆக்கிரமிக்கும் சமூகத்தில் அரசியலும், அறிவியலும், கலைகளும், மனித உறவுகளும் சகலமும் மோசமானதாகவே இருக்க முடியும்.

உயிர்ப்பும் மனிதமும் நிறைந்த தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டுமெனில், மீடியா பற்றிய நமது தேடல் இன்றே, இந்த நிமிடமே, இந்த நொடியே தொடங்க வேண்டும். ஆழ்கடலில் மூழ்கித் தேடினால் மட்டுமே முத்துக்கள் கிடைக்கும். சிரமப்படாமல் கரையில் நடந்தால் கிட்டுவது கிளிஞ்சல்கள் மட்டும்தான்.

தமிழா, தமிழா, உனக்கு எது வேண்டும்... முத்தா, கிளிஞ்சலா?

Tuesday, June 27, 2006

சிதறல்கள்

பாஷா இந்தியா நடத்திய இந்திய வலைப்பதிவுகளுக்கான போட்டியில் தமிழுக்கு நிறைய பரிசுகள் கிடைத்துள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! இதுபோன்று தமிழ் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்று சொல்லி சென்ற வருடம் திசைகள் மின்னிதழ் போட்டி ஒன்றை நடத்தியதாக நினைவு. முடிவு என்னவாயிற்று என்று பார்க்கவில்லை. ஒருவேளை அப்போட்டி கைவிடப்பட்டதோ என்னவோ?

தேன்கூடு நடந்த போட்டியில் வென்ற தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இப்பதிவுகளில் ஒருசிலவற்றை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவற்றில் பெரும்பாலும் விடலைப் பருவத்தில் உண்டாகும் காதலைப் (அல்லது இனக்கவர்ச்சி) பற்றியே இருந்தது.

இப்பருவத்தில் உண்டாகும் மற்றொரு முக்கியமான அனுபவம் தேர்வு காலத்தில் உண்டாகும் பயம். அதைப் பயம் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. அப்பயம் கல்லூரி காலத்தில் அவ்வளவாக இல்லாமல் போய்விட்டிருந்தாலும் பள்ளிக் காலத்தில் வாட்டி எடுத்தது உண்மை. அப்பொழுதெல்லாம் படிப்பை முடித்து வேலைக்குப் போவோர்களைக் கண்டால், ஆகா இவர்களுக்கெல்லாம் தேர்விற்குப் படித்து எழுத வேண்டிய வேலையில்லை, கொடுத்துவைத்தவர்கள் என்று தோன்றும். இப்பொழுதுகூட எப்போதாவது அந்தப் பாடத்தை இன்னும் படிக்கவில்லையே, நாளைக்கு எப்படிப்போய் எழுதுவது என்ற மாதிரி கனவு வரும். அந்த அளவிற்கு உள்ளது அதன் தாக்கம். இது அப்பருவத்தினருக்கு உள்ள பொதுவான உளவியல் பிரச்சனையாகக்கூட இருக்கலாம்.

நம் பிரச்சனைகள் இப்படியுள்ளதென்றால் பெரும் அழுத்தத்திற்குள் வாழும் பதின்மர்கள் சிலரின் வாழ்க்கை அதிர்ச்சிகரமாகத்தான் உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முதலீட்டில் (25000 கோடி ரூபாய்கள் என்கிறார்கள்) நாடு முழுவதும் சில்லறை வணிகத்தில் இறங்கத் திட்டமிட்டிருப்பதாகச் செய்தி. பத்து இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். கேட்க நன்றாக இருப்பினும் இது களத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம்(சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், இத்யாதி என). பார்ப்போம்.

Sunday, June 18, 2006

மொட்டு விடுதல்

பழைய ப்ரில் மசிக்குப்பி அல்லது அதுபோன்று இருக்கும் ஒரு குப்பி என்று ஏதாவது ஒன்று கிடைத்துவிடாமல் போகாது. துவைக்கும் கல்லின் ஓரத்திலோ, சுவற்றின் மேலிருக்கும் டப்பாவிலோ நீலநிற சலவைக் கட்டியின் துண்டு கொஞ்சம் நிச்சயம் இருக்கும். குப்பியில் தண்ணீரை ஊற்றி, அத்துண்டை அதற்குள் போட்டு மூடியால் மூடிக் குலுக்கினால் நுரை ஏகத்திற்கு வந்துவிட்டிருக்கும். அதை அப்படியே வைத்துவிட்டு வீட்டின் பின்புறமோ, பக்கத்தில் எங்காவதோ இருக்கும் பப்பாளி மரத்தின் கிளையொன்றிப் பிடுங்கி வந்து சிறிய தூம்பாக நறுக்கிக் கொண்டு குப்பியில் விட்டுக் கலக்கி எடுத்து உஃப் என்று ஊதினால் சில சமயங்களில் அருமையாக மொட்டுக்கள் வரும், பல சமயங்களில் தூம்பிலிருந்து நீர் மட்டுமே சொட்டும். அது சலவைக் கட்டியின் தன்மையையும், ஊற்றும் நீரின் அளவையும், ஊதும் இலாவகத்தையும் பொருத்தது.

தற்காலங்களில் குப்பிகளில் (அதன் மூடியின் உட்புறத்திலேயே குச்சிபோன்று நீட்டப்பட்டு முனையில் இரண்டு மூன்று வளையங்கள் வெவ்வேறு விட்டங்களில் செய்துவைக்கப்பட்டிருக்கும்) மொட்டு விடும் திரவத்தை விற்பதைப் போல் முன்பு கடைகளில் விற்றார்களா எனத் தெரியாது. ஆனால், ஊர்களில் நடக்கும் திருவிழாக்களின் போது ஏதேனும் சிலசமயங்களில் அவற்றை விற்பார்கள்.

கடையில் வாங்கிய குப்பியிலிருந்து மொட்டுக்களை விட எத்தனித்துக் கொண்டிருக்கும் மகளுக்குப் பப்பாளிக் குச்சியில்கூட சலவைத்துண்டைக் கலக்கி மொட்டு விடலாம் என்று தெரிந்துவிட்டிருக்காது. பப்பாளி மரத்தையே பார்த்திராத அவளுக்கு, என்றேனும் ஒரு முறையேனும் அவ்வுள்ளூர்த் தயாரிப்பைக் காண்பித்துக் கொடுத்தே ஆகவேண்டும்.

Sunday, June 11, 2006

தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள்

ஆனந்த விகடன் 18.06.06 இதழின் "தமிழ் மண்ணே வணக்கம்!" பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். முதலில் இக்கட்டுரையைப் பதிப்பித்த விகடனுக்கு நன்றி! தமிழகத்திலுள்ள (மற்றும் வரும்) ஈழத்தமிழ் அகதிகளின் நிலை மோசமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை உரத்துச் சொன்ன கட்டுரையாளரும் பாராட்டுக்குரியவர். அக்கட்டுரையிலிருந்து சில மேற்கோள்கள் பின்வருமாறு:

"இரக்கம், கருணை, மனிதநேயம் போன்றவையெல்லாம் கவிதை எழுதுவதற்கும், அடுக்குமொழியில் பேசுவதற்கும் மட்டுமே என ஒதுக்கிவைத்துவிட்டோம். நடிகைகளின் தற்கொலை களுக்கு என்ன காரணம் என்று ஆராய நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால், ‘நடுக் கடலில் படகு கவிழ்ந்து இலங்கை அகதிகள் சாவு’ என்கிற துயரம் பற்றி நினைக்க யாருக்கும் நேரம் இல்லையா? "

"’அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டபூர் வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்கிற ஐ.நா&வின் 1967&ம் ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா ஏனோ கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந் தத்தை ஒப்புக்கொண்டால் உடன்படிக்கை களைச் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அச்சத்தால் இன்று வரை அகதிகளின் மறுவாழ்வில் மௌனம் சாதிக் கிறோம். அந்தச் சட்டபூர்வ நிர்ப்பந்தம் இல்லா மல் போனதால், ‘எங்கிருந்தோ வருபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?’ என்று சுயநலத்தோடு நடந்துகொள்ள வசதியாக இருக்கிறது."

"இந்தியா முழுவதும் நடக்கிற அதிகார, அரசியல் கொள்ளைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அகதிகளின் நல்வாழ்வுக்கு செலவு ஆகாது. ஒரு குடும்பத் தலைவருக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகையாக வழங்குகிறது அரசு. ஒரு மாதம் முழுக்க அந்த ரூபாயில் எப்படி வாழ முடியும் என்று சிந்திக்க யாருக்கும் அவகாசம் இல்லை. குழந்தைகளாக இருந்தால் 45 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 90 ரூபாய், பருவமடைந்தவர்களுக்கு 144 ரூபாய் என வயது அடிப்படையில் மாதந்திர உதவித் தொகை அளிக்கப்படுகிறது. சுத்திகரிக் கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கே பத்து ரூபாய் செலவழிக்க வேண்டிய காலகட்டத்தில், 45 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படிக் குழந்தைகளுக்குப் பால் புகட்ட முடியும்? "

"டயானா இறந்த துயரத்துக்கு அஞ்சலிக் கவிதைகள் எழுதும் நம் தமிழினப் படைப்பாளிகள், அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை நினைக்காமல் இருப்பதுதான் இன்னும் வேதனை. தங்களின் இரக்கத்துக்குச் சின்னதாக எதிர்ப்பு வந்தாலும், இரக்கப் படுவதைக்கூட நிறுத்திக்கொள்கிறார்கள் நம் கலைஞர்கள். ‘எதுக்கு வம்பு?’ என்று கூச்சப்படாமல் பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பதில் தருவ தற்குக்கூட அச்சப்பட்டு மௌனமாக இருந்துவிடுகிறார்கள். ஆயுதங்களைவிட ஆபத்தானது அந்த மௌனம்!"

Wednesday, May 17, 2006

படம் - நிலப்படம் - வரைபடம்

Map என்ற சொல்லிற்கு மேற்கூறிய சில சொற்கள் ஒத்ததாகச் சொல்லிப் புழங்கப்பட்டு வந்தாலும் இவை ஏனோ திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. நல்ல சொல் அகப்படுமா? சொல்ல நினைத்தது அதுவல்ல.

செல்வராஜின் மிதிவண்டிப் பயணங்கள்-2ல் இருந்த map-ஐக் கண்டதும் உள்ள ஆதங்கங்களுள் ஒன்று நினைவிற்கு வந்தது. இப்படங்கள் விரிவாகவும், தெளிவாகவும், சரியாகவும் இல்லாததன் காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. கொள்வோரில்லாததால் கொடுப்போரில்லையா இல்லை இவற்றின் தேவைகள் பெரிதாக இல்லையா?

வளர்ந்த நாடுகளில் உள்ள இம்முறைமைகள் வியப்பூட்டும் வகையில் உள்ளன. காகிதத்திலாகட்டும், கணியிலாகட்டும் அல்லது வேறு எந்த மிடையத்திலாகட்டும் அவற்றின் வீச்சும் பயன்பாடும் பாராட்டத்தக்கவை. நாம் மட்டும் ஏன் இன்னும் ஐதர் அலி காலத்திலேயே இருக்கிறோம்?

கீழே: தஞ்சாவூர் பயண வழிகாட்டி!!!

Monday, April 03, 2006

கொசுறுகள்

ஜெனிவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், போதை மருந்து முதலான பழக்கப்பற்று (addiction)களுக்குச் சிகிச்சையளிக்கும் வழிமுறையொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றனர். இது மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், வருங்காலத்தில் மருந்து நிறுவனங்கள் மனது வைத்தால் பலர் இப்பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வாய்ப்புள்ளது.
செய்திக்கான சுட்டி

இலங்கையில் இரண்டு 'அரசாங்கங்கள்' நடைபெற்று வருவது அறிந்த ஒன்று. கால நேரமும் அவ்வாறே இரண்டாக உள்ளதை இன்றுதான் கேள்விப்படுகிறேன். புலிகளின் பகுதியில் இந்திய நேரத்தைப் போலவே ஜிஎம்டி+5.30ம், தெற்கில் ஜிஎம்டி+6 மணி நேரமாகவும் உள்ளது. இலங்கை அரசாங்கமும் அரை மணி நேரத்தைக் குறைத்துக் கொண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தைக் கொண்டுவரும் போலுள்ளது. இதேபோல எல்லாவற்றிலும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி.
செய்திக்கான சுட்டி

உலாவியைத் திறந்ததும் கூகுள் கொண்டுவந்து கொட்டிய செய்திகளில் கவனத்தை ஈர்த்தது: உடற்பருமன் காரணமாக அமெரிக்காவில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் 'காரில்' அமர இயலாமல் சிரமமுறுகின்றனர். இப்போது கடைகளில் கிடைக்கும் இருக்கைகள் அக்குழந்தைகளுக்குப் பொருந்தாமல் போவதால் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இக்கு(risk) அதிகம் என்றும் தெரிவிக்கிறது. ஏழ்மையில் இருப்போர்கள் விலை மலிவான கொழுப்புத் தன்மையுடைய தீனிகளைத் தொடர்ந்து நொறுக்குவதால் வந்த விளைவும் இந்நோய்க்கு ஒரு காரணம் என்று படித்த நினைவு. பெரியவர்களுக்கு ஏற்படுவதைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் குழந்தைகளுக்கு? மரபுவழியாகத் தொடர்கிறதோ?

Thursday, March 09, 2006

அணு ஆயுத வல்லரசு

"எது அணு ஆயுத வல்லரசு என்பதை 1968-ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் (என்பிடி) தெளிவாக வரையறுத்துள்ளது. 1967 ஜனவரி முதல் தேதிக்கு முன்பாக அணு குண்டையோ, இதர அணு வெடிபொருள்களையோ தயாரித்து, வெடித்து பரிசோதித்த நாடுதான் அணு ஆயுத வல்லரசு என்று அது கூறுகிறது." (தினமணி-10.03.2006, அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி)

என்னே ஒரு வரையரை!! ஒருவேளை இது முன்னமே தெரிந்திருந்தால் இன்றைக்குப் பல 'வல்லரசுகள்' இருந்திருக்குமோ?

Sunday, March 05, 2006

பனிப்பொழிவு



நேற்றைக்கு சுவிஸ் முழுவதிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பல இடங்களில் சாதனை அளவாக இருந்துள்ளது. இயல்பு வாழ்க்கை, முக்கியமாக சாலைகளில், பெரிதும் பாதிப்படைந்திருந்தது. மரங்களில் பனி இலைகள்!

Friday, March 03, 2006

ஸ்விஸ் தமிழர்கள், கீழ்வெண்மணி

பெர்ன் பல்கலைக்கழகத்தின் இனவியலாளர் டமாரிஸ் லூதி சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களைக் குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளார். அச்செய்திக்கான சுட்டி இங்கே.

கீழ்வெண்மணிச் சம்பவம் என்று எப்போதோ கேட்டதுண்டு. அதைப் பற்றி இன்றுதான் சரியாகத் தெரிந்து கொள்ளமுடிந்தது. (கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.) குற்றமிழைத்தோர் யாரெனத் தெரிந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது!

Thursday, March 02, 2006

கண்காட்சிகள், வாசகர்கள், புத்தகங்கள்

சென்ற ஜனவரியில் கோவை நஞ்சப்பா சாலையில் இருக்கும் சிறைச்சாலை மைதானத்தில் 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' (நிசெபுஹ) புத்தகக் கண்காட்சியொன்றைப் போட்டிருந்தார்கள். 10% விலைக்கழிவு என்று பெரிதாக வெளியில் எழுதிப் போட்டிருந்தார்கள். உள்ளேதான் கூட்டத்தைக் காணோம்! பணியாளர்கள் இருவரைத் தவிர வாசகர்கள் ஒன்றிரண்டுபேர்தான் தென்பட்டனர்.

நிசெபுஹ என்றாலே முன்பெல்லாம் பெரும்பாலும் கம்யூனிச புத்தகங்கள், அக்கால ரஷ்ய மொழியாக்கங்கள், அவர்களது பதிப்பகப் புத்தகங்கள், 'நேஷனல் புக் டிரஸ்ட்' புத்தகங்கள் என்றிருக்கும். ஒரு காலத்தில் பேருந்து ஒன்றை நடமாடும் புத்தகக் கடையாக மாற்றி ஊர் ஊராகச் சென்று புத்தகங்களை விற்றனர்; இன்றும் உள்ளதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சிக்கு அப்படியொருமுறை வந்தபோது சில புத்தகங்களை வாங்கிய நினைவுள்ளது. அப்பேருந்துப் புத்தகக் கடை மிகவும் பிடித்திருந்தது.

தற்சமயம் வழக்கமான புத்தகங்களோடு, பிற பதிப்பக வெளியீடுகளும் நிறைய காணப்பட்டது. கண்காட்சியில் வாங்கியதைவிட நேரு விளையாட்டரங்கத்திலிருக்கும் அவர்களது கடையில்தான் அதிகப் புத்தகங்களை வாங்கினேன். அனைத்தும் ஊரிலேயே உறங்கிக் கொண்டுள்ளது :(

அக்கடைக்கு இரண்டுமுறை சென்றபோதும் மருந்துக்கும் புத்தகம் வாங்குவாரில்லை. இப்படி விற்பனை செய்து எப்படி வியாபாரத்தை நடத்துகிறார்களோ! வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் அங்கிருந்தும் அவற்றின் நிலையைக் கண்டு வாங்க மனம் ஒப்பவில்லை. ஒன்று-'வளம் தரும் மரங்கள்' என்னும் தொகுதி (இராம.கி. அவர்கள் பதிவின் மூலமாக அறிந்து கொண்டது). இத்தொகுதியைப் பல்லாண்டுகளுக்கு முன்பு நிசெபுஹ பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்புகள் வருவதே இல்லை என்று கடையை நிர்வகிப்பவர் சொன்னார். அங்கிருந்த அப்புத்தகங்கள் செல்லரிக்கப்பட்டு, கிழிந்து, பழுப்பேறிக் கிடந்தன. பழையவற்றிற்குத்தான் அக்கதியென்றால் 'நரிக்குறவர்களின் இனவரைவியல்'-க்கு (வெங்கட் பதிவின் மூலம் அறிந்தது) என்ன? இருந்த ஒரே ஒரு புதிய புத்தகமும் அங்கங்கு அழுக்காகிக் கிடந்தது. எப்படி வாங்குவது? கடைசி வரை அப்புத்தகம் கிடைக்கவேயில்லை :(

புதிய புத்தகங்கள் எவ்வாறு அழுக்காகின்றன?
ஒன்று பதிப்பாளர்களிடமிருந்து வரும் கட்டுகளிலேயே கதை ஆரம்பித்திருக்கலாம்.
அப்புறம் வந்த புத்தகங்களைக் கடைக்காரர்கள் பிரித்து வைக்கும்போது.
வைக்கப்படும் இடத்தின் 'அழகால்'.
அங்கு வைக்கப்படும், கையாளப்படும் முறையால்.
வாசகர்கள் தொடும்போதும், புரட்டும்போதும் அவர்களது கைகளிலிருந்து படிவதால்(இரண்டு சக்கர வாகனங்களில் கடைக்கு வருபவர்கள் - அதன் கைப்பிடியில் எவ்வளவு அழுக்கிருக்கும் என்பது கழுவும்போதுதான் தெரியும்! - அப்படியே புத்தங்களைத் தொடும்போது உயவு நெய் கூட புத்தகத்தில் படுகிறது).
....
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரரிடம் கேட்டேன், "ஏங்க இதுக்கெல்லாம் ஒரு பாலித்தீன் உறை மாதிரி ஏதாவது போட்டு வைக்கலாமல்ல? இல்லை, பதிப்பகத்துக் காரங்ககிட்டையாவது சொல்லலாமே?". "எங்களுக்கு வரும் போதே அப்படித்தாங்க வருது" என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

புத்தகங்களையெல்லாம் நன்றாக உறையிட்டு அழுக்குப்படாமல் வைக்கலாம் என்ற அக்கறை பெரும்பாலானோருக்கு இல்லை. கடைக்காரர்களைவிட பதிப்பாளர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காரியம் இது. இப்போதெல்லாம் உலகத்தரத்தில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அவற்றை ஒரு பாலித்தீன் உறையில் இறுகக் கட்டி கடைகளுக்குக் கொடுத்தால் புத்தகங்கள் நன்றாக இருக்குமே. ஒவ்வாரு புத்தகக் கடைக்கும் 'புரட்டும் பிரதி' என்று ஒன்றை இலவசமாகக் கொடுக்கலாம். கட்டப்பட்ட புத்தகங்களுடன் இப்பிரதியும் இருந்தால், மற்ற புத்தகங்கள் நொந்து நூலாகும் நிலை தவிர்க்கப்படும்.

அப்புறம், விஜயா பதிப்பகத்திற்குச் சொந்தமான கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். இங்கும் கூட்டம் சொற்பமே! (சற்று தொலைவிலிருக்கும் துணிக்கடைகளுக்குள் எப்போதும் மூச்சு விடமுடியாத கூட்டம்!!) வாசகர்களின் வசதிக்காக தள வசதிகள் செய்து கொண்டிருந்ததை உரிமையாளர் கூட்டிச் சென்று காண்பித்தார். இவ்வேலைகள் முடிந்துவிட்டால் நிறைய செலவு செய்து வெளியில் கண்காட்சி நடத்த வேண்டியிருக்காது என்று அவர் சொல்லக் கேட்டதாக நினைவு!! கணினி மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பட்டைக் கோடு, வருடி (scanner) போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பக்கம் வந்து பணிசெய்யும் பெண்களிடம் ஒரு புத்தகத்தைக் கேட்க பல நிமிடங்கள் தேடி எடுத்துக் கொண்டுவந்துதான் கொடுத்தார்கள். அடுத்தமுறை இந்நிலை மாறியிருக்கலாம்.

Wednesday, March 01, 2006

வரப் போகிறது அகல ரயில் பாதை!

சென்ற வெள்ளிக்கிழமையன்று (24.02.2006) நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட 'ரயில்வே பட்ஜெட்'டில் உள்ள நல்ல செய்திகளுள் ஒன்று கோவை-பொள்ளாச்சி, பாலக்காடு-பொள்ளாச்சி-திண்டுக்கல் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்படுவதற்காகப் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது. முழுமையாகப் பணம் ஒதுக்கப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொஞ்சம் மகிழ்ச்சியடைவேன். நிறைய மகிழ்ச்சியடைய, இன்னும் ரயில்வே எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட (அப்படித்தான் சிறுவயதில் சொல்லக் கேட்டுள்ளேன்) இப்பாதையில் ஒரு நாளைக்கு சில வண்டிகளே சென்று கொண்டிருக்கும். ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் (எனக்குத் தெரிந்த கோவை வட்டாரத்தில்), மக்களுக்கு ரயில் நிலையம் 'தொலைவில்' என்றாகிவிட்டது. மக்களும் ரயில்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. ரயில் நிலைய ஊழியரும், வண்டி ஓட்டியும் பிரம்பு வளையம் ஒன்றைப் பரிமாறிக் கொண்டு நிறுத்திச் சென்ற வண்டிகளும், நிற்காமலேயே போகின்றன. அவ்வளவுதான், சென்றதினி மீளுமா தெரியவில்லை.

நிற்க. என்னைக் கேட்டால் ரயில்வே நிர்வாகமெல்லாம் இன்னும் பிழைக்கத்தெரியாத அல்லது வருமானத்தில் மேலும் அக்கறை செலுத்தாததாக இருக்கும் நிர்வாகம் என்றுதான் சொல்வேன். உதாரணத்திற்கு, கோவை-பொள்ளாச்சிக்கு இடையே ஒரு நாளைக்கு சென்று வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமானது. பல நேரங்களில் யோசிப்பேன், இவ்வூர்களுக்கிடையில் மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்குமென்று! ரயில்வேக்கும் நல்ல வருமானம், மக்களுக்கும் செளகரியம், பேருந்துப் புகைகளால் ஏற்படும் சூழமைச் சீர்கேடு கொஞ்சமாவது குறையும், இத்யாதி.

இன்றிருக்கும் பொருளாதார நிலையில் பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நல்ல முனைப்போடு தொலைநோக்குள்ள நிர்வாகமும், சிறந்த திட்டமிடலும், அதனைச் செயற்படுத்துதலும்தான். இப்போதைக்குக் கனவு காண்போம்!

Monday, February 27, 2006

பறவையின் மரணம்

தேசாந்திரி என்னும் தொடரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். சென்ற இரண்டு வாரங்கள் வாசித்தேன். இவர் நிறையப் பயணம் செய்துள்ளார் போலுள்ளது. அதன்மூலம் கிடைத்த பல்வேறு அனுபங்களை எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். இவர் எழுதும் விதமோ என்னவோ, வாசிக்க நன்றாக உள்ளது.

முன்பொருமுறை எப்போதோ வாசித்த கட்டுரையில் மதுரை அருகே ஒரு மலைக்குகைகளில் கண்ட சமணப் படுக்கைகள் பற்றி எழுதியிருந்தார். ஒரு வேரின் சாறு, கல்லைப் பொடியாக்கச் செய்யும் விந்தையைப் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாரம் பறவைகளைப் பற்றிய தனது அனுபங்கள் சிலவற்றைச் சொல்கிறார். அதில் குக்குறுவான் ஒன்று. "குக்குறுவான் மிக அழகான பறவை. குருவி போன்று இருக்கும். மேல் பாகம் பச்சையாகவும், அடியில் இளமஞ்சளும், கால்கள் லேசான சிவப்பு நிறத்திலும் இருக்கும். இடைவிடாமல் கூவும் இப்பறவை தலையை உதறி அசைப்பதைப் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்"-என்கிறார்.

குக்குறுவானில் உள்ள மூன்று வகைகளைப் (இன்னும் கூட இருக்கலாம்) பற்றி 'தமிழ்நாட்டுப் பறவைகள்' என்ற புத்தகத்தில் காணலாம். காட்டுப் பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet, Megalaima zeylanica), சின்னக் குக்குறுவான் (White-Checked Barbet, Megalaima viridis) மற்றும் செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet, Megalaima haemacephala). மேற்குறிப்பிட்டதில் கடைசியில் வரும் குக்குறுவானைப் பற்றித்தான் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். இப்பறவையை நேரில் கண்டதாக நினைவில்லை. நாம் காணும் பறவைகள், தாவரங்களின் பெயர்கள் எல்லாவற்றையும் அறிந்தா வைத்திருக்கிறோம்! ஏதோ ஒரு பறவை, செடி என்று பொதுமைப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகிறோம்.

நான் பணிபுரியும் அலுவலகம் பெரிய கோபுரத்தையுடைய(tower) கட்டிடத்தில் உள்ளது. அதன் பக்கச் சுவர்களின் பெரும்பாலான பகுதியைக் கண்ணாடிகளே ஆக்கிரமித்திருக்கும். சென்ற வருட இறுதியில் ஒருநாள் காலையில் தொப்பென்று ஏதோ கீழே விழுந்ததைப் போலிருந்தது. கண்ணாடி வழியாக வெளியே பார்க்கையில் அது ஒரு சிறு பறவை (பெயர் தெரியவேண்டுமே!). வேகமாகப் பறந்து வந்து கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்திருக்க வேண்டும். கண்ணாடி ஜன்னலைத் திறக்கமுடியாத அமைப்பு வேறு. பரிதாபமாகக் கிடந்த அப்பறவையைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. உயிர் இருந்தது; உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். காலோ வேறொரு திசையில் மடங்கியிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தது. பிறகு சிறிது நகர்ந்த மாதிரி தெரிந்தது. சற்று நேரம் கழித்துப் பார்க்கையில் அது இருந்த சுவடு மட்டும் தான் தெரிந்தது. ஒருவேளை நிலைதிரும்பி எழுந்து பறந்திருக்கலாம்.

பறவையின் இயற்கையான மரணத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்! எங்கேயோ போய் எப்படியோ சாகிறது.

Sunday, February 26, 2006

நன்றி!

சன்னாசி, தாணு, தங்கமணி, தேன் துளி ஆகியோருக்கு முதலில் நன்றிகள் - இந்தியா செல்வதற்கு முன் (சென்ற டிசம்பர் கடைசி வாரத்தில்) எழுதியிருந்த பதிவில் (அழிக்கப்பட்டுள்ளது, பிறகு சொல்கிறேன்) வாழ்த்துச் சொன்னமைக்கு. அதை இவ்வளவு தாமதமாகச் சொல்வதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரில் இருந்தபோது மின்னஞ்சல்களைப் பார்க்க மட்டுமே இணையப்பக்கம் ஓரிரு முறை வரமுடிந்தது. திரும்பி வந்து சில வாரங்களாயினும் வேறு வேலைகள், ஆர்வமின்மையே அதிகமான இருந்தது.

சென்ற வார இறுதியில் தமிழ்மணத்தைப் பார்த்தபோது முற்றிலும் மாறியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன். அவ்வப்போது ஒருசில பதிவுகளை மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. இன்று எப்படியோ மனது வந்து ப்ளாக்கர் அடைப்பலகையில் மாற்றங்களைச் செய்து தமிழ்மணத்தில் இணைந்து கொண்டாயிற்று. தொடர்ந்து எழுத முயல்வேன்.

அழிக்கப்பட்ட அப்பதிவைப் பற்றி: என்னுடைய பதிவை இன்றுதான் ஒழுங்காகத் திறந்து, பின்னூட்டங்களைப் பார்த்தேன். அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'போலி'யின் கைவரிசைதான். பிப்ரவரி 14ந் தேதியன்று படிக்க முடியாத ஒரு பின்னூட்டத்தை இட்டுச் சென்றுள்ளது. காரணம், நான் டோண்டு அவர்களின் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேனாம்!! எப்பொழுது என்று எனக்கே தெரியாது! அப்படியே இட்டிருந்தாலும், அதற்காக இப்படியா?! மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுகள், பாவம்!