படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, June 27, 2006

சிதறல்கள்

பாஷா இந்தியா நடத்திய இந்திய வலைப்பதிவுகளுக்கான போட்டியில் தமிழுக்கு நிறைய பரிசுகள் கிடைத்துள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! இதுபோன்று தமிழ் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்று சொல்லி சென்ற வருடம் திசைகள் மின்னிதழ் போட்டி ஒன்றை நடத்தியதாக நினைவு. முடிவு என்னவாயிற்று என்று பார்க்கவில்லை. ஒருவேளை அப்போட்டி கைவிடப்பட்டதோ என்னவோ?

தேன்கூடு நடந்த போட்டியில் வென்ற தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இப்பதிவுகளில் ஒருசிலவற்றை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவற்றில் பெரும்பாலும் விடலைப் பருவத்தில் உண்டாகும் காதலைப் (அல்லது இனக்கவர்ச்சி) பற்றியே இருந்தது.

இப்பருவத்தில் உண்டாகும் மற்றொரு முக்கியமான அனுபவம் தேர்வு காலத்தில் உண்டாகும் பயம். அதைப் பயம் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. அப்பயம் கல்லூரி காலத்தில் அவ்வளவாக இல்லாமல் போய்விட்டிருந்தாலும் பள்ளிக் காலத்தில் வாட்டி எடுத்தது உண்மை. அப்பொழுதெல்லாம் படிப்பை முடித்து வேலைக்குப் போவோர்களைக் கண்டால், ஆகா இவர்களுக்கெல்லாம் தேர்விற்குப் படித்து எழுத வேண்டிய வேலையில்லை, கொடுத்துவைத்தவர்கள் என்று தோன்றும். இப்பொழுதுகூட எப்போதாவது அந்தப் பாடத்தை இன்னும் படிக்கவில்லையே, நாளைக்கு எப்படிப்போய் எழுதுவது என்ற மாதிரி கனவு வரும். அந்த அளவிற்கு உள்ளது அதன் தாக்கம். இது அப்பருவத்தினருக்கு உள்ள பொதுவான உளவியல் பிரச்சனையாகக்கூட இருக்கலாம்.

நம் பிரச்சனைகள் இப்படியுள்ளதென்றால் பெரும் அழுத்தத்திற்குள் வாழும் பதின்மர்கள் சிலரின் வாழ்க்கை அதிர்ச்சிகரமாகத்தான் உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முதலீட்டில் (25000 கோடி ரூபாய்கள் என்கிறார்கள்) நாடு முழுவதும் சில்லறை வணிகத்தில் இறங்கத் திட்டமிட்டிருப்பதாகச் செய்தி. பத்து இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். கேட்க நன்றாக இருப்பினும் இது களத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம்(சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், இத்யாதி என). பார்ப்போம்.

Sunday, June 18, 2006

மொட்டு விடுதல்

பழைய ப்ரில் மசிக்குப்பி அல்லது அதுபோன்று இருக்கும் ஒரு குப்பி என்று ஏதாவது ஒன்று கிடைத்துவிடாமல் போகாது. துவைக்கும் கல்லின் ஓரத்திலோ, சுவற்றின் மேலிருக்கும் டப்பாவிலோ நீலநிற சலவைக் கட்டியின் துண்டு கொஞ்சம் நிச்சயம் இருக்கும். குப்பியில் தண்ணீரை ஊற்றி, அத்துண்டை அதற்குள் போட்டு மூடியால் மூடிக் குலுக்கினால் நுரை ஏகத்திற்கு வந்துவிட்டிருக்கும். அதை அப்படியே வைத்துவிட்டு வீட்டின் பின்புறமோ, பக்கத்தில் எங்காவதோ இருக்கும் பப்பாளி மரத்தின் கிளையொன்றிப் பிடுங்கி வந்து சிறிய தூம்பாக நறுக்கிக் கொண்டு குப்பியில் விட்டுக் கலக்கி எடுத்து உஃப் என்று ஊதினால் சில சமயங்களில் அருமையாக மொட்டுக்கள் வரும், பல சமயங்களில் தூம்பிலிருந்து நீர் மட்டுமே சொட்டும். அது சலவைக் கட்டியின் தன்மையையும், ஊற்றும் நீரின் அளவையும், ஊதும் இலாவகத்தையும் பொருத்தது.

தற்காலங்களில் குப்பிகளில் (அதன் மூடியின் உட்புறத்திலேயே குச்சிபோன்று நீட்டப்பட்டு முனையில் இரண்டு மூன்று வளையங்கள் வெவ்வேறு விட்டங்களில் செய்துவைக்கப்பட்டிருக்கும்) மொட்டு விடும் திரவத்தை விற்பதைப் போல் முன்பு கடைகளில் விற்றார்களா எனத் தெரியாது. ஆனால், ஊர்களில் நடக்கும் திருவிழாக்களின் போது ஏதேனும் சிலசமயங்களில் அவற்றை விற்பார்கள்.

கடையில் வாங்கிய குப்பியிலிருந்து மொட்டுக்களை விட எத்தனித்துக் கொண்டிருக்கும் மகளுக்குப் பப்பாளிக் குச்சியில்கூட சலவைத்துண்டைக் கலக்கி மொட்டு விடலாம் என்று தெரிந்துவிட்டிருக்காது. பப்பாளி மரத்தையே பார்த்திராத அவளுக்கு, என்றேனும் ஒரு முறையேனும் அவ்வுள்ளூர்த் தயாரிப்பைக் காண்பித்துக் கொடுத்தே ஆகவேண்டும்.

Sunday, June 11, 2006

தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள்

ஆனந்த விகடன் 18.06.06 இதழின் "தமிழ் மண்ணே வணக்கம்!" பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். முதலில் இக்கட்டுரையைப் பதிப்பித்த விகடனுக்கு நன்றி! தமிழகத்திலுள்ள (மற்றும் வரும்) ஈழத்தமிழ் அகதிகளின் நிலை மோசமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை உரத்துச் சொன்ன கட்டுரையாளரும் பாராட்டுக்குரியவர். அக்கட்டுரையிலிருந்து சில மேற்கோள்கள் பின்வருமாறு:

"இரக்கம், கருணை, மனிதநேயம் போன்றவையெல்லாம் கவிதை எழுதுவதற்கும், அடுக்குமொழியில் பேசுவதற்கும் மட்டுமே என ஒதுக்கிவைத்துவிட்டோம். நடிகைகளின் தற்கொலை களுக்கு என்ன காரணம் என்று ஆராய நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால், ‘நடுக் கடலில் படகு கவிழ்ந்து இலங்கை அகதிகள் சாவு’ என்கிற துயரம் பற்றி நினைக்க யாருக்கும் நேரம் இல்லையா? "

"’அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டபூர் வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்கிற ஐ.நா&வின் 1967&ம் ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா ஏனோ கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந் தத்தை ஒப்புக்கொண்டால் உடன்படிக்கை களைச் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அச்சத்தால் இன்று வரை அகதிகளின் மறுவாழ்வில் மௌனம் சாதிக் கிறோம். அந்தச் சட்டபூர்வ நிர்ப்பந்தம் இல்லா மல் போனதால், ‘எங்கிருந்தோ வருபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?’ என்று சுயநலத்தோடு நடந்துகொள்ள வசதியாக இருக்கிறது."

"இந்தியா முழுவதும் நடக்கிற அதிகார, அரசியல் கொள்ளைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அகதிகளின் நல்வாழ்வுக்கு செலவு ஆகாது. ஒரு குடும்பத் தலைவருக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகையாக வழங்குகிறது அரசு. ஒரு மாதம் முழுக்க அந்த ரூபாயில் எப்படி வாழ முடியும் என்று சிந்திக்க யாருக்கும் அவகாசம் இல்லை. குழந்தைகளாக இருந்தால் 45 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 90 ரூபாய், பருவமடைந்தவர்களுக்கு 144 ரூபாய் என வயது அடிப்படையில் மாதந்திர உதவித் தொகை அளிக்கப்படுகிறது. சுத்திகரிக் கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கே பத்து ரூபாய் செலவழிக்க வேண்டிய காலகட்டத்தில், 45 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படிக் குழந்தைகளுக்குப் பால் புகட்ட முடியும்? "

"டயானா இறந்த துயரத்துக்கு அஞ்சலிக் கவிதைகள் எழுதும் நம் தமிழினப் படைப்பாளிகள், அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை நினைக்காமல் இருப்பதுதான் இன்னும் வேதனை. தங்களின் இரக்கத்துக்குச் சின்னதாக எதிர்ப்பு வந்தாலும், இரக்கப் படுவதைக்கூட நிறுத்திக்கொள்கிறார்கள் நம் கலைஞர்கள். ‘எதுக்கு வம்பு?’ என்று கூச்சப்படாமல் பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பதில் தருவ தற்குக்கூட அச்சப்பட்டு மௌனமாக இருந்துவிடுகிறார்கள். ஆயுதங்களைவிட ஆபத்தானது அந்த மௌனம்!"