படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, November 22, 2005

எம்.எம்.எஸ்-ஸில் பயணச் சீட்டு!

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பயணச் சீட்டுகளை எம்.எம்.எஸ் மூலமாகப் பெறும் வசதியினை ஸ்விஸ் ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் முதலில் ஒருமுறை தங்களது எம்.எம்.எஸ் கொண்ட செல்பேசி, செல்லுபடியாகும் கடனட்டை போன்ற விவரங்களை ரயில் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எந்நேரமும் இயங்கும் தொலைபேசி எண்ணிற்கு (இதற்குத் தனிக் கட்டணம் என்பது வேறு) அழைத்துச் சொன்னால் வேண்டிய பயணச் சீட்டு செல்பேசிக்கு எம்.எம்.எஸ் செய்தியாக அனுப்பப்பட்டுவிடும். அதில் வரும் இருபரிமாண பட்டைக் கோட்டை(2D-barcode), பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் தங்களிடமுள்ள விசேட உணரி மூலம் சரிபார்த்துக் கொள்வர். பயணச் சீட்டிற்கான தொகை கடனட்டை மூலம் வசூலித்துக் கொள்ளப்படும். ஆரம்ப கட்டமாக 780 ரயில் இணைப்புகளுக்கு இவ்வசதி வழங்கப்படும் என்கிறார்கள். நவீனத் தொலை நுட்பியலைக் கொண்டு மற்றுமொரு சேவை!

[எம்.எம்.எஸ் - செல்பேசிகளின் வழியாகப் பல்லூடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நுட்பியல். இதன் மூலமாக உரைச் செய்தி, படங்கள், ஒலி, ஒளி முதலானவைகளை அதனை ஆதரிக்கும் செல்பேசிகளில் அனுப்பவும் பெறவும் முடியும்.]

ரிப்பன் கட்டிடம்

கட்டிடம் மட்டும்தான் பார்க்க நன்றாக உள்ளது. மற்றவை பரிதாபம்!

Sunday, November 20, 2005

ஊழலை மறைக்கப்போகும் சட்டமா?

பின்வரும் செய்திக்கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் வந்துள்ளது:

பல பொதுத்துறை நிறுவனங்களின் பித்தலாட்டங்களை புட்டுபுட்டு வைத்து, பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் முகங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிய, தணிக்கைத் துறை அதிகாரிகள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் வேலைக்கே வேட்டு வைக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது என்பதுதான் காரணம்.

‘இனிமேல் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் தணிக்கையை தனியார்கள் மூலமே முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வரவிருக்கும் சட்டம்.

‘‘ஊழலுக்குத் துணைபோகும் இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. இது நிறைவேறினால் மத்திய & மாநில அரசுகளில் நடைபெறும் ஊழல்கள் இனி வெளியே தெரியாமலே போய் விடும். இப்படியரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து ஊழலுக்குத் துணைபோகத் துடிக்கும் இந்த ஆட்சியை பதவியிலிருந்து இறக்கு வோம்...’’ என்று அதிரடி முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி.யும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ரூப்சந்த் பால். இவர்தான் மத்திய & மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார்.

ரூப்சந்த் பால் தலைமையில் அணிதிரண்டிருக்கும் தணிக்கைத் துறை அதிகாரிகள், வரவிருக்கும் புதிய சட்டத்தினால் ஏற்படும் கேடுகளை பொது மக்களுக்கு விளக்கும் வேலையில் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். அந்த சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ‘அகில இந்திய வணிக தணிக்கை அதிகாரிகள் சங்க’த்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். நம்மிடம் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் ஆக்ரோஷமாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே...

‘‘இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாக 1,230 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தணிக்கை செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாடு முழுவதும் 900 தணிக்கை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். இவ்வளவு அதிகமாகப் பணம் புழங்கும் இடத்தில் அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள்தான் தணிக்கை செய்ய வேண்டும். ‘இந்த அதிகாரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ கட்டுப்படுத்தக் கூடாது. அது சுதந்திரமான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் தணிக்கை முறை, வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதாக இருக்கும்’ என அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் கம்பெனி சட்டத்தின் 619 பிரிவை ஏற்படுத்தினார்.

இப்போது இந்த சட்டத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பதிலாக புதிய கம்பெனி சட்டத்தை அறிவிக்கப்போகிறது. இந்த புதிய சட்டப்படி பார்த்தால் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் எந்த ஒரு தனியார் தணிக்கை நிறுவனத்தையும் தங்கள் கணக்குகளை சரிபார்க்க அமர்த்திக் கொள்ளலாம். இதன்மூலம் இதுவரை இந்திய மக்களின் பிரதிநிதிகளாக பொருளாதாரத்தின் கண்காணிப்பாளர்களாக வலம்வந்த நாங்கள், வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் வெளியில் தெரியாமலே போய்விடும்.

இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களையெல்லாம் கண்டுபிடித்தது எங்கள் கண்கள்தான். சுர்ஹித் லாட்டரி ஊழல், பீகாரைக் கலக்கிக் கொண்டிருக்கும் மாட்டுத் தீவன ஊழல், போஃபர்ஸ் ஊழல், யூரியா ஊழல், பழைய வீராணம் ஊழல், டான்ஸி நில விற்பனை முறைகேடு, கலர் டி.வி. ஊழல் என எல்லாவற்றையும் கண்டுபிடித்தது நாங்கள்தான்.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும். சரியாகச் சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

தனியார் தணிக்கை முறையில் என்னென்ன முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம். அண்மையில் மூடப்பட்ட ‘குளோபல் டிரஸ்ட் வங்கி’ தான் அதற்கு சரியான உதாரணம். இந்த வங்கியின் 2003-04ம் ஆண்டுக்கான தணிக்கையை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த வங்கியாக, பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் வங்கியாக குளோபல் டிரஸ்ட் வங்கியை வர்ணித்திருந்தது. ஆனால், அடுத்த வருடத்திலேயே வங்கியின் நிதி நிலைமை படுபாதாளத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் அரசியல்வாதிகளின் துணையோடு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகள் இனி சுலபமாக வாங்கி விட முடியும். எப்படியென்றால் தனியார் முதலாளிகள் கண் வைக்கும் பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தணிக்கை செய்து அதையே காரணமாகக் காட்டி நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராக இருக்கும். இடதுசாரிகள் எவ்வளவுதான் கத்தினாலும் விற்கத் துணிபவர்கள் தணிக்கை அறிக்கையை காரணம் காட்டிப் பேசுவார்கள் என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்கள்.

பிறகு, எல்லாம் போகட்டும், எங்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிபோட முடியவில்லை என்பதுதான். இதன் அர்த்தம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நேர்மையற்ற முறையில் குறுக்கு வழிகளை மட்டுமே கடைப்பிடித்து தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும். இதற்காக முறை கேடாக செலவிடப்படும் தொகைக்கு கணக்கு வழக்கு இருக்காது. காரணம் அவையெல்லாம் தனியார் பணம். ஆனால், இந்திய பிரஜைகளின் வரிப்பணம் சம்பந்தப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அப்படியொரு குறுக்கு வழிகளில் பயணம் செய்ய எங்கள் தணிக்கைத்துறை அனுமதிக்காது. காரணம் இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டின் இமேஜும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறோம்... ஈரானி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி கொடுத்த பரிந்துரையின்படிதான் மத்திய அரசு இப்படியரு முடிவு எடுப்பதாக அறிவிக்கிறார்கள். ஈரானி என்பவர் யார் என்றால் மத்திய அரசுக்குச் சொந்தமான வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முறைகேடாக வாங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர் என்று எங்களால் விமரிசிக்கப்பட்டவர்.

உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்பதை பொதுமக்கள்தான் யோசிக்க வேண்டும்’’ என்று கொதித்து முடித்தார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பவர் மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன். இவர் ‘பொதுத்துறை நிறுவனங்களின் நாடாளுமன்ற கமிட்டி’ யின் தலைவராகவும் இருந்தவர். ‘‘ஒட்டு மொத்த இந்தியர்களும் வரவிருக்கும் மோசமான ஒரு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய புனிதப் பணியை செய்ய வேண்டிய வேளை இது’’ என்று தனது பிரசாரத்தைத் துவக்கி இருக்கிறார் செழியன்.

Wednesday, November 16, 2005

2006 உலகக் கோப்பை கால்பந்தில் ஸ்விஸ்

போன வார சனிக்கிழமை ராத்திரி சுமார் 8.30 மணி வாக்குல சும்மா ஒரே ஒரு விநாடிக்கு ஓர் அதிர்வு. முந்தின வருஷமும் ஒரு தடவ ராத்திரியில லேசா வீடே ஆடுச்சு, இந்தத் தடவை அவ்வளவுக்காத் தெரியல. இப்பெல்லாம் அடிக்கடி பூமிக்கடியில ஏதோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த ஆட்டம் முடிஞ்ச பின்னால அன்னைக்கு பெர்ன்-ல நடந்த ஸ்விஸ்-துருக்கி கால்பந்தாட்டத்தை தொ.காவுல பார்த்து முடிச்சப்போ, முதல் ஆட்டத்தைப் பத்தின பயம் கொஞ்சம் மறந்து போயிருந்தது. ஸ்விஸ் ஆளுக நல்லாவே ஆடி ஜெயிச்சிருந்தாங்க. அரங்கத்துல ஒரே கொண்டாட்டமா இருந்தது. அங்கயும் நிலம் ஆடுச்சான்னு தெரியல, இவங்க ஆட்டத்துல ஒரு வேள நிலம் அடங்கியிருந்துச்சோ என்னவோ! :)

அன்னைக்கு ஆடுனது முக்கியமானதுன்னாலும், இன்னைக்கு நடந்த போட்டிதான் இந்த ரெண்டு பேர்ல யாருக்கு அடுத்த வருஷம் ஜெர்மனியில போய் ஆடுற வாய்ப்பு இருக்குங்கறதத் தீர்மானிக்கறது. வழக்கமா போட்டி ஆரம்பிக்கற நேரத்துல தொ.காவப் போட்டுக்கலான்னு விட்டுட்டு அப்புறம் வந்து போட்டா, ஒரு மணி நேரம் ஆட்டமே முடிஞ்சிருந்தது :( இஸ்தான்புல்லுல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாலயே ஆரம்பிச்சுட்டாங்கங்கறது அப்பத்தான் பட்டது. திரையில முதல்ல பாத்தது ஸ்கோர் பட்டிதான், பகீர்னுதான் இருந்தது (ஏற்கனவே இன்னைக்கு இந்தியா தோத்துப்போனதக் கேட்ட சோகம் வேற, அதுகூட இதுவும் சேந்துக்கிச்சு). துருக்கி 3, ஸ்விஸ் 1 - ன்னு இருந்தது. இன்னும் இருக்கற முப்பது நிமிஷத்துல ஏதாவது அதிசயம் நடக்கப் போகுதான்னு பாத்துக்கிட்டு இருக்கறப்போ, முடியறதுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னால ஸ்விஸ் அணிக்காரங்க இன்னொரு கோலைப் போட்டுட்டாங்க, அரங்கத்துல ஈ ஆடல. அப்புறம் கடைசி நிமிஷத்துல துருக்கியும் ஒன்னைப் போட்டு 4-2க்கு கொண்டு வந்துடாங்க. இருந்தாலும் அவங்களுக்கு பழைய பந்தயங்களோட கணக்குப்படி இந்தப் போட்டில 3-0 ன்னு ஜெயிச்சாத்தான் மேல போகமுடியும். ஆனா தோத்தாலும் (ஆனா இவ்வளவு நாளா தொடர் முழுசும் நல்லாவே கஷ்டப்பட்டுத்தான்) ஸ்விஸ் பசங்க உலகக் கோப்பைல ஆடறதுக்கு முன்னேறிருக்காங்க. இந்த வாட்டி உலகக்கோப்பைல ஆடப் போறது அவங்களுக்கு எட்டாவது தடவையாம். ஜெயிக்கறாங்களோ இல்லையோ அதுக்குள்ள நுழையறதே பெரிய விஷயம்தான். வாழ்த்தறோம்!

Monday, November 14, 2005

சிறை-விவசாயி

என்னய்யா நடக்கிறது நாட்டில்?! ஆயிரம் பேர் சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தங்களுக்கு வேண்டியவர்களை 'விடுவித்துச்' செல்வதென்பதை என்னவென்று சொல்வது? தாக்குதல் திட்டங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது அதுபோன்றவைகளைக் காட்டும் சினிமாக்கள் தோற்றுவிடவேண்டும் போலுள்ளது. உளவு அமைப்புகள் என்பதே அங்கு இல்லையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா? பிகார் போன்ற சில மாநிலங்களில் மக்களை வளரவிடாமல் தடுக்கும் சமூக நோய் ஆழப் பரவியுள்ளது. அவைகளுக்குத் தீர்வு காணும் வரையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டேதானிருக்கும்.

திறந்து கிடந்த சிறைக்குள்ளிருந்து தப்பிச் செல்ல விரும்பாமல் அங்கேயே சிலரும், தாக்குதலின் போது உயிர் பிழைக்கத் தப்பி விட்டு மீண்டும் சிறைக்கே வந்தோரும் இருக்கிறார்களாம். இதை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

-----------

ஒரு விவசாயிதான் விவசாய நிலத்தை வாங்க வேண்டுமென்று மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமுள்ளதாம், இன்றுதான் கேள்விப்படுகிறேன். "அமிதாப்பச்சன், நீங்கள் நடிகரா, விவசாயியா? முதலில் தெளிவுபடுத்துங்கள்". பாவம் அமிதாப், இப்படியெல்லாம் கஷ்டமான கேள்வியைக் கேட்கலாமா? ஒருவர் தான் செய்யும் தொழிலை நிரூபிக்கச் சான்றிதழைக் கூடப் பெறலாமோ! ஒன்னும் தெரியமாட்டேங்குது போங்க :(

Tuesday, November 08, 2005

வெண் பாஸ்பரஸ்

தானாக எரியக்கூடிய வேதிப் பொருள் - போர்களங்களில் ஒளியை ஏற்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும்.
உடம்பில் பட்டால் தோலும் சதையும் எரிந்து விடும்.
இப்படிப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்ட ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தம் உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் பெரியண்ணன் கையெழுத்திடவில்லை.

ஆகவே, அதை உபயோகப்படுத்தாமல் விடுவானேன். யார் எரிந்தாலென்ன, செத்தாலென்ன, யார் கேட்பது? முடிந்த வரை அழித்து விட்டு, அழித்ததற்கான தடயங்களையும் அழித்துவிட்டால் அப்புறம் அழிவைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/4417024.stm

Sunday, October 09, 2005

துயரங்களும் அவலங்களும்

இமாலயப் பகுதியில் நடந்த நிலநடுக்கம் மக்களை அளவிட முடியாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஜீவன்களைக் காணும்போது மனம் பதைக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீட்புதவி சென்றடைவதற்குள் இழப்புகள் இன்னும் அதிகமாகக் கூடும். வெறும் கையால் எவ்வளவு செய்துவிட முடியும் அவர்களால்? அமுங்கிய பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்து ஓலக்குரல் கேட்பதாகச் சொன்னார்கள், மிகவும் வருத்தமாயிருந்தது.

க்வடமாலா, எல்சல்வடார் முதலான மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றிரண்டு நாட்களாகப் பெய்துவரும் பேய்மழையில் ஒரு கிராமமே நிலச்சரிவில் புதைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆற்று வெள்ளத்தின் சீற்றத்தைப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கொடுமையாக உள்ளது.

சமீப காலங்களில் நடக்கும் இயற்கையின் சீற்றங்களைப் பார்க்கும்போது உலக நாடுகள் அனைத்தும் மீட்புதவி மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் தயாராக வைத்திருக்க வேண்டும் போலுள்ளது.

பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கிவிட்டது போலுள்ளது. இம்முறை ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில். சகட்டு மேனிக்கு கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் போன்றவற்றைப் பெரிய குழிகள் தோண்டி உயிருடனோ, பாதிகொன்றோ அதற்குள் போட்டுத் தீமூட்டிச் சாகடித்துக் கொண்டுள்ளனர். சைபீரியாவிலிருந்து மேற்கு நோக்கிப் பறக்கும் பறவைகளால் அமெரிக்கக் கண்டத்தில்கூடப் பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

மொராக்கோ வழியாக ஸ்பெயின் நாட்டுச் சார்ந்த பகுதிக்குள் நுழைய முற்பட்டு இயலாமற்போனவர்களை, மொராக்கியக் காவலர்கள் பேருந்துகளில் அள்ளிச் சென்று பாலைவனத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போய்விட்டுக் கொண்டுள்ளார்களாம். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, எங்காவது ஏதாவது வேலை பெற்றுவிடும் நோக்கோடு, கடல் வழியாக உயிரைப் பணயமாக வைத்துப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகளுக்கு வர சதா முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு அது எட்டாக் கனியாகவே போய்விடுகிறது. எல்லாவற்றையும் தாண்டி வந்து ஐரோப்பிய நாட்டுக் காவலர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் வந்த நாட்டிற்கே ஏற்றிவிடப்படுபவர்கள் ஏராளம்.

ஓரிரு நாட்களாகச் செய்திகளில் அதிகம் தென்படுபவை இவைதான். ம்...

Thursday, September 29, 2005

தோற்ற மயக்கங்களோ?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com
நடுவுல இருக்கற தூணப் பாருங்க!

Image hosted by Photobucket.com
இந்தப் படத்துல நெறைய முகங்கள் இருக்குங்க. 4-5 முகங்களப் பாக்கறவங்க சாதாரணவங்களாம். அப்படியே 8, 9-ன்னு ஒவ்வொன்னுக்கும் ஒன்னைச் சொல்றாங்க. அத்தனையையும் பாத்திருக்கறவங்க அதிஉன்னிப்பா கவனிப்பவராம். எத்தனைன்னு கேக்கறீங்களா? இன்னொரு தடவை எண்ணிப்பாத்துக்குங்க. எண்ணிட்டீங்களா? ஒரு டசனுக்கு ஒன்னு கம்மியா இருந்ததுங்களா?

தலைப்பு உபயம்: முண்டாசுக்கவி

Tuesday, September 27, 2005

பட்டாம்பூச்சி

பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
நல்ல நல்ல கதைகள் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
வண்ண வண்ண படங்கள் பேசும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
அறிவை வளர்க்க அன்பாய் உதவும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பாட்டு சொல்லி பாடச் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
புதுமை உலகம் இனிமை உலகம்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி....

என்ற இனிமையான பாடலுடன் கோயம்புத்தூரிலிருந்து 'தமிழில் முதன்முறையாக' பட்டாம்பூச்சி என்ற பெயரில் 'சிறுவர்களுக்கான சி.டி.மாத இதழ்' ஒன்று சென்ற ஆண்டில் (அல்லது அதற்கு முந்தைய ஆண்டில்) ஆரம்பிக்கப்பட்டது. வெளிவந்த சில மாதங்களிலேயே நின்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாங்குவோரின்மையாலா இல்லை வேறேதும் காரணமா என்று தெரியவில்லை. தமிழுலகில் இதுபோன்று ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் விடப்படும் முயற்சிகள் ஒன்றிரண்டல்ல. இருந்தாலும் நல்ல முயற்சி ஒன்று தொடர்ந்திருக்கலாம்.

பட்டாம்பூச்சி இதழ் 2-ல், கிராமத்துப் பாட்டி குழந்தைகளுக்கு குட்டிக் கதை ஒன்றைச் சொல்கிறார். அக்கதையில் மீனிடம் அகப்பட்ட 'நெலப்புழு' (மண்புழு அ நிலப்புழு), மீன்களைப் பார்த்து இவ்வாறு சொல்கிறதாம்:

வாரீர் வாரீர் என்னாலே
வந்து நிற்கிறீர் முன்னாலே
சாகப் போகிறே என்னாலே
செத்துக் கிடக்கிறேன் உன்னாலே

Sunday, September 25, 2005

நின்னைச் சரணடைந்தேன்!

எங்கோ தூரத்தில் மெதுவாக ஒலிப்பது போன்று அடுத்த அறையில் ஒலிக்கவிடப்பட்டிருந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமித்துக் கொண்டது. தாக்கியது கவியா? பாடலா? இசையா? இல்லை அனைத்தும் சேர்ந்தா?

பாடலைக் கேட்க...


நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

5.
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

[நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்]

Monday, September 19, 2005

செம்மறியாட்டு உரோமம்

ஜூரிக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத் தூரத்திலே (ரயிலில்) இருக்கும் ஜெர்மனிக்குச் செல்ல கொஞ்சம் மெனக்கெடவேண்டியுள்ளது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிற்காவது விசா இல்லாமல் போக முடியுமா என்று தெரியவில்லை. விசா வாங்குவதற்கு ஒரு நாள் வேலையைக் கெடுத்துக் கொண்டு பெர்ன் நகருக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவும் சும்மா நினைத்த போதெல்லாம் சென்றுவிட முடியாது. பிரத்யேகத் தொலைபேசி எண் ஒன்றிக்கு அழைத்து நேரம் வாங்க வேண்டும். இத்தொலைபேசியின் மறுமுனையில் பேசுபவருக்கு அவரை அழைப்பவரிடமிருந்துதான் சம்பளம் பெற்றுத் தருவார்களோ என்னவோ (சும்மா ஒரு பேச்சுக்கு), அவ்வெண்ணை அழைக்க ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட CHF 3.15 (~$2.5) ஆகுமென்றால் என்னவென்பது! அழைத்தவுடன் விரைவில் நேரம் கிடைத்து விட்டால் நன்றாக இருக்குமா? அதனால் அழைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் நேரத்தைக் கொடுப்பார்கள்!

சென்ற ஜூன் மாதம் ஒருநாள் அதே தூதரகத்திற்குச் சென்றிருந்தபோது உப்புப் பெறாத காரணத்திற்காக விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். என்னுடைய கவனக் குறைவால் அவர்கள் கேட்ட ஒரு கடிதம் விண்ணப்பத்துடன் இணைக்காமல் விடுபட்டு விட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் தொலைநகல் மூலம் அக்கடிதத்தை உரியவர்களிடமிருந்து பெற்றுத் தர உறுதியளித்ததைக் காதில்கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் சாலையோரம் நின்று விண்ணப்பங்களைச் சரிபார்த்து மக்களை உள்ளே அனுப்பும் கணவான் ஒருவர். விளைவு, அடுத்த நேரம் கிடைக்கும் வரை, அதாவது மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அன்றே விசா வாங்கிக் கொண்டு மறுநாளே ஜெர்மனி போகுமளவிற்கு தலை போகும் வேலையொன்றும் இல்லைதான்; என்றாலும் விசா வாங்குவதற்கான நடைமுறைகள் சில சமயங்களில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.

அனில் அம்பானிக்கும், ஆனந்த மகிந்திராவிற்கும் ரஷ்யா விசா கொடுக்க மறுத்துவிட்டது என்ற செய்தியை நேற்றைய தினமணியில் படித்த போது, முன்பு ஏற்பட்டிருந்த தேவையற்ற உளைச்சலெல்லாம் கேலிக்குரியதாகிவிட்டது. அப்பேர்ப்பட்டவர்களுக்கே விசா மறுக்கப்படும் போது நம் போன்ற சாதாரண ஆசாமிகளெல்லாம் எம்மாத்திரம்!

சென்ற ஜூலை ஒன்றாம் தேதி கூப்பிட்டிருந்ததற்கு இன்றைக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். இம்முறை அவர்கள் கேட்டதெல்லாம் சரியாக இருக்க விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

பெர்ன் நகரில் (இங்கு எல்லா இடத்திலுமே) குளிராகவே இருந்தது, மேகமூட்டம் வேறு. தூதரகத்திலிருந்து திரும்பி வரும்போது சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் சுமாரான அளவில் இருக்கும் திறந்த வெளியில் கூட்டம் கொஞ்சம் இருப்பதைப் பார்த்து பேருந்திலிருந்து அங்கேயே இறங்கிக் கொண்டேன். வழக்கமாகக் நடக்கும் வாரச் சந்தைகளுக்குக் கொஞ்சம் மாறாகவே இருந்தது. பெரியவர்கள் அமர்ந்து சூடாகப் பருகிக் கொண்டிருந்த கூடாரம், பால் பொருட்களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வகை வகையான Cheese-களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வேலி போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளும் பன்றிகளும், உருளைக் கிழங்கை மண்பெட்டியொன்றில் போட்டு அதைத் தோண்டி எடுக்கும் சிறு போட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் சிலர், அந்தக் குளிரில் உட்கார்ந்து கொண்டு கம்பளியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் என்று பல காட்சிகள். பெர்ன் வட்டார விவசாயம், கால்நடை முதலானவை சார்ந்த தொழில்களை முன்னிருத்தும் கண்காட்சி போலிருந்தது. கேமராவையும் எடுத்துக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது.

கண்கவரும் நாட்டுப் புற உடையணிந்த இரு விவசாயிகள், செம்மறியாடு ஒன்றின் கால்களைக் கட்டி மேசையின் மீது படுக்க வைத்து முடிவழிக்கும் இயந்திரமொன்றில் சர்சர்ரென வழித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் காண மக்களுக்கு ஒரு காட்சியானது அது. கொஞ்ச நேரத்தில் முடி அனைத்தையும் இழந்து வெறும் தோலுடன் மற்ற ஆடுகளுக்கு மத்தியில் போய் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு குளிரில் அதற்குக் குளிராதா என்ற கேள்வி மனதை ஆக்கிரமித்தது. அங்கிருந்தவரிடம் மெல்ல விசாரிக்க, ஒவ்வொரு வருடமும் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் செம்மறியாடுகளின் உரோமம் வழிக்கப்படவேண்டும்; இல்லையென்றால் அவை நோய்த்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கமளித்தார். அப்படியும்கூட இருக்கிறாதா என்று ஆச்சரியத்துடன் இடத்தைக் காலிசெய்து கொண்டு வந்தேன். செம்மறியாட்டு உரோமத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வழிசெய்த தூதரகத்தாருக்கு நன்றி!

Monday, September 12, 2005

தீவிரவாதிகளும் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?

அசோசியேட்டட் பிரஸ்ஸை ஆதாரம் காட்டி உள்ளூர்ப் பத்திரிக்கையொன்று இன்று போட்டிருந்த தலைப்புச் செய்தி சற்று திக்கென்றுதான் இருந்தது. அதன்படி (அதை நான் புரிந்துகொண்டவரையில்), அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது குடிமக்கள் மீது எந்த ஒரு நாடோ, பயங்கரவாதக் குழுக்களோ பேரழிவு ஆயுதங்களைக் (WMD) கொண்டு தாக்கத் திட்டமிட்டால், அவற்றை 'வருமுன் காக்கும்' பொருட்டு எதிர்காலத்தில் அந்நாடு/குழுக்களின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது எனப் பென்டகன் திட்டமிடுவதாகச் சொல்கிறது. கூடவே, பதுங்கு குழிகளை அழித்தெறியவும் ஓர் அணுஆயுதத்தைத் தயாரிக்கப் போகிறார்களாம். ஏற்கனவே பன்னாட்டுப் படையினரின் சில தாக்குதல்களில் கதிரியக்கத்தை உண்டுபண்ணும் வஸ்துகள் ஒளிந்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது சொல்லப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்டாகும் விளைவுகள், எதிர்விளைவுகள் எங்கு போய் முடியுமோ! கவலையாக உள்ளது. ஆயுதங்களால் உண்டாக்கப்படுவதா அமைதி? ம்...

[வேறு]
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேச்சு ஒன்றிற்கு மாநில அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்செய்தியின்படி பார்த்தால் மத்திய அமைச்சர் சென்னை உஷாராக இருப்பது நல்லது என்ற தொணியில் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஒரு மறுப்பை (அல்லது விளக்கத்தை) மாநில அமைச்சர் அறிவிக்க விரும்பினால் "தங்கள் அக்கறைக்கு நன்றி, ஏற்கனவே தமிழக அரசு அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, விவரங்களை இங்கே காணவும்" என்று சொல்லி ஒரு சுட்டியைக் கொடுத்தால் கண்ணியமாகப் போயிற்று.

அதைவிடுத்து, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வரும் 'அரைவேக்காடு', 'ஆதாரமில்லாத புத்தி', 'உளறுதல்', 'கேலிக்கூத்து' போன்ற வார்த்தைகளைக் கூறுவது அமைச்சர் பதவிக்கு நயம் சேர்ப்பதாகத் தோன்றவில்லை. அக்கருத்தை அமைச்சராகத் தெரிவித்தாரா அல்லது அவரது கட்சி உறுப்பினராகத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பின் என்ன?

மக்களும் இதுபோன்ற சொற்களைக் கேட்டு வெட்கும் நிலையை இழந்து விடத்தானே பொதுவில், அதுவும் உயர் பதவியிலுள்ளவர்களால் கூட அவை உபயோகிக்கப்படுகின்றன.

Monday, August 15, 2005

சம்பளம் எவ்வளவு?

"ஏம்பா எவ்வளவு சம்பளம் வாங்கற?" இக் கேள்விவியைக் கேட்பவர்கள் அப்பாவித்தனமாகக் கேட்கலாம்; தன் (அல்லது வேண்டப்பட்டவர்களின்) சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மனதுக்குள் நகைத்துக் கொள்ளக் கேட்கலாம் அல்லது காதில் புகை விட்டுக் கொள்வதற்குக் கேட்கலாம்; இன்னும் எத்தனையோ. ஆனால், கேட்கப்படுபவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தைக் கொடுக்கும் கேள்விதான்; அதுவும் இடம், காலமறியாமல் கேட்கப்படும் சமயத்தில். இந்தக் கேள்விக்கு எந்த மாதிரியான பதில் சொல்லப்பட்டிருக்கும் என்பதும் அவரவர்களுக்கே தெரியும்.

தினக் கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு இக்கேள்விகள் பற்றிக் கவலையில்லை - உலகத்திற்கே தெரியுமே களையெடுக்குப் போகும் மாரியம்மாவுக்கு எவ்வளவு வாங்குகிறாள் என்று! அம்பானிகளுக்கும் கவலையில்லை, அவர்களின் 'சம்பள'த்தைக் கட்டம்போட்டுப் பத்திரிக்கைகளில் காட்டிவிடுகின்றனர். மலைக்கும் மடுவுக்கும் இடையில் ஒரு பெருங்கூட்டம் இக்கவலையில் என்றும் அல்லாடிக் கொண்டே இருக்கிறது.

Monday, August 08, 2005

ஓடப்பிறந்தவர்கள்

நேற்று தொலைக்காட்சியில் கொஞ்ச நேரம் ஹெல்சிங்கியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2005ம் ஆண்டிற்கான உலக தடகளப் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது பெண்களுக்கான பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் (பந்தயத்திற்கும், போட்டிக்கும் என்ன வித்தியாசம்?). இருபது பேர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஓட ஆரம்பித்தார்கள், ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆரம்பித்ததும் ஒருவருக்குக் கால் தடுக்கிவிடவேண்டுமா என்ன? இருந்தாலும் சுதாகரித்துக் கொண்டு எழுந்து ஓடினார், அதுதான் இன்னும் பல சுற்றுகள் உள்ளனவே.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வெகுநேரம் கஷ்டப்பட்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தார் (இவரையும் சேர்த்து கேமராவின் கண்களுக்கு பெரும்பாலும் ஏனோ குறிப்பிட்ட பெண்களே அகப்பட்டார்கள், தோலின் நிறத்தாலோ?!). அவரை ஒட்டியே பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. சராசரியாக ஒரு கி.மீட்டரை மூன்று சொச்சம் நிமிடங்களில் முடித்து விட்டிருந்தனர்! நேரம் ஆக ஆக அவரை மற்றவர்கள் தாண்டிச் செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக ஒரே சீருடையணிந்த மூன்று பெண்கள். 9600 மீட்டர்கள் ஓடிக் களைத்த பின்பும் கடைசிச் சுற்றுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ, ஓட்ட வேகத்தை முடுக்கினார்கள் பாருங்கள் அம்மூன்று பெண்களும்! கடைசியில் போட்டி அவர்களுக்கிடையில்தான், ஒரே நாட்டிற்கு மூன்று பதக்கங்களையும் அள்ளிச் சென்றார்கள்.

நிச்சயமாக எத்தியோப்பியர்கள் ஓடப் பிறந்தவர்கள்! சமீப காலங்களில் நான் கவனித்தவரை நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களில் ஆண், பெண் இரண்டு பிரிவுகளிலும் பதக்கங்களை அள்ளிக் குவிக்கிறார்கள். (Haile Gebrselassie தன் சிரிப்பு நிறைந்த முகத்தாலும், கடினமாக ஓடித் தொடர்ந்து பெற்ற பல வெற்றிகளாலும் நிறைய பேருக்குப் பரிச்சயமானவர்.)
2005 தடகளப் போட்டிகளின் இன்றைய பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளார்கள் (சுட்டியிலுள்ள பக்கம் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் என்பதை நினைவிற் கொள்க). பஞ்சம், பசி, பட்டினி என்றே அறியப்பட்ட ஒரு நாட்டின் முகத்தை உலகிற்கு வேறுவகையில் உயர்த்திக் காட்டும் இவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

பொதுவாக, தற்போது எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நிறைய விளையாட்டுப் போட்டிகளில், குறிப்பாகத் தடகளம், ஆப்பிரிக்க வம்சாவளியினர் தனிப்பெரும் இடத்தை வகிக்கின்றனர் என்றே நினைக்கிறேன்.

Sunday, July 31, 2005

சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு

இந்தியாவில் சில்லரை விற்பனையில் (retail business) பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதிக்கும் யோசனை அரசின் பரிசீலனையில் உள்ளதை செய்திகளில் அடிக்கடி காண்கிறோம். ஆரம்ப கட்டத்தில் பல கட்டுப்பாடுகளுடன் (10,000 சதுர அடித் தளம், ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு கடை போன்றவை) மாறுகடையை (market) இவர்களுக்குத் திறந்து விடப்பட்டாலும், காலப்போக்கில் இவ்விதிமுறைகள் தளர்த்தப்படும் அல்லது காற்றில் விடப்படும். இப்படியொரு மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தால் வழக்கம்போல நமது 'மாண்புமிகு' உறுப்பினர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு நிறைவேற்றி விடுவார்கள். அப்புறம் நடைமுறைக்கு வந்தபின்தான் அதிலுள்ள சிக்கல்கள் தெரிந்து 'போராட' ஆரம்பிப்பார்கள் ('போட்டா' சட்டம் ஓர் உதாரணம்).

சில்லரைப் பெரு வியாபாரத்தில் ஈடுபடுள்ள உள்நாட்டு ஜாம்பவான்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறதென்பதைப் பார்க்கவேண்டும். மாறுகடையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படும் பட்சத்தில் ஏதோ சில நன்மைகள் இருந்தாலும், பலதரப்பு மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது எனது பொத்தாம்பொதுவான எண்ணம்.

Thursday, July 21, 2005

BMW-ம் வந்துவிட்டது!

செங்கற்பட்டில் BMW கார் தொழிற்சாலையை நிறுவவுள்ளதாகச் செய்தி. புதிய மாறுகடைகளைத் தேடிப்போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெருநிறுவனங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கின்றன. கேட்க நன்றாக இருந்தாலும், சாலை வசதி மேம்பாட்டிலும், சாலை விதிகளை மதித்துப் பின்பற்றுவதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படாத வரை எந்த புதுக் கார் வந்து என்னவாகிவிடப் போகிறது என்ற ஆதங்கமும் எழுகிறது.

வரும் நாட்களில் "BMW இங்கு வர நான்/நாங்கள் தான் காரணம்" என்று சில குரல்களைக் கேட்கலாம்! எங்கோ அடுத்த சாலையில் வரும் மளிகைக் கடைக்கும் நான் தான் காரணம் என்று சொல்லாத வரைக்கும் சரி!

Wednesday, July 20, 2005

குடமுழா

இந்த வாரத்தில் சிலமுறை தவில் இசைத் துண்டுகளை இணையத்தில் ஆங்காங்கும், இருக்கின்ற ஒலிப்பேழையொன்றிலிருந்தும் காரணமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தவில் ஓர் அருமையான இசைக்கருவி. சிறு வயதில், ஊர்விழாக்களின் போது ஒரு நபர் இதைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு அடி பின்னியெடுப்பதைக் கண்டு ஆட்டமும் போட்டுள்ளோம். திருமணம் போன்ற வீட்டு விழாக்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த தவிலுக்கு இப்பொழுதெல்லாம் சரியான மரியாதை கிடைக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. படப்பாடல் நிகழ்ச்சிகளையும், 'பேண்டு' வாத்தியங்களையும் புகுத்தி உள்ளதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்புறம், குடமுழா என்றொரு இசைக்கருவி. இதைப் பஞ்சமுக வாத்தியம் என்றும் சொல்வார்களாம். குடமுழாவைப் பற்றிய அரிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. நூல் அறிமுகக் கட்டுரைக்கான சுட்டி: http://varalaaru.com/Default.asp?articleid=162. அக்கட்டுரையில் இருக்கும் ஆடவல்லாரின் சிற்பப் படம் ஏதோ பரவசத்தை ஏற்படுத்தியது.

Sunday, July 17, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!! - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...

"இனி கூட்டிக் கழித்துப் பார்த்தால், இப்பொழுது உயிர் எழுத்துக்கள் அ,இ,உ,எ,ஒ என்று ஐந்தாகிவிட்டதல்லவா? ஆங்கிலத்தில் aeiou எனும் ஐந்து உயிரெழுத்துக்கள் ஆனதைப்போல. இவ்வாறான மாற்றங்களால் நம்மொழி அடைந்த நன்மை என்ன?

1. மொழியின் வரிவடிவம் அமைப்பின் சுருக்கம்.
2. மொழியின் வரிவடிவில் தெளிவு.
3. கற்போருக்கு (சிறுவர், பிறமொழியாளர்) இலகு.
4. நவீனத்துக்கு ஈடு.
5. பிறமொழிகளுடன் ஒப்பிட ஏது.

இவ்வாறே மெய்யெழுத்துக்களில், ண்,ந்,ன் ஆகியனவற்றையும் ல்,ழ்,ள் ஆகியனவற்றையும் ஒரே வரிவடிவில் குறிக்க முடிவது பற்றி உத்தேசித்தால் என்ன?

இவைகுறித்தெல்லாம் நான் சொல்வதிலும் பார்க்க பேரா.எம்.ஏ.நுஃமான் என்ன சொல்கின்றார் என்று அறியவைப்பது கருத்தை உங்களுக்குள் செலுத்த இலகு அல்லவா?

இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழு உலகையும் தழுவி விரிந்து நிற்கின்றது. மறு வகையில் முழு உலகமும் சுருங்கி தமிழ் கூறும் நல் உலகக்குடிமகன் ஒருவனின் தனி அறைக்குள் இன்று internet ஊடாக நுழைந்துவிட்டது. அதற்கேற்ப தமிழ்மொழியும் தன்னை விசாலப்படுத்தி தன் ஆற்றலை அகலித்துக் கொள்ள முனைகின்றது. இன்று தமிழ் பல்தேசிய மோழி என்பதனையும் பல்லினப்பண்பாட்டு மொழி என்பதனையும் நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். மொழி மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழின் ஒலி மரபும் மொழிமரபும் நெகிழ்ச்சியடைந்து புதிய தேவைகளுக்கு ஏற்ப புதிய மரபுகள் தோன்றிவிட்டன.... (பேரா எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு 19)

காலத்திற்கேற்ற கோலம் நம் தமிழ்மொழி கொள்ளாவிடில், அழிவதைத்தவிர வேறு வழிஇல்லை. ஆகும் வழியையே நாம் பார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தில் அத்தகைய மாற்றத்தை அது பெறுவதனை நாம் காண்கின்றோம். ph என்னும் வரிவடிவங்கள் f என்னும் ஒலிவடிவத்தை தந்து நிற்பதால் இப்போதெல்லாம் ph இதற்குப் பதிலாக f பயன்படுத்துகிறார்கள். இரண்டு வரிவடிவங்களுக்குப் பதிலாக ஒரு வடிவம்.

Photo - Foto

அவ்வாறே ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கக் கண்டபோது தேவையற்ற வரிவடிவங்கைள நீக்குகின்றார்கள்.

Night - Nite
Colour - Color

மேலும் ஒலி வடிவம் கருதி வரிவடிவம் சுருங்கிக் கொண்டு போவதும் ஆங்கிலத்தில் நிகழ்கின்றது. 1982 வாக்கில் தெல்லிப்பழைச் சந்தி வெள்ளவாய்க்கால் மதகில் ஒரு சுவரொட்டியைக் கண்டேன். மதில் ஆங்கிலத்தில் இவ்வாறு வாசகம் இருந்தது.

JR, UR a facist
VR not foolish
go back.
(ஜே.ஆர். என்னும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்தபோது இச்சுவரொட்டி காணப்பட்டது).

UR (you are), VR (we are) என்று வந்தவிதம் தமிழிலும் சாத்தியப்படுமெனில், நன்று, மிகநன்று.

உலக மொழிகள் யாவும் இவ்வாறு மாற்றத்தை அவாவி நிற்கின்றது. அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. புதியன புகுத்தி தமிழை நாம் வாழவைப்போம், வளர வைப்போம். செய்வோமா?"

Saturday, July 16, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!!

ஈழமுரசு ஐரோப்பா என்ற வார இதழில் அ.இரவி என்பவர் எழுதிய 'புதியன புகுதல்' என்னும் கட்டுரை நான்கு பாகங்களாக வந்துவிட்டிருக்கிறது. அதன் கடைசி பாகம் மட்டும் இந்த வாரம் வாசிக்கக் கிடைத்தது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் இன்றைய நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்வி இருந்தாலும் புதியவற்றை அறிதலும், எண்ணுதலும் நலமே. அக்கட்டுரையின் நான்காம் பாகம் பின்வருமாறு [பதிப்புரிமை பற்றி அவ்விதழில் எங்கும் காணோம்; அக்கட்டுரையை இங்கு பதிப்பதால் பதிப்புரிமைக்கு ஏதும் பங்கம் ஏற்படாதென்று நம்புகிறேன். அப்படியேதும் உண்டென அறிய வரும்பட்சத்தில் இக்கட்டுரை பதிவிலிருந்து நீக்கப்படும். இங்கு எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அது தட்டச்சின்போதும் நேர்திருக்கலாம்.] :

"தமிழில் முதல் ஒலி வடிவங்கள் அல்லது மூலஒலிவடிவங்கள் முப்பது என்று சொன்னோமே! அவற்றுள் ஸ்,ஷ்,ஹ் ஆகியன வரவில்லை என்றெல்லாம் சொன்னோமே! என்ன சொன்னோமெனில் அவ்வாறான ஒலி வடிவங்களுக்கு தமிழில் வரிவடிவங்கள் கிடையாது என்று சொன்னோம்.

என்னவென்றால் ஊரில் உலகில் இருக்கக்கூடிய எல்லா ஒலிவடிவங்களுக்கும் எல்லா மொழிகளிலும் வரிவடிவங்கள் இல்லை. அதற்கு சாத்தியமும் கிடையாது. தமிழில் ஞ், ழ் என்னும் ஒலிவடிவங்களுக்கு ஆங்கிலத்தில் வரிவடிவங்கள் இல்லை. ஞானம்-Gnanam, அதாவது ஞ் என்பதற்கு Gn என்பதையே பயன்படுத்துகின்றனர். அது முற்றிலும் பொருத்தமானது அல்ல. தமிழ்-Thamizh, இங்கு ழ் என்பதற்கு zh என்னும் ஆங்கில வரிவடிவம் பயன்படுகிறது. இதன் பொருத்தப்பாடும் கேள்விக்குரியது.

அவ்வாறே ஆங்கில F,G,H,X,Z என்று இன்னும் பல ஒலிவடிவங்களுக்கு தமிழில் வரிவடிவம் இல்லை. எப்படியோ திக்குமுக்காடி Father என்பதனை ஃபாதர் என்று எழுதிவிடுகின்றோம். இப்போது ஒன்றுக்கும் உதவாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஆய்த எழுத்துக்கு (ஃ) ஒரு சொல்லில் இடம் பெறும் குதூகலம் வாய்ந்திருக்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் இவை எவையும் மொழியின் போதாமை அல்ல. எல்லா மொழிகளும், பிறிதான மொழிகளிடமிருந்து இரவல் பெற்றும், கொடுத்தும், இயலுமானளவு தம்மை நிறைவு செய்து கொள்கின்றன. உலகுடன் ஒட்ட ஒழுகலும் உலகின் இன்றைய தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், நம் தமிழ்மொழியை எவ்வாறு வாலாயப்படுத்தப் போகின்றோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.

தமிழில் முதல் ஒலி வடிவங்கள் முப்பது என்றோமே! அதில் உயிர் எழுத்துகள் 12 உம் மெய்யெழுத்துக்கள் 18 உம் ஆகும் என்பதனை முதலில் குறித்துக் கொள்ளல் சாலும். ஒலிவடிவத்தின் உயிராக நிற்பது உயிர் எழுத்துக்கள் என்றும், உயிர் தங்குவதற்கு ஏதான உடலாக நிற்பது மெய்யெழுத்துக்கள் என்றும் சொல்லலாம். அந்த வகைப்பாடுகள் அற்புதம் என்பேன். ஆனால் வரிவடிவங்களை அளவுக்கதிகமாக இறைத்துவிட்டோமோ என்னும் ஐமிச்சம் தான் என்னிடையே தோன்றுகின்றது. உயிர் எழுத்துக்கள் எவை?

அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ

ஒ-ஓ
ஒள

இவைதாமே! இப்படித் தொகுத்தலுக்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் பார்வையில் இடப்பக்கம் உள்ள ஐந்து உயிர் எழுத்துக்களும் (அ,இ,உ,எ,ஒ) போதும் என்பேன். ஏனைய ஏழு உயிர்களையும் கழித்து அழுத்துவிடலாம் என்றும் சொல்வேன். ஏன் சொல்கின்றேன்?

அ,ஆ இரண்டையும் எடுங்கள். இரண்டும் ஒரே ஒலிவடிவங்களாலானவை. ஓம்தானே? உச்சரித்துப் பாருங்கள், உணர்வீர்கள். சிறு வித்தியாசம் என்னவெனில், அ என்பது குறுகியும் ஆ என்பது நீண்டும் ஒலிக்கின்றது. ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கின்ற போது இரண்டு வரிவடிவங்களை இதற்கு ஏன் இடவேண்டும்? நீட்சியான ஒலிவடிவம் வேண்டுமென்றால் எங்களிடம் ஏலவே உள்ள (ா) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம்தானே? எப்படி? இதோ பாருங்கள் இப்படி!

அ-அா
இ-இா
உ-உா
எ-எா
ஒ-ஒா

சரி, ஐ உம் ஒள உம் அப்படியே இருக்கட்டும். பிறகு வருகின்றேன்.

உயிர் எழுத்துக்களுக்கு மேற்கூறிய வரிவடிவங்களைக் கையாண்டோமானால், உயிர் எழுத்துக்களின் வரிவடிவங்களின் அளவைக் குறைத்துக் கொள்வோம் அல்லவா? இது தவறு, மரபை மீறுதல் தகாது என்று சொல்வோருக்கு, நான் என்ன சொல்ல? பவணந்தி முனிவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சொன்னதைச் சொல்லவா?

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவா, கால வகையினானே

மொழியின் வரிவடிவங்களைக் குறைத்துச் செல்லல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காலத்தில் கணனிப் பயன்பாடு அதிகரித்த நேரத்தில் மொழிக்கு மேலும் வலுவூட்டும். ஆகவே நாங்கள் இனி இப்படி எழுதுவோமா? அல்லது எல்லோரையும் எழுதச் சொல்லிக் கேட்போமா?

அாடு (ஆடு), கிாரி (கீரி), உார் (ஊர்), ஒாடம் (ஓடம்)

உயிர் எழுத்துக்களில் ஐ, ஒள என்னும் ஒலி, வரிவடிவங்கள் இரண்டு உள்ளன. இவற்றை எப்படி மாற்றமுறச் செய்யலாம்? ஐ என்பது அ உம் இ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் ஒள என்பது அ உம் உ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் தமிழ் இலக்கணம் சொல்கின்றது. அது சொல்லட்டும். தமிழில் ஏலவே ஐ ஒலிவடிவத்திற்கும் வரிவடிவங்கள் உள்ளன.

ஐ - அய்
ஒள - அவ்

இவை மெத்தப் பொருந்திப் போகிறதல்லவா?

ஐயர் - அய்யர்
ஒளவை - அவ்வை

மேற்கூறிய உதாரணத்தில் ஒலிவடிவத்தைப் பார்த்தீர்களா? அவை அச்சொட்டாகப் பொருந்திப்போகிறது. சங்ககாலப்பாடல் ஒன்றினை மேலும் நான் உதாரணத்திற்குத் தருவேன்.

கையது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

(போரிலிருந்து வெற்றி பெற்று திரும்பிய தொண்டைமானைப் பார்த்து அவ்வை பாடியது. கையில் வேல், காலில் புனையப்பட்ட கழல் என்னும் ஆபரணம், உடல் முழுவதும் வியர்வை, தொண்டையில் புண்)

இங்கு கையது, மெய்யது என்ற சொற்கள் வருகின்றபோது யாப்பிற்கும் அது மனைவதைக் காண்க. அதாவது முதலாவது வரியில் வரும் முதலெழுத்து கை என்பது நெடிலாகவும், இரண்டாவது வரியில் வரும், முதலெழுத்து மெ என்பது குறிலாகவும் அமைகிறது. இது யாப்புக்கு முரண். இரண்டும் நெடிலாக அமைய வேண்டும். ஆகவே இப்படி எழுதிப் பார்ப்போமா?

கய்யது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

இப்பொழுது இரண்டு வரிகளினதும் முதலெழுத்துக்கள் (க, மெ) குறிலாக அமைந்து, யாப்பிலக்கணத்தை நிறைவு செய்கின்றதல்லவா?"

(மீதி அடுத்த பதிவில்)

Thursday, July 14, 2005

பிரிவென்பது...

யாருக்கும் மன வருத்தமளிக்கும் நிகழ்வு. மகள் செல்லும் குழந்தைகள் காப்பகத்தில் (creche) பணிபுரிந்த இரண்டு பேருக்கும், கோடைவிடுமுறை முடிந்த பின்னால் பள்ளிக்குச் செல்லும் வயதெய்திய சில குழந்தைகளுக்கும் இன்று வழியனுப்பு விழா நடந்தது. வழக்கத்திற்கு மாறாக, மாலை 6 மணிக்கு மேல் அங்கு வந்து தங்களுடைய நண்பன்/நண்பிகளை அவர்களது பெற்றோருடன் இருக்கக்கண்டு, அவர்களுடன் விளையாடி, செல்லுமுன் அன்பளிப்புகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு, உண்டு களித்துச் சென்றது அக்குழந்தைகளுக்கு நல்ல பொழுதாக அமைந்திருக்கும். பிரிவென்பது அவர்களுக்குப் புதிதா என்ன? இச்சிறு வயதில் பெற்றோரின் பிரிவைத்தான் தினமும் காலையில் சந்திப்பவர்களாயிற்றே!

சில வருடங்கள் அங்கு பணியாற்றிவிட்டு விடைபெறும் நண்பர்கள் இருவருக்கும் இந்நாள் கடினமானதொன்று. வெயில் மின்னும் மாலையில், பெற்றோர், குழந்தைகள் அனைவரும் வட்டமாக நிற்க, சக பணியாளர் ஒருவர் நன்றி தெரிவித்து உரை வாசித்து முடித்த போது விடைபெற்றுச் செல்வோரின் கண்களில் நீர் கசிகிறது. சுற்றி நிற்போருக்கும் கனத்த பொழுது அது. நெகிழ்வுணர்வுக்கு இடமேது நாடேது! அவர்களுடனான எங்களுடைய பழக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடம்தான் என்றாலும், மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது. மனதார வரும் துயரம், மகிழ்ச்சி முதலான உணர்வுகள் ஒருசில நிமிடங்கள்தான் இருக்கிறதென்றாலும் அவற்றின் அனுபவத்தை நினைத்தே மற்ற காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

Monday, July 11, 2005

இது எப்படி இருக்கு?

இன்று வந்த மின்னஞ்சல் ஒன்றில்...

Image hosted by Photobucket.com

" வடோதரா, குஜராத்தில் சமீபத்தைய மழை வெள்ளத்தின் போது நிகழ்ந்த காட்சி! இணை ஆணையர் (கே.குமாரசுவாமி?), தன் கால்களும், கால்சட்டையும் நனையாமல் இருக்க காவலர் ஒருவரின் தோளில் அமர்ந்து செல்கிறார்!!

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 2"

Friday, July 01, 2005

தமிழ்ப்புத்தகத் தகவல் மையம்

இந்த வார வலைப்பதிவுகளில் தமிழ்ப் புத்தகத் தகவல் மையம் அமைப்பது பற்றிய எண்ணங்களையும், முயற்சிகளையும் பற்றி வாசித்திருப்பீர்கள். அதற்காக வெங்கட், விக்கி ஒன்றைத் துவக்கியதைப் பற்றியும் அறிவீர்கள் (அவ்விக்கியின் முகவரி: http://abbe.optics.utoronto.ca/tamilbooks/).

ஆர்வமிருப்போர் தேவையான தகவல்களை அதில் இடத் துவங்கினால் நன்றாக இருக்கும். என் சார்பில், முதல் கட்டமாக என்னிடமிருக்கும் தமிழகப் பதிப்பாளர்களின் முகவரிகளை இடலாமென்றுள்ளேன். தற்சமயம், பதிப்பாளர்களின் பெயர்களை மட்டும் மேற்குறிப்பிட்ட விக்கியின் இணையப்பக்கத்தில் "பதிப்பாளர்கள்" என்ற சுட்டியின்கீழ் காணமுடியும்.

ஒவ்வொரு பதிப்பாளரின் முகவரி விவரங்களை வேறொரு பக்கத்தில் இடவேண்டும். ஏற்கனவே இடப்பட்டிருந்த ஒரு முகவரிப் பக்கத்தின் தகவல்களைச் சற்று மேம்படுத்திப் பின்வரும் வடிவத்தை யோசித்து வைத்துள்ளேன்:


அன்பு பதிப்பகம்

தொடர்பு கொள்ள

பழைய எண் 63அ, புது எண் 4அ
டாக்டர் அரங்காச்சாரி சாலை
சென்னை-600018

தொலைபேசி:
தொலைநகல்:
மின்னஞ்சல்:
இணைய தளம்:

வெளியீடுகள்


மேலதிகத் தகவல்கள்



இதில் 'வெளியீடுகள்' சுட்டியைச் சொடுக்கினால் அப்பதிப்பகத்தின் புத்தகப் பட்டியலைக் காணும்பொருட்டு வேறொரு பக்கத்தில் அவற்றை உள்ளிடலாம் (தகவல், ஆர்வம் உள்ளோர் அனைவரும்). பிறகு அங்குள்ள ஒவ்வொரு புத்தகத் தலைப்பின் சுட்டிக்கும் வேறொரு பக்கத்திலுள்ள அப்புத்தகத்தின் விவரங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தலாம்.

இப்போதைக்கு மேற்கண்ட உதாரண முகவரிப் பக்கத்தின் வடிவைக் குறித்த உங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கக் கோருகிறேன். (பதிப்பாளர்களின் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இணையதளம் போன்ற விவரங்கள் என்னிடமில்லை; இருப்பினும் வருங்காலத்தில் தெரியவரும்போது சேர்த்துக் கொள்ளலாம்).

தமிழ்ப் புத்தகத் தகவல் மையத்திற்கான விக்கி 'குடிசை'யைக் கட்ட ஒரு சிறு குச்சியை எடுத்துப் போடுகிறேன். நீங்களும் வாருங்கள், கட்டுவோம்.

தொடர்புடைய சில சுட்டிகள்:
தமிழ்ப்புத்தகத் தகவல் மையம் - விக்கியும் மேலும்
தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்
புத்தகப் பட்டியல் தரவுதளம்
இணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்
நேற்று, இன்று , நாளை

Friday, June 24, 2005

தலைவர்களின் எழுத்தும் பேச்சும்

அனாமிகாவின் பசித்திரு! விழித்திரு!! பதிவைப் படித்ததும் அண்மையில் பத்ரி எழுதியிருந்த சத்யம் ஏவ ஜயதே பதிவு நினைவிற்கு வந்தது. அதில், இந்நாளைய அரசியல் தலைவர்கள் யாரும் அவ்வளவாக எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எழுத முடியாத பின்னூட்டத்தை இங்கு இட்டுவைக்கிறேன்.

அறிவுசார் விவாதங்கள், கருத்துகளை இக்கணவான்கள் யாரும் நினைக்கிறார்களா என்றே தெரியவில்லை; பிறகுதானே பேச்சும் எழுத்தும். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் தலைவர்களின் பேச்சுகள் கருத்து செறிவானவையாகவும், மக்களுக்குப் பயனுள்ளவையாகவும் இருப்பதாகக் கேட்டுள்ளேன். சுருக்கெழுத்து கற்றுக் கொள்ளச் சென்ற காலங்களில், அங்குள்ள ஆசிரியர் மூத்த மாணவர்களுக்கு நேரு முதலான தலைவர்களின் நாடாளுமன்றப் பேச்சைப் புத்தகங்களிலிருந்து பயிற்சிக்கு வழங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது அப்பேச்சுகளைப் பற்றியும் சிலாகித்துச் சொல்வார். இப்போதுள்ள பல நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி யாவரும் அறிந்ததே! இவர்களிடமிருந்து எந்தப் பேச்சை, எழுத்தை எதிர்பார்ப்பது?

அதேபோல நம்நாட்டு நிறுவனத் தலைவர்களின் நிலைமை எப்படியோ?!

Wednesday, June 22, 2005

ஸ்விஸ் ரயில் வலை ஸ்தம்பிப்பு

அலுவலகத்திலிருந்து இன்று மாலை வீடு வர கொஞ்சம் தாமதமானது. பேருந்திலிருந்து இறங்கியதும் பார்த்தால் அருகாமையிலிருந்த பேருந்து மற்றும் ட்ராம் நிறுத்தங்களில் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில், ட்ராமின் தடத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பிரச்சனை சரியாகும் வரை (ஒரு சில மணி நேரங்கள்) அதன் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, ட்ராமிற்கு பதிலாக பேருந்துகளை இயக்குவார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் விபத்து நடந்திருக்குமோ (அப்படியொரு விபத்தும் அப்பாதையில் நடந்ததாக இதை எழுதுவதற்குச் சற்று முன்னர் நண்பரொருவர் தொலைபேசியில் தெரிவித்தார்) என்று நினைத்துக் கொண்டே சாலையைக் கடந்து கொண்டிருக்க இரயில் நிலையத்தின் ஒலிபெருக்கியில் ஏதோ சொல்லி முடித்திருந்தார்கள்.

வீடு வந்த சேர்ந்த சில மணி நேரங்கள் கழித்து இணையத்தில் செய்திகளைப் பார்த்தபோதுதான் விதயமே தெரிந்தது. மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறின் காரணமாக முழு ஸ்விஸ் ரயில் வலையும் ஸ்தம்பித்து விட்டது. இங்கு மின்தடை கேட்டறிந்திராத ஒன்றால், இச்செய்தி ஆச்சரியமளித்தது. மின்கோளாறிற்கான காரணங்களை வரும் நாட்களில் அலசிக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடுவார்களென்றாலும், இன்றைய பிரச்சனையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருங்கே பாதிக்கப்பட்டுவிட்டனர்-அதுவும் வேலை முடிந்து வீடு செல்லும் நேரத்தில்! 20:00 மணி வாக்கில் முதல் இரயில் ஓடத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இப்பிரச்சனையின் பாதிப்பு நாளை (காலை) வரை இருக்கக்கூடும்.

இந்நாட்டுப் போக்குவரத்தில் இரயில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. இங்குள்ள இரயில் அமைப்பானது நம்பகத்தன்மை, காலந்தவறாமை, நேர்த்தித்திறன் முதலானவைகளுக்குப் பெயர்பெற்றது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே!

Tuesday, June 21, 2005

பூங்காவில் நேற்று

ஜூரிக் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் நேற்று எற்பாடு (14:00-18:00 வரை உள்ள நேரம்) எடுத்த படங்களில் சில:

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Sunday, June 19, 2005

தமிழகத்தில் புலிகளின் இரண்டாவது சரணாலயம்

இன்று காலையில் மகிழ்ச்சியானதொரு செய்தி கண்ணில்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலைப் பகுதியில் இருக்கும் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தைத் தமிழ்நாடு மாநில வனத்துறை புலிகளின் சரணாலயமாகவும (ஏற்கனவே இது யானைகளின் சரணலாயமாக உள்ளது) அறிவிக்கச் செய்த பரிந்துரையைப் புறத்திட்டு-புலி வழிநடத்துக் குழு (Project Tiger Steering Committee) ஏற்றுக்கொண்டு, அதை மையத் திட்டக்குழுவின் ஒப்புதலுக்கு முன்வரித்துள்ளது (forward). இந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால் இவ்விடம் தமிழகத்தில் அமையப்போகும் இரண்டாவது புலிகளின் சரணாலயமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 88 (2001 கணக்கெடுப்பின்படி) என்றும், அவற்றில் 29 திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் காலக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ளன என்பது புதிதாகத் தெரிந்துகொண்ட செய்தி; ஏதோ இத்தனை எண்ணிக்கையிலாவது அவை பிழைத்திருக்கிறதே என்று ஆறுதல் அடையவேண்டியதுதான்.

செய்திக்கான சுட்டி.
தனது அண்மைய டாப்சிலிப் அனுபவத்தை அழகாக வடித்திருக்கும் நாராயணனின் வலைப்பதிவிற்கான சுட்டி.

Friday, June 17, 2005

கமலம் பாதக் கமலம்

இன்று மாலை திடீரென ஏனோ இந்தப் பாடலைக் கேட்கத் தோன்றியது.

Monday, June 13, 2005

படிக்காத புத்தகங்கள்

வலைப்பதிவில் எழுதி வாரங்கள் பலவாகிவிட்டன. அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டும், கொஞ்சம் கிடைக்கும் சந்தில் எப்போதாவது பின்னூட்டங்கள் இட்டுவந்தாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிகிறது, இருந்தும்.... எப்படியோ இப்புத்தக விளையாட்டின் மூலம் உள்ளே வந்தாயிற்று. அதற்காக செல்வராஜிற்கு மிக்க நன்றி, தாமதத்திற்கு வருத்தம் சொல்லிக்கொள்கிறேன்.

என்னுடைய வாசிப்பனுபவம் இதுவரை சொல்லப்பட்டவைகளிலிருந்து எந்த விதத்திலும் பெரிதும் வேறுபடாததால் அதைக் கூறத் தவிர்க்கிறேன். வாசித்தவை சில காலம் நினைவில் இருந்துவிட்டு பின்னால் ஏதோ 'கனவு' போலாகிவிடுகிறது (ஞாபக மறதிக்கு இப்படியொரு பூச்சு, கண்டுக்காதீங்க ;-) ). அவற்றிலுள்ள பெயர்கள், இடங்கள், நிகழ்வுகள் ஏதேனுமொரு நொடிப்பொழுதில் மின்னல் போல வந்து செல்லக்கூடும். இருந்தாலும் வாசிப்பென்பதே அச்சமயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அனுபவம், தெரிதல் என்று கொள்ளலாம்.

அப்படிக் கனவாக நிற்கும் மற்றும் சமீபத்தில் வாசித்த சில படைப்புகள் (தற்போக்கான வரிசை):

ஞானரதம் - சுப்ரமண்ய பாரதியார்
காதுகள் - எம்.வீ.வெங்கட்ராம்
சம்ஸ்காரா - யூ.ஆர்.அனந்தமூர்த்தி
தமிழகத்தில் கல்வி - வே.வசந்தி தேவியுடன் சுந்தர ராமசாமியின் உரையாடல்
குவாண்டம் கணினி - வெங்கடரமணன்
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
பூரணி கவிதைகள் - பூரணி
கொங்கு வட்டாரச் சொல்லகராதி - பெருமாள் முருகன் (உசாத்துணை நூலென்றாலும் வாங்கிய காலத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது)
Education and significance of life - J.Krishnamurthy
Resurrection - L.Tolstoy
Life of birds - David Attenborough
O Jerusalem - Larry Collins, Dominique Lappiere
Five Past Midnight in Bhopal - Dominique Lappiere, Javier Moro
Nineteen Eighty-Four - George Orwell
New rulers of the world - John Pilger
போதும்..போதும்..

நிறைய நாட்களாக வாசித்துக் கொண்டிருப்பவை:

தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர் க.ரத்னம்
Savaging the civilized - Ramachandra Guha

படிக்க, வாங்க வேண்டியவை என ஒரு பெருஞ்சரம் உள்ளது, எப்போது என்றுதான் தெரியாது.

Saturday, May 14, 2005

கள்ளிக்காட்டு இதிகாசம்

சிறுகதை, புதினம் போன்றவற்றை ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியொன்று எப்போதாவது வருவதுண்டு - பொழுதுபோக்கிற்கா, நானும் இலக்கியம் படிக்கிறேன் என்று பறைசாற்றிக் கொள்வதற்கா, அதிலிருந்து ஏதேனும் 'கற்றுக்' கொள்வதற்கா, எதையாவது வாசிக்க வேண்டுமென்பதற்காகவே வாசிப்பதா, இல்லை வேறெதெற்காவதா? கேள்வி மட்டுந்தானுண்டு, இப்போதைக்கு பதிலில்லை, இருக்கட்டும்.

புத்தகக் கண்காட்சியொன்றின் முன்வரிசையில் புதிதாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் கவர்ச்சியா, வைரமுத்து என்ற பிரபலமான திரைப்பாடலாசிரியரின் புதினம் என்பதாலா, காசு சேர்த்து வைத்து புத்தகத்தை வாங்க வேண்டிய காலம் போயாச்சு என்பதாலா தெரியாது, வாங்கியாயிற்று. எல்லா அவசரமும் வாங்கும் வரைதான். இருக்கும் புத்தகங்களுக்கு துணையாக, வாங்கியதும் பக்கத்தில்போய் நின்றுகொள்ள வேண்டியதுதான். எப்படியா, வாங்கி வைத்து ரொம்ப நாட்களாக அலமாரியில் நின்று கொண்டிருந்த இந்த 'இதிகாச'த்திற்கு சென்ற வாரம் விமோசனம் கிடைத்தது. நீளமான வாரவிடுமுறை வந்ததால் இப்பொழுதேனும் படிக்க முயற்சிப்போம் என்றவோர் எத்தனிப்பைத் தொடர, சில நாட்களில் வாசிப்பு முடிந்தது. தொடர்ந்தும், வேகமாகவும் வாசிக்க முடிபவர்களுக்கு அரைநாள் கூட எடுக்காது.

1950களிலும் (அதற்கு முன்னரும்?) "வெவ்வேறு குடும்பங்களுக்கு - வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்து முடிந்த நிஜங்களை..ஒரு குடும்பத்திற்கு நேர்ந்ததாகச் செய்தது மட்டுமே" தனது "கற்பனை அல்லது உத்தி" என்கிறார் வைரமுத்து. அப்படிச் சொல்லப்பட்ட குடும்பம் பேயத்தேவர் என்பவருடையது. குடியானவர்களைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ, கேட்கும்போதே ஒருவிதப் பரிவும் ஒட்டுதலும் உண்டாகிறது. துன்பத்தையே வாழ்க்கையாகக் கொண்டுவிட்ட பேயத்தேவருக்கு அடுத்தடுத்து நிகழும் இடர்ப்பாடுகள் அப்பாத்திரத்தின் மீது பரிவை ஏற்படுத்துகிறது. கிராம வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் (தேவையோ இல்லையோ) சுவாரசியமாகவே விவரிக்கப்பட்டுள்ளன - மாட்டுப் பிரசவம், சவரத் தொழில், சாராயம் காச்சுதல், கிணறு வெட்டுவதல், மார்க்க கல்யாணம், இத்யாதி இத்யாதி. கிராம வாழ்வையே கேட்டறியாதோருக்கு புதிதாகத் தெரிந்துகொள்ள பல செய்திகள் கிடைக்கும்.

உள்ள துன்பம் தாங்காது வாழும் குடும்பங்கள், கிராமங்கள், அரசாங்கம் கொண்டுவந்த வைகை அணைக்கட்டுத் திட்டத்தால் சிலதலைமுறைகளாகப் பிழைத்து வந்த வீடு, நிலங்களை விட்டுத் துரத்தப்படும் நிலைக்கு ஆளாகின்றன. வழக்கம்போல அரசாங்கத்திற்கு இம்மக்கள் கிள்ளுக்கீரைகள்தான் (மக்களுக்கு ஒரு திட்டத்தைக் குறித்த சரியான தகவல்களைச் சரியான நேரத்தில் தெளிவாகச் சொல்லாத நடைமுறை இன்றைக்கும் தொடர்கிறது). அணைகட்டி முடிக்கப்பட்டு நீர்தேங்க, ஊர்கள் மூழ்க, கள்ளிப்பட்டியில் பேயத்தேவர் இறக்க, கதை முடிக்கப்படுகிறது. கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது பேயத்தேவர் தற்கொலைக்கு ஒப்பான காரியத்தால்தான் இறந்துபோனார் என்ற எண்ணம் வந்துவிடவே 'கனத்த மனது' ஏற்படவில்லை. ஊர்களெல்லாம் துரத்தப்பட்டு இவருக்கும் இந்நிலையாகிவிட்டதே என்ற வருத்தம் வேறு.

ஆரம்பத்தில் உரைநடை பாணியில் கதை சொல்லத் தொடங்கும் ஆசிரியர், அத்தியாயங்கள் செல்லச் செல்ல வட்டார வாசனையுடன் கூடிய பேச்சு வழக்கிற்கு மாறிவிடுகிறார். உணர்ச்சிவயப்படல், மிகைப்படுத்திச் சொல்லப்படும் சிறுசிறு நிகழ்வுகள் வைரமுத்துவின் படைப்புகளில் இல்லாதிருந்தால்தான் ஆச்சரியம். இருந்தாலும், கதையும் சொல்லப்பட்ட விதமும் வாசிப்பின் விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. வாசிக்கலாம்.

Thursday, May 12, 2005

அழிக்கப்படும் புலிகள்

நேற்று யாமத்தில் ப்ளாக்கர் வெகு நேரம் தொங்கிக் கொண்டிருக்கவே, இப்பதிவு மேலேறவேயில்லை (அதனால ஒரு நஷ்டமும் இல்லை!).

புலியின் எலும்பு, தோல் முதலானவற்றைப் பயன்படுத்தினால் இன்னது கிடைக்கும் என்று எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவில்லை (முட்டாள்தனமாகத்தான் இருக்கிறது). அப்படியே ஏதாவது கிடைத்தாலும், ஒன்றிரண்டு பேருக்கென்றால் பரவாயில்லை, எங்காவது இயற்கையாகச் செத்த புலி அதற்குதவும். புலி சாகும் வரை உட்கார்ந்திருக்க அவ்வளவு இளித்தவாயர்களா நம்மக்கள்? பணம் வரும் என்றால் உடனே போட்டுத் தள்ளிவிடமாட்டார்களா?

சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் ஒரு சில மருந்துகளைத் தயாரிக்கப் புலியின் எலும்பைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் (எலும்பு மட்டுமில்லாமல் ஏறுமுகமாக அதன் பல்வேறு உறுப்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவாம்); நம்மூர் சாமியார்களோ ஏதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு புலித் தோலைப் போட்டு அமர்ந்து கிடக்கிறார்கள்.

இப்படித்தான் வட இந்தியாவில் இருக்கும் பல தேசீயப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் அதிக அளவில் காணாமல் போவதாகத் தெரியவருகிறது. தேவை அதிகரிக்க வேட்டையாடலும் அதிகரிக்கிறது. எதை முதலில் நிறுத்த வேண்டும் என்பது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா கதைதான். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதென்று புலிகளுக்குத்தான் தெரியும். தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலுள்ள ரத்தாம்பூர் தேசியப் பூங்காக்களில் புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் படலம் ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

புலிகளைக் கொல்பவர்களுக்கு மரணதண்டனை அதிகமா? (பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்டால் எனக்குச் சொல்லத்தெரியாது).

தொடர்புடைய சில செய்திச் சுட்டிகள்:
The threat to India's main tiger centre
Tiger census underway in Ranthambore

Thursday, May 05, 2005

கிராமத்து இசைக்கருவிகளும் இசைஞர்களும்

பத்ரியின் பதிவிலிடப்பட்டிருந்த பம்பை வாத்தியத்தைக் கண்டதும் நினைவு எங்கோ ஓடியது. கிராமங்களில் நடக்கும் திருவிழா, திருமணம், இழவு போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் நடக்கும் இசைகளில் (கொஞ்ச காலத்திற்கு முன்பேனும்) ஏதோ ஒருவகையில் இடம்பிடிக்கும் இசைக் கருவிகள் தப்பட்டை, மத்தளம், நாதசுரம் (பீப்பீ-ன்னுதான் சொல்லுவோம்), பம்பை போன்றவை. தோல் கருவிகளை அவற்றை வாசிக்கும் மக்களே (அல்லது அவர்களைச் சார்ந்தவர்களே) செய்து கொள்ளவார்கள் எனச் சொல்லக் கேட்டுள்ளேன். தப்பட்டையை ஒருசில சுற்றுகள் அடித்து ஓய்ந்தபின் தீ மூட்டி அச்சூட்டில் காயவைத்து சரிசெய்வதைப் பார்க்க நன்றாக இருக்கும். தூண் அல்லது சுவற்றோரத்தில் சாய்த்துப் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் மத்தளம், பம்பையை யாருக்கும் தெரியாமல் (?!) ஒன்றிரண்டு முறை கொட்டிவிட்டு ஓடுவதில் அப்போது ஒருவகை மகிழ்ச்சி.

இவ்விசைஞர்கள் பெரும்பாலும் கேள்வி ஞானம் மற்றும் தன்முயற்சியால் தாங்களாகவே கற்றுக் கொண்ட வித்துவான்கள். ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்து அழைத்துவரப்பட்ட இக்கலைஞர்கள் யாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கிராமத்தார்கள் இவர்களை கவனித்துக் கொண்ட விதம் எப்போதுமே கவலையளிக்கச் செய்துள்ளது. "அவனுகளுக்கு ஒரு பட்டைய வாங்கிக் கொடுங்கடா போதும்" என்பதுதான் அவ்வரிய கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை. அவர்களும் அதற்குப் பழகியே போனார்களோ என்னவோ? இழவு வீடென்றால் பம்பைக்காரர் அதை இசைத்துக் கொண்டே இறந்தவரைப் பற்றி ஏதோ பாட, விசாரிக்க வந்தவர்கள் போடும் ஒன்றிரண்டு உரூபாய்களும், அரிசி போன்றவைகளும்தான் அவர்களுக்குக் கிடைத்த சன்மானம்! என்ன உலகமிது! :-(

Friday, April 29, 2005

புதுதில்லியிலிருந்து வரப்போகும் தமிழ் இதழ்

ஜூலை அல்லது ஆகஸ்டு வாக்கில் புதுதில்லியிலிருந்து புதிய தமிழ் மாத இதழ் ஒன்றைக் கொண்டுவர ஒருவர் திட்டமிருப்பதாக மடற்குழுவில் வந்த மின்னஞ்சலொன்று தெரிவிக்கிறது. 'சுபமங்களாவைப் போல வர முயற்சிக்கும்' இவ்விதழுக்குப் படைப்பார்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம் என்கிறது.

மேலும் விவரங்கள் அறிய பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்: http://groups.yahoo.com/group/pmadurai/message/2631

Monday, April 25, 2005

கோட்டைப் போடுங்கள்!

தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்காமலேயே பள்ளிக் கல்வியை முடிக்கும் நிலைமை உள்ளது என்பது பொதுவில் இருக்கும் ஓர் ஆதங்கம்/குற்றச்சாட்டு. இரண்டாம், மூன்றாம் மொழி எனத் தெரிவு செய்யும்போதுகூட அங்கு ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்சு அல்லது வேறேனும் ஒரு மொழி வந்துவிடுகிறது. தமிழைப் படித்து என்ன இலாபம் என்றதொரு மனநிலையோடு, பிறமொழிகளை எடுத்துப் படித்தால் அவற்றில் நிறைய மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. படிப்பென்பதே உருப்போடுவதற்கும், மதிப்பெண்களுக்கும் என்றாகிவிட்ட நிலையில் சுளுவாக எதில் வேலை முடியுமோ அத்திசையில் மாணாக்கர்கள் செல்வதில் வியப்பேது!

பெரும்பாலானோர் தமிழ் மொழிப் பாடத்தை உதறிவிட்டுப் போவதற்கு அப்பாடத் திட்டத்திலுள்ள (கவனிக்க, மொழியிலன்று) கடினத்தன்மையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதில் முக்கியமானது செய்யுள் பகுதி.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழம்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதே - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

[நினைவில் இருந்த செய்யுள் ஒன்றை உதாரணத்திற்காக அப்படியே போட்டுள்ளேன், பிழை இருந்தால் மன்னிக்கவும். எழுதியவர்-ஒளவையார். இப்பாடலின் கடைசி வரிகளை வைரமுத்து தனது படப்பாடல்கள் சிலவற்றில் கொஞ்சம் மாற்றி உபயோகித்திருப்பார்.] அருமையான செய்யுளாக இருந்தாலும் துவக்கப்பள்ளி (அப்படித்தான் நினைவு) அளவிற்கு இப்பாடல் அதிகம் என்றே நினைக்கிறேன். முதலில் கடினமான, வழக்கத்தில் குறைந்து வழங்கும் பொருள் விளங்காச் சொற்கள், பிறகு பொழிப்புரை, விரிவுரை ஆகியவற்றின் தேவை; அவற்றைச் சொல்லி விளக்கும் நபர்/விளக்கவுரைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்றால்கூட ஒப்பேற்றிவிடுவார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கஷ்டம்.

சங்க இலக்கியம் என்ற ஒன்று இல்லாதிருந்திருப்பின் தமிழ் பாடத் திட்டம் எவ்வாறு இருந்திருக்கும்? பிற நாடுகள்/மொழிகளில் உள்ள மொழிப் பாடத்தில் இப்படித்தான் கடினமான பழம் இலக்கியப் பாடல்களை ஆரம்பம் முதல், இறுதி வரை நீக்கமறப் புகுத்திக் கற்பிக்கிறார்களா?

அதற்காக சங்க இலக்கியமே வேண்டாம் என்று சொல்லவில்லை; பாடல்களுக்கு பதிலாக எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க அவற்றின் உரை, சுலபமான செய்யுள்களை மனனம் செய்யும் பயிற்சி, இத்யாதிகள் இருக்க வேண்டும். அவற்றைப் பற்றி அறிஞர்கள் சிந்திக்கட்டும்.

மொழிப் பாடத்தை எளிமைப்படுத்தி தமிழிலும் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாமல் நிறைய மதிப்பெண்கள் எடுக்கும் நிலை வந்தால் ஒருவேளை அது நிறையப் பேரை யோசிக்க வைக்கும். அச்சூழ்நிலையில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயப்படுத்து என்னும் சிந்தனையே மறுபரிசீலனைக்கு உரியதாகலாம்.

இக்காலத்து மாணவர்கள் படுசுட்டியானவர்கள், கோடு போட்டுக் காண்பித்தால் 'ரோடே' போட்டுவிடுவார்கள். அவ்ளோதாங்கறேன்!

Monday, April 18, 2005

ஸெஹ்ஸலொய்ட்டன்-2005

அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டிருக்கிறது! நேற்றுத்தான் இவ்விழாவினைக் கண்டதுபோல இருக்கிறது. இன்று எற்பாடு மூன்று மணிக்குத் தொடங்கி இவ்வாண்டிற்கான பனிமனிதனை எரிக்கும் விழா சில மணி நேரங்கள் ஜூரிக் நகரில் நடைபெற்றது.

சென்ற வருடத்தைய பதிவு.

குளிர்காலம் போய்விட்டாலும், தற்போது இருந்து கொண்டிருக்கும் மேகமூட்டமும் மழைத் தூறலும் முந்தைய ஓரிரு வாரங்களின் இளவெயிலின் போது பூத்து மலர்ந்த மலர்களின் பொலிவை (தற்காலிகமாக) இழக்கச் செய்துவிட்டதோடு, இலேசான குளிரையும் தந்துகொண்டுள்ளது.

[எற்பாடு - "...பகல் என்பது 10 மணியில் இருந்து 14 மணிவரை, எற்பாடு என்பது 14ல் இருந்து 18 வரை, மாலை என்பது 18ல் இருந்து 22 வரை..." - http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html]

Sunday, April 17, 2005

Google Maps

பல அற்புதங்களைச் செய்துவரும் கூகிளின் மற்றொரு சேவையான 'கூகிள் மேப்ஸ்' வடஅமெரிக்காவின் பல முக்கியமான இடங்களின் வரைபடங்கள், செயற்கைக் கோள் படங்கள் போன்றவற்றை வழங்குகிறது. வரும்நாட்களில் மற்ற உலக நாடுகளின் படங்களும் வரக்கூடுமென்கிறார்கள்.

அமெரிக்காவின் முக்கியமான இடங்களைப் பின்வரும் தளத்தில் தொகுத்து வெளியிட்டுக்கொண்டுள்ளார்கள்:
http://www.shreddies.org/gmaps/index.php

செய்தி மூலம்: http://news.bbc.co.uk/2/hi/technology/4448807.stm

Saturday, April 16, 2005

இதிலுமா??

இதிலும் கூடவா இவர்களுடைய படங்களைப் போட வேண்டும்?



கஷ்டமடா சாமி!

Wednesday, April 13, 2005

சென்னை வாழ் நண்பர்களுக்கு

வரும் ஏப்ரல் 15-ம் தேதியன்று மாலை 5 மணிக்கு சென்னை பார்க்-ஷெரட்டனில் CDAC நிறுவனம் தமிழ் கணிமை குறித்த நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இயன்றவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுதுங்கள்.

தகவலுக்கான சுட்டி: http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31867

Tuesday, April 12, 2005

இணையத்தில் தமிழ் அகராதிகள்

சிகாகோ பல்கலைக்கழகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சில மொழிகளுக்கான அகராதிகளை இணையத்தில் தேடும் வசதியுடன் வழங்கியுள்ளது. தமிழில் ஆறு அகராதிகளுக்கான பட்டியல் கொடுக்கப்பட்டு அவற்றில் ஐந்திற்கு சுட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்குறி(யுனிகோடு)யில் தேடும் வசதியும் உள்ளது. தமிழுக்கான மற்றுமொரு சிறந்த பங்களிப்பு, அயலிலிருந்து.

அகராதிகளுக்கான சுட்டி: http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil

தகவல் உபயம்: திரு.கல்யாணசுந்தரம், மதுரைத்திட்டம் யாஹூ மடற்குழு.

Friday, April 01, 2005

சாலையோர ஓவியங்கள்

சென்ற ஞாயிறன்னு படம் பிடித்தவை.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Wednesday, March 30, 2005

இக்கட்டில் பூமி

அது தெரிந்ததுதானே என்கிறீர்களா? இருந்தாலும், இன்றைக்கு ஐ.நா. மற்றும் வேறு சில அமைப்புகளின் சார்பில் கடந்த நான்காண்டுகளாக சூழமை/சூழியல் தொடர்பாக விரிவானதோர் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வறிக்கையின்படி, பல்கிப் பெருகும் உணவு, உறையுள், உடை, எரிபொருள் போன்ற தேவைகளுக்கான முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஐம்பதாண்டுகளில் மனித இனம் சூழமையை அதிவேகமாகவும் பரந்த அளவிலும் மாற்றிவிட்டது. இதுகாறும் மனிதன் பெற்ற நல்வாழ்வு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் இயற்கையை அழித்தே பெற்றவை.

இயற்கையின் மீதான இந்த அழிவுப் படலம் இந்நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் மேலும் கணிசமான அளவிற்கு அதிகரிக்கப்போவதாக எச்சரிக்கிறது அவ்வறிக்கை.

சீர்குலைந்து கொண்டிருக்கும் சூழமையைச் சரிசெய்வதும், அதேசமயத்தில் பெருகி வரும் தேவைகளை ஈடுகட்டுவதும் சில கடினமான மாற்றங்களால் சாத்தியமானது என்றும் தெரிவிக்கிறது.

சூழமைச் சீர்கேட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது வழக்கம்போல ஏழை, எளியோர்தான். (உடனடியாக மனதில் தோன்றும் உதாரணம்: ஜப்பான் தன்நாட்டில் மரம் வெட்டுவதைத் தடைசெய்துவிட்டு இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் கடைசியில் பெரிதும் பாதிக்கப்படப்போவது இந்நாட்டு மக்களல்லவா.)

இதையும் மற்றோர் அறிக்கை என்று அலட்சியப்படுத்தாமல் ஒவ்வொருவரும் விழித்துச் செயல்பட்டால் நல்லது.

இவ்வறிக்கை சார்ந்த சில சுட்டிகள்:

Experts Warn Ecosystem Changes Will Continue to Worsen, Putting Global Development Goals At Risk
Study highlights global decline
Millennium Ecosystem Assessment-Synthesis Reports

Monday, March 28, 2005

இறைந்து கிடக்கும் செல்வம்

ஏதோ ஒரு தகவலுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருக்க, பின்வரும் தகவல் கண்ணில்பட்டது:

தோரணை என்ற வார்த்தையும், style என்ற வார்த்தையும் தனித்தனியே பழக்கமானவையே ஆயினும் அவற்றை ஒன்றுசேர்த்துப் பார்க்கத் தோன்றியதில்லை, இக்குறிப்பை வாசிக்கும் வரை.

//style sheet என்பதை அலங்காரக் குறிப்பு என்று சொல்லுவதைக் காட்டிலும் தோரணைத் தாள் என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும். style என்பது இரண்டு வகைப் பயன்பாட்டில் இருக்கிறது. ஒன்று நடையுடை பாவனையை ஒட்டியது. இன்னொன்று ஒரு படிவம் எழுதுவதற்கான மாதிரி.

style comes via Old French stile from Latin stilus, which denoted a 'pointed writing istrument'. It came to be used metephorically for 'something written,' and hence for 'manner of writing'. The spelling with y instead of i arose from the misapprehension that the word was of Greek origin. It also invaded stylus, which was acquired directly from Latin.

கூர்மை என்ற பொருள் துளைப்பதின் தொடர்ச்சி. துள்>தூர் என்று விரியும். தூர்தலைச் செய்யும் கருவி தூரிகை. தூரிகை என்பதுதான் stylus கருவியைக் குறிக்கும் தமிழ்ச் சொல். (தூரிகை>தூலிகை என்ற திரிவை, இந்தையிரோப்பியச் சொற்கள் பலவற்றில் வரும் முதல் எழுத்தான சகரவொலியை ஒதுக்குவதோடு, எண்ணிப் பார்த்தால், stylus என்ற சொல்லுக்கு உள்ள தொடர்பு புலப்படும். தூரிகையின் உதவியோடு செய்வது தோரணை என்னும் அலங்காரம், அழகு படுத்தல், ஒப்பனை செய்தல். தோரணை வரைந்த துணி தோரணம்; தோரணை வரைந்த கட்டுமானம் கூடத் தோரணம் என்று தெலுங்கில் வழங்கும்.

அதோ, அவன் தோரணையாகப் போகிறான் என்றால் style - ஆகப் போகிறான் என்று பொருள். நீங்கள் எழுதும் தோரணை இப்படி இருக்கலாம் என்னும் பொழுது இந்த style-ல் எழுதலாம் என்று பொருள்.

அன்புடன்,
இராம.கி.//

மூலம்: http://kasi.thamizmanam.com/?item=167&catid=3

இராம.கி. அவர்களின் இவ்வாறான எழுத்துகள் தமிழ்-உலகம் மடற்குழு (கொஞ்ச காலமாக), அவரது வலைப்பதிவு, மற்றும் அவர் அளிக்கும் மறுமொழிகளின் வாயிலாக மட்டுமே தெரியும். அவையல்லாது அவர் வேறு இடங்களிலும் எழுதியிருக்கக்கூடும். எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ஆய்வுப்பூர்வமாகச் சிந்தித்து ஒருவர் எழுதும் எழுத்துகள் சிதறிவிடாமல் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டால் அச்சிந்தனைகள் வீண்போகாது. அவ்வாறான எழுத்துகள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, March 26, 2005

செம்மறியாடு

சில நாட்களுக்கு' முன்பு சிறுவர் பாடல்கள் வலைப்பதிவிற்காக எழுத முயற்சித்த பாடலொன்று. சந்தேகமே வேண்டாம், ஆங்கிலப்பாடலின் 'உல்டா'தானிது. என்ன செய்வது, கற்பனை அந்த அளவுக்குத்தான் வேலை செய்யுது :(

ம்மே ம்மே ஆடே கம்பளி இருக்கா?
ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!
ஒன்றெங்கள் இடையனுக்கு ஒன்றுங்களுக்கு
ஒன்றடுத்த ஊரில் இருக்கும் சின்னப் பையனுக்கு
செம்மறி ஆடே கம்பளி இருக்கா?
ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!

[முதல் வரியில் 'ம்மே ம்மே'-வுக்கு பதில் 'ஆடே ஆடே' அல்லது 'செம்மறி ஆடே' என்றும் சொல்லலாம், இருந்தாலும் ஆடெழுப்பும் ஒலியைச் சொல்லும்போது கொஞ்சம் நன்றாக உள்ளதாக நினைக்கிறேன்.]

ஆங்கிலப் பாடலுக்கான மெட்டு: http://www.englishbox.de/song25.html

செம்மறியாடுகள் கூட்டமாகச் சாலைகளில் ஓட்டிச்செல்லப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா? குட்டியாட்டைக் கம்பளி போர்த்திய தோளில் சுமந்துகொண்டு கையில் பெரிய கோலுடன் ஆட்டுக்காரன் நடக்க, அவனருகே ஒன்றிரண்டு நாய்களும் ஓட, இரண்டு மூன்று கூட்டங்களாக (ஒவ்வொரு கூட்டத்திலும் பலநூறு ஆடுகள் இருக்கும்) ஆடுகள் செல்லும். இதேபோல வாத்துக் கூட்டத்தையும் ஒரே ஒருமுறை திருமூர்த்திமலை செல்லும் வழியிலுள்ள கிராமமொன்றில் மிகவும் சிறிய வயதில் கண்டிருக்கிறேன்.

Wednesday, March 23, 2005

அரோகரா!

வேல் வேல் வெற்றிவேல்!
வேல் வேல் வெற்றிவேல்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோ....கரா!
பழனியாண்டவனுக்கு அரோ....கரா!
அரகர அரகர அரோ....கரா!

இப்படியான சத்தங்களுக்கு வருடத்தின் ஒருசில மாதங்களில் எங்கள் ஊர்ப் பகுதியில் பஞ்சமே இருக்காது (எல்லாம் சில,பல வருடங்களுக்கு முந்தைய அனுபவம், இப்போது எப்படி என்று தெரியவில்லை). அதுவும் எங்கள் வீடு பிரதான சாலையைத் தொட்டபடியாதலால் இதிலிருந்து தப்பிக்கவே வழியில்லை. இருந்தாலும் கூட்டங்களைப் பார்ப்பதற்கும், ஒலிகளைக் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும்.

தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனியை நோக்கி நடந்தே செல்வர். மேற்கே கேரளா, பொள்ளாச்சி, கோவை பகுதிகளின் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஒருவர் இருவர் எனச் சன்னமாக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் சாலை முழுவதும் ஆக்கிரமித்துச் செல்லுமளவிற்குக் கூட்டமிருக்கும்.

வெறுங்கால்களுடன் குடும்பத்தோடு நடக்கும் இக்கூட்டங்களில் விவசாயிகள், உழைக்கும் மக்கள், நகர்ப்புறத்தார் என பலரைக் காணமுடியும். சிலர் மாலை போட்டிருப்பர் - அதற்கு அடையாளமாகப் பச்சை, கருப்பு, மஞ்சள் நிறமொன்றில் வேட்டி, சட்டை, துண்டும், உருத்திராட்சக் கொட்டை மாலைகளும் தெரியும்.

இந்த நடைப் பயணங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சில ஊர்களிலிருந்து வரும் கூட்டங்கள் இசைக்கும் இசையும், அதற்கான காவடி ஆட்டங்களும். எங்கள் வீட்டிற்கு எதிர்புறமுள்ள பஞ்சாலைக்கு முன்பாகப் புளியமர நிழலுடன் தாரால் வேயப்பட்ட பெரிய இடமொன்று உள்ளது. அந்தி சாயும் நேரத்திற்கே வரும் கூட்டங்கள் அப்படியே இரவுத் தங்கலுக்காக அங்கு இருந்துவிடுவார்கள். வந்து சேர்ந்தவுடன் வட்டமாக நின்று பெரும் இசையுடன் காவடியோடு ஆட்டம் போடுவார்களே, கேட்டுக் காண கண்கோடி வேண்டும்! (இதை எழுதும்போதே மனது குதூகலிக்கிறது).

காவடி என்றால் வெறும் கட்டைகளை நிறுத்தி அட்டைகளை ஒட்டியதல்ல. பழுப்பு நிறத்தில் (தேக்கோ?) பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய கனமான காவடிகள். அதில் மணிகள், மாலைகள், படங்கள், சந்தனம், பொட்டு என சகலத்தையும் காணலாம். காவடியின் இரண்டு பக்கங்களிலும் மயிற்தோகைகளைச் செருகி மேலும் வனப்பேற்றியிருப்பார்கள். (சின்னப் பையன்களான எங்களில் சிலரின் நோட்டுப் புத்தகத்தில் மறுநாள் சில மயில் தோகைகள் குட்டிபோட்டுக் கொண்டிருக்கும்). இக்காவடிகளை மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் தரையில் துண்டை விரித்துத்தான் வைப்பார்கள்.

அவ்வளவு கனமான காவடிகளைத் தூக்குவதென்பதே கஷ்டமான காரியமாக இருக்கும் போது அதைத் தோளிலும் கழுத்திலும் சுழற்றி ஆட்டம் போடுவதைப் பார்க்க மலைப்பாக இருக்கும். இசைக்கு மேளம், நாதஸ்வரங்களுடன், பெரிய குழல்போன்று ஒன்றையும் வைத்து ஊதுவார்கள் (அதன் பெயர் தெரியவில்லை). இசையே ஆட்டம்போட வைக்கும்.

பஞ்சாலையை ஒட்டியிருந்த (இப்போது எல்லாவற்றையும் தூக்கிவிட்டார்கள்) ஓடுவேயப்பட்ட தரைப்பகுதி முழுவதும் மக்களோ மக்கள்தான். விடிந்ததும் காலையில் எழுந்துவந்த பார்த்தால் சாலையோர வீட்டு வாசல்களின் முன்பு பந்தல்களில் பெருங்கூட்டங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். ஒரு சில கூட்டங்கள் இப்படி ஓய்வெடுக்க, அருகாமை ஊர்களிலிலிருந்து நடக்கத் தொடங்கியோர் விடிய விடிய சென்று கொண்டே இருப்பார்கள். அவர்களை ஒதுக்க வாகனங்கள் எழுப்பும் ஒலியோ சொல்லி மாளாது.

பக்தி முத்தியிருந்த காலத்திலும், ஓடுற பாம்பை கண்டு மேலும் ஓடின வயசிலும் எனக்கும் பழனிக்கு நடந்து செல்ல ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தன. காவடியெல்லாம் இல்லை, சும்மா போய்விட்டுவருவதே பெரிய விஷயம் இதுல காவடி வேறயா? :-)

முதல் தடவை வீட்டருகாமையில் இருந்த தையல்காரர் அழைத்துச் சென்றார். பழனிக்கு முன்பாக சுமார் பத்து கி.மீ தூரத்தில் மேற்கொண்டு நடக்கமுடியாமல் அவர் நின்றுவிட்டார். வேறு வழியின்றி அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டிப்பட்டதால் முதல் பயணம் தோல்வி(?)யில் முடிவடைந்தது. பிறிதொருமுறை பள்ளி நண்பர்கள் சிலருடன் வெற்றிகரமாக நடந்து சென்ற போது பழனி முருகனுக்கு எங்களைத் தரிசிக்கும் பாக்கியம் உண்டானது.

அம்முறை ஏதோ தேர்தல் சமயமாக இருந்ததால் வழியெங்கும் கட்சிக் கொடிகளும், வளைவுகளும் நிறையக் காணப்பட்டன. சில இடங்களில் குச்சிகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை அவிழ்த்துவிட்டுச் சென்றதைக் கட்சிக்காரர்கள் யாரேனும் பார்த்திருந்தால் பெண்டு நிமிர்த்தியிருப்பார்கள். நல்லவேளை, ராத்திரியாகப் போய்விட்டதால் அவர்கள் புண்ணியம் தேடிக் கொண்டார்கள்.

மும்பைக்கு அடுத்த படியாக, பழனி எப்போதும் என்னை முகம் சுழிக்க வைக்கும் இடம் - கூட்டமும், நாற்றமும் (மற்ற ஊர்கள் மட்டும் என்ன வாழுதுவென்கிறீர்களா? இருந்தாலும் அங்கு கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது, அதான் சொன்னேன்; பழனிக்காரர்கள் கோவித்துக்கொள்ளவேண்டாம்).

ம்...எல்லாத்தையும் இப்ப நினைச்சு மட்டும் பாத்துக்க வேண்டியதுதான்.

அப்புறம், அரோகரா-வென்றால் என்னவென்று சொல்பவர்களுக்கு பழனி சித்தன்ன விலாஸ் விபூதி பொட்டலமும், பஞ்சாமிருத டப்பா ஒன்றும் அனுப்பிவைக்கப்படமாட்டாது ;-)

[அறுபத்து மூவர் விழா-வில் வந்த காவடியின் தாக்கம் மேற்கண்ட பதிவு. பத்ரிக்கு நன்றி!]

Tuesday, March 22, 2005

தூரக் கணிப்பி

கோயம்புத்தூருக்கும் சென்னைக்கும் இடையில் (அதேபோல வெவ்வேறு இடங்களுக்கு இடையிலும்) இத்தனை கி.மீ தூரம் என்கிறோம். இதை ஏதாவது ஓர் அட்டவணையிலிருந்தோ அல்லது வழிகாட்டிகளில் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டோ அறிகிறோம். கோவையிலிருந்து சென்னையை அளக்க இரண்டு புள்ளிகள் தேவை அல்லவா? உண்மையில் இங்கு கோயம்புத்தூர் அல்லது சென்னை என்பது எந்தப் புள்ளி? நிச்சயமாக அளப்பீடு தொடர்புடைய துறை (சர்வே டிபார்ட்மெண்ட்?) ஒவ்வொரு ஊரிற்கும் என ஒரு புள்ளியைக் குறித்து வைத்திருப்பார்கள். இவ்வுரல் தமிழகத்தின் முக்கிய இடங்களின் ஆயத்தொலைகளைக் (coordinates) காட்டுகிறது. ஊரில் எந்த இடத்திற்கு இப்புள்ளி பொருந்தும் என்பது அறிந்துகொள்ள ஆவலூட்டுமொன்று.

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த செய்திமடல் (newsletter) ஒன்றின் ஓரத்திலிருந்த நிரல் துண்டொன்று கவனத்தை ஈர்த்தது. அதில் பெருவட்டச் சூத்திரத்தைக் (Great Circle formula-வை இப்படி சொல்லலாமா?) கொண்டு இரு புள்ளிகளுக்கிடையிலான தூரத்தைக் கணக்கிடும் முறை எழுதப்பட்டிருந்தது. புவியில் ஒவ்வொரு இடத்திற்கும் வரையறுக்கப்படுள்ள அச்சரேகை (அல்லது குறுக்குக் கோடு), தீர்க்கரேகை (அல்லது நெடுங்கோடு) அளவுகள் இக்கணக்கீட்டிற்கு முக்கியமானவையாகும்.

மேற்கண்ட உரல் சுட்டும் பட்டியலிலிருந்து சில ஆயத்தொலைகளை எடுத்து அவற்றை டிகிரியிலிருந்து ரேடியன்களுக்கு மாற்றி அச்சூத்திரத்தைக் கொண்டு கணக்கிட்டுப் பார்த்த போது கிடைத்த விடைகள் வழக்கமாக அறிந்த தூரங்களிலிருந்து வேறுபட்டிருந்தன!

கோவை-சென்னை => 413 கி.மீ.
கோவை-பொள்ளாச்சி => 68 கி.மீ.

பெருவட்டம் பற்றிய சிறு குறிப்பை இங்கே காணலாம் (உபயம் கூகிள்).

சொல்லப்பட்ட நிரல்துண்டு பின்வருமாறு:

/* அச்சரேகை, தீர்க்கரேகைகள் ரேடியன்களில் */
செயற்கூறு (அச்சரேகை1 உள்ளே எண், தீர்க்கரேகை1 உள்ளே எண்,அச்சரேகை2 உள்ளே எண், தீர்க்கரேகை2 உள்ளே எண்) திரும்பு எண்
அறிவி
புவியின்ஆரம் := 6378.7;
தொடக்கம்
அச்சரேகை1=அச்சரேகை2 மற்றும் தீர்க்கரேகை1=தீர்க்கரேகை2 இருப்பின்
திரும்பு 0;
திரும்பு புவியின்ஆரம் * ACOS(SIN(அச்சரேகை1) * SIN(அச்சரேகை2) + COS(அச்சரேகை1)* COS(அச்சரேகை2) * COS(தீர்க்கரேகை2-தீர்க்கரேகை1));
புறநடை பிற இருப்பின்
திரும்பு வெற்று;
முடிவு;

இப்படியான நிரலை ஏற்றுப் புரிந்துகொண்டு விடையைத் தரும் மென்கலன்கள் இல்லாத நிலையில் :-) ஆர்வமுள்ளோர் இப்பக்கத்திற்குச் சென்றால் (பிப்.2005) மூல நிரலைக் காணலாம்.

Friday, March 11, 2005

மாண்புமிகு?

"முதல்வருக்குப் பேரவைத் தலைவர் வணக்கம் சொல்கிறார் என்பதை விட என் தலைவிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்; என் உயிர் காத்த தாய்க்கு வணக்கம் செலுத்துகிறேன். இதை எந்த நாய் கேலி செய்தாலும் எனக்கு கவலை இல்லை." [நன்றி: தினமணி 11.03.2005]

மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று சொல்லக்கூடிய பொறுப்பிலிருப்பவர், இப்படியா 'நாய்' என்றெல்லாம், அதுவும் சட்டப் பேரவையில், பேசுவது?

Wednesday, March 09, 2005

தேசியக் கொடியைத் தலைகீழாகக் குத்தாமலிருக்க

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பெருந்தலைகளே சில சமயங்களில் தேசியக் கொடியைத் தங்கள் உடையில் தலைகீழாகக் குத்திக்கொண்டுவிட்டு, பிற்பாடு அங்குள்ளவர்கள் எவரேனும் சுட்டிக்காட்டும்போது சங்கடத்தில் நெளிவது ஒன்றும் புதுமையான செய்திகளல்ல. சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூட அவ்வாறு குத்திக்கொண்டு வந்தார் என்று செய்திகள் வந்தன. கம்பங்களில் பறக்கவிடப்படும் கொடிகளுக்கும் இந்த கதி நடப்பதுண்டு.

தேசியக் கொடியிலுள்ள மூவர்ணங்களின் சரியான வரிசையை நினைவிற் கொள்ளும் வழிமுறை ஒன்றை நம்மூர் ஆசிரியர் ஒருவர் தம் மாணவர்களுக்குச் சொல்லித்தந்ததாக வந்த செய்தியை எங்கோ படித்ததாக மனைவி தெரிவித்தார். அது என்னவென்று கேட்டேன். வாழை இலையை விரித்து, அதில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றுவதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டுமாம். பச்சை கீழே வந்து விடுகிறதல்லவா? அடங்கப்பா! உதாரணம் நன்றாகத்தான் உள்ளது; சோற்று விஷயமாயிற்றே அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா என்ன!

Tuesday, March 08, 2005

உலக மகளிர் தினம்

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் மகளிரின் தினம் தானோ!

Image hosted by Photobucket.com
[அல்பேனியா]

Image hosted by Photobucket.com
[செர்பியா]

Image hosted by Photobucket.com
[அயர்லாந்து]

Monday, March 07, 2005

கற்பனை வறட்சியா?

விண்வெளி செல்ல ராக்கெட்டு
பஸ்ஸில் போக டிக்கெட்டு;
காய்கறி வாங்க மார்க்கெட்டு
மாடியில் ஏறிட படிக்கட்டு;
இரும்பை இழுப்பது மாக்னெட்டு
அண்ணன் ஆடுவது கிரிக்கெட்டு;
தம்பிக்குப் பிடித்தது ரவா லட்டு
எனக்குப் பிடித்தது பிஸ்கெட்டு;
மிட்டாய் தாரேன் கைநீட்டு.

தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது முதலில் இதை வாசித்த போது. எதுகை மோனையாக இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் எழுதி விற்க ஆரம்பித்து விடுகின்றனர். [புத்தகம்: எனது முதல் மழலை மொழி பாடல்கள்; ISBN:81-7478-233-8]

'அப்பா பாட்டு'க்கும், 'கத்தரி வெருளி'க்கும் முன்பு இது குப்பையாகத் தெரிகிறது.

Sunday, March 06, 2005

வணக்கம்!

Image hosted by Photobucket.com

இப்படத்தைச் சில நிமிடங்கள் பார்ப்பதால் தோன்றும் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல :-)

[படம்:சு.குமரேசன் (அ) கே.ராஜசேகரன்; ஜூனியர் விகடன்-http://www.vikatan.com/jv/2005/mar/09032005/jv0103.asp]

Wednesday, March 02, 2005

புதிய எண், பழைய எண்

தமிழகத்தில் கொஞ்ச நாட்களாக ஒரு கூத்து நடந்து கொண்டுள்ளது. அஞ்சல் முகவரிகளில் வீட்டின் புதிய இலக்கம், பழைய இலக்கம் என்று எழுதப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். புதிய எண்கள் எப்போதிருந்து, எதற்காகக் கொடுக்கப்பட்டன, இவ்வெண்கள் யாரால் நிச்சயிக்கப்படுகின்றன, அஞ்சல் முகவரியில் இரு இலக்கங்களையும் குறிப்பிட்டாக வேண்டுமா, இருப்பின் எவ்வளவு காலத்திற்கு அவ்வாறு செய்யவேண்டும் முதலான தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் கேள்விப்பட்டதில்லை (அப்படியொன்று இருந்தால்தானே என்கிறீர்களா?), தெரிந்தவர்கள் சொல்லவும்.தினத்திற்கு நான்கு கடிதங்கள் எழுதி அனுப்புவதில்லையென்றாலும் தெரிந்துகொள்ளலாமே ஒரு நப்பாசைதான், வேறு என்ன!

Wednesday, February 23, 2005

ஒள

"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.

ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்லு.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமைமகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.

நன்றி: கழகத் தமிழ் அகராதி

மேற்கண்ட சில வார்த்தைகளை வாசித்தும் வந்த எதிர்வினை:
ஐ!
ஓ!
ம்.

Monday, February 21, 2005

படிக்காட்டியும் பரவாயில்லை, வாங்குங்க!

அறிவு, திறமை, ஆர்வம் அனைத்தும் இருந்தும் பொருள் வளம் இல்லாதிருப்பது துரதிஷ்டமான ஒன்று. நல்ல நோக்கத்திற்குப் பொருளுதவி கிடைப்பதும் அரிதான காரியமாகவே இருக்கிறது. வரலாறு மின்னிதழின் பிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 பதிப்பில் வந்துள்ள செய்தியொன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புத்தகம் எழுதுவதென்பது, அதுவும் ஆய்வுக் கட்டுரைகளுடன், அனைவராலும் செய்துவிடக்கூடிய சாதாரண காரியமல்ல. அப்படி எழுதியும் அதை எளிதில் வெளியிடச் செய்யமுடியாத நிலை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டுவர எவ்வளவு சிரமப்படவேண்டியுள்ளது! "பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் இரா.கலைக்கோவனின் வார்த்தைகள்:

"...ஏராளமான ஆய்வுகள் செய்து வைத்திருக்கிறோம். வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை.......
ஆளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால் ஐந்து பேர்கள் என்றாலும் ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துவிடும். ஒரு புத்தகம் கொண்டுவர முடியும். ஆண்டுக்கு இரண்டு நூல்கள் கொண்டு வரலாம். இரண்டாண்டுகளுக்கு அப்படிக் கொண்டு வந்தால் பிறகு நூலகங்கள் வாங்குகின்ற அந்த பதிப்பகத் தொகை கொண்டே தொடர்ந்து நூல்கள் வெளியிட வாய்ப்பாக இருக்குமென்று சொன்னேன்.

உடனே ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்த நண்பர்கள் இராமசந்திரன், கோகுல், கமலக்கண்ணன், செல்வி இலாவண்யா. இந்த ஐந்துபேரும் சென்ற ஜூன் மாதத்திலிருந்து மாதந்தோறும் அவர்கள் வாங்குகின்ற ஊதியத்திலிருந்து தலைக்கு ஆயிரம் ரூபாய் சேமித்து மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேமித்து மேற்கொண்டு ஒரு ஐந்தாயிரமும் கொடுத்து இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே நான் பூரித்துப்போய்ச் சொல்கிறேன் - தமிழ்நாட்டு வரலாற்றுக்கு இப்படி ஒரு குழு அமையுமானால் சரியான வரலாற்றை சரியான தரவுகளோடு எழுதிவிடலாம்.

அறியாத தமிழ்நாட்டு வரலாற்றை எழுத இங்கு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். வெளியிடுவதற்குத்தான் சரியான ஆட்களில்லை."

பொருளிருப்போர் வாசிக்காவிடினும் புத்தகமொன்றை வாங்கி வைத்தும், ஆர்வமிருப்போர் புத்தகத்தை வாங்கிப் படித்தும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கலாம்.

Sunday, February 20, 2005

வனப் பராபத்திய அவை

மரம் மற்றும் சில வனப்பொருட்கள், அவற்றின் விளம்பரங்கள் FSC என்ற குறியைத் தாங்கிவருவதைக் காணலாம் (குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகளில்). Forest Stewardship Council (FSC) என்பது வனங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு சாரா, பன்னாட்டு அமைப்பு. மரங்கள் விடாமல் வெட்டப்பட்டு உண்டான வனங்களின் அழிவுக்கு ஒருவகையான எதிர்வினை என்று இதைக் கூறலாம். சூழமைக்குத் தகுந்த, சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்குத் தோதான வகையில் வனங்களை நிர்வகிக்கும் பொருட்டு 1993-ல் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வனத்திலிருந்து மரம் மற்றும் பிற பொருட்களை எடுக்கும்போது அதன் பல்லுயிர்த் தன்மைக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பதும், வன வளத்தைத் தொடர்ந்து பெருக்குவதும், சூழமைச் செயல்பாடுகளைத் தொடரச் செய்வதும் முக்கியமானதாகும். அதே சமயத்தில் வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், அவர்களின் சமுதாயமும் தொடர்ந்து வருமானம் பெறும் வகையிலும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையைக் கொள்ளையடித்து வெறும் இலாபம் மட்டும் பார்க்காமல் அதைத் தொடர்ந்து பேணிப் பராமரித்தலும், அப்பகுதிவாழ் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வன வளங்களை நிர்வகிப்பதாகும்.

இவ்வமைப்பு உருவாக்கியுள்ள வனச் சான்றிதழ் மற்றும் பொருட் குறியீட்டு முறைமைகள், சரியாக நிர்வகிக்கப்படும் காடுகளிலிருந்து கிடைக்கும் மரம் மற்றும் அவை சார்ந்த பொருட்களைச் சாதாரண நுகர்வோர் நம்பிக்கையுடனும், எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதத்திலும் உள்ளன. வனங்கள் கடுமையான தரக்கட்டுப்பாடுகளால் (இதற்கான பத்து கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்) சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வனத்திலிருந்து நுகர்வோரைச் சேரும் வரையில் ஒரு பொருளானது ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிக்கப்படுவதால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. மேலும், WWF, Friends of the Earth, Greenpeace மற்றும் Woodland Trust போன்ற பெரும் சூழமை சார்ந்த அமைப்புகள் FSCயை ஆதரிக்கின்றன.

இவ்வமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களை http://www.fsc.org/en/ என்ற முகவரியில் அறியலாம்.

(Stewardship என்பதற்கு கொலோன் பல்கலை அகராதி 'பராபத்தியம்' என்ற சொல்லை வழங்குகிறது; வேறு நல்ல சொற்கள் இருப்பின் தெரியப்படுத்தவும்; நன்றி!)

Sunday, February 06, 2005

ஆகாயத் தாமரை

"பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு (தாமிரபரணி) இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது. இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்."

மேற்கண்டதை வாசித்தபின்பு அச்செடியைப் எண்ணம் மனதில் சற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆகாயத் தாமரையை (வெங்காயத் தாமரை, ஆம்பல் என்பவையும் அதே செடியைக் குறிப்பனவா என்பதை அறிந்தவர்கள் சொல்லவும்) அதிக அளவில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்குப் பின்புறமுள்ள எஞ்சி நிற்கும் குளத்திலும், திருச்சி சாலையிலிருக்கும் சிங்காநல்லூர் குளத்திலும் கண்டிருக்கிறேன். நீரின் மீது பச்சைக் கம்பளம் விரித்தாற்போல பார்பதற்குப் அழகாக இருக்கும் இத்தாவரம் தானிருக்கும் பகுதி பசுமையால் பூத்துக் குலுங்குவதுபோலத் தோன்றச் செய்யும். அழகான இத்தாமரை அழிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது எவ்வாறு ஆறு, குளம் முதலான நீர்நிலைகளை அழிக்கிறது என்று தெரிந்துகொள்ளத் தலைப்பட்டு கூகிளில் தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன.


ஆகாயத் தாமரையின் அழகில் மயங்கி அதை சென்ற நூற்றாண்டுகளில் அமேசான் படுகையிலிருந்து இறக்குமதி செய்து மக்கள் தம் வாழுமிடத்தைச் சுற்றி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இருக்க இடங்கொடுத்தால் படுக்கப் பாய் கேட்கிறதைப் போல், தனது அசுர வளர் திறனால் அங்கிங்கெனாதபடி உலகெங்கும் பரவிவிட்டது இச்செடி. மனிதன் எதையுமே தனக்குப் பாதகம் என்று வந்தால் தானே அதைப்பற்றி கவலைப்படுவான்!

ஆங்கிலத்தில் Water hyacinth என்றழைக்கப்படும் ஆகாயத் தாமரையின் தாவரவியல் பெயர் Eichhornia crassipes. இதை ஒரு மிதக்கும் நீர்க்களை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் சில பின்வருமாறு:

குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
சாகாவரம் பெற்ற கொசுக்களுக்கு இது ஒரு சொர்க்க பூமிதான்.
வெள்ள காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன்பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.

இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. தமிழகத்திலும் அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் போன்ற அமைப்புகளும், தன்னார்வலர்களும் இது குறித்து ஆய்வுகள் செய்திருக்கக்கூடும். ஆனால் எந்த அளவிற்கு அவை நடைமுறையில் இருக்கிறதென்று தெரியவில்லை. சாதாரண மக்களுக்கு இச்செடிகள் தினமும் வழியில் பார்த்துச் செல்லும் மற்றொரு காட்சியே.



பல்கிப் பெருகிவிட்டன இச்செடிகளை அழிப்பதோ, கட்டுப்படுத்துவதோ சாதாரண காரியங்களாகத் தெரியவில்லை. வேதியல் மற்றும் உயிரியல் வழிமுறைகள் சில இருந்தாலும் நம்மூரில் அதிக அளவில் கிடைக்கும் மனித வளத்தைக் கொண்டு (நிபுணர்களின் வழிகாட்டல், அரசு மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன்) கையால் அழிப்பது பல்வேறு வழிகளில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். மாவட்ட நிர்வாகங்கள் இதை ஒரு தற்காலிக வேலைவாய்ப்பாகக் கூட வேலையற்ற இளைஞர்களுக்கு அளிக்கலாம். அல்லது உணவிற்கு வேலை என்று ஏதோ ஒரு திட்டம் இருக்கிறதென்று சொன்னார்களே அதன் மூலமாகக்கூட முயற்சிக்கலாம்.

இச்செடியால் ஏதேனும் பயனுள்ளதா என்றுகூட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயு, காகிதம் தயாரித்தல், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுவதாகத் தெரிகிறது.

சென்ற டிசம்பர் (9-13.12.2004) புவனேஸ்வரில் நடந்த 'Lake 2004' என்ற கருத்தரங்கிலும் ஆகாயத்தாமரை பற்றி விவாதித்துள்ளனர்.

இணையத்தில் ஆகாயத்தாமரையைக் குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, அச்செடியைப் போலவே.

செடியைப் பற்றிய பொதுவான தகவல்கள் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றிற்கான சுட்டிகள்:
http://www.invasivespecies.gov/profiles/waterhyacinth.shtml
http://www.water-hyacinth.com/
http://www.nrm.qld.gov.au/factsheets/pdf/pest/PP6.pdf
http://www.pbs.org/wgbh/nova/algae/impact.html
http://www.worldfishcenter.org/naga/naga-ntafp%20news.pdf
http://www.issg.org/database/species/ecology.asp?si=70&fr=1&sts=sss

Tuesday, February 01, 2005

சிற்றிதழ்களின் களஞ்சியம்

சுபமங்களா - எனக்கு வாசிக்க கிடைத்த ஆரம்பகால சிற்றிதழ். கோமல் சுவாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த அருமையான அவ்விதழ் அவரது மறைவுடன் நின்றுவிட்டது. பிற்பாடு, காலாண்டு இதழாக வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அறிமுகம். இதே காலகட்டத்தில் கோவையிலிருந்து வெளியாகும் கலைக்கதிர் என்ற அறிவியல் சிற்றிதழும் வாசிக்கக் கிடைக்கும். இவற்றின் வாயிலாக சமகாலத்தைய இலக்கியச் சிற்றிதழ்கள் சிலவற்றின் பெயர்கள் தெரிந்திருந்தாலும், வாசிக்கக் கிடைத்ததில்லை. கல்லூரி நூலகத்தில் சில இதழ்கள் புத்தாடை கலையாது மேசையின் மேல் மின்விசிறியின் காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கும்.

இலக்கியம் மட்டுமல்லாது, பல்வேறு தளங்களில் எத்தனை சிற்றிதழ்கள் தமிழில் வந்துகொண்டும், வந்து நின்றுபோயும் இருக்கும்! ஒவ்வொரு ஊரிலும் எல்லாக் காலத்திலும் இதுபோன்று ஏதாவது இதழ்கள் (அது பத்து பேர் மட்டுமே படிக்கும் கையெழுத்துப் பிரதியானாலும் சரி, இல்லை பல நூறு படிகளாக வரும் அச்சுப் பிரதியானலும் சரி) தயாராகிக் கொண்டிருக்கும். கொஞ்ச காலத்திற்கு வெகு அமர்க்களமாக வரும் இவ்விதழ்கள் ஒரு காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் காணாமல் போய்விடுவதுடன், அப்படியொன்று வந்ததற்கான சுவடே இல்லாமல் ஆகிவிடும். எதையும் ஆவணப்படுத்தியோ, சேகரித்துப் பாதுகாத்தோ வைத்துவிட்டால் தன் சுயத்தை இழந்து விடமாட்டானா தமிழன்!!

நிலைமை இப்படியிருக்க, "உலக அளவில் கருத்துச் செறிவோடு தொடங்கப்பட்டுத் தொடரப்படுகிற இதழ்கள், அனைவரது பார்வைக்கும் படாமலேயே நின்றுவிடுகின்றன. இவ்வகை இதழ்கள் அந்த இதழாளர் வாழும் வரை அவரோடு வாழ்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்குத் தூக்கி எறியப்படுகின்றன.

தமிழகத்துலும், வெளிநாட்டிலும் இவ்வாறு வெளியிடப்படும் இதழ்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் முதன்மையாகும். இந்த நோக்கில் நமது நூலகத்தில் இன்றுவரை 2,533 வகையான தமிழ்ச் சிற்றிதழ்கள் திரட்டப்பட்டுள்ளன.

இவற்றில் வானம்பாடி, தேனீ, சரஸ்வதி, டமாரம் இதழ்களைக் குறுந்தகடு ஆக்கியுள்ளேன். இந்த முறையில் இதழ்களின் தோற்றத்தை அப்படியே, அதே வண்ணத்தில் பாதுகாக்க முடியும். இதழ்களை அடுத்த தலைமுறைக்குக் காட்சிப்படுத்துகிற இந்த அரிய முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று பதினைந்து ஆண்டுகளாக இதழ்களைச் சேகரித்து வருவதுடன், அவற்றை குறுவட்டு வழிப்பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள ஒரு தமிழ் ஆர்வலரைப் பற்றி அறிய வந்தால் மனதில் ஒரு வித மகிழ்ச்சி தோன்றாதா?

1983-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம் நல்லாசிரியர் விருது பெற்ற, பொள்ளாச்சி நசன் என்று அழைக்கப்படுகிற ம.நடேசன் அவர்கள் இவ்வரிய பணியில் ஈடுபட்டுள்ளார். கூடவே "எளிய முறையில் தமிழ் கற்பித்தல்", "கற்பித்தலுக்கான எளிய கருவிகளை ஆக்குதல்", "தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்துதல்" போன்றவற்றையும் செய்து வருகிறார்.

ஒவ்வொரு காலகட்டத்தின் வரலாறு, குமுகாயத்தின் போக்குகள் முதலானவற்றை அறிந்து கொள்ள இவரது நூலகத்திலுள்ள இதழ்கள் உதவும். இதழியல் துறையில் ஆய்வு செய்வோருக்கும் இது ஒரு களஞ்சியம்.

இதுபோன்று அரிய பணியில் ஈடுபட்டிருப்போரை உலகிற்குக் காட்டும் உருப்படியான பணியை வெகுசன ஊடகங்கள் செய்தால் நன்றாயிருக்கும்.

மேலதிகத் தகவல்களுக்கு...

Thursday, January 27, 2005

மாலன் அவர்களுக்கு...

தங்களது 'வாசகன்' வலைப்பதிவில் பின்னூட்டமிட முனைந்தபோது, 'Comments are for team members only.' என்ற செய்தி வந்ததால் அப்பின்னூட்டத்தை இங்கேயே இடுகிறேன். இது உங்களைச் சென்றடைந்தால் மகிழ்வடைவேன்.

புத்தகங்கள் சிலவற்றைப் பற்றி அருமையாகச் சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள்; ஆவலுடன் வாசித்துக்கொண்டுள்ளேன். எனது வேண்டுகோள் என்னவெனில், ஒவ்வொரு புத்தக அறிமுகத்தின்போதும் அதன் முழு விவரங்களையும் (பெயர், ஆசிரியர், பதிப்பகம், ISBN [இருந்தால்], விலை முதலானவை) தெரிவித்தீர்களேயானால், அவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு பின்னாளில் வாங்கி வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

அன்பும், நன்றியும்.

Wednesday, January 26, 2005

எப்படி சுகம்? - பரோபகாரி - சைவம்

அதுவோர் ஈரடுக்கு ரயில் வண்டி ('புகைவண்டி', 'புகையிரதம்[ஈழத்தில்]', 'தொடர்வண்டி', 'ரயில்', 'ட்ரெயின்' - ஒரு வண்டியைக் குறிக்கத்தான் எத்தனை சொற்கள்!!; இதற்கு 'இருவுள்' என்ற நல்லதொரு தமிழ்ச் சொல்லை இராம.கி. கையாள்கிறார்). சென்றவாரக் கடைசியில், வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது குழந்தை-வண்டியை ரயில் பெட்டியின் வாயிலுக்கு அருகில் நிறுத்திவிட்டு, செல்லும் தொலைவு ஒரு சில நிமிடங்களே என்பதால் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம். மேலடுக்கிலிருந்து பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து எங்களிடம் சோதனையை முடித்துவிட்டு கீழ்த்தளத்திலிருக்கும் சக பரிசோதகர் வருவதற்காக காத்திருந்தார். கீழ்தளத்தில் சோதனையை முடித்துக்கொண்டு சர்ரெனப் படிக்கட்டில் ஏறி வேகமாக வந்தவர் எங்களைப் பார்த்தும்,

"வணக்கம்!"
"எப்படி சுகம்?"
"நன்றி!"

என்று வரிசையாகச் சொல்லி ஆச்சரியப்படுத்திவிட்டு, எங்களின் பதிலைக் காதில் வாங்கியவாறே புன்முறுவலுடன் அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். தமிழ், தமிழர் என்று அயல்நாடுகளில் இன்று பரவலாக அறியப்படுகிறதென்றால் அதற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே முக்கியமான காரணம் என நம்புகிறேன்.
----------

philanthropist = பரோபகாரி என்கிறது கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி.
பரோபகாரி = one who is willing to help others, தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர் (க்ரியாவின் தற்காலத் தமிழகராதி)
பரோபகாரம் = பிறர்க்குதவி (கழகத் தமிழகராதி)

ஆங்கில விக்கிபீடியாவின் விளக்கம்: "A philanthropist is someone who devotes her or his time, money, or effort towards helping others. The label is most often applied to someone who gives large amounts to charity."

ஒன்னுமில்லீங்க, நம்ம பில்கேட்ஸ் உலகத்தின் முன்வரிசைப் பரோபகாரிங்களாம். சரி, இதுக்கு நம்ம அகராதிகள்ளாம் என்ன சொல்லுதுன்னு பாத்தப்பக் கெடச்சதுதாங்க மேல இருக்கறதெல்லாம்.
----------

மாமிசம் அல்லாத உணவிற்கு 'சைவம்' என்ற சொல்லை எப்படிப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்களென்பது வியப்பாக உள்ளது. இதைக்கொண்டு புலால் உணவை 'அசைவம்' என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள். சமயத்தின் (சைவம், வைணவம் போன்ற) பெயரிலிருந்து வந்ததா இது? அப்படியானால் சைவ சமயத்தைப் பின்பற்றியோர் புலால் உணவை மறுத்தவர்களா? "இந்தக் குழம்பில் கறி சேர்க்கப்பட்டுள்ளதா?" எனக் கேட்டால் "இல்லை, இது மரக்கறி" என்றே சொல்வார் எங்கள் அலுவலகத்திலுள்ள உணவகத்தின் ஊழியர், ஈழத்துக்காரர். இதை நினைக்கத் தூண்டிய தகவல்.

Sunday, January 16, 2005

அவியல்

கடந்த வெள்ளிக்கிழமை (14.01.2005) சென்னையில் அகலப்பட்டைச் சேவையைத் தொடங்கிவைத்த மையத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ஜூன் மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் விலையில் கணினி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ("அகண்ட அலைவரிசைச் சேவை தொடக்கம்: ஜூன் மாதத்துக்குள் ரூ.10 ஆயிரத்துக்குக் கணினி" - தினமணி, ஞாயிறு 16.01.2005 மின்பதிப்பு). மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், திரையின் விலையே ஏறக்குறைய ரூ.5000 இருக்கும் சமயத்தில் இக்கணியில் என்னென்ன வசதிகள் இருக்குமென்று தெரியவில்லை. அதுபோல மாதத்திற்கு ரூ.500-ஐ சாதாரண வீடுகளில் அகலப்பட்டை இணைப்பிற்காகச் செலவழிப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. வணிகப் போட்டிகள் பெருகும்போது இத்தொகை மேலும் குறையக்கூடும்.

மைக்ரோசாஃப்ட்டின் தமிழ் மென்பொருள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறதாம்-'ஆபீஸ்' தொகுப்பாக இருக்குமோ? வரட்டும் வரட்டும்!

இந்தியாவில் கணிப்பொருட்களுக்கான இறக்குமதி வரி (35% ?) மிக அதிகம் என்று தெரிகிறது. இந்த அளவிற்கு அதிகமாக வரிவிதிக்க வேண்டிய அவசியம் என்னவோ - உள்ளூர் தயாரிப்புகளைக் காப்பாற்றுதலா?

-----

சென்ற ஆண்டு ஈராக்கின் சிறைச்சாலையில் (அபு க்ராயிப்) நடந்த அக்கிரமங்களுக்காக அமெரிக்கச் சிப்பாய், சார்லஸ் க்ரானெர் (36), பத்தாண்டுகள் சிறைவாசம் பெற்றுள்ளார் (செய்தி). தொ.காவில் பார்த்தபோது இத்தீர்ப்பால் அவர் ஒன்றும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 'மேலிடத்து உத்தரவுகளை'யே அமல்படுத்தியதாகவும், 'போர் நடந்துகொண்டுள்ளது, அங்கு கெட்ட செயல்களும் நடக்கும்' என்ற வியாக்கியானம் வேறு. இந்த 'மேலிடங்களுக்கெல்லாம்' விசாரணை என்றே ஒன்று இருக்குமா என்பது சந்தேகம்தான். இத்தீர்ப்புகள் வெறும் கண்துடைப்பாக இல்லாமலிருந்தால் சரி.

-----

மனிதன் உருவாக்கிய வேறொரு சுனாமி
[அவுட்லுக் இந்தியா, ஜன.11 2005, The Other, Man-Made Tsunami]

-----

'இந்த வார நட்சத்திரம்'-ஆக அழைத்து, எழுதத் தூண்டிய தமிழ்மணம் குழுவிற்கு மிக்க நன்றிகள்! சுமாராக எழுதப்பட்டதாக இருந்தாலும் அவைகளையும் வாசித்து, பின்னூட்டம் அளித்து வந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஒரு வாரத்தில் நான் கவனித்த வரைக்கும் ரோஸாவசந்த் தான்-படித்த வலைப்பதிவுகளில் பெரும்பாலானவற்றிற்குப் பின்னூட்டமிட்டுள்ளார் என்றே சொல்வேன். இது அந்தந்த வலைப்பதிவாளர்களை நிச்சயம் உற்சாகம் அளிக்கும். அதற்காக அவருக்கு மேலும் ஒரு நன்றி! எல்லாப் பதிவுகளுக்கும் எல்லோராலும் எல்லா சமயத்திலும் பின்னூட்டம் அளிக்க இயலாது. இருப்பினும், முக்கியமான பதிவுகளுக்கு (குறிப்பாகத் துறை சார்ந்து எழுதுவோருக்கு) பின்னூட்டம் இடுவது, அதை எழுதுவோர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். இல்லையெனில், இவ்வளவு சிரமமெடுத்து எதற்கு எழுதினோம் என்ற சலிப்பே ஏற்படும். அதேபோல வலைப்பதிவாளரும், பின்னூட்டமளிப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் அளித்தல் நலம் (குறைந்தபட்சம் கேள்விகள் எழுப்பப்படும் போதாவது).

அடுத்த வார நட்சத்திரத்தை வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி!

Saturday, January 15, 2005

நடை

நடைப் பிரியர்களுக்கு சுவிஸ் ஒரு சொர்க்க பூமி என்று சொன்னாலது மிகையாகாது. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துவைத்துள்ளனர். துவங்கும் இடத்தையும், அங்கிருந்து சென்று சேர வேண்டிய இடத்தை மட்டும் நிர்ணயித்துக் கொண்டால் போதும், யாரிடமும் வழிகூடக் கேட்காமல் நடந்து கொண்டேயிருக்கலாம்.

பெரும்பாலும் வெயில் இருக்கும் சமயங்களிலெல்லாம் மக்கள் நடப்பதைக் காணமுடியும், குளிர்காலத்தில்கூட (என்ன, இச்சமயங்களில் நடப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்). ஊர்கள் வழியாக, மேய்ச்சல் நிலங்களில், ஏரிகளைச் சுற்றி, மரங்கள் நிறைந்த காடுகளின் ஊடே, மலைகளின் மேலே என்று சகல இடங்களிலும் நடைபாதைகள் இருப்பதைக் காணலாம். அந்தந்த இடத்தைச் சார்ந்த அமைப்புகள் (ஊராட்சி போன்றவை) இப்பாதைகளைப் பராமரித்து வருவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் தங்கள் விருப்பம், நேரத்திற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாகவோ, ஜோடியாகவோ, குடும்பமாகவோ நடந்து செல்வர். நடப்பதற்கென்றே இருக்கும் கைத்தடிகளுடன் கரடுமுரடான மலைப்பாதைகளில் அறுபது, எழுபது வயதைத் தாண்டியவர்களைக் கண்டு ஆச்சரியப்படத் தேவையில்லை.

நடைபாதைகளுக்கான வரைபடங்களும் தனியாகக் கிடைக்கின்றன. சில இடங்களுக்கு வழியில் பார்க்க வேண்டியவைகளுக்கான குறிப்புகளுடன் சிறு புத்தங்கள்கூட இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நடக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான வரைபடத்தை எடுத்துக் கொண்டு போனால் போதுமானது, சில சமயங்களில் அதுவும் தேவையில்லை. இங்குள்ள பொதுப் போக்குவரத்து அமைப்பு ரயிலை மையமாகக் கொண்டது (இம்முறைமையைப்பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதவேண்டும், முறைமை=system). பெரும்பாலும் எல்லா நடைப்பாதைகளும் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையில் இருப்பதால் (இடையில் உள்ள பாதை மேற்சொன்னபடி எங்கு வேண்டுமாலும் இருக்கும்), வசிப்பிடத்திலிருந்து அவ்வூருக்கு ரயில், தேவைப்பட்டால் அங்கிருந்து பேருந்தில் சென்று நடையைத் துவங்கவேண்டும். சென்று சேருமிடமும் ரயில் நிலையமாகவோ அல்லது பேருந்து நிறுத்தமாகவோ இருக்கும்.

நடக்கத் தோதான ஒவ்வோர் இடத்தின் ரயில் நிலையங்களின் முன்பாகவும் மஞ்சள் நிறத்தில் திசைகாட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் அவ்விடத்தின் பெயர், அது கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மீட்டர் உயரத்தில் உள்ளது, அங்கிருந்து எங்கெல்லாம் செல்ல முடியும் (ஊர்கள்/இடங்களின் பெயர்கள்), நடந்து சென்று அடைவதற்கான நேரம் (பெரும்பாலும் இது சரியாகவே இருக்கும்) போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வழியில் விளக்குக் கம்பங்கள், மரங்கள், சுவர்கள், பெருங்கற்கள் போன்றவற்றில் குறிகளைப் போட்டுவைத்துள்ளனர். இது வழியைத் தொடர்ந்து காண்பிக்கும். இக்குறிகள் பாதைகளுக்கேற்றவாறு வேறுபடும். உதாரணமாக, மலைப்பாதையென்றால் சிவப்பு-வெள்ளைக்குறி, சாதாரண பாதையென்றால் வைரவடிவில் மஞ்சள் குறி என்றிருக்கும். முக்கியமான சந்திப்புகளில் மீண்டும் திசைகாட்டிகள் இருப்பதைக் காணமுடியும்.


ரயில் நிலையம் ஒன்றினருகே, நடையைத் துவங்க...

இடத்திற்கேற்ற நல்ல காலணிகளும் அவசியம். பனியில் நடப்போருக்கு மேலும் சில உபகரணங்கள் தேவைப்படும். உண்பதற்கு பெரும்பாலும் பழங்கள், உலர் பழங்கள், தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்லவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்றால் வழியில் முக்கியமான இடங்களில் உணவுவிடுதிகளும் இருக்கும்.

வழியில் இயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. பனிபடர்ந்த மலைகள், பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்களால் இருட்டான காடுகள், சலசலக்கும் நீரோடைகள், மேய்ச்சலில் மேயும் பசுக்கள், அவற்றின் கழுத்தில் தொங்கும் பெரிய மணிகளின் ஓசை (இம்மணிகளை கடைகளில் சுற்றுப்பயணிகளுக்கு பரிசுப்பொருட்களாக விற்பர்) நடையின் அலுப்புத் தெரியாத வண்ணம் விரிந்து செல்லும். பள்ளத்தாக்குகளிலுள்ள கிராமங்களின் வழியாக நடக்கும் போது அருகிலுள்ள மலைகளைப் மேலெடுத்துப் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் பிரமிக்கச் செய்யும்.


கிராமம் ஒன்றை நோக்கி...


கிராமமொன்றிலிருந்து மரங்கள் செறிந்த காடொன்றிற்கு...

எல்லாப் பாதைகளும் நடப்பதற்கு சுலபமாக இருந்துவிடுவதில்லை. அதுவும் வெயில்காலத்தில் மலைகளில் ஏற்றம் மிகுந்த பாதையில் நடப்பதற்குக் கேட்கவே வேண்டாம். முகட்டை ஏறி அடைந்துவிட்டு வந்த பாதையைத் திரும்பிப் பார்த்ததால், களைப்பெல்லாம் காணாமல் போய்விடும்.


இதுவும் ஒரு பாதை...


அதோ அந்த மலையுச்சியிலிருந்து இங்கு வர மூன்றரை மணிநேரங்கள் ஆகும்.

கோடைகாலத்திற்குக் காத்திருக்கிறேன்.