படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, December 31, 2004

இப்படியும் கொடுக்கலாம்-குறுஞ்செய்தி

இப்படியும் கொடுக்கலாம் - Frequent Flyer Miles

அதேபோல, ஐரோப்பாவின் சில நாடுகளில், நிவாரண நிதியைக் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதன் வாயிலாகச் சேகரிக்கிறார்கள்.

செல்பேசிப் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குக் (உ-ம்: 9999) குறிப்பிட்ட வார்த்தையுடன் (உ-ம்: சுனாமி, ஆசியா...) ஒரு குறுஞ்செய்தியை அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு கு.செவுக்கும் வழக்கத்தைவிட அதிகமான தொகையொன்று வசூலிக்கப்படும். அத்தொகையை சேவை வழங்குவோர் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவிடுவர்.

ஸ்விஸில் இரண்டு தொலைபேசிச் சேவை வழங்குநர்கள் இப்பணியில் தொண்டு அமைப்புகளுக்கு உதவி புரிந்துள்ளனர். ஒரு நிறுவனம் கு.செ ஒன்றுக்கு 1 ஃப்ராங்கும் (சுமார் 90 அமெரிக்க சென்ட்டுகள்), மற்றொரு நிறுவனம் 5 ஃப்ராங்குகளும் வசூலிக்கின்றன. இவை முறையே காரிடாஸ், யூனிசெஃப் தொண்டு அமைப்புகளுக்குப் போய்ச்சேரும், மில்லியன்களில்.

வருடத்தின் இறுதிநாள்

இன்னும் சிலமணி நேரங்களில் இவ்வாண்டு வரலாறாகிவிடும். எளிதில் மறந்துவிடமுடியாத சோகத்தை எல்லோர் மனதிலும் அப்பிச் சென்றுவிட்ட வருடமிது.

உலகில் பலரும் பல வழிகளில் தம்மாலான உதவிகளைச் செய்துவருகின்றனர்; அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லபடியாகச் சென்றடையட்டும். அத்துடன், இறந்த குழந்தைகள் முதலானோரை நினைவுகூறும் விதத்திலும், அனைத்தையும் இழந்து நொந்துகிடப்போரின் துயரில் பங்குகொள்ளும் வண்ணமும் ஒவ்வொரு வீட்டிலும் இன்று விளக்கையோ, மெழுகுவர்த்திகளையோ ஏற்றி வைப்போம். இதனால் ஆகிவிடப்போவதொன்றுமில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் காட்டும் மானசீக ஆதரவின் அடையாளமாக அதைக் கொள்ளலாம்.

கனத்த நினைவுகளுடன் புதுவருடத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். வருங்காலமாவது மக்களுக்கு நிம்மதியை அளிக்கட்டும்!

Sunday, December 26, 2004

நிலஅதிர்வு-சுனாமி-உயிரிழப்புகள்

காலையில் இந்தியாவிலிருந்து குறுஞ்செய்தியொன்று தமிழகத்தில் நடந்த இயற்கைப் பேரழிவுச் செய்தியைத் தாங்கிவந்தது. சென்ற 5-ம் தேதியன்று எதிர்கொண்ட நிலஅதிர்வினைத் தொடர்ந்து இம்மாதத்தில் கேட்கும் மற்றொரு நிலநடுக்கச் செய்தி இது.
ஒருவிதப் பதற்றத்துடன் உடனடியாக தொ.கா., இணையம் ஆகியவற்றின் மூலமாக நடந்தவைகளைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம். நேரமாக ஆக உயிரிழப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் அதன் விளைவாகத் தோன்றிய சுனாமியின் தாக்குதலால் இறந்தோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. இந்தோனேஷியா, தாய்லாந்தைக் காட்டிலும் இந்தியா மற்றும் இலங்கையில் அது மிக அதிகம். நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் மனித உயிர்களுக்கு கிடைக்கும் மதிப்பு குறைவு. அதனாலேயே இறப்போரின் எண்ணிக்கை சர்வசாதாரணமாகக் கூடுகிறது.

சில விருப்பங்கள்/வேண்டுகோள்கள்: இதுபோன்ற இயற்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்த மற்றும் செயல் நிலைகளைக் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். மக்களுக்குச் சொல்லப்படும் தகவல்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் சென்றடைவதில்லை. இவை வதந்திகளுக்கும் தேவையற்ற பதற்றங்களுக்கும் வழிசெய்கின்றன. ஊடகங்கள் மக்களைப் பயமுறுத்தாவண்ணம் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்பேரில் ஒருங்கிணைந்த செய்திகளைத் தருவதற்கான ஏற்பாடுகள் இருக்கவேண்டும். தமிழகம் பலமுறை புயல் மற்றும் வெள்ளச் சேதங்களுக்கு இலக்காகியுள்ளது. நீண்ட கடற்கரையைக் கொண்ட இப்பகுதியில் நடக்கும் எந்தச் சீரழிவுகளையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இறப்போரில் பெரும்பாலும் கடலையொட்டி வாழும் ஏழை மீனவர்களே; அவர்களுக்குத்தான் எவ்வளவு துயர், வாழ்நாள் முழுவதும்!

சில சுட்டிகள்:
நிலநடுக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன?
http://www.bbc.co.uk/science/hottopics/naturaldisasters/earthquakes.shtml
சுனாமி என்றால் என்ன?
http://www.geophys.washington.edu/tsunami/general/physics/physics.html

Friday, December 24, 2004

தினமணி - சில புலம்பல்கள்

"பல சமயங்களில் மிகவும் சாதாரணமான கட்டுரைகளே தினமணியில் வெளியாகின்றன." இதை வாசித்ததும் மனதிலிருந்த புலம்பல்கள் சில மீண்டும் தலைதூக்கின.

தற்காலங்களில் மற்ற பத்திரிக்கைகளுக்கும் தினமணிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மிகமுக்கியமாக எதாவது நடந்துகொண்டிருக்கும், இங்கு பர்வேஸ் முசாரஃப் பற்றி தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பார்கள். கட்டுரைகள் அறிவுரை போதிப்பவைகளாகவோ அல்லது ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டது போல சாதாரணமானவைகளாகவே இருக்கின்றன, பெரும்பாலும். தமிழ் உபயோகத்திற்கு சற்று முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருந்தனர், அதுவும் பழங்கதையாகிவிட்டது.

பள்ளி, கல்லூரி நாட்களில் தினமணியைப் பற்றிய பெரிய பிம்பம் மனதில் இருந்தது. தினமணியில் (நாளிதழ், தமிழ்மணி, கதிர் ...) வரும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை கத்தரித்துச் சேகரித்துவைத்த காலமெல்லாம் ஒன்று. ஒருவேளை அப்பொழுதும் இப்படித்தான் இருந்ததோ?!

Thursday, December 23, 2004

எங்கே இருக்கின்றன இந்தியப் பல்கலைக்கழகங்கள்?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 21-ம் தேதியன்று வந்த ஒரு செய்தியின்படி ஆசிய அளவிலும் சரி, உலக அளவிலும் சரி இந்தியப் பல்கலைக்கழகங்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. உயர் கல்வி வளர அரசாங்கம் அதிக நிதி ஒதுக்கி, தேவையான வசதிகளைச் செய்ய முன்வர வேண்டும்; கல்வியாளர்களும் மனது வைக்கவேண்டும்.

Friday, December 17, 2004

தமிழ்நாட்டில் டிஸ்னியின் ஒளிபரப்பு

டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பைத் துவங்கியிருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது; தமிழிலும் தனியாக ஒளிபரப்புகிறார்கள். இதற்கு முன்னதாக ‘டிஸ்கவரி சேனல்’ போன்றவையும் தமிழில் வந்ததாகச் சொன்னார்கள்; எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றது எனத் தெரியவில்லை. தற்காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைத் தொலைக்காட்சியில் செலவிடுவதால் அவர்களுக்கெனத் தனியாக உருப்படியான நிகழ்ச்சிகள் அவசியம் தேவைப்படுகின்றன.

Wednesday, December 15, 2004

பொன்னொன்று கண்டேன்...

பொன்னொன்று கண்டேன்
பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
...

இப்பாடலை ஏனோ திடீரென்று இன்று மாலை கேட்கத் தோன்றியது. தமிழ்த் திரைப் பாடல்களில் துவக்கத்திலேயே அருமையான இசையுடன் துவங்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று. பாடல் ஆரம்பித்த ஒரு சில விநாடிகளில் வயலினை லேசாக இசைத்து விடுவார்கள் பாருங்கள், மயிலிறகால் தொடுவதைப் போன்ற உணர்வு.

பாடலைக் கேட்க இங்கு செல்லவும்.

Sunday, December 05, 2004

நில அதிர்வு

லேசான குலங்கலுடன் ஏற்பட்ட சப்தம் கேட்டு உறக்கத்திலிருந்து விருட்டென எழுந்தோம்; ஒரு கணம் ஆடிப்போய்த்தான் விட்டிருந்தது. சரியாக அப்போது இரவு 2.53 மணி. நில அதிர்வால் ஏற்பட்ட குலுங்கல் அதுவென உடனடியாக உணரமுடிந்தது. நல்ல வேளையாக அசம்பாவிதம் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. படுக்கையைவிட்டு எழுந்து கண்ணாடி சன்னல் வழியாகவும், கதவு வழியாகவும் வெளியில் பார்த்தபோது அக்கம்பக்கத்தில் யாரும் தென்படவில்லை. இருப்பது இரண்டாவது மாடியில், மீண்டும் குலுக்கல் ஏற்படுமா என்ற அச்சம் வேறு! கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு மீண்டும் போய்ப்படுக்க உறக்கம் வருவதாயில்லை. குஜராத், ஈரான் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கக் காட்சிகள் கண்முன் ஓடின.

காலையில் எழுந்து இணையப் பத்திரிக்கையொன்றைப் பார்த்தபோது ஜெர்மனியின் தென்பகுதியிலுள்ள கருங்காட்டுப் (Black Forest) பகுதியில் 5.4 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் இருந்ததாகவும் (சேதம் பற்றிய தகவல் இதுவரை ஒன்றும் இல்லை) அதன் பாதிப்பை வடக்கு சுவிட்சர்லாந்தின் பகுதிகளில உணரமுடிந்ததாகவும் எழுதியிருந்தனர். ஜூரிக்கிற்கும் தெற்கே இருந்ததா என்று நாளைக்கு அலுவலகம் போனால் தெரியும்.

வாழ்க்கையில் முதன் முதலாக எதிர்கொண்ட நில அதிர்வு. சென்ற இரவு மறக்க முடியாதவொன்று!

Thursday, December 02, 2004

ஓ ஃபார்சூனா

இங்கே க்ளிக்கிவிட்டு, கீழுள்ள உரையைப் (லத்தீன் மொழியில்) பார்த்துக் கொண்டே இப்பாடலைக் கேளுங்கள்; புரிய வேண்டியதெல்லாம் இல்லை, இசையே போதும். (எங்கோ கேட்ட மாதிரியே இருக்கலாம்.)

O Fortuna,
velut Luna
statu variabilis,
semper crescis
aut decrescis;
vita detestabilis
nunc obdurat
et tunc curat
ludo mentis aciem,
egestatem,
potestatem
dissolvit ut glaciem.

Sors immanis
et inanis,
rota tu volubilis,
status malus,
vana salus
semper dissolubilis,
obumbrata
et velata
mihi quoque niteris;
nunc per ludum
dorsum nudum
fero tui sceleris.

Sors salutis
et virtutis
mihi nunc contraria
est affectus
et defectus
semper in angaria.
Hac in hora
sine mora
cordum pulsum tangite;
quod per sortem
sternit fortem,
mecum omnes plangite!

இதை முதன் முதலில் நம்மூரில் ஒரு முகச் சவரப் பொருளுக்கான விளம்பரத்தில் கேட்டதுண்டு. பிற்பாடு தொ.காவில் காண்பிக்கப்படும் இசை நிகழ்ச்சிகள் ஏதாவதொன்றில் பார்த்துக் கேட்டதுமுண்டு (இன்றொரு முறை). சேர்ந்திசைப் பாடல்களில் (கோரஸ்) உலகப் புகழ்பெற்ற பாடலிது.

ஜெர்மானிய இசையமைப்பாளர் கார்ல் ஓர்ஃப் (1895-1982) என்பவரால் இசையமைக்கப்பட்ட கார்மீனா புரானா(Carmina Burana)-வில் வரும் ஒரு பாடலாகும். கார்மீனா புரானா என்பது 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அடங்கிய தொகுப்பு. அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஓர்ஃப் இசையமைத்துள்ளார்.

மேலும் சில தொடுப்புகள்:
கார்ல் ஓர்ஃப் - 1 2
கார்மீனா புரானா
மேற்கண்ட பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு

Wednesday, December 01, 2004

எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்துள்ளோரில் பெரும்பாலானோர் வளரா மற்றும் வளரும் நாடுகளில் வசிக்கும் மக்கள்; அதிலும் குறிப்பாகப் பெண்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது. இந்நோயினால் நாளொன்றிற்குச் சுமார் 600 பேர் இறப்பதாகச் சொல்கின்றனர். பாதிக்கப்பட்டோர், நோயின் தொந்தரவுடன், சக மனிதர்களின் வெறுப்பு, ஒதுக்குதல், கேலி, தாக்குதல் முதலானவற்றிற்கு உள்ளாவது மிகவும் கொடுமையானது.

அரசுகளும், அரசு சாரா அமைப்புகளும் இந்நோயைத் தடுக்கும் முறைகளை எவ்வளவோ முயன்று பிரச்சாரம் செய்கின்றன. இருப்பினும், அறியாமை, அலட்சியம் போன்றவற்றால் இந்த அவலம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. நிரந்தர தீர்விற்கான மருந்துகள் வரும் வரை இன்னும் பல உயிர்கள் மாய்வது தொடரவே செய்யும்.

எய்ட்ஸ் பற்றிய உயிரியல் கூறுகளைச் சுருக்கமாக இங்கு காணமுடிகிறது.