படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, January 28, 2007

திருப்பூரிலிருந்து நாகைக்கு?

நொய்யலின் தடுப்பணையொன்றில் பல காலம் சாயப்பட்டறைக் கழிவுநீர் நிரம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர்வளம் பாழ்பட்டது நாடறிந்த அவலம். உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி சாயப்பட்டறைகள் கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியில் விடவேண்டும். அவ்வாறு செய்யமுடியாத பட்டறைகள் சில மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு வேறொரு 'தீர்வை'க் கண்டுபிடித்துள்ளார்கள். சாயக் கழிவு நீரை (சுத்திகரித்து?) கடலில் கலக்கப் போகிறார்களாம்.

ஊரை கெடுத்தாயிற்று; உலகத்தைக் கெடுக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். இத்திட்டத்திற்குத் தேவைப்படும்
ரூ.700 கோடியில் நாற்பது விழுக்காட்டை அரசே (மத்திய, மாநில) ஏற்றுக் கொள்ளுமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு அப்பகுதியிலேயே நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முடியாதா என்பது ஆச்சரியமாக உள்ளது.

ஒருவேளை இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒப்புக்குச் சப்பானியாக சில நாட்களுக்குச் சுத்திகரிப்பு என்று போக்குக் காட்டிவிட்டு நிச்சயமாகக் கழிவுநீரை அப்படியே அனுப்பிவிடுவார்கள். அவ்வாறு செலுத்தப்படும் நீரின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும். கழிவுநீர்க் கலப்பால் கடல் வளம் சீரழியத்துவங்கும் போது உள் மற்றும் பன்னாட்டு அளவில் எதிர்ப்புக்குரல்கள் வரும் (அதற்கு முன்னமேயே கூட வரலாம்) சமயத்தில் வேறொரு தீர்வை நோக்கி ஓடுவார்கள்.

இன்றைய 'தொழில் நலனிற்காக' என்றும் இருக்க வேண்டிய இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே உள்ளது.