படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, November 29, 2004

இன்றைய நகைச்சுவை

"சங்கராச்சாரியாரான ஜெயேந்திரரை உள்நோக்கத்துடன் ஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது. சோனியா காந்தியின் நிர்பந்தம் காரணமாகவே ஜெயலலிதா இவ்வாறு செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

டிசம்பர் 1ம் தேதிக்குள் ஜெயேந்திரரை விடுதலை செய்ய வேண்டும்.....இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களைத் திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன்"

- சு.சுவாமி

Monday, November 22, 2004

ஜான் பில்கர்

இதழியல் புலனாய்வுத்துறையில் குறிப்பிட்டுச் சொல்லப்படத்தக்கவர்களில் ஒருவர் ஜான் பில்கர் (John Pilger). சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் பரிந்துரைத்த புத்தகம் ஒன்றின் மூலமாக இவரைப் பற்றித் தெரிய வந்தது. The new rulers of the world என்ற நான்கைந்து கட்டுரைகளை உள்ளடக்கிய அப்புத்தகத்தின் வாயிலாக நவீன ஏகாதிபத்தியத்தின் ரகசியங்களையும், மாயைகளையும் போட்டுடைக்கிறார். இந்தோனேஷியாவில் மில்லியன் கணக்கில் மக்கள் சந்தடியில்லாமல் சாகடிக்கப்பட்டுள்ள வரலாறு, ஈராக்கில் வளைகுடாப் போரையடுத்து விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவாக நிகழ்ந்த கொடூரங்கள், அமெரிக்காவின் வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதி போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்டும் கட்டுரைகள். (பிற்பாடு வந்த பதிப்பில் பாலஸ்தீனப் பிரச்சனை குறித்த கட்டுரையொன்றும் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது). இவற்றில் சில ஆவணப்படங்களாகவும் இவரால் எடுக்கப்பட்டுள்ளன.

பில்கரின் பல்வேறு புத்தகங்களும், ஆவணப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை. அவுட்லுக் இந்தியா பத்திரிக்கையிலும் அவ்வப்போது இவரது கட்டுரைகளைக் காணலாம். http://pilger.carlton.com/ தளத்தில் இவரைப் பற்றிய குறிப்புகள், படைப்புகள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

Saturday, November 20, 2004

அமுக்கிப் பேசு

ஜி.எஸ்.எம். நுட்பியலில் இயங்கும் செல்பேசிகளில் வரப்போகும் மற்றொரு சேவை 'Push to Talk on Cellular' [சுருக்கமாக PoC என்றழைக்கிறார்கள்; நாம் அதை 'அமுக்கிப் பேசு' என்போமே! ;-)]. வழக்கமாக செல்பேசிகளில் ஒருவரை அழைக்க முழு எண்ணையோ அல்லது பெயரைத் தேர்ந்தெடுத்தோ அழுத்துகிறோம். மேற்குறிப்பிட்ட புதிய சேவையில் ஒரேயொரு பொத்தானைத் தட்டி ஒருவருடனோ அல்லது ஒரே சமயத்தில் பலருடனோ தொடர்பு கொள்ளமுடியும். ஒற்றை வரியில் சொன்னால், செல்பேசியில் 'வாக்கி-டாக்கி', அவ்வளவுதான்.

இச்சேவையைப் பற்றிய சில விவரங்களை அறிய இங்கே க்ளிக்கவும். (சொடுக்குதல் என்பதைவிட 'க்ளிக்' சரியாக இருக்குமென்றே நினைக்கிறேன்; மேலும் இது ஒலியில் இருந்து எழுந்த சொல்லாக இருப்பதால் அப்படியே சொல்லாமென்றும் தோன்றுகிறது.) மேலும் நுட்பியல் விவரங்கள் வேண்டுவோருக்கு 'ஓப்பன் மொபைல் அலையன்ஸ்'-ன் தளம் உதவக்கூடும்.

Thursday, November 11, 2004

யாசர் அராஃபாத் (1929 - 2004)

கடந்த பத்து நாட்களுக்குள் அரபுப் பிரதேசத்திலிருந்து மற்றொரு முக்கிய மரணச் செய்தி. யாசர் அராஃபத்தின் மரணச் செய்தி இன்று அதிகாலை பிரான்ஸில் அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக இறுதிவரை தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி, இறுதியில் நோய்வாய்பட்டு மாய்ந்த மனிதர். பாலஸ்தீனர்களின் தனிநாடு என்ற கனவுச் சுடர் அழியாமல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்ததற்கு முக்கிய காரணமாக விளங்கினார். ஆயுதமேந்திய போராட்டங்களாலும், பின்னர் சமாதானப் பேச்சு வார்த்தைகள் வாயிலாகவும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருந்தார். இஸ்ரேலுடன் கண்ட சமாதான உடன்படிக்கைக்காக 1994-ல் கூட்டாக நோபல் பரிசைப் பெற்றார். இன்று ஒரு சகாப்தம் முடிவுற்றது; பாலஸ்தீன மக்கள் தங்களது மாபெரும் தலைவரை இழந்து நிற்கின்றனர்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் அராஃபத்தின் உடல் இறுதிச் சடங்கிற்காக கெய்ரோவை அடைந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. பல நாட்டுத் தலைவர்கள், பிரதமர்கள், வெளியுறவு அமைச்சர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அங்கு செல்கின்றனர். இந்தியாவின் சார்பில் சோனியா காந்தியும், வெளியுறவு அமைச்சரும் செல்வதாக ஒரு செய்தி தென்பட்டது. (இந்தியாதான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கரித்த முதல் முஸ்லிம்கள் அல்லாத அரசாகும்; ஆனால் சமீப காலத்தில் இஸ்ரேலுடன் இந்தியா தொடர்பை பலப்படுத்தியுள்ளது; என்ன காரணங்களோ?!) கெய்ரோவில் இறுதிச் சடங்கு முடிந்தபின் அவரது உடல் மேற்குக் கரைப்பகுதியிலுள்ள ரமல்லாவிற்கு எடுத்துவரப்பட்டு வரும் சனிக்கிழமையன்று அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

யாசர் அராஃபாத்தின் மரணச் செய்தி மேற்குலகின் செய்தி ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு கோணங்களில் (வாழ்க்கை, போராட்டம், அரசியல், சொத்து, அடுத்த தலைமை....) அலசல்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

9/11க்குப் பிறகு தீவிரவாதம் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசும் அமெரிக்க, இஸ்ரேலிய அரசுகள் அவை உருவானதற்கான காரணங்களை வசதியாக கண்டுகொள்ள மறுக்கின்றன. தீவிரவாதத்தால் சாதாரண மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தோடு மட்டுமன்றி ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். அதே சமயத்தில், இவர்களால் அனைத்தும் இழந்து, நாதியின்றி தினம்தினம் செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களைப் பற்றி இவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை. அடுத்தவர் வாழ்ந்த இடத்தை அதிகாரம், படைபலம் கொண்டு அடித்துத் துரத்திவிட்டு குடியேற்றங்களை ஏற்படுத்தி பெரும் பாதுகாப்பின் கீழ் வாழும் இம்மக்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர்களும் தங்களை நாகரிகமடைந்தோர், அமைதி விரும்புவோர் என்று கூறிக்கொள்வது மகா வெட்கக்கேடு. அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான ஒருதலைப்பட்ச ஆதரவு தொடரும் வரை பாலஸ்தீனப் பிரச்சனை ஓயப்போவதில்லை. இப்பிரச்சனையைத் தனியாகத் தீர்த்து வைக்கும் சூழ்நிலையில் அவர்களை விட்டால் வேறு எந்த நாடும் இப்போதைக்கு இல்லை. பிரச்சனை ஓயாத வரையில் இஸ்ரேலின் கையே இதில் ஓங்கி நிற்கும். அவ்வாறான நிலையில், கடைசியில் பாலஸ்தீனர்கள் ஒன்றுமில்லாதவர்களாகவோ அல்லது வேறு வழியின்றி இட்டதைப் பெற்றுச் செல்லும் பரிதாபத்திற்குரியவர்களாகவோ ஆக நேரிடலாம் (இப்போதே கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் உள்ளது).

யாசர் அராஃபாத்தின் மறைவினைத் தொடர்ந்து அவரது இடத்தில் யார் அமர்வார்கள், எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற அனுமானங்கள் தொடங்கி பலநாட்களாகிவிட்டன. அங்குள்ள தலைவர்கள் குழப்பமில்லாமல், ஒற்றுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டால் வருங்காலத்தில் ஏதேனும் உருப்படியான வழி உருவாகலாம். நம்பிக்கை வைப்போம்.

Wednesday, November 03, 2004

புஷ்ஷின் வெற்றி

தேசப் பாதுகாப்பு என்ற மிகைப்படுத்தப்பட்ட பயமுறுத்தலுக்குக் கிடைத்த வெற்றி. இப்பயமுறுத்தல்கள் இனி பல வடிவங்களில் அமெரிக்க மக்களின் வாழ்வில் அங்கம் பெறலாம்.

2005-ல் பாலஸ்தீன நாடு உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்ற ஆண்டு புஷ் தெரிவித்திருந்தார். அதற்கு 'கோவிந்தா' போடப்பட்டுவிடுமெனத் தோன்றுகிறது.

ஈராக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கேட்பாரில்லை. ஈரான் தாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இஸ்ரேலுக்குப் பெரும் கொண்டாட்டம்தான்.

அமெரிக்க மக்களிடையே பெரும் பிளவேற்பட்டிருப்பதாக இன்று கெர்ரி பேசினார். எவ்வித பாதிப்புகளை அது உண்டாக்கும் என்று போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

வாழ்க அமெரிக்க மக்கள்! இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஷேக் ஜாயத் அவர்களின் மரணம்

நேற்றைய தொலைக்காட்சிச் செய்தியொன்றில் ஐக்கிய அரபுக் குடியரசுத் தலைவர் ஷேக் ஜாயத் அவர்கள் உடல் நலம் குன்றியிருப்பதாகச் சொன்னார்கள். இன்று காலை, உடன் பணிபுரியும் அரபு நாட்டைச் சார்ந்த நண்பர் ஒருவர் குடியரசுத் தலைவர் இறந்துவிட்ட தகவலைக் குறுஞ்செய்தி வாயிலாக மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொண்டார். நாள் முழுவதும் பலமுறை ஒரு நல்ல மனிதரை நாடு இழந்து விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார்.

1971-ல் அந்நாடு உருவானது முதல் ஷேக் ஜாயத் அதன் தலைவராக இருந்துள்ளார். தன்நாட்டு மக்களின் மதிப்பிற்கும், உண்மையான அன்பிற்கும் பாத்திரமானவர். எண்ணெய் வளத்தால் கிடைத்த செல்வத்தின் பயனை நாடு முழுவதிற்கும் கிடைக்கச் செய்ததோடு மட்டுமன்றி, மிகக் குறைந்த காலத்தில் இந்நாடு மகத்தான வளர்ச்சி கண்டது இவரது ஆட்சியின் கீழ்தான்.

பி.கு.: இன்றைய பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் 1971-ல் ஐக்கிய அரபுக் குடியரசில் சேர்ந்து கொள்ள விடப்பட்ட அழைப்பை, ஏதோ காரணத்தால் அவை ஏற்க மறுத்துவிட்டனவாம்.