படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, August 24, 2004

இன்றைய கேள்வி - 7

இரண்டு வாரங்களுக்கு முன்பு வலைப்பூவில் 'இன்றைய கேள்வி' என்று சில கேள்விகளைக் கேட்டு வைத்தேன்; அதை இங்கும் தொடரலாம் என்று நினைக்கிறேன். தினமும் இல்லையென்றாலும், தோன்றிய போது கேட்டெழுத முயல்கிறேன். வரப்போகும் பதில்களால் (ஒரு வேளை ஏதேனும் வந்தால்) ஆகப்போவது ஒன்றுமில்லையென்றாலும் மற்றவர்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்களெனத் தெரிந்துகொள்ளலாம் என்றோர் ஆவல், அவ்வளவுதான். இக்கேள்விகளுக்கு சரியான பதில், எனக்குத் தெரியாதவைகளாகவோ அல்லது இங்கு வழங்கப்படாதவைகளாகவோ இருக்கலாம். பதில்களாக இங்கே சொல்லப்படுபவை சட்டென்று மனதில் தோன்றியவைகளே.

தமிழகம் மற்றும் இந்தியாவில் உருவாக்கப்படும் இணைய தளங்கள் (சில அரசாங்க மற்றும் சொற்ப இதர இணைய தளங்களைத் தவிர) தங்கள் முகவரியின் நீட்டத்தை (Extensions) ".in" என்றில்லாமல் ".com" என்று கொண்டுள்ளதேன்?

1) .com என்றே எல்லோரும் உபயோகிப்பதால், புதிதாக வருவோர் .in-ப்பற்றி கவலைப்படுவதில்லை.
2) .in என்று இருப்பதே தெரியாது.
3) தெரியும், ஆனால் அதற்கு அவசியமில்லை.
4) தெரியும், ஆனால் எப்படி அதைப் பெறுவது என்று தெரியாது.
5) .com-ற்கு என்ன குறைச்சல், எதற்காக .in போடவேண்டும்?

Saturday, August 21, 2004

2050-ல்

2050ல் இந்தியா, மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி நிற்கும் என்பது ஒரு விதத்தில் கவலையளிக்கும் 'முன்னேற்றச்' செய்தியாகவே இருக்கிறது. இன்னும் 46 ஆண்டுகளுக்குள், இந்திய மக்கள்தொகை மேலும் சுமார் 50 சதவீதம் பெருகும் என்று கணக்கிட்டுள்ளனர். இதே சமயத்தில் தற்போதைய 'முதல்வனான' சீனாவில் சுமார் 10 சதவீதம் மட்டுமே அதிகரிக்குமாம்! கணக்கீட்டின்படி இந்தியத் திருக்கண்டத்தில் அவ்வாண்டில் 1,628 மில்லியன் மக்கள் (162.8 கோடிகள்) இருப்பார்கள்! (எலி, கொசு, கரப்பான்களின் எண்ணிக்கை ஒரு நாள் பின்தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)

மாநில/மத்திய அரசாங்கங்கள் இது விஷயத்தில் விரைவாகச் செயல்பட்டு மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினால் நல்லது. தென்னாட்டில் கடந்த ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்ட குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள், அதிக முனைப்புடன் தொடரப்படவேண்டும்.

நினைத்துப் பார்த்தால் மக்கள் தொகையால் ஏற்படும் நன்மைகளைவிட பாதகங்களே அதிகமாகத் தெரிகிறது. இவையெல்லாம் இப்போதும் உள்ளவைதான்; இருந்தாலும் இதன் அளவு அதிக அளவில் இருக்கப்போவதால் நிலைமை கொஞ்சம், கொஞ்சமென்ன நிறையவே கஷ்டம்தான்!

* மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இளவயதினராக இருக்கப் போவதால் அது உருப்படியாக உபயோகப்படவோ (மனித வளம்) அல்லது பெருந்தலைவலியாக (வேலைவாய்ப்பின்மை, வறுமை...) மாறுவதற்கோ வாய்ப்புண்டு.
* போக்குவரத்து வாகனங்கள் பெருமளவிற்கு அதிகரிக்கும்.
* சுற்றுச் சூழல், கேட்கவே வேண்டாம்.
* எல்லோருக்கும் ஒழுங்காகத் தண்ணீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கும்.
* எங்குபார்த்தாலும் மக்கள் நெரிசலாக இருக்கப்போவதால் (இப்போதுள்ளதைக் காட்டிலும் பல மடங்கு), ஏதேனும் விபத்து/அசம்பாவிதம் நேரிடின் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்.
* நாட்டின் பாதுகாப்புச் செலவுகள் பலமடங்கு அதிகரிக்கும்.
* நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு மேலும் அதிகரிக்கும்.
* வறுமை, போதாமை போன்றவற்றால் குற்றங்கள் அதிகப்படியாக நடக்கலாம்.
* வனவளம் தொடர்ந்து அழிக்கப்படும்.
* எங்கும், எதற்கும் போட்டிதான்.
* இன்னும் சாதி, மதம், அரசியல் என்று எத்தனையோ பிரச்சனைகள்.....

'பாஸிட்டிவாவே திங்க் பண்ண.....' என்று 'தமிழ் மனசாட்சி' ஏதோ கேட்க வருகிறது; முடியலயேப்பா!

Monday, August 09, 2004

வலைப்பூவில் வாசம்

ஒரு வாரத்திற்கு "வலைப்பூ"வில் வாசம், அங்கு வாருங்கள் நண்பர்களே!

Friday, August 06, 2004

சென்னையும் மதுரையும்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையொன்றை மதுரையில் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் நாள்தோறும் நடக்கும் சச்சரவுகள் தீர்ந்தபாடில்லை. மெத்தப்படித்த மேதாவிகள் போடும் சண்டைகளைச் சொல்லி மாளாது. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு இத்தனை மாவட்டங்கள் வேண்டும் என்று அங்குள்ள வழக்கறிஞர்களும், தங்களுக்கு ஒதுக்கியதை திரும்பப்பெறக் கூடாதென்று மதுரைப் பக்கத்தில் இருப்போரும் மாறி மாறி நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தும், ஒரு சிலர் நீதிபதிகளுக்கு எதிராக முழங்கிக்கொண்டும் இருப்பதாகப் படித்தறிகிறோம். இவர்களின் செயல்கள் அப்பட்டமான சுயநலமாகவே தெரிகிறது; வருமானத்தை இழந்து விடுவோம் என்பதாலா இவ்வளவு ஆர்ப்பரிக்கிறார்கள்?

(வேறு - மே மாதம் கோவையில் காதில் விழுந்த செய்தி: நீதித்துறையில் தற்சமயம் நடக்கும் கையூட்டுகள்/ஊழல்கள், 'வளம் கொழிக்கும்' பதிவுப் பத்திரத் துறையையே எடுத்து விழுங்கி விடுகிறதாம்!)

Wednesday, August 04, 2004

'கக்கூஸ்'

வார்த்தையைக் கேட்டதும் ஏதாவது துர்நாற்றம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. தமிழ்ச் சமுதாயத்தில் சிறுநீர், மலம் கழிக்கும் அதிஅத்தியாவசிய இடங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலும் அவற்றை ஏதோ தீண்டத்தகாத ஒன்றாகக் கருதுவதை, அவை அமைந்திருக்கும் இடம் மற்றும் அவ்விடங்களைப் பராமரிக்கும் முறைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம் - அது வீடானாலும் சரி, பொதுவிடங்களானலும் சரி.

நகரங்களில் வாழும் கழிப்பிட வசதியில்லா வீடற்ற மக்கள், மலம் கழிக்க நகராட்சியினரால் பராமரிக்கப்படும் (?!) கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கூடும். பெரும்பாலான கழிப்பிடங்கள் கட்டண அடிப்படையில் இயங்குவதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம்போய் நம் மக்கள் செலவு முன்செய்வார்களா, கிடைக்கும் குறைவான வருவாயில்? சாலை/சாக்கடையோரங்களில் யாருமற்ற நேரங்களில் அமர்ந்து எழுவிடும் ஆத்மாக்களும் உண்டு. (மும்பையில் ஒரு முறை காலை நேரத்தில் முக்கியமான சாலையொன்றின் இரு மருங்கிலும் மக்கள் தண்ணீர் 'டப்பா'க்களோடு அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதிலிருந்து பெரு நகரங்களில் கூட இன்னும் சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று தெரியவந்தது). கிராமங்களில் இன்னும் வெட்ட வெளிகளான மந்தைகள்தான் பிரதானமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல இடங்களில் அரசாங்கம் பேருக்குக் கட்டிக் கொடுக்கும் கழிப்பிடங்கள் போதிய வசதி, பராமரிப்புகளின்றி வீணாக்கப்பட்டே உள்ளன. மந்தைகளுக்குச் செல்வதற்கு பதிலாக அக்கழிப்பிடங்களைச் சுற்றியே பணிகளை முடித்துவிடுகின்றனர்.

இன்றைய காலங்களில் நகரங்களில் கழிப்பிடமற்ற சொந்த வீடுகளைக் காண்பது அரிது. இருப்பினும், எல்லா இடங்களிலும் கழிவுகள் எந்த அளவிற்கு சுத்திரகரிப்பட்டு பொதுச் சாக்கடையில் விடப்படுகிறதென்பது கேள்விக்குரிய ஒன்று.

பொதுவிடங்களில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் நமக்கு நிகர் நாம்தான். உதாரணத்திற்குப் பேருந்து நிலையங்களில் ஐம்பது பைசா கொடுத்து சிறுநீர் கழிக்க சங்கடப்பட்டுக் கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றுச் சுவர் ஏதாவதொன்றின்முன் நின்று நீர் பாய்ச்சத் துவங்கிவிடுகின்றனர் நம் ஆண்கள் (பெண்கள் பாடு இங்கும் திண்டாட்டம்தான்!). பிற்பாடு அவ்விடங்களில் நகராட்சியினரால் வெள்ளையாக ஏதாவது ஒரு பொடியைத் தூவுவதுடன் நின்றுபோகிறது நம் சுகாதாரம். பொதுவாகவே கழிப்பிடம் என்ற வார்த்தையைக் கேட்டதும் முகம் தானாக சுழியும் அளவிற்கு அவற்றின் நிலைமை காணப்படுகிறது.

'கக்கூஸ்' என்று ஒன்று வந்த பிறகு மெல்ல மெல்ல மக்கள் ஓரளவேனும் அதைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தாலும், இவ்விஷயத்தில்கூட நம் சமுதாயம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது.

[முற்காலத்தில் தமிழகத்தில் கழிப்பிட முறை (மந்தையைத் தவிர) என்று ஒன்று இருந்ததா? அதைப் பற்றி யாரேனும் எதையேனும் எழுதி வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. அக்கால மன்னர்கள், செல்வந்தர்கள், பிற்கால மேல்தட்டுக் குடிமக்கள் ஆகிய இவர்களின் கழிப்பிடம் எதுவாக இருந்திருக்கும்?]