படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, April 06, 2004

கண்புரை

வயதானால் உடலுக்கு வரும் தொந்தரவுகளில் ஒன்று கண்புரை (cataract). சென்ற வாரம் கோவையில் அம்மாவிற்கு கண்புரையை அகற்ற வேண்டி சிகிச்சை செய்தனர். இத்துறையில் உபயோகப்படுத்தப்படும் நவீனத்தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே எளிதாக்குகின்றன. இச்சிகிச்சையை சாக்காக வைத்து, அதனைப்பற்றிய விவரங்களை வலையில் தெரிந்துகொள்ள முடிந்தது (இல்லாவிட்டால் வெறுமனேபோய் யார் பார்க்கப்போகிறார்கள்!).

கண்ணில் இருக்கும் ஆடி (lens) பெரும்பாலும் நீர் மற்றும் புரதங்களால் ஆனது. ஒளியை ரெட்டினாவிற்கு (ஒளித் தகவல்களை மூளைக்கு அனுப்பும் பாகம்) குவித்து வழங்கும்வண்ணம் இப்புரதங்கள் அமையப்பெற்றுள்ளன. சிலசமயங்களில் இப்புரதங்கள் ஒன்று சேர்ந்து ஆடியின் மேல் ஒரு படலத்தை உருவாக்குகிறது. இதையே கண்புரை (சாலேசரம்) என்கிறார்கள். இதனால் பார்வை மங்கலாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போகிறது. எந்த வயதிலும் வரலாமாயினும் பொதுவாக அறுபது வயதிற்குப் பிற்பாடே இக்குறைபாடு கண்ணிற்கு வருகிறது.

கண்புரையை அகற்ற பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அம்மாவிற்கு Pachoemulsification என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர். இதன்படி கண்ணின் தெளிவான பகுதியான கோர்னியாவை 3.2மி.மீ அளவிற்கு வெட்டி, ஆடியை உயர் ஒலியதிர்வின் மூலம் இளகச் செய்து உறுஞ்சி வெளியிலெடுக்கிறார்கள். பின்னர் எளிதில் வளையக்கூடிய செயற்கையான ஆடி (flexible Intra-Ocular Lens), முன்பு ஏற்படுத்திய வெட்டின் வழியாக உரிய இடத்தில் புகுத்திவிடப்படுகிறது. (சிகிச்சைக்கு முன்னதாகவே சில சோதனைகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு தேவையான ஆடி தேர்ந்தெடுக்கப்படுகிறது).



கண்ணில் ஏற்படுத்திய வெட்டு தானாகவே ஆறிவிடும், வலியும் குறைவு. சிகிச்சை முடிந்த அதே நாளே வீட்டிற்குச் சென்றுவிடலாம். வருங்காலத்தில் இச்சிகிச்சைச் செலவு குறைந்தால் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(ஆப்தமாலஜி - கண்மருத்துவம், ஆப்தமாலஜிஸ்ட் - கண் அறுவை சிகிச்சை நிபுணர்)

இதுதொடர்பாகக் காணுற்ற சில இணையதளங்களில் டெல்லியைச் சார்ந்த கண் மருத்துவர் ஒருவர் நிர்வகித்துவரும் இத்தளம் நல்ல பல தகவல்களைக் கொண்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கும் என்று நம்புகிறேன்.

No comments: