படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, March 09, 2006

அணு ஆயுத வல்லரசு

"எது அணு ஆயுத வல்லரசு என்பதை 1968-ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் (என்பிடி) தெளிவாக வரையறுத்துள்ளது. 1967 ஜனவரி முதல் தேதிக்கு முன்பாக அணு குண்டையோ, இதர அணு வெடிபொருள்களையோ தயாரித்து, வெடித்து பரிசோதித்த நாடுதான் அணு ஆயுத வல்லரசு என்று அது கூறுகிறது." (தினமணி-10.03.2006, அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி)

என்னே ஒரு வரையரை!! ஒருவேளை இது முன்னமே தெரிந்திருந்தால் இன்றைக்குப் பல 'வல்லரசுகள்' இருந்திருக்குமோ?

Sunday, March 05, 2006

பனிப்பொழிவு



நேற்றைக்கு சுவிஸ் முழுவதிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பல இடங்களில் சாதனை அளவாக இருந்துள்ளது. இயல்பு வாழ்க்கை, முக்கியமாக சாலைகளில், பெரிதும் பாதிப்படைந்திருந்தது. மரங்களில் பனி இலைகள்!

Friday, March 03, 2006

ஸ்விஸ் தமிழர்கள், கீழ்வெண்மணி

பெர்ன் பல்கலைக்கழகத்தின் இனவியலாளர் டமாரிஸ் லூதி சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களைக் குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளார். அச்செய்திக்கான சுட்டி இங்கே.

கீழ்வெண்மணிச் சம்பவம் என்று எப்போதோ கேட்டதுண்டு. அதைப் பற்றி இன்றுதான் சரியாகத் தெரிந்து கொள்ளமுடிந்தது. (கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.) குற்றமிழைத்தோர் யாரெனத் தெரிந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது!

Thursday, March 02, 2006

கண்காட்சிகள், வாசகர்கள், புத்தகங்கள்

சென்ற ஜனவரியில் கோவை நஞ்சப்பா சாலையில் இருக்கும் சிறைச்சாலை மைதானத்தில் 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' (நிசெபுஹ) புத்தகக் கண்காட்சியொன்றைப் போட்டிருந்தார்கள். 10% விலைக்கழிவு என்று பெரிதாக வெளியில் எழுதிப் போட்டிருந்தார்கள். உள்ளேதான் கூட்டத்தைக் காணோம்! பணியாளர்கள் இருவரைத் தவிர வாசகர்கள் ஒன்றிரண்டுபேர்தான் தென்பட்டனர்.

நிசெபுஹ என்றாலே முன்பெல்லாம் பெரும்பாலும் கம்யூனிச புத்தகங்கள், அக்கால ரஷ்ய மொழியாக்கங்கள், அவர்களது பதிப்பகப் புத்தகங்கள், 'நேஷனல் புக் டிரஸ்ட்' புத்தகங்கள் என்றிருக்கும். ஒரு காலத்தில் பேருந்து ஒன்றை நடமாடும் புத்தகக் கடையாக மாற்றி ஊர் ஊராகச் சென்று புத்தகங்களை விற்றனர்; இன்றும் உள்ளதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சிக்கு அப்படியொருமுறை வந்தபோது சில புத்தகங்களை வாங்கிய நினைவுள்ளது. அப்பேருந்துப் புத்தகக் கடை மிகவும் பிடித்திருந்தது.

தற்சமயம் வழக்கமான புத்தகங்களோடு, பிற பதிப்பக வெளியீடுகளும் நிறைய காணப்பட்டது. கண்காட்சியில் வாங்கியதைவிட நேரு விளையாட்டரங்கத்திலிருக்கும் அவர்களது கடையில்தான் அதிகப் புத்தகங்களை வாங்கினேன். அனைத்தும் ஊரிலேயே உறங்கிக் கொண்டுள்ளது :(

அக்கடைக்கு இரண்டுமுறை சென்றபோதும் மருந்துக்கும் புத்தகம் வாங்குவாரில்லை. இப்படி விற்பனை செய்து எப்படி வியாபாரத்தை நடத்துகிறார்களோ! வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் அங்கிருந்தும் அவற்றின் நிலையைக் கண்டு வாங்க மனம் ஒப்பவில்லை. ஒன்று-'வளம் தரும் மரங்கள்' என்னும் தொகுதி (இராம.கி. அவர்கள் பதிவின் மூலமாக அறிந்து கொண்டது). இத்தொகுதியைப் பல்லாண்டுகளுக்கு முன்பு நிசெபுஹ பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்புகள் வருவதே இல்லை என்று கடையை நிர்வகிப்பவர் சொன்னார். அங்கிருந்த அப்புத்தகங்கள் செல்லரிக்கப்பட்டு, கிழிந்து, பழுப்பேறிக் கிடந்தன. பழையவற்றிற்குத்தான் அக்கதியென்றால் 'நரிக்குறவர்களின் இனவரைவியல்'-க்கு (வெங்கட் பதிவின் மூலம் அறிந்தது) என்ன? இருந்த ஒரே ஒரு புதிய புத்தகமும் அங்கங்கு அழுக்காகிக் கிடந்தது. எப்படி வாங்குவது? கடைசி வரை அப்புத்தகம் கிடைக்கவேயில்லை :(

புதிய புத்தகங்கள் எவ்வாறு அழுக்காகின்றன?
ஒன்று பதிப்பாளர்களிடமிருந்து வரும் கட்டுகளிலேயே கதை ஆரம்பித்திருக்கலாம்.
அப்புறம் வந்த புத்தகங்களைக் கடைக்காரர்கள் பிரித்து வைக்கும்போது.
வைக்கப்படும் இடத்தின் 'அழகால்'.
அங்கு வைக்கப்படும், கையாளப்படும் முறையால்.
வாசகர்கள் தொடும்போதும், புரட்டும்போதும் அவர்களது கைகளிலிருந்து படிவதால்(இரண்டு சக்கர வாகனங்களில் கடைக்கு வருபவர்கள் - அதன் கைப்பிடியில் எவ்வளவு அழுக்கிருக்கும் என்பது கழுவும்போதுதான் தெரியும்! - அப்படியே புத்தங்களைத் தொடும்போது உயவு நெய் கூட புத்தகத்தில் படுகிறது).
....
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரரிடம் கேட்டேன், "ஏங்க இதுக்கெல்லாம் ஒரு பாலித்தீன் உறை மாதிரி ஏதாவது போட்டு வைக்கலாமல்ல? இல்லை, பதிப்பகத்துக் காரங்ககிட்டையாவது சொல்லலாமே?". "எங்களுக்கு வரும் போதே அப்படித்தாங்க வருது" என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

புத்தகங்களையெல்லாம் நன்றாக உறையிட்டு அழுக்குப்படாமல் வைக்கலாம் என்ற அக்கறை பெரும்பாலானோருக்கு இல்லை. கடைக்காரர்களைவிட பதிப்பாளர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காரியம் இது. இப்போதெல்லாம் உலகத்தரத்தில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அவற்றை ஒரு பாலித்தீன் உறையில் இறுகக் கட்டி கடைகளுக்குக் கொடுத்தால் புத்தகங்கள் நன்றாக இருக்குமே. ஒவ்வாரு புத்தகக் கடைக்கும் 'புரட்டும் பிரதி' என்று ஒன்றை இலவசமாகக் கொடுக்கலாம். கட்டப்பட்ட புத்தகங்களுடன் இப்பிரதியும் இருந்தால், மற்ற புத்தகங்கள் நொந்து நூலாகும் நிலை தவிர்க்கப்படும்.

அப்புறம், விஜயா பதிப்பகத்திற்குச் சொந்தமான கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். இங்கும் கூட்டம் சொற்பமே! (சற்று தொலைவிலிருக்கும் துணிக்கடைகளுக்குள் எப்போதும் மூச்சு விடமுடியாத கூட்டம்!!) வாசகர்களின் வசதிக்காக தள வசதிகள் செய்து கொண்டிருந்ததை உரிமையாளர் கூட்டிச் சென்று காண்பித்தார். இவ்வேலைகள் முடிந்துவிட்டால் நிறைய செலவு செய்து வெளியில் கண்காட்சி நடத்த வேண்டியிருக்காது என்று அவர் சொல்லக் கேட்டதாக நினைவு!! கணினி மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பட்டைக் கோடு, வருடி (scanner) போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பக்கம் வந்து பணிசெய்யும் பெண்களிடம் ஒரு புத்தகத்தைக் கேட்க பல நிமிடங்கள் தேடி எடுத்துக் கொண்டுவந்துதான் கொடுத்தார்கள். அடுத்தமுறை இந்நிலை மாறியிருக்கலாம்.

Wednesday, March 01, 2006

வரப் போகிறது அகல ரயில் பாதை!

சென்ற வெள்ளிக்கிழமையன்று (24.02.2006) நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட 'ரயில்வே பட்ஜெட்'டில் உள்ள நல்ல செய்திகளுள் ஒன்று கோவை-பொள்ளாச்சி, பாலக்காடு-பொள்ளாச்சி-திண்டுக்கல் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்படுவதற்காகப் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது. முழுமையாகப் பணம் ஒதுக்கப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொஞ்சம் மகிழ்ச்சியடைவேன். நிறைய மகிழ்ச்சியடைய, இன்னும் ரயில்வே எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட (அப்படித்தான் சிறுவயதில் சொல்லக் கேட்டுள்ளேன்) இப்பாதையில் ஒரு நாளைக்கு சில வண்டிகளே சென்று கொண்டிருக்கும். ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் (எனக்குத் தெரிந்த கோவை வட்டாரத்தில்), மக்களுக்கு ரயில் நிலையம் 'தொலைவில்' என்றாகிவிட்டது. மக்களும் ரயில்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. ரயில் நிலைய ஊழியரும், வண்டி ஓட்டியும் பிரம்பு வளையம் ஒன்றைப் பரிமாறிக் கொண்டு நிறுத்திச் சென்ற வண்டிகளும், நிற்காமலேயே போகின்றன. அவ்வளவுதான், சென்றதினி மீளுமா தெரியவில்லை.

நிற்க. என்னைக் கேட்டால் ரயில்வே நிர்வாகமெல்லாம் இன்னும் பிழைக்கத்தெரியாத அல்லது வருமானத்தில் மேலும் அக்கறை செலுத்தாததாக இருக்கும் நிர்வாகம் என்றுதான் சொல்வேன். உதாரணத்திற்கு, கோவை-பொள்ளாச்சிக்கு இடையே ஒரு நாளைக்கு சென்று வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமானது. பல நேரங்களில் யோசிப்பேன், இவ்வூர்களுக்கிடையில் மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்குமென்று! ரயில்வேக்கும் நல்ல வருமானம், மக்களுக்கும் செளகரியம், பேருந்துப் புகைகளால் ஏற்படும் சூழமைச் சீர்கேடு கொஞ்சமாவது குறையும், இத்யாதி.

இன்றிருக்கும் பொருளாதார நிலையில் பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நல்ல முனைப்போடு தொலைநோக்குள்ள நிர்வாகமும், சிறந்த திட்டமிடலும், அதனைச் செயற்படுத்துதலும்தான். இப்போதைக்குக் கனவு காண்போம்!