படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, July 30, 2004

சூடானில் நடக்கும் கொடுமை

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் (நம்மூர் செய்தித்தாள்களில் இதைப்பற்றி ஒன்றும் கண்டதாக நினைவில்லை) தவறாது இடம் பெறும் செய்தி சூடான் பிரச்சனை. ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று சகலரும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்று கொண்டுள்ளனர். சூடான் பிரச்சனையை "உலகின் மிக மோசமான மாந்த குல நெருக்கடி" என்று வேதனையோடு ஐ.நா. சொல்கிறது.

அப்படி என்னதான் பிரச்சனை அங்கு? சூடானின் வறுமை நிலவும் மேற்குப் பகுதியான டார்ஃபுரில் சென்ற ஆண்டிலிருந்து (2003) இதுவரை கிட்டத்தட்ட 50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் (இன்னும் நடந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது), ஒரு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவந்து அகதிகளாக உள்ளனர். அகதி மையங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தற்சமயம் பல உயிர்கள் (குறிப்பாக குழந்தைகள்) போனவண்ணம் உள்ளன.

சூடான் அரசாங்கம் டார்ஃபுர் பகுதியைக் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்வதாகச் சொல்லி 'சூடான் விடுதலைப் படை', 'நீதி மற்றும் சமத்துவ இயக்கம்' என்ற இரு குழுக்கள் அரசுக்கு எதிராக 2003ன் துவக்கத்தில் கலகத்தில் இறங்கின. இக்கலகப் படைகளில் பெரும்பாலும் அப்பகுதியின் சில ஆப்பிரிக்கக் கருப்பினங்களின் மக்கள் இடம்பெற்றிருந்தனர். இப்பகுதியில் பல காலமாகவே உள்ளூர் கருப்பினக் குழுக்களுக்கும், அராபியக்குழுக்களும் (இவர்களை 'ஜன்ஜாவீட்' என்று அழைக்கிறார்கள்) இடையே பூசல்கள் இருந்து வந்துள்ளன. அரசாங்கம், மேற்சொன்ன கலகப் படைகளை ஒடுக்க, அரபுக் குழுக்களைச் சகல வழிகளிலும் ஆதரித்து உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஜன்ஜாவீட், மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, அராபியரால்லாத பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும், கொடூரமாகப் பெண்களைச் சூறையாடியும், வீடுகள், கிராமங்களைத் தீக்கிறையாக்கியும், உடைமைகளைத் திருடியும் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக இடம் பெயரச் செய்துவிட்டனர். உலகம் இதனை ஓர் 'இன அழிப்பாகவே' பார்க்கிறது. ஆனால், சூடான் அரசாங்கமோ ஜன்ஜாவீடின் மேல் நடவடிக்கை எடுப்பதாக சொல்லிக்கொள்கிறது.

இந்நிலையில் உலக நாடுகள் சூடான் அரசாங்கத்தை, ஜன்ஜாவீடின் ஆயுதங்களைக் களைந்து நடக்கும் வன்முறை நிறுத்தும் பொருட்டு, ராஜீய முறைகளில் நெருக்குதலுக்குள்ளாக்க முயற்சித்துக் கொண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஐ.நா.பாதுகாப்பு சபை, முப்பது நாட்களுக்குள் அரபு வன்முறையாளர்களை அடக்கி ஒடுக்க சூடானுக்கு நிபந்தனை விதித்து தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. ஆனால், சூடான் இத்தீர்மானத்தை நிராகரித்துள்ளது. என்ன நடக்கப் போகிறதோ? அதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? கொடுமையான உலகமிது!

No comments: