படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, July 15, 2004

முடிச்சுகள்

கோடைகாலம் என்றுதான் பெயர், இந்த வருடம் சதா மழை பெய்த வண்ணமே உள்ளது. இவ்வாறு அலுத்துக் கொண்டாலும் மக்கள் ஏதாவது வெளி வேலைகளைச் செய்து கொண்டுதான் உள்ளனர். உடன் பணிபுரியும் ஒருவருக்கு, மரங்களுக்கு இடையில் வலையைக் கட்டித் தொங்கவிட்டுப் படுத்துக்கொள்ள ஆசைபோலுள்ளது; மற்றொரு நண்பரிடம் விசேட முடிச்சு ஒன்றைப்பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பாய்மரக் கலங்களைச் செலுத்துவதில் பயிற்சியுள்ளவர் என்று கேள்வி. [Sailor-க்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?] இவ்வாறு கலங்களைச் செலுத்துவோருக்கு விசேட முடிச்சுகள் போடத்தெரியுமாம்!

இதைக் கண்டுகொண்டிருந்தபோது, நமக்கு எத்தனை வகையான முடிச்சுகள் போடத்தெரியும் என்ற வினா எழுந்தது. ஒரு கை விரல்விட்டு எண்ணுமளவுக்கு இருக்குமா என்பதே சந்தேகந்தான்! அன்றாட வாழ்விலே எங்கேயாவது முடிச்சுகளைப் போட்டுக்கொண்டுதான் உள்ளோம் (ஷு, கொண்டை, கோணிப்பை, பந்தல், மாடு, டை, தாலி,...), ஆனால் அதைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. இந்த இணைய தளத்தைப் பார்த்த போது, இப்படியெல்லாம் முடிச்சுகள் உண்டா என்று ஆச்சரியம் மேலிட்டது.

முடிச்சு என்றதும் ஆரம்பப் பள்ளிக்கூட நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது, தலைமையாசிரியருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளில் ஒன்று, அவர் கொடுக்கும் தாள்களில் துளையிட்டு அவற்றைக் கோப்புகளில் கட்டி வைப்பது (அது கூடச் செய்யாமல் அவருக்கு வேறென்ன வேலையென்று தெரியவில்லை). துளையிடுவதற்கு ஒரு சிறிய இயந்திரம் இருந்ததால் கவலையில்லை, ஆனால் முடிச்சுப் போடவேண்டுமே! போடவும் தெரியாது, போடத்தெரியாதென்று அவரிடம் சொல்லவும் பயம்/தயக்கம். அவர் இருக்கும்போது துளையிட்ட தாளினுள் வேகமாக கயிற்றைச் செருகி முடியிடுவதுபோல் பாவனை செய்து கோப்பை மூடிவிட்டு, ஆள் நகர்ந்தபின் வேறொரு பையனை அழைத்து முடிபோடச் செய்த தமாஷ் கொஞ்ச நாள் நடந்தது. பிறகு எப்படியோ ஒருவழியாகப் பழகிக்கொண்டேன். இப்போது அவற்றை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

No comments: