படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, August 04, 2004

'கக்கூஸ்'

வார்த்தையைக் கேட்டதும் ஏதாவது துர்நாற்றம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. தமிழ்ச் சமுதாயத்தில் சிறுநீர், மலம் கழிக்கும் அதிஅத்தியாவசிய இடங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலும் அவற்றை ஏதோ தீண்டத்தகாத ஒன்றாகக் கருதுவதை, அவை அமைந்திருக்கும் இடம் மற்றும் அவ்விடங்களைப் பராமரிக்கும் முறைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம் - அது வீடானாலும் சரி, பொதுவிடங்களானலும் சரி.

நகரங்களில் வாழும் கழிப்பிட வசதியில்லா வீடற்ற மக்கள், மலம் கழிக்க நகராட்சியினரால் பராமரிக்கப்படும் (?!) கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கூடும். பெரும்பாலான கழிப்பிடங்கள் கட்டண அடிப்படையில் இயங்குவதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம்போய் நம் மக்கள் செலவு முன்செய்வார்களா, கிடைக்கும் குறைவான வருவாயில்? சாலை/சாக்கடையோரங்களில் யாருமற்ற நேரங்களில் அமர்ந்து எழுவிடும் ஆத்மாக்களும் உண்டு. (மும்பையில் ஒரு முறை காலை நேரத்தில் முக்கியமான சாலையொன்றின் இரு மருங்கிலும் மக்கள் தண்ணீர் 'டப்பா'க்களோடு அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதிலிருந்து பெரு நகரங்களில் கூட இன்னும் சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று தெரியவந்தது). கிராமங்களில் இன்னும் வெட்ட வெளிகளான மந்தைகள்தான் பிரதானமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல இடங்களில் அரசாங்கம் பேருக்குக் கட்டிக் கொடுக்கும் கழிப்பிடங்கள் போதிய வசதி, பராமரிப்புகளின்றி வீணாக்கப்பட்டே உள்ளன. மந்தைகளுக்குச் செல்வதற்கு பதிலாக அக்கழிப்பிடங்களைச் சுற்றியே பணிகளை முடித்துவிடுகின்றனர்.

இன்றைய காலங்களில் நகரங்களில் கழிப்பிடமற்ற சொந்த வீடுகளைக் காண்பது அரிது. இருப்பினும், எல்லா இடங்களிலும் கழிவுகள் எந்த அளவிற்கு சுத்திரகரிப்பட்டு பொதுச் சாக்கடையில் விடப்படுகிறதென்பது கேள்விக்குரிய ஒன்று.

பொதுவிடங்களில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் நமக்கு நிகர் நாம்தான். உதாரணத்திற்குப் பேருந்து நிலையங்களில் ஐம்பது பைசா கொடுத்து சிறுநீர் கழிக்க சங்கடப்பட்டுக் கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றுச் சுவர் ஏதாவதொன்றின்முன் நின்று நீர் பாய்ச்சத் துவங்கிவிடுகின்றனர் நம் ஆண்கள் (பெண்கள் பாடு இங்கும் திண்டாட்டம்தான்!). பிற்பாடு அவ்விடங்களில் நகராட்சியினரால் வெள்ளையாக ஏதாவது ஒரு பொடியைத் தூவுவதுடன் நின்றுபோகிறது நம் சுகாதாரம். பொதுவாகவே கழிப்பிடம் என்ற வார்த்தையைக் கேட்டதும் முகம் தானாக சுழியும் அளவிற்கு அவற்றின் நிலைமை காணப்படுகிறது.

'கக்கூஸ்' என்று ஒன்று வந்த பிறகு மெல்ல மெல்ல மக்கள் ஓரளவேனும் அதைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தாலும், இவ்விஷயத்தில்கூட நம் சமுதாயம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது.

[முற்காலத்தில் தமிழகத்தில் கழிப்பிட முறை (மந்தையைத் தவிர) என்று ஒன்று இருந்ததா? அதைப் பற்றி யாரேனும் எதையேனும் எழுதி வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. அக்கால மன்னர்கள், செல்வந்தர்கள், பிற்கால மேல்தட்டுக் குடிமக்கள் ஆகிய இவர்களின் கழிப்பிடம் எதுவாக இருந்திருக்கும்?]

No comments: