படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, July 19, 2004

"புத்தர் தேசம்"

'சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தியாகனூரில் உள்ள புத்தர் சிலை' என்றால் வியப்பும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ள மேலும் ஆர்வம் பீறிடுவதும் இயல்புதானே? ஜூலை-2004 மாத 'காலச்சுவடு' இதழில் 'புத்தர் தேசம்' என்றொரு கட்டுரையில்தான் [பக்.46] இவ்வரிய செய்தியைக் கண்டேன். புத்தகத்தின் அச்சுப் பதிப்பில் காணக் கிடைக்கும் சில படங்களை நோக்கினால் 'வயல்வெளி நடுவில் மரத்தடியில் புதர் மண்டிய இடத்தில்' இருக்கும் 'இன்னொரு புத்தர் சிலை' தெரியும். காற்று, மழை, வெயிலுக்கு தாக்குண்டு பல்லாண்டுகளாக வெட்ட வெளியில் இச்சிலைகள் கிடப்பதுபோல் தோன்றுகிறது. கண்டதும், வரலாற்றின் அரிய பொக்கிஷங்களை பாதுகாக்கத் தெரியாதவர்களாக உள்ளோமோ என்ற ஆதங்கமே ஏற்படுகிறது. ("தமிழ்ச் சமூகத்திற்குத் தொன்மையான வராலாறு இருந்தும் அதற்கான ஆதாரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பண்பு தமிழர்களிடம் மிகவும் குறைவு." என்று அதே புத்தகத்தின் வேறொரு கட்டுரையில் [பக்.22] குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகம் இங்கும் பொருந்துகிறது).

"இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் பெளத்தம் வெகுகாலம் ஆற்றலோடு இருந்தது எனப் பல்வேறு வரலாற்று அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள"தாகக் குறிப்பிடும் கட்டுரையாளர் (விவேகானந்தர், நேதாஜி ஆகியோருடன் தமிழகம் கொண்டிருந்த தொடர்பு ஏனோ இச்சமயத்தில் சட்டென நினைவுக்கு வருகிறது.), "ஆனால் அது பற்றிய ஆய்வுகள்தாம் செய்யப்படவே இல்லை. அவை செய்யப்பட்டால் இப்போதுள்ள பல இந்துக் கோவில்கள் பெளத்தக் கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவைதாம் என்பது தெரியவரும். தஞ்சைப் பெரிய கோவிலேகூட அப்படி இடித்துக் கட்டப்பட்டதுதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோவிலில் உள்ள புத்தர் சிற்பங்கள் அதற்கு ஆதாரங்களாக உள்ளன"வென்று இதுவரை அறிந்திராத தகவலைத் தருகிறார். [பக்.48]

"தமிழ்நாட்டில்.....பணம், புகழ் ஈட்டும் குறுக்கு வழியாக இப்போது புத்தரின் பெயர் மாற்றப்படுகிறது" [பக்.48] எனச் சுட்டிக்காட்டி, "தமிழ்நாடெங்கும் சிதறிக் கிடக்கும் புத்தர் சிலைகள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தும்" ஆய்வை மேற்கொள்ள வலியுறுத்துகிறார்.

இதுபோன்று இன்னும் எத்தனை அரிய பொக்கிஷங்கள் கிராமங்களில் மறைந்துள்ளனவோ!

[முழுக் கட்டுரையை இணையத்தில் வாசிக்க...]


No comments: