படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, July 06, 2004

'பெரிய மனிதர்' கைதுகள் - ஒரு கேள்வி

'பெரிய மனிதர்'களின் 'உள்ளே-வெளியே'யின்போது, அவர்கள் காட்டும் 'சிரித்த' முகத்தைப்பற்றி இன்று அருண் வைத்தியநாதன் எழுதியிருந்ததைக் கண்டதும் அடிக்கடி மனதில் எழும் கேள்வியொன்று மீண்டும் வந்தது.

மேலை நாடுகளில் முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது, அவர்களுக்கு குண்டு துளைக்காத உடையை அணிவித்துச் செல்வதை தொலைக்காட்சியில் பலமுறை கண்டதுண்டு. (சில சமயங்களில் காவலர்களேகூட முகமூடி அணிந்துகொண்டு, குண்டு துளைக்காத உடையுடன் சென்று கைது செய்வதும் உண்டு). இவ்வாறு செய்யப்படுவதற்கான காரணங்கள் பின்வருவனவாக இருக்கலாம் என்று சிலவற்றை யூகிக்கிறேன்:
1) கைதுசெய்யப்பட்டவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று அதன்மூலம் உண்மை தெரியாமல் போகக்கூடும்.
2) மேற்கண்ட நபருக்கு ஒன்று நடக்கும்பட்சத்தில், அக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட வேறு யாரேனும் தப்பித்துச்செல்ல வாய்ப்பு ஏற்படக்கூடும்.
3) குற்றவாளியாகவே இருப்பினும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கும்வரை அந்நபரைப் பாதுகாக்கவேண்டும்.
4) கைதுசெய்யப்பட்டவர் ஒருவேளை குற்றமற்றவராகவும் இருக்கலாம், அதனால் அவரைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

முத்திரைத்தாள் மோசடியில் பல 'முக்கியமான' நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தினம் ஒரு செய்தி வருகிறது, கைதுகளும் நடந்து கொண்டுள்ளது. 'பெரிய மனிதர்'களும் சிரித்துக் கொண்டேதான் உள்ளே போகின்றனர். போகும் மனிதன் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவான் என்ற அச்சத்தில் தொடர்புடைய மற்றொருவரால் இந்நபருக்கு ஊறுவிளைய பெரும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற முக்கிய வழக்குகளில் கைதாபவர்களுக்கு நம்நாட்டில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி. வெறுமனே லத்தி அல்லது கத்தித் துப்பாக்கியுடன் சில காவலர்கள் சூழ்ந்து நிற்பது மட்டும் போதாதென்று தோன்றுகிறது, ஏனென்றால் குற்றத்தின் வீச்சு அப்படி - பல ஆயிரம் கோடிகள், பல்வேறு 'முக்கிய' மனிதர்கள் என்று...

No comments: