படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, December 26, 2004

நிலஅதிர்வு-சுனாமி-உயிரிழப்புகள்

காலையில் இந்தியாவிலிருந்து குறுஞ்செய்தியொன்று தமிழகத்தில் நடந்த இயற்கைப் பேரழிவுச் செய்தியைத் தாங்கிவந்தது. சென்ற 5-ம் தேதியன்று எதிர்கொண்ட நிலஅதிர்வினைத் தொடர்ந்து இம்மாதத்தில் கேட்கும் மற்றொரு நிலநடுக்கச் செய்தி இது.
ஒருவிதப் பதற்றத்துடன் உடனடியாக தொ.கா., இணையம் ஆகியவற்றின் மூலமாக நடந்தவைகளைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம். நேரமாக ஆக உயிரிழப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் அதன் விளைவாகத் தோன்றிய சுனாமியின் தாக்குதலால் இறந்தோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. இந்தோனேஷியா, தாய்லாந்தைக் காட்டிலும் இந்தியா மற்றும் இலங்கையில் அது மிக அதிகம். நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் மனித உயிர்களுக்கு கிடைக்கும் மதிப்பு குறைவு. அதனாலேயே இறப்போரின் எண்ணிக்கை சர்வசாதாரணமாகக் கூடுகிறது.

சில விருப்பங்கள்/வேண்டுகோள்கள்: இதுபோன்ற இயற்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்த மற்றும் செயல் நிலைகளைக் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். மக்களுக்குச் சொல்லப்படும் தகவல்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் சென்றடைவதில்லை. இவை வதந்திகளுக்கும் தேவையற்ற பதற்றங்களுக்கும் வழிசெய்கின்றன. ஊடகங்கள் மக்களைப் பயமுறுத்தாவண்ணம் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்பேரில் ஒருங்கிணைந்த செய்திகளைத் தருவதற்கான ஏற்பாடுகள் இருக்கவேண்டும். தமிழகம் பலமுறை புயல் மற்றும் வெள்ளச் சேதங்களுக்கு இலக்காகியுள்ளது. நீண்ட கடற்கரையைக் கொண்ட இப்பகுதியில் நடக்கும் எந்தச் சீரழிவுகளையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இறப்போரில் பெரும்பாலும் கடலையொட்டி வாழும் ஏழை மீனவர்களே; அவர்களுக்குத்தான் எவ்வளவு துயர், வாழ்நாள் முழுவதும்!

சில சுட்டிகள்:
நிலநடுக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன?
http://www.bbc.co.uk/science/hottopics/naturaldisasters/earthquakes.shtml
சுனாமி என்றால் என்ன?
http://www.geophys.washington.edu/tsunami/general/physics/physics.html

No comments: