படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, October 21, 2004

இப்படியும் நடக்கும் திருட்டு

"...நூலொன்றைப் பழைய புத்தகக்கடையில் வாங்கி அல்லது வாய்ப்புக் கிடைத்த இடத்தில் களவாண்டு கொண்டுவந்து அந்த நூலின் ஆசிரியர் பெயரை நீக்கிவிட்டு, புதிய பெயரொன்றைப்போட்டுப் புதுநூலாக வெளியிட்டால் தமிழர்களால் கண்டுபிடிக்கமுடியுமா? நிச்சயமாக முடியாது என்னும் நம்பிக்கை சில பதிப்பகங்களுக்கு இருக்கிறது."

இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என்று சற்றே வியப்பை ஏற்படுத்திய மேலுள்ள வரிகள் இம்மாத காலச்சுவடின் கட்டுரையொன்றில் காணப்பட்டவை. மேலும், தமிழர்களின் சில தனித்தன்மைகளாகப் பின்வருவனவற்றை விவரிக்கிறார் கட்டுரையாசிரியர்:

"தமிழர்கள் வரலாற்று உணர்வு அற்றவர்கள் என்பது பெரும் உண்மை. தங்களிடம் உள்ளவற்றைக்கூடப் பாதுகாத்து வைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள். இருபதாம் நூற்றாண்டில் வெளியான தமிழ் இதழ்கள், நூல்கள் ஆகியவற்றை ஏதேனும் ஆய்வுக்காகப் பார்க்க வேண்டும் என்றால், அதற்குச் சரியான இடமுண்டா? அவ்வளவு ஏன், 2004 ஜனவரி முதல் வெளியான இதழ்களைப் பார்க்க விரும்பினால், முடியுமா? இத்தகைய ஆவணப்படுத்தும் முயற்சி தமிழர்களின் இரத்தத்திலேயே கிடையாது. அதைவிடப் பெரிய விஷயம், தமிழர்களின் மறதி. எத்தனை பெரிய பாதிப்பையும் மிக எளிதாக மறந்துவிடக்கூடியவர்கள். தமிழர்களை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். கடைசியாக, சிறிய சலுகை ஒன்றைக் கொடுத்துவிட்டால் போதும். பழையவற்றை மறந்துவிட்டுப் பல்லை இளிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழர்களின் மறதிதான் அரசியல், ஆன்மீகம், இலக்கியம் வரைக்கும் பல பேருக்கு மூலதனம்." - என்றேனும் திருந்துவோமா, தெரியவில்லை.

இவ்வாறான திருட்டுகள் பிற்காலத்திலாவது நடவாமல் தடுக்க, பதிப்புரிமை, ISBN முதலானவற்றில் நல்ல பதிப்பகத்தார் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையாதாகும்.

1 comment:

Thangamani said...

சத்தியமான வார்த்தை. அப்படி மறக்கடிக்க இன்னும் பல வார்த்தை ஜாலங்கள், கிரிக்கெட், சினிமா, கட்சி அர்சியல்....