படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, October 09, 2004

"மலைவாழ் பறவைகள்"

பறவைகளைப் பற்றிய செய்திகளில் நாட்டம் உள்ளோர் படிக்க வேண்டிய கட்டுரையொன்று செப்டம்பர்-2004 மாத உயிர்மை இதழில் வந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் மனிதன் இன்னும் முழுமையாக ஊடுருவி நாசம் செய்யாததால் ஓரளவேனும் அதன் வனப்பு தப்பிப் பிழைத்துள்ளது. இல்லையெனில் அவை மொட்டையடித்த மலைகளாகவோ அல்லது பணப்பயிர்கள் இடப்பட்ட தோட்டங்களாகவோ மாறிவிட்டிருக்கும். மனிதனைவிட மோசமான ஜந்து இவ்வுலகிலில்லை என்றே நம்புகிறேன்.

இக்கட்டுரையாளர் சு.தியடோர் பாஸ்கரன் அவர்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. முனைவர் க.ரத்னம் அவர்கள் எழுதி, மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியிட்டுள்ள "தமிழ்நாட்டுப் பறவைகள்" என்ற ஓர் அருமையான நூலிற்கு இவர் எழுதிய அணிந்துரையின் மூலமாகத்தான் முதல் அறிமுகம். அதுவரை பெயரை மட்டும் எங்கோ கேட்ட மாதிரி நினைவு, அவ்வளவே. "மலைவாழ் பறவைகள்" கட்டுரை வாயிலாகத் தன் பறவை பார்க்கும் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவரை எத்தனையோ அரிய பறவைகளின் காட்சிகளை அவர் கண்டிருக்கக்கூடும். அவ்வாறான காட்சிகளைப் படமாக்கித் தொகுத்து வெளியிட முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தனியாளாக இம்முயற்சியைச் செய்வதென்பது அவ்வளவு சுலபமானதாகத் தோன்றவில்லை. பணம் கொழிக்கும் நம்மூர் தனியார் தொலைக்காட்சிகள் இத்தகையோர்களை மேலும் ஊக்கப்படுத்தி, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பறவைகளைப் பற்றி பிரத்யேகமான நிகழ்ச்சிகளை உண்டாக்கலாம், மனது வைத்தால்.

மெய்யப்பன் தமிழாய்வகமும் "தமிழ்நாட்டுப் பறவைகள்" நூலின் மூலம் தான் அறிமுகமாயிற்று. சமையல், சோதிடம் மற்றும் ஒன்றுக்குமாகாத சில கதைப் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் பதிப்பகங்களுகிடையில் இதுபோன்று ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யும் பதிப்பகங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதன் நிறுவனர் திரு.ச.மெய்யப்பன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இயற்கை எய்திய செய்தியைக் கேள்வியுற்றதும் வருத்தமேற்பட்டது. மேற்குறிப்பிட்ட புத்தகமே அவரது ஆர்வத்திற்குச் சான்று. "துறவிகளாலும் துறக்க இயலாத" சாதனையாளராகத் திகழ்ந்தவர் அவர். செப்டம்பர்-2004 காலச்சுவடைத் தவிர வேறு எந்த ஊடகத்திலேனும் இவரது மறைவு குறித்த செய்தி வந்ததா என்று தெரியவில்லை.

1 comment:

சுந்தரவடிவேல் said...

அது ஒரு அழகான கட்டுரை. சுட்டிக்கு நன்றி. அங்கு திரிய வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது.

By: சுந்தரவடிவேல்