படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, August 21, 2004

2050-ல்

2050ல் இந்தியா, மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி நிற்கும் என்பது ஒரு விதத்தில் கவலையளிக்கும் 'முன்னேற்றச்' செய்தியாகவே இருக்கிறது. இன்னும் 46 ஆண்டுகளுக்குள், இந்திய மக்கள்தொகை மேலும் சுமார் 50 சதவீதம் பெருகும் என்று கணக்கிட்டுள்ளனர். இதே சமயத்தில் தற்போதைய 'முதல்வனான' சீனாவில் சுமார் 10 சதவீதம் மட்டுமே அதிகரிக்குமாம்! கணக்கீட்டின்படி இந்தியத் திருக்கண்டத்தில் அவ்வாண்டில் 1,628 மில்லியன் மக்கள் (162.8 கோடிகள்) இருப்பார்கள்! (எலி, கொசு, கரப்பான்களின் எண்ணிக்கை ஒரு நாள் பின்தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)

மாநில/மத்திய அரசாங்கங்கள் இது விஷயத்தில் விரைவாகச் செயல்பட்டு மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினால் நல்லது. தென்னாட்டில் கடந்த ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்ட குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள், அதிக முனைப்புடன் தொடரப்படவேண்டும்.

நினைத்துப் பார்த்தால் மக்கள் தொகையால் ஏற்படும் நன்மைகளைவிட பாதகங்களே அதிகமாகத் தெரிகிறது. இவையெல்லாம் இப்போதும் உள்ளவைதான்; இருந்தாலும் இதன் அளவு அதிக அளவில் இருக்கப்போவதால் நிலைமை கொஞ்சம், கொஞ்சமென்ன நிறையவே கஷ்டம்தான்!

* மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இளவயதினராக இருக்கப் போவதால் அது உருப்படியாக உபயோகப்படவோ (மனித வளம்) அல்லது பெருந்தலைவலியாக (வேலைவாய்ப்பின்மை, வறுமை...) மாறுவதற்கோ வாய்ப்புண்டு.
* போக்குவரத்து வாகனங்கள் பெருமளவிற்கு அதிகரிக்கும்.
* சுற்றுச் சூழல், கேட்கவே வேண்டாம்.
* எல்லோருக்கும் ஒழுங்காகத் தண்ணீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கும்.
* எங்குபார்த்தாலும் மக்கள் நெரிசலாக இருக்கப்போவதால் (இப்போதுள்ளதைக் காட்டிலும் பல மடங்கு), ஏதேனும் விபத்து/அசம்பாவிதம் நேரிடின் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்.
* நாட்டின் பாதுகாப்புச் செலவுகள் பலமடங்கு அதிகரிக்கும்.
* நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு மேலும் அதிகரிக்கும்.
* வறுமை, போதாமை போன்றவற்றால் குற்றங்கள் அதிகப்படியாக நடக்கலாம்.
* வனவளம் தொடர்ந்து அழிக்கப்படும்.
* எங்கும், எதற்கும் போட்டிதான்.
* இன்னும் சாதி, மதம், அரசியல் என்று எத்தனையோ பிரச்சனைகள்.....

'பாஸிட்டிவாவே திங்க் பண்ண.....' என்று 'தமிழ் மனசாட்சி' ஏதோ கேட்க வருகிறது; முடியலயேப்பா!

No comments: