படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, September 26, 2004

இந்தியாவும் ஐநா பாதுகாப்புக் குழுவும்

சமீப காலங்களில் ஐநா பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடம்பெறக் கோரி இந்தியா முயற்சித்துக்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. எதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளத் தலைப்பட்டபோது தெரிந்து கொண்ட விஷயங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஐந்து நிரந்தர உறுப்பினர்களை அடங்கிய ஐநா பாதுகாப்புக் குழு, உலகைச் சரியான வகையில் பிரநிதித்துவப்படுத்தவில்லை என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து. ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதன் மூலம், அது ஜனநாயகத்துவம் மிக்க, அதிக பிரதிநிதித்துவம் கொண்ட, மேலும் வலுவான அமைப்பாக விளங்கும் என்கிறார்கள். அதற்காகக் கூறப்படும் காரணங்களில் சில:

இந்தியா ஒரு பில்லியனுக்கும் (நூறு கோடி) அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது (உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இது ஆறில் ஒரு பகுதி).
உலகின் மிகப்பெரிய, நிலையான, இயங்கும் ஜனநாயக நாடாக விளங்குகிறது.
வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
அளவில் பெரியதும், நுட்பியல் வல்லமையும் பெற்ற பலமான இராணுவத்தைக் கொண்டுள்ளது.
உலகின் ஆபத்தான சில பகுதிகளில் ஏற்கனவே இந்திய இராணுவம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

ஐநா பாதுகாப்புக் குழுவானது ஐந்து நிரந்தர (அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா), பத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஆயுள் இரண்டாண்டு காலம்; ஒரு வருட இடைவெளியை அடுத்து மீண்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு. இந்தியாவும் சில முறை தேர்ந்தெடுக்கப்பட்டதுண்டு.

ஐநாவின் மற்ற அமைப்புகளெல்லாம் அரசாங்கங்களுக்கு பரிந்துரைகளையே வழங்க இயலும், ஆனால் பாதுகாப்புக் குழுவிற்கு மட்டுமே உள்ள அதிகாரத்தின்படி உறுப்பு நாடுகள் அதன் முடிவுகளைக் கண்டிப்பாக செயல்படுத்தியாக வேண்டும். பாதுகாப்புக் குழுவின் முடிவுகளை ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்த ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஐநா பாதுகாப்புக் குழுவின் செயல்பாடுகளும் அதிகாரங்களும்

ஐநாவின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கிணங்க உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல்;
பன்னாட்டு நெருக்கடியைத் தோற்றுவிக்க வழிகோலும் பிரச்சனைகள் அல்லது சூழ்நிலைகளை ஆராய்தல்;
அவ்வாறான பிரச்சனைகளுக்கு ஒத்துப் போகும் அல்லது தீர்க்கும் வழிகளைப் பரிந்துரைத்தல்;
ஆயுதங்களை ஒழுங்கமைக்கும் அமைப்பை உருவாக்கத் திட்டங்களை வரைதல்;
அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஓர் அச்சுறுத்தல் அல்லது படையெடுப்பைக் கண்டறிந்து அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாமெனப் பரிந்துரைத்தல்;
படையெடுப்பு நடவாதிருக்க அல்லது தடுக்கும் பொருட்டு பொருளாதாரத் தடைகள் மற்றும் இதர நடவடிக்கைகளை எடுக்க மற்ற உறுப்பினர்களை அழைத்தல்;
படையெடுப்பாளரின் மீது இராணுவ நடவடிக்கையெடுத்தல்;
புதிய உறுப்பினர்களின் சேர்க்கையைப் பரிந்துரைத்தல்;
பொதுச் செயலாளரை நியமிக்க ஐநா பொதுச்சபைக்குப் பரிந்துரைத்தல், பொதுச்சபையுடன் சேர்ந்து பன்னாட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தல்.

இங்கிலாந்து பிரதமர் இந்தியாவிற்கான ஆதரவை சென்ற வாரத்தில் மறுஉறுதி செய்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா, பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்காவும், சீனாவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா ஆதரவு தெரிவித்தால் இந்தியாவின் இடம் உறுதியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவைத் தவிர ஜப்பான், ஜெர்மனி, (பிரேசில், தென்ஆப்பிரிக்கா?) ஆகிய நாடுகளும் நிரந்த உறுப்பினராகக் கோரியுள்ளனர்.

தொடுப்புகள் சில:

ஐநா பாதுகாப்புக் குழு

ஐநா பொதுச்சபை
http://www.meadev.nic.in/opn/2000may/27hin.htm

No comments: