படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, January 26, 2005

எப்படி சுகம்? - பரோபகாரி - சைவம்

அதுவோர் ஈரடுக்கு ரயில் வண்டி ('புகைவண்டி', 'புகையிரதம்[ஈழத்தில்]', 'தொடர்வண்டி', 'ரயில்', 'ட்ரெயின்' - ஒரு வண்டியைக் குறிக்கத்தான் எத்தனை சொற்கள்!!; இதற்கு 'இருவுள்' என்ற நல்லதொரு தமிழ்ச் சொல்லை இராம.கி. கையாள்கிறார்). சென்றவாரக் கடைசியில், வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது குழந்தை-வண்டியை ரயில் பெட்டியின் வாயிலுக்கு அருகில் நிறுத்திவிட்டு, செல்லும் தொலைவு ஒரு சில நிமிடங்களே என்பதால் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம். மேலடுக்கிலிருந்து பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து எங்களிடம் சோதனையை முடித்துவிட்டு கீழ்த்தளத்திலிருக்கும் சக பரிசோதகர் வருவதற்காக காத்திருந்தார். கீழ்தளத்தில் சோதனையை முடித்துக்கொண்டு சர்ரெனப் படிக்கட்டில் ஏறி வேகமாக வந்தவர் எங்களைப் பார்த்தும்,

"வணக்கம்!"
"எப்படி சுகம்?"
"நன்றி!"

என்று வரிசையாகச் சொல்லி ஆச்சரியப்படுத்திவிட்டு, எங்களின் பதிலைக் காதில் வாங்கியவாறே புன்முறுவலுடன் அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். தமிழ், தமிழர் என்று அயல்நாடுகளில் இன்று பரவலாக அறியப்படுகிறதென்றால் அதற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே முக்கியமான காரணம் என நம்புகிறேன்.
----------

philanthropist = பரோபகாரி என்கிறது கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி.
பரோபகாரி = one who is willing to help others, தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர் (க்ரியாவின் தற்காலத் தமிழகராதி)
பரோபகாரம் = பிறர்க்குதவி (கழகத் தமிழகராதி)

ஆங்கில விக்கிபீடியாவின் விளக்கம்: "A philanthropist is someone who devotes her or his time, money, or effort towards helping others. The label is most often applied to someone who gives large amounts to charity."

ஒன்னுமில்லீங்க, நம்ம பில்கேட்ஸ் உலகத்தின் முன்வரிசைப் பரோபகாரிங்களாம். சரி, இதுக்கு நம்ம அகராதிகள்ளாம் என்ன சொல்லுதுன்னு பாத்தப்பக் கெடச்சதுதாங்க மேல இருக்கறதெல்லாம்.
----------

மாமிசம் அல்லாத உணவிற்கு 'சைவம்' என்ற சொல்லை எப்படிப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்களென்பது வியப்பாக உள்ளது. இதைக்கொண்டு புலால் உணவை 'அசைவம்' என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள். சமயத்தின் (சைவம், வைணவம் போன்ற) பெயரிலிருந்து வந்ததா இது? அப்படியானால் சைவ சமயத்தைப் பின்பற்றியோர் புலால் உணவை மறுத்தவர்களா? "இந்தக் குழம்பில் கறி சேர்க்கப்பட்டுள்ளதா?" எனக் கேட்டால் "இல்லை, இது மரக்கறி" என்றே சொல்வார் எங்கள் அலுவலகத்திலுள்ள உணவகத்தின் ஊழியர், ஈழத்துக்காரர். இதை நினைக்கத் தூண்டிய தகவல்.

No comments: