படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, November 22, 2005

எம்.எம்.எஸ்-ஸில் பயணச் சீட்டு!

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பயணச் சீட்டுகளை எம்.எம்.எஸ் மூலமாகப் பெறும் வசதியினை ஸ்விஸ் ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் முதலில் ஒருமுறை தங்களது எம்.எம்.எஸ் கொண்ட செல்பேசி, செல்லுபடியாகும் கடனட்டை போன்ற விவரங்களை ரயில் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எந்நேரமும் இயங்கும் தொலைபேசி எண்ணிற்கு (இதற்குத் தனிக் கட்டணம் என்பது வேறு) அழைத்துச் சொன்னால் வேண்டிய பயணச் சீட்டு செல்பேசிக்கு எம்.எம்.எஸ் செய்தியாக அனுப்பப்பட்டுவிடும். அதில் வரும் இருபரிமாண பட்டைக் கோட்டை(2D-barcode), பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் தங்களிடமுள்ள விசேட உணரி மூலம் சரிபார்த்துக் கொள்வர். பயணச் சீட்டிற்கான தொகை கடனட்டை மூலம் வசூலித்துக் கொள்ளப்படும். ஆரம்ப கட்டமாக 780 ரயில் இணைப்புகளுக்கு இவ்வசதி வழங்கப்படும் என்கிறார்கள். நவீனத் தொலை நுட்பியலைக் கொண்டு மற்றுமொரு சேவை!

[எம்.எம்.எஸ் - செல்பேசிகளின் வழியாகப் பல்லூடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நுட்பியல். இதன் மூலமாக உரைச் செய்தி, படங்கள், ஒலி, ஒளி முதலானவைகளை அதனை ஆதரிக்கும் செல்பேசிகளில் அனுப்பவும் பெறவும் முடியும்.]

ரிப்பன் கட்டிடம்

கட்டிடம் மட்டும்தான் பார்க்க நன்றாக உள்ளது. மற்றவை பரிதாபம்!

Sunday, November 20, 2005

ஊழலை மறைக்கப்போகும் சட்டமா?

பின்வரும் செய்திக்கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் வந்துள்ளது:

பல பொதுத்துறை நிறுவனங்களின் பித்தலாட்டங்களை புட்டுபுட்டு வைத்து, பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் முகங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிய, தணிக்கைத் துறை அதிகாரிகள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் வேலைக்கே வேட்டு வைக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது என்பதுதான் காரணம்.

‘இனிமேல் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் தணிக்கையை தனியார்கள் மூலமே முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வரவிருக்கும் சட்டம்.

‘‘ஊழலுக்குத் துணைபோகும் இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. இது நிறைவேறினால் மத்திய & மாநில அரசுகளில் நடைபெறும் ஊழல்கள் இனி வெளியே தெரியாமலே போய் விடும். இப்படியரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து ஊழலுக்குத் துணைபோகத் துடிக்கும் இந்த ஆட்சியை பதவியிலிருந்து இறக்கு வோம்...’’ என்று அதிரடி முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி.யும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ரூப்சந்த் பால். இவர்தான் மத்திய & மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார்.

ரூப்சந்த் பால் தலைமையில் அணிதிரண்டிருக்கும் தணிக்கைத் துறை அதிகாரிகள், வரவிருக்கும் புதிய சட்டத்தினால் ஏற்படும் கேடுகளை பொது மக்களுக்கு விளக்கும் வேலையில் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். அந்த சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ‘அகில இந்திய வணிக தணிக்கை அதிகாரிகள் சங்க’த்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். நம்மிடம் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் ஆக்ரோஷமாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே...

‘‘இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாக 1,230 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தணிக்கை செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாடு முழுவதும் 900 தணிக்கை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். இவ்வளவு அதிகமாகப் பணம் புழங்கும் இடத்தில் அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள்தான் தணிக்கை செய்ய வேண்டும். ‘இந்த அதிகாரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ கட்டுப்படுத்தக் கூடாது. அது சுதந்திரமான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் தணிக்கை முறை, வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதாக இருக்கும்’ என அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் கம்பெனி சட்டத்தின் 619 பிரிவை ஏற்படுத்தினார்.

இப்போது இந்த சட்டத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பதிலாக புதிய கம்பெனி சட்டத்தை அறிவிக்கப்போகிறது. இந்த புதிய சட்டப்படி பார்த்தால் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் எந்த ஒரு தனியார் தணிக்கை நிறுவனத்தையும் தங்கள் கணக்குகளை சரிபார்க்க அமர்த்திக் கொள்ளலாம். இதன்மூலம் இதுவரை இந்திய மக்களின் பிரதிநிதிகளாக பொருளாதாரத்தின் கண்காணிப்பாளர்களாக வலம்வந்த நாங்கள், வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் வெளியில் தெரியாமலே போய்விடும்.

இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களையெல்லாம் கண்டுபிடித்தது எங்கள் கண்கள்தான். சுர்ஹித் லாட்டரி ஊழல், பீகாரைக் கலக்கிக் கொண்டிருக்கும் மாட்டுத் தீவன ஊழல், போஃபர்ஸ் ஊழல், யூரியா ஊழல், பழைய வீராணம் ஊழல், டான்ஸி நில விற்பனை முறைகேடு, கலர் டி.வி. ஊழல் என எல்லாவற்றையும் கண்டுபிடித்தது நாங்கள்தான்.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும். சரியாகச் சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

தனியார் தணிக்கை முறையில் என்னென்ன முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம். அண்மையில் மூடப்பட்ட ‘குளோபல் டிரஸ்ட் வங்கி’ தான் அதற்கு சரியான உதாரணம். இந்த வங்கியின் 2003-04ம் ஆண்டுக்கான தணிக்கையை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த வங்கியாக, பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் வங்கியாக குளோபல் டிரஸ்ட் வங்கியை வர்ணித்திருந்தது. ஆனால், அடுத்த வருடத்திலேயே வங்கியின் நிதி நிலைமை படுபாதாளத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் அரசியல்வாதிகளின் துணையோடு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகள் இனி சுலபமாக வாங்கி விட முடியும். எப்படியென்றால் தனியார் முதலாளிகள் கண் வைக்கும் பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தணிக்கை செய்து அதையே காரணமாகக் காட்டி நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராக இருக்கும். இடதுசாரிகள் எவ்வளவுதான் கத்தினாலும் விற்கத் துணிபவர்கள் தணிக்கை அறிக்கையை காரணம் காட்டிப் பேசுவார்கள் என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்கள்.

பிறகு, எல்லாம் போகட்டும், எங்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிபோட முடியவில்லை என்பதுதான். இதன் அர்த்தம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நேர்மையற்ற முறையில் குறுக்கு வழிகளை மட்டுமே கடைப்பிடித்து தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும். இதற்காக முறை கேடாக செலவிடப்படும் தொகைக்கு கணக்கு வழக்கு இருக்காது. காரணம் அவையெல்லாம் தனியார் பணம். ஆனால், இந்திய பிரஜைகளின் வரிப்பணம் சம்பந்தப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அப்படியொரு குறுக்கு வழிகளில் பயணம் செய்ய எங்கள் தணிக்கைத்துறை அனுமதிக்காது. காரணம் இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டின் இமேஜும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறோம்... ஈரானி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி கொடுத்த பரிந்துரையின்படிதான் மத்திய அரசு இப்படியரு முடிவு எடுப்பதாக அறிவிக்கிறார்கள். ஈரானி என்பவர் யார் என்றால் மத்திய அரசுக்குச் சொந்தமான வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முறைகேடாக வாங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர் என்று எங்களால் விமரிசிக்கப்பட்டவர்.

உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்பதை பொதுமக்கள்தான் யோசிக்க வேண்டும்’’ என்று கொதித்து முடித்தார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பவர் மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன். இவர் ‘பொதுத்துறை நிறுவனங்களின் நாடாளுமன்ற கமிட்டி’ யின் தலைவராகவும் இருந்தவர். ‘‘ஒட்டு மொத்த இந்தியர்களும் வரவிருக்கும் மோசமான ஒரு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய புனிதப் பணியை செய்ய வேண்டிய வேளை இது’’ என்று தனது பிரசாரத்தைத் துவக்கி இருக்கிறார் செழியன்.

Wednesday, November 16, 2005

2006 உலகக் கோப்பை கால்பந்தில் ஸ்விஸ்

போன வார சனிக்கிழமை ராத்திரி சுமார் 8.30 மணி வாக்குல சும்மா ஒரே ஒரு விநாடிக்கு ஓர் அதிர்வு. முந்தின வருஷமும் ஒரு தடவ ராத்திரியில லேசா வீடே ஆடுச்சு, இந்தத் தடவை அவ்வளவுக்காத் தெரியல. இப்பெல்லாம் அடிக்கடி பூமிக்கடியில ஏதோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த ஆட்டம் முடிஞ்ச பின்னால அன்னைக்கு பெர்ன்-ல நடந்த ஸ்விஸ்-துருக்கி கால்பந்தாட்டத்தை தொ.காவுல பார்த்து முடிச்சப்போ, முதல் ஆட்டத்தைப் பத்தின பயம் கொஞ்சம் மறந்து போயிருந்தது. ஸ்விஸ் ஆளுக நல்லாவே ஆடி ஜெயிச்சிருந்தாங்க. அரங்கத்துல ஒரே கொண்டாட்டமா இருந்தது. அங்கயும் நிலம் ஆடுச்சான்னு தெரியல, இவங்க ஆட்டத்துல ஒரு வேள நிலம் அடங்கியிருந்துச்சோ என்னவோ! :)

அன்னைக்கு ஆடுனது முக்கியமானதுன்னாலும், இன்னைக்கு நடந்த போட்டிதான் இந்த ரெண்டு பேர்ல யாருக்கு அடுத்த வருஷம் ஜெர்மனியில போய் ஆடுற வாய்ப்பு இருக்குங்கறதத் தீர்மானிக்கறது. வழக்கமா போட்டி ஆரம்பிக்கற நேரத்துல தொ.காவப் போட்டுக்கலான்னு விட்டுட்டு அப்புறம் வந்து போட்டா, ஒரு மணி நேரம் ஆட்டமே முடிஞ்சிருந்தது :( இஸ்தான்புல்லுல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாலயே ஆரம்பிச்சுட்டாங்கங்கறது அப்பத்தான் பட்டது. திரையில முதல்ல பாத்தது ஸ்கோர் பட்டிதான், பகீர்னுதான் இருந்தது (ஏற்கனவே இன்னைக்கு இந்தியா தோத்துப்போனதக் கேட்ட சோகம் வேற, அதுகூட இதுவும் சேந்துக்கிச்சு). துருக்கி 3, ஸ்விஸ் 1 - ன்னு இருந்தது. இன்னும் இருக்கற முப்பது நிமிஷத்துல ஏதாவது அதிசயம் நடக்கப் போகுதான்னு பாத்துக்கிட்டு இருக்கறப்போ, முடியறதுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னால ஸ்விஸ் அணிக்காரங்க இன்னொரு கோலைப் போட்டுட்டாங்க, அரங்கத்துல ஈ ஆடல. அப்புறம் கடைசி நிமிஷத்துல துருக்கியும் ஒன்னைப் போட்டு 4-2க்கு கொண்டு வந்துடாங்க. இருந்தாலும் அவங்களுக்கு பழைய பந்தயங்களோட கணக்குப்படி இந்தப் போட்டில 3-0 ன்னு ஜெயிச்சாத்தான் மேல போகமுடியும். ஆனா தோத்தாலும் (ஆனா இவ்வளவு நாளா தொடர் முழுசும் நல்லாவே கஷ்டப்பட்டுத்தான்) ஸ்விஸ் பசங்க உலகக் கோப்பைல ஆடறதுக்கு முன்னேறிருக்காங்க. இந்த வாட்டி உலகக்கோப்பைல ஆடப் போறது அவங்களுக்கு எட்டாவது தடவையாம். ஜெயிக்கறாங்களோ இல்லையோ அதுக்குள்ள நுழையறதே பெரிய விஷயம்தான். வாழ்த்தறோம்!

Monday, November 14, 2005

சிறை-விவசாயி

என்னய்யா நடக்கிறது நாட்டில்?! ஆயிரம் பேர் சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தங்களுக்கு வேண்டியவர்களை 'விடுவித்துச்' செல்வதென்பதை என்னவென்று சொல்வது? தாக்குதல் திட்டங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது அதுபோன்றவைகளைக் காட்டும் சினிமாக்கள் தோற்றுவிடவேண்டும் போலுள்ளது. உளவு அமைப்புகள் என்பதே அங்கு இல்லையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா? பிகார் போன்ற சில மாநிலங்களில் மக்களை வளரவிடாமல் தடுக்கும் சமூக நோய் ஆழப் பரவியுள்ளது. அவைகளுக்குத் தீர்வு காணும் வரையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டேதானிருக்கும்.

திறந்து கிடந்த சிறைக்குள்ளிருந்து தப்பிச் செல்ல விரும்பாமல் அங்கேயே சிலரும், தாக்குதலின் போது உயிர் பிழைக்கத் தப்பி விட்டு மீண்டும் சிறைக்கே வந்தோரும் இருக்கிறார்களாம். இதை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

-----------

ஒரு விவசாயிதான் விவசாய நிலத்தை வாங்க வேண்டுமென்று மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமுள்ளதாம், இன்றுதான் கேள்விப்படுகிறேன். "அமிதாப்பச்சன், நீங்கள் நடிகரா, விவசாயியா? முதலில் தெளிவுபடுத்துங்கள்". பாவம் அமிதாப், இப்படியெல்லாம் கஷ்டமான கேள்வியைக் கேட்கலாமா? ஒருவர் தான் செய்யும் தொழிலை நிரூபிக்கச் சான்றிதழைக் கூடப் பெறலாமோ! ஒன்னும் தெரியமாட்டேங்குது போங்க :(

Tuesday, November 08, 2005

வெண் பாஸ்பரஸ்

தானாக எரியக்கூடிய வேதிப் பொருள் - போர்களங்களில் ஒளியை ஏற்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும்.
உடம்பில் பட்டால் தோலும் சதையும் எரிந்து விடும்.
இப்படிப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்ட ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தம் உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் பெரியண்ணன் கையெழுத்திடவில்லை.

ஆகவே, அதை உபயோகப்படுத்தாமல் விடுவானேன். யார் எரிந்தாலென்ன, செத்தாலென்ன, யார் கேட்பது? முடிந்த வரை அழித்து விட்டு, அழித்ததற்கான தடயங்களையும் அழித்துவிட்டால் அப்புறம் அழிவைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/4417024.stm

Sunday, October 09, 2005

துயரங்களும் அவலங்களும்

இமாலயப் பகுதியில் நடந்த நிலநடுக்கம் மக்களை அளவிட முடியாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஜீவன்களைக் காணும்போது மனம் பதைக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீட்புதவி சென்றடைவதற்குள் இழப்புகள் இன்னும் அதிகமாகக் கூடும். வெறும் கையால் எவ்வளவு செய்துவிட முடியும் அவர்களால்? அமுங்கிய பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்து ஓலக்குரல் கேட்பதாகச் சொன்னார்கள், மிகவும் வருத்தமாயிருந்தது.

க்வடமாலா, எல்சல்வடார் முதலான மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றிரண்டு நாட்களாகப் பெய்துவரும் பேய்மழையில் ஒரு கிராமமே நிலச்சரிவில் புதைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆற்று வெள்ளத்தின் சீற்றத்தைப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கொடுமையாக உள்ளது.

சமீப காலங்களில் நடக்கும் இயற்கையின் சீற்றங்களைப் பார்க்கும்போது உலக நாடுகள் அனைத்தும் மீட்புதவி மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் தயாராக வைத்திருக்க வேண்டும் போலுள்ளது.

பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கிவிட்டது போலுள்ளது. இம்முறை ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில். சகட்டு மேனிக்கு கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் போன்றவற்றைப் பெரிய குழிகள் தோண்டி உயிருடனோ, பாதிகொன்றோ அதற்குள் போட்டுத் தீமூட்டிச் சாகடித்துக் கொண்டுள்ளனர். சைபீரியாவிலிருந்து மேற்கு நோக்கிப் பறக்கும் பறவைகளால் அமெரிக்கக் கண்டத்தில்கூடப் பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

மொராக்கோ வழியாக ஸ்பெயின் நாட்டுச் சார்ந்த பகுதிக்குள் நுழைய முற்பட்டு இயலாமற்போனவர்களை, மொராக்கியக் காவலர்கள் பேருந்துகளில் அள்ளிச் சென்று பாலைவனத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போய்விட்டுக் கொண்டுள்ளார்களாம். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, எங்காவது ஏதாவது வேலை பெற்றுவிடும் நோக்கோடு, கடல் வழியாக உயிரைப் பணயமாக வைத்துப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகளுக்கு வர சதா முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு அது எட்டாக் கனியாகவே போய்விடுகிறது. எல்லாவற்றையும் தாண்டி வந்து ஐரோப்பிய நாட்டுக் காவலர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் வந்த நாட்டிற்கே ஏற்றிவிடப்படுபவர்கள் ஏராளம்.

ஓரிரு நாட்களாகச் செய்திகளில் அதிகம் தென்படுபவை இவைதான். ம்...

Thursday, September 29, 2005

தோற்ற மயக்கங்களோ?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com
நடுவுல இருக்கற தூணப் பாருங்க!

Image hosted by Photobucket.com
இந்தப் படத்துல நெறைய முகங்கள் இருக்குங்க. 4-5 முகங்களப் பாக்கறவங்க சாதாரணவங்களாம். அப்படியே 8, 9-ன்னு ஒவ்வொன்னுக்கும் ஒன்னைச் சொல்றாங்க. அத்தனையையும் பாத்திருக்கறவங்க அதிஉன்னிப்பா கவனிப்பவராம். எத்தனைன்னு கேக்கறீங்களா? இன்னொரு தடவை எண்ணிப்பாத்துக்குங்க. எண்ணிட்டீங்களா? ஒரு டசனுக்கு ஒன்னு கம்மியா இருந்ததுங்களா?

தலைப்பு உபயம்: முண்டாசுக்கவி

Tuesday, September 27, 2005

பட்டாம்பூச்சி

பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
நல்ல நல்ல கதைகள் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
வண்ண வண்ண படங்கள் பேசும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
அறிவை வளர்க்க அன்பாய் உதவும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பாட்டு சொல்லி பாடச் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
புதுமை உலகம் இனிமை உலகம்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி....

என்ற இனிமையான பாடலுடன் கோயம்புத்தூரிலிருந்து 'தமிழில் முதன்முறையாக' பட்டாம்பூச்சி என்ற பெயரில் 'சிறுவர்களுக்கான சி.டி.மாத இதழ்' ஒன்று சென்ற ஆண்டில் (அல்லது அதற்கு முந்தைய ஆண்டில்) ஆரம்பிக்கப்பட்டது. வெளிவந்த சில மாதங்களிலேயே நின்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாங்குவோரின்மையாலா இல்லை வேறேதும் காரணமா என்று தெரியவில்லை. தமிழுலகில் இதுபோன்று ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் விடப்படும் முயற்சிகள் ஒன்றிரண்டல்ல. இருந்தாலும் நல்ல முயற்சி ஒன்று தொடர்ந்திருக்கலாம்.

பட்டாம்பூச்சி இதழ் 2-ல், கிராமத்துப் பாட்டி குழந்தைகளுக்கு குட்டிக் கதை ஒன்றைச் சொல்கிறார். அக்கதையில் மீனிடம் அகப்பட்ட 'நெலப்புழு' (மண்புழு அ நிலப்புழு), மீன்களைப் பார்த்து இவ்வாறு சொல்கிறதாம்:

வாரீர் வாரீர் என்னாலே
வந்து நிற்கிறீர் முன்னாலே
சாகப் போகிறே என்னாலே
செத்துக் கிடக்கிறேன் உன்னாலே

Sunday, September 25, 2005

நின்னைச் சரணடைந்தேன்!

எங்கோ தூரத்தில் மெதுவாக ஒலிப்பது போன்று அடுத்த அறையில் ஒலிக்கவிடப்பட்டிருந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமித்துக் கொண்டது. தாக்கியது கவியா? பாடலா? இசையா? இல்லை அனைத்தும் சேர்ந்தா?

பாடலைக் கேட்க...


நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

5.
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

[நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்]

Monday, September 19, 2005

செம்மறியாட்டு உரோமம்

ஜூரிக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத் தூரத்திலே (ரயிலில்) இருக்கும் ஜெர்மனிக்குச் செல்ல கொஞ்சம் மெனக்கெடவேண்டியுள்ளது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிற்காவது விசா இல்லாமல் போக முடியுமா என்று தெரியவில்லை. விசா வாங்குவதற்கு ஒரு நாள் வேலையைக் கெடுத்துக் கொண்டு பெர்ன் நகருக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவும் சும்மா நினைத்த போதெல்லாம் சென்றுவிட முடியாது. பிரத்யேகத் தொலைபேசி எண் ஒன்றிக்கு அழைத்து நேரம் வாங்க வேண்டும். இத்தொலைபேசியின் மறுமுனையில் பேசுபவருக்கு அவரை அழைப்பவரிடமிருந்துதான் சம்பளம் பெற்றுத் தருவார்களோ என்னவோ (சும்மா ஒரு பேச்சுக்கு), அவ்வெண்ணை அழைக்க ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட CHF 3.15 (~$2.5) ஆகுமென்றால் என்னவென்பது! அழைத்தவுடன் விரைவில் நேரம் கிடைத்து விட்டால் நன்றாக இருக்குமா? அதனால் அழைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் நேரத்தைக் கொடுப்பார்கள்!

சென்ற ஜூன் மாதம் ஒருநாள் அதே தூதரகத்திற்குச் சென்றிருந்தபோது உப்புப் பெறாத காரணத்திற்காக விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். என்னுடைய கவனக் குறைவால் அவர்கள் கேட்ட ஒரு கடிதம் விண்ணப்பத்துடன் இணைக்காமல் விடுபட்டு விட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் தொலைநகல் மூலம் அக்கடிதத்தை உரியவர்களிடமிருந்து பெற்றுத் தர உறுதியளித்ததைக் காதில்கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் சாலையோரம் நின்று விண்ணப்பங்களைச் சரிபார்த்து மக்களை உள்ளே அனுப்பும் கணவான் ஒருவர். விளைவு, அடுத்த நேரம் கிடைக்கும் வரை, அதாவது மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அன்றே விசா வாங்கிக் கொண்டு மறுநாளே ஜெர்மனி போகுமளவிற்கு தலை போகும் வேலையொன்றும் இல்லைதான்; என்றாலும் விசா வாங்குவதற்கான நடைமுறைகள் சில சமயங்களில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.

அனில் அம்பானிக்கும், ஆனந்த மகிந்திராவிற்கும் ரஷ்யா விசா கொடுக்க மறுத்துவிட்டது என்ற செய்தியை நேற்றைய தினமணியில் படித்த போது, முன்பு ஏற்பட்டிருந்த தேவையற்ற உளைச்சலெல்லாம் கேலிக்குரியதாகிவிட்டது. அப்பேர்ப்பட்டவர்களுக்கே விசா மறுக்கப்படும் போது நம் போன்ற சாதாரண ஆசாமிகளெல்லாம் எம்மாத்திரம்!

சென்ற ஜூலை ஒன்றாம் தேதி கூப்பிட்டிருந்ததற்கு இன்றைக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். இம்முறை அவர்கள் கேட்டதெல்லாம் சரியாக இருக்க விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

பெர்ன் நகரில் (இங்கு எல்லா இடத்திலுமே) குளிராகவே இருந்தது, மேகமூட்டம் வேறு. தூதரகத்திலிருந்து திரும்பி வரும்போது சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் சுமாரான அளவில் இருக்கும் திறந்த வெளியில் கூட்டம் கொஞ்சம் இருப்பதைப் பார்த்து பேருந்திலிருந்து அங்கேயே இறங்கிக் கொண்டேன். வழக்கமாகக் நடக்கும் வாரச் சந்தைகளுக்குக் கொஞ்சம் மாறாகவே இருந்தது. பெரியவர்கள் அமர்ந்து சூடாகப் பருகிக் கொண்டிருந்த கூடாரம், பால் பொருட்களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வகை வகையான Cheese-களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வேலி போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளும் பன்றிகளும், உருளைக் கிழங்கை மண்பெட்டியொன்றில் போட்டு அதைத் தோண்டி எடுக்கும் சிறு போட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் சிலர், அந்தக் குளிரில் உட்கார்ந்து கொண்டு கம்பளியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் என்று பல காட்சிகள். பெர்ன் வட்டார விவசாயம், கால்நடை முதலானவை சார்ந்த தொழில்களை முன்னிருத்தும் கண்காட்சி போலிருந்தது. கேமராவையும் எடுத்துக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது.

கண்கவரும் நாட்டுப் புற உடையணிந்த இரு விவசாயிகள், செம்மறியாடு ஒன்றின் கால்களைக் கட்டி மேசையின் மீது படுக்க வைத்து முடிவழிக்கும் இயந்திரமொன்றில் சர்சர்ரென வழித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் காண மக்களுக்கு ஒரு காட்சியானது அது. கொஞ்ச நேரத்தில் முடி அனைத்தையும் இழந்து வெறும் தோலுடன் மற்ற ஆடுகளுக்கு மத்தியில் போய் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு குளிரில் அதற்குக் குளிராதா என்ற கேள்வி மனதை ஆக்கிரமித்தது. அங்கிருந்தவரிடம் மெல்ல விசாரிக்க, ஒவ்வொரு வருடமும் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் செம்மறியாடுகளின் உரோமம் வழிக்கப்படவேண்டும்; இல்லையென்றால் அவை நோய்த்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கமளித்தார். அப்படியும்கூட இருக்கிறாதா என்று ஆச்சரியத்துடன் இடத்தைக் காலிசெய்து கொண்டு வந்தேன். செம்மறியாட்டு உரோமத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வழிசெய்த தூதரகத்தாருக்கு நன்றி!

Monday, September 12, 2005

தீவிரவாதிகளும் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?

அசோசியேட்டட் பிரஸ்ஸை ஆதாரம் காட்டி உள்ளூர்ப் பத்திரிக்கையொன்று இன்று போட்டிருந்த தலைப்புச் செய்தி சற்று திக்கென்றுதான் இருந்தது. அதன்படி (அதை நான் புரிந்துகொண்டவரையில்), அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது குடிமக்கள் மீது எந்த ஒரு நாடோ, பயங்கரவாதக் குழுக்களோ பேரழிவு ஆயுதங்களைக் (WMD) கொண்டு தாக்கத் திட்டமிட்டால், அவற்றை 'வருமுன் காக்கும்' பொருட்டு எதிர்காலத்தில் அந்நாடு/குழுக்களின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது எனப் பென்டகன் திட்டமிடுவதாகச் சொல்கிறது. கூடவே, பதுங்கு குழிகளை அழித்தெறியவும் ஓர் அணுஆயுதத்தைத் தயாரிக்கப் போகிறார்களாம். ஏற்கனவே பன்னாட்டுப் படையினரின் சில தாக்குதல்களில் கதிரியக்கத்தை உண்டுபண்ணும் வஸ்துகள் ஒளிந்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது சொல்லப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்டாகும் விளைவுகள், எதிர்விளைவுகள் எங்கு போய் முடியுமோ! கவலையாக உள்ளது. ஆயுதங்களால் உண்டாக்கப்படுவதா அமைதி? ம்...

[வேறு]
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேச்சு ஒன்றிற்கு மாநில அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்செய்தியின்படி பார்த்தால் மத்திய அமைச்சர் சென்னை உஷாராக இருப்பது நல்லது என்ற தொணியில் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஒரு மறுப்பை (அல்லது விளக்கத்தை) மாநில அமைச்சர் அறிவிக்க விரும்பினால் "தங்கள் அக்கறைக்கு நன்றி, ஏற்கனவே தமிழக அரசு அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, விவரங்களை இங்கே காணவும்" என்று சொல்லி ஒரு சுட்டியைக் கொடுத்தால் கண்ணியமாகப் போயிற்று.

அதைவிடுத்து, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வரும் 'அரைவேக்காடு', 'ஆதாரமில்லாத புத்தி', 'உளறுதல்', 'கேலிக்கூத்து' போன்ற வார்த்தைகளைக் கூறுவது அமைச்சர் பதவிக்கு நயம் சேர்ப்பதாகத் தோன்றவில்லை. அக்கருத்தை அமைச்சராகத் தெரிவித்தாரா அல்லது அவரது கட்சி உறுப்பினராகத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பின் என்ன?

மக்களும் இதுபோன்ற சொற்களைக் கேட்டு வெட்கும் நிலையை இழந்து விடத்தானே பொதுவில், அதுவும் உயர் பதவியிலுள்ளவர்களால் கூட அவை உபயோகிக்கப்படுகின்றன.

Monday, August 15, 2005

சம்பளம் எவ்வளவு?

"ஏம்பா எவ்வளவு சம்பளம் வாங்கற?" இக் கேள்விவியைக் கேட்பவர்கள் அப்பாவித்தனமாகக் கேட்கலாம்; தன் (அல்லது வேண்டப்பட்டவர்களின்) சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மனதுக்குள் நகைத்துக் கொள்ளக் கேட்கலாம் அல்லது காதில் புகை விட்டுக் கொள்வதற்குக் கேட்கலாம்; இன்னும் எத்தனையோ. ஆனால், கேட்கப்படுபவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தைக் கொடுக்கும் கேள்விதான்; அதுவும் இடம், காலமறியாமல் கேட்கப்படும் சமயத்தில். இந்தக் கேள்விக்கு எந்த மாதிரியான பதில் சொல்லப்பட்டிருக்கும் என்பதும் அவரவர்களுக்கே தெரியும்.

தினக் கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு இக்கேள்விகள் பற்றிக் கவலையில்லை - உலகத்திற்கே தெரியுமே களையெடுக்குப் போகும் மாரியம்மாவுக்கு எவ்வளவு வாங்குகிறாள் என்று! அம்பானிகளுக்கும் கவலையில்லை, அவர்களின் 'சம்பள'த்தைக் கட்டம்போட்டுப் பத்திரிக்கைகளில் காட்டிவிடுகின்றனர். மலைக்கும் மடுவுக்கும் இடையில் ஒரு பெருங்கூட்டம் இக்கவலையில் என்றும் அல்லாடிக் கொண்டே இருக்கிறது.

Monday, August 08, 2005

ஓடப்பிறந்தவர்கள்

நேற்று தொலைக்காட்சியில் கொஞ்ச நேரம் ஹெல்சிங்கியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2005ம் ஆண்டிற்கான உலக தடகளப் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது பெண்களுக்கான பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் (பந்தயத்திற்கும், போட்டிக்கும் என்ன வித்தியாசம்?). இருபது பேர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஓட ஆரம்பித்தார்கள், ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆரம்பித்ததும் ஒருவருக்குக் கால் தடுக்கிவிடவேண்டுமா என்ன? இருந்தாலும் சுதாகரித்துக் கொண்டு எழுந்து ஓடினார், அதுதான் இன்னும் பல சுற்றுகள் உள்ளனவே.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வெகுநேரம் கஷ்டப்பட்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தார் (இவரையும் சேர்த்து கேமராவின் கண்களுக்கு பெரும்பாலும் ஏனோ குறிப்பிட்ட பெண்களே அகப்பட்டார்கள், தோலின் நிறத்தாலோ?!). அவரை ஒட்டியே பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. சராசரியாக ஒரு கி.மீட்டரை மூன்று சொச்சம் நிமிடங்களில் முடித்து விட்டிருந்தனர்! நேரம் ஆக ஆக அவரை மற்றவர்கள் தாண்டிச் செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக ஒரே சீருடையணிந்த மூன்று பெண்கள். 9600 மீட்டர்கள் ஓடிக் களைத்த பின்பும் கடைசிச் சுற்றுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ, ஓட்ட வேகத்தை முடுக்கினார்கள் பாருங்கள் அம்மூன்று பெண்களும்! கடைசியில் போட்டி அவர்களுக்கிடையில்தான், ஒரே நாட்டிற்கு மூன்று பதக்கங்களையும் அள்ளிச் சென்றார்கள்.

நிச்சயமாக எத்தியோப்பியர்கள் ஓடப் பிறந்தவர்கள்! சமீப காலங்களில் நான் கவனித்தவரை நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களில் ஆண், பெண் இரண்டு பிரிவுகளிலும் பதக்கங்களை அள்ளிக் குவிக்கிறார்கள். (Haile Gebrselassie தன் சிரிப்பு நிறைந்த முகத்தாலும், கடினமாக ஓடித் தொடர்ந்து பெற்ற பல வெற்றிகளாலும் நிறைய பேருக்குப் பரிச்சயமானவர்.)
2005 தடகளப் போட்டிகளின் இன்றைய பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளார்கள் (சுட்டியிலுள்ள பக்கம் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் என்பதை நினைவிற் கொள்க). பஞ்சம், பசி, பட்டினி என்றே அறியப்பட்ட ஒரு நாட்டின் முகத்தை உலகிற்கு வேறுவகையில் உயர்த்திக் காட்டும் இவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

பொதுவாக, தற்போது எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நிறைய விளையாட்டுப் போட்டிகளில், குறிப்பாகத் தடகளம், ஆப்பிரிக்க வம்சாவளியினர் தனிப்பெரும் இடத்தை வகிக்கின்றனர் என்றே நினைக்கிறேன்.

Sunday, July 31, 2005

சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு

இந்தியாவில் சில்லரை விற்பனையில் (retail business) பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதிக்கும் யோசனை அரசின் பரிசீலனையில் உள்ளதை செய்திகளில் அடிக்கடி காண்கிறோம். ஆரம்ப கட்டத்தில் பல கட்டுப்பாடுகளுடன் (10,000 சதுர அடித் தளம், ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு கடை போன்றவை) மாறுகடையை (market) இவர்களுக்குத் திறந்து விடப்பட்டாலும், காலப்போக்கில் இவ்விதிமுறைகள் தளர்த்தப்படும் அல்லது காற்றில் விடப்படும். இப்படியொரு மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தால் வழக்கம்போல நமது 'மாண்புமிகு' உறுப்பினர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு நிறைவேற்றி விடுவார்கள். அப்புறம் நடைமுறைக்கு வந்தபின்தான் அதிலுள்ள சிக்கல்கள் தெரிந்து 'போராட' ஆரம்பிப்பார்கள் ('போட்டா' சட்டம் ஓர் உதாரணம்).

சில்லரைப் பெரு வியாபாரத்தில் ஈடுபடுள்ள உள்நாட்டு ஜாம்பவான்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறதென்பதைப் பார்க்கவேண்டும். மாறுகடையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படும் பட்சத்தில் ஏதோ சில நன்மைகள் இருந்தாலும், பலதரப்பு மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது எனது பொத்தாம்பொதுவான எண்ணம்.

Thursday, July 21, 2005

BMW-ம் வந்துவிட்டது!

செங்கற்பட்டில் BMW கார் தொழிற்சாலையை நிறுவவுள்ளதாகச் செய்தி. புதிய மாறுகடைகளைத் தேடிப்போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெருநிறுவனங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கின்றன. கேட்க நன்றாக இருந்தாலும், சாலை வசதி மேம்பாட்டிலும், சாலை விதிகளை மதித்துப் பின்பற்றுவதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படாத வரை எந்த புதுக் கார் வந்து என்னவாகிவிடப் போகிறது என்ற ஆதங்கமும் எழுகிறது.

வரும் நாட்களில் "BMW இங்கு வர நான்/நாங்கள் தான் காரணம்" என்று சில குரல்களைக் கேட்கலாம்! எங்கோ அடுத்த சாலையில் வரும் மளிகைக் கடைக்கும் நான் தான் காரணம் என்று சொல்லாத வரைக்கும் சரி!

Wednesday, July 20, 2005

குடமுழா

இந்த வாரத்தில் சிலமுறை தவில் இசைத் துண்டுகளை இணையத்தில் ஆங்காங்கும், இருக்கின்ற ஒலிப்பேழையொன்றிலிருந்தும் காரணமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தவில் ஓர் அருமையான இசைக்கருவி. சிறு வயதில், ஊர்விழாக்களின் போது ஒரு நபர் இதைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு அடி பின்னியெடுப்பதைக் கண்டு ஆட்டமும் போட்டுள்ளோம். திருமணம் போன்ற வீட்டு விழாக்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த தவிலுக்கு இப்பொழுதெல்லாம் சரியான மரியாதை கிடைக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. படப்பாடல் நிகழ்ச்சிகளையும், 'பேண்டு' வாத்தியங்களையும் புகுத்தி உள்ளதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்புறம், குடமுழா என்றொரு இசைக்கருவி. இதைப் பஞ்சமுக வாத்தியம் என்றும் சொல்வார்களாம். குடமுழாவைப் பற்றிய அரிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. நூல் அறிமுகக் கட்டுரைக்கான சுட்டி: http://varalaaru.com/Default.asp?articleid=162. அக்கட்டுரையில் இருக்கும் ஆடவல்லாரின் சிற்பப் படம் ஏதோ பரவசத்தை ஏற்படுத்தியது.

Sunday, July 17, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!! - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...

"இனி கூட்டிக் கழித்துப் பார்த்தால், இப்பொழுது உயிர் எழுத்துக்கள் அ,இ,உ,எ,ஒ என்று ஐந்தாகிவிட்டதல்லவா? ஆங்கிலத்தில் aeiou எனும் ஐந்து உயிரெழுத்துக்கள் ஆனதைப்போல. இவ்வாறான மாற்றங்களால் நம்மொழி அடைந்த நன்மை என்ன?

1. மொழியின் வரிவடிவம் அமைப்பின் சுருக்கம்.
2. மொழியின் வரிவடிவில் தெளிவு.
3. கற்போருக்கு (சிறுவர், பிறமொழியாளர்) இலகு.
4. நவீனத்துக்கு ஈடு.
5. பிறமொழிகளுடன் ஒப்பிட ஏது.

இவ்வாறே மெய்யெழுத்துக்களில், ண்,ந்,ன் ஆகியனவற்றையும் ல்,ழ்,ள் ஆகியனவற்றையும் ஒரே வரிவடிவில் குறிக்க முடிவது பற்றி உத்தேசித்தால் என்ன?

இவைகுறித்தெல்லாம் நான் சொல்வதிலும் பார்க்க பேரா.எம்.ஏ.நுஃமான் என்ன சொல்கின்றார் என்று அறியவைப்பது கருத்தை உங்களுக்குள் செலுத்த இலகு அல்லவா?

இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழு உலகையும் தழுவி விரிந்து நிற்கின்றது. மறு வகையில் முழு உலகமும் சுருங்கி தமிழ் கூறும் நல் உலகக்குடிமகன் ஒருவனின் தனி அறைக்குள் இன்று internet ஊடாக நுழைந்துவிட்டது. அதற்கேற்ப தமிழ்மொழியும் தன்னை விசாலப்படுத்தி தன் ஆற்றலை அகலித்துக் கொள்ள முனைகின்றது. இன்று தமிழ் பல்தேசிய மோழி என்பதனையும் பல்லினப்பண்பாட்டு மொழி என்பதனையும் நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். மொழி மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழின் ஒலி மரபும் மொழிமரபும் நெகிழ்ச்சியடைந்து புதிய தேவைகளுக்கு ஏற்ப புதிய மரபுகள் தோன்றிவிட்டன.... (பேரா எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு 19)

காலத்திற்கேற்ற கோலம் நம் தமிழ்மொழி கொள்ளாவிடில், அழிவதைத்தவிர வேறு வழிஇல்லை. ஆகும் வழியையே நாம் பார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தில் அத்தகைய மாற்றத்தை அது பெறுவதனை நாம் காண்கின்றோம். ph என்னும் வரிவடிவங்கள் f என்னும் ஒலிவடிவத்தை தந்து நிற்பதால் இப்போதெல்லாம் ph இதற்குப் பதிலாக f பயன்படுத்துகிறார்கள். இரண்டு வரிவடிவங்களுக்குப் பதிலாக ஒரு வடிவம்.

Photo - Foto

அவ்வாறே ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கக் கண்டபோது தேவையற்ற வரிவடிவங்கைள நீக்குகின்றார்கள்.

Night - Nite
Colour - Color

மேலும் ஒலி வடிவம் கருதி வரிவடிவம் சுருங்கிக் கொண்டு போவதும் ஆங்கிலத்தில் நிகழ்கின்றது. 1982 வாக்கில் தெல்லிப்பழைச் சந்தி வெள்ளவாய்க்கால் மதகில் ஒரு சுவரொட்டியைக் கண்டேன். மதில் ஆங்கிலத்தில் இவ்வாறு வாசகம் இருந்தது.

JR, UR a facist
VR not foolish
go back.
(ஜே.ஆர். என்னும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்தபோது இச்சுவரொட்டி காணப்பட்டது).

UR (you are), VR (we are) என்று வந்தவிதம் தமிழிலும் சாத்தியப்படுமெனில், நன்று, மிகநன்று.

உலக மொழிகள் யாவும் இவ்வாறு மாற்றத்தை அவாவி நிற்கின்றது. அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. புதியன புகுத்தி தமிழை நாம் வாழவைப்போம், வளர வைப்போம். செய்வோமா?"

Saturday, July 16, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!!

ஈழமுரசு ஐரோப்பா என்ற வார இதழில் அ.இரவி என்பவர் எழுதிய 'புதியன புகுதல்' என்னும் கட்டுரை நான்கு பாகங்களாக வந்துவிட்டிருக்கிறது. அதன் கடைசி பாகம் மட்டும் இந்த வாரம் வாசிக்கக் கிடைத்தது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் இன்றைய நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்வி இருந்தாலும் புதியவற்றை அறிதலும், எண்ணுதலும் நலமே. அக்கட்டுரையின் நான்காம் பாகம் பின்வருமாறு [பதிப்புரிமை பற்றி அவ்விதழில் எங்கும் காணோம்; அக்கட்டுரையை இங்கு பதிப்பதால் பதிப்புரிமைக்கு ஏதும் பங்கம் ஏற்படாதென்று நம்புகிறேன். அப்படியேதும் உண்டென அறிய வரும்பட்சத்தில் இக்கட்டுரை பதிவிலிருந்து நீக்கப்படும். இங்கு எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அது தட்டச்சின்போதும் நேர்திருக்கலாம்.] :

"தமிழில் முதல் ஒலி வடிவங்கள் அல்லது மூலஒலிவடிவங்கள் முப்பது என்று சொன்னோமே! அவற்றுள் ஸ்,ஷ்,ஹ் ஆகியன வரவில்லை என்றெல்லாம் சொன்னோமே! என்ன சொன்னோமெனில் அவ்வாறான ஒலி வடிவங்களுக்கு தமிழில் வரிவடிவங்கள் கிடையாது என்று சொன்னோம்.

என்னவென்றால் ஊரில் உலகில் இருக்கக்கூடிய எல்லா ஒலிவடிவங்களுக்கும் எல்லா மொழிகளிலும் வரிவடிவங்கள் இல்லை. அதற்கு சாத்தியமும் கிடையாது. தமிழில் ஞ், ழ் என்னும் ஒலிவடிவங்களுக்கு ஆங்கிலத்தில் வரிவடிவங்கள் இல்லை. ஞானம்-Gnanam, அதாவது ஞ் என்பதற்கு Gn என்பதையே பயன்படுத்துகின்றனர். அது முற்றிலும் பொருத்தமானது அல்ல. தமிழ்-Thamizh, இங்கு ழ் என்பதற்கு zh என்னும் ஆங்கில வரிவடிவம் பயன்படுகிறது. இதன் பொருத்தப்பாடும் கேள்விக்குரியது.

அவ்வாறே ஆங்கில F,G,H,X,Z என்று இன்னும் பல ஒலிவடிவங்களுக்கு தமிழில் வரிவடிவம் இல்லை. எப்படியோ திக்குமுக்காடி Father என்பதனை ஃபாதர் என்று எழுதிவிடுகின்றோம். இப்போது ஒன்றுக்கும் உதவாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஆய்த எழுத்துக்கு (ஃ) ஒரு சொல்லில் இடம் பெறும் குதூகலம் வாய்ந்திருக்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் இவை எவையும் மொழியின் போதாமை அல்ல. எல்லா மொழிகளும், பிறிதான மொழிகளிடமிருந்து இரவல் பெற்றும், கொடுத்தும், இயலுமானளவு தம்மை நிறைவு செய்து கொள்கின்றன. உலகுடன் ஒட்ட ஒழுகலும் உலகின் இன்றைய தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், நம் தமிழ்மொழியை எவ்வாறு வாலாயப்படுத்தப் போகின்றோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.

தமிழில் முதல் ஒலி வடிவங்கள் முப்பது என்றோமே! அதில் உயிர் எழுத்துகள் 12 உம் மெய்யெழுத்துக்கள் 18 உம் ஆகும் என்பதனை முதலில் குறித்துக் கொள்ளல் சாலும். ஒலிவடிவத்தின் உயிராக நிற்பது உயிர் எழுத்துக்கள் என்றும், உயிர் தங்குவதற்கு ஏதான உடலாக நிற்பது மெய்யெழுத்துக்கள் என்றும் சொல்லலாம். அந்த வகைப்பாடுகள் அற்புதம் என்பேன். ஆனால் வரிவடிவங்களை அளவுக்கதிகமாக இறைத்துவிட்டோமோ என்னும் ஐமிச்சம் தான் என்னிடையே தோன்றுகின்றது. உயிர் எழுத்துக்கள் எவை?

அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ

ஒ-ஓ
ஒள

இவைதாமே! இப்படித் தொகுத்தலுக்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் பார்வையில் இடப்பக்கம் உள்ள ஐந்து உயிர் எழுத்துக்களும் (அ,இ,உ,எ,ஒ) போதும் என்பேன். ஏனைய ஏழு உயிர்களையும் கழித்து அழுத்துவிடலாம் என்றும் சொல்வேன். ஏன் சொல்கின்றேன்?

அ,ஆ இரண்டையும் எடுங்கள். இரண்டும் ஒரே ஒலிவடிவங்களாலானவை. ஓம்தானே? உச்சரித்துப் பாருங்கள், உணர்வீர்கள். சிறு வித்தியாசம் என்னவெனில், அ என்பது குறுகியும் ஆ என்பது நீண்டும் ஒலிக்கின்றது. ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கின்ற போது இரண்டு வரிவடிவங்களை இதற்கு ஏன் இடவேண்டும்? நீட்சியான ஒலிவடிவம் வேண்டுமென்றால் எங்களிடம் ஏலவே உள்ள (ா) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம்தானே? எப்படி? இதோ பாருங்கள் இப்படி!

அ-அா
இ-இா
உ-உா
எ-எா
ஒ-ஒா

சரி, ஐ உம் ஒள உம் அப்படியே இருக்கட்டும். பிறகு வருகின்றேன்.

உயிர் எழுத்துக்களுக்கு மேற்கூறிய வரிவடிவங்களைக் கையாண்டோமானால், உயிர் எழுத்துக்களின் வரிவடிவங்களின் அளவைக் குறைத்துக் கொள்வோம் அல்லவா? இது தவறு, மரபை மீறுதல் தகாது என்று சொல்வோருக்கு, நான் என்ன சொல்ல? பவணந்தி முனிவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சொன்னதைச் சொல்லவா?

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவா, கால வகையினானே

மொழியின் வரிவடிவங்களைக் குறைத்துச் செல்லல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காலத்தில் கணனிப் பயன்பாடு அதிகரித்த நேரத்தில் மொழிக்கு மேலும் வலுவூட்டும். ஆகவே நாங்கள் இனி இப்படி எழுதுவோமா? அல்லது எல்லோரையும் எழுதச் சொல்லிக் கேட்போமா?

அாடு (ஆடு), கிாரி (கீரி), உார் (ஊர்), ஒாடம் (ஓடம்)

உயிர் எழுத்துக்களில் ஐ, ஒள என்னும் ஒலி, வரிவடிவங்கள் இரண்டு உள்ளன. இவற்றை எப்படி மாற்றமுறச் செய்யலாம்? ஐ என்பது அ உம் இ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் ஒள என்பது அ உம் உ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் தமிழ் இலக்கணம் சொல்கின்றது. அது சொல்லட்டும். தமிழில் ஏலவே ஐ ஒலிவடிவத்திற்கும் வரிவடிவங்கள் உள்ளன.

ஐ - அய்
ஒள - அவ்

இவை மெத்தப் பொருந்திப் போகிறதல்லவா?

ஐயர் - அய்யர்
ஒளவை - அவ்வை

மேற்கூறிய உதாரணத்தில் ஒலிவடிவத்தைப் பார்த்தீர்களா? அவை அச்சொட்டாகப் பொருந்திப்போகிறது. சங்ககாலப்பாடல் ஒன்றினை மேலும் நான் உதாரணத்திற்குத் தருவேன்.

கையது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

(போரிலிருந்து வெற்றி பெற்று திரும்பிய தொண்டைமானைப் பார்த்து அவ்வை பாடியது. கையில் வேல், காலில் புனையப்பட்ட கழல் என்னும் ஆபரணம், உடல் முழுவதும் வியர்வை, தொண்டையில் புண்)

இங்கு கையது, மெய்யது என்ற சொற்கள் வருகின்றபோது யாப்பிற்கும் அது மனைவதைக் காண்க. அதாவது முதலாவது வரியில் வரும் முதலெழுத்து கை என்பது நெடிலாகவும், இரண்டாவது வரியில் வரும், முதலெழுத்து மெ என்பது குறிலாகவும் அமைகிறது. இது யாப்புக்கு முரண். இரண்டும் நெடிலாக அமைய வேண்டும். ஆகவே இப்படி எழுதிப் பார்ப்போமா?

கய்யது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

இப்பொழுது இரண்டு வரிகளினதும் முதலெழுத்துக்கள் (க, மெ) குறிலாக அமைந்து, யாப்பிலக்கணத்தை நிறைவு செய்கின்றதல்லவா?"

(மீதி அடுத்த பதிவில்)