படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, April 29, 2005

புதுதில்லியிலிருந்து வரப்போகும் தமிழ் இதழ்

ஜூலை அல்லது ஆகஸ்டு வாக்கில் புதுதில்லியிலிருந்து புதிய தமிழ் மாத இதழ் ஒன்றைக் கொண்டுவர ஒருவர் திட்டமிருப்பதாக மடற்குழுவில் வந்த மின்னஞ்சலொன்று தெரிவிக்கிறது. 'சுபமங்களாவைப் போல வர முயற்சிக்கும்' இவ்விதழுக்குப் படைப்பார்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம் என்கிறது.

மேலும் விவரங்கள் அறிய பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்: http://groups.yahoo.com/group/pmadurai/message/2631

Monday, April 25, 2005

கோட்டைப் போடுங்கள்!

தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்காமலேயே பள்ளிக் கல்வியை முடிக்கும் நிலைமை உள்ளது என்பது பொதுவில் இருக்கும் ஓர் ஆதங்கம்/குற்றச்சாட்டு. இரண்டாம், மூன்றாம் மொழி எனத் தெரிவு செய்யும்போதுகூட அங்கு ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்சு அல்லது வேறேனும் ஒரு மொழி வந்துவிடுகிறது. தமிழைப் படித்து என்ன இலாபம் என்றதொரு மனநிலையோடு, பிறமொழிகளை எடுத்துப் படித்தால் அவற்றில் நிறைய மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. படிப்பென்பதே உருப்போடுவதற்கும், மதிப்பெண்களுக்கும் என்றாகிவிட்ட நிலையில் சுளுவாக எதில் வேலை முடியுமோ அத்திசையில் மாணாக்கர்கள் செல்வதில் வியப்பேது!

பெரும்பாலானோர் தமிழ் மொழிப் பாடத்தை உதறிவிட்டுப் போவதற்கு அப்பாடத் திட்டத்திலுள்ள (கவனிக்க, மொழியிலன்று) கடினத்தன்மையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதில் முக்கியமானது செய்யுள் பகுதி.

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழம்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதே - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

[நினைவில் இருந்த செய்யுள் ஒன்றை உதாரணத்திற்காக அப்படியே போட்டுள்ளேன், பிழை இருந்தால் மன்னிக்கவும். எழுதியவர்-ஒளவையார். இப்பாடலின் கடைசி வரிகளை வைரமுத்து தனது படப்பாடல்கள் சிலவற்றில் கொஞ்சம் மாற்றி உபயோகித்திருப்பார்.] அருமையான செய்யுளாக இருந்தாலும் துவக்கப்பள்ளி (அப்படித்தான் நினைவு) அளவிற்கு இப்பாடல் அதிகம் என்றே நினைக்கிறேன். முதலில் கடினமான, வழக்கத்தில் குறைந்து வழங்கும் பொருள் விளங்காச் சொற்கள், பிறகு பொழிப்புரை, விரிவுரை ஆகியவற்றின் தேவை; அவற்றைச் சொல்லி விளக்கும் நபர்/விளக்கவுரைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்றால்கூட ஒப்பேற்றிவிடுவார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கஷ்டம்.

சங்க இலக்கியம் என்ற ஒன்று இல்லாதிருந்திருப்பின் தமிழ் பாடத் திட்டம் எவ்வாறு இருந்திருக்கும்? பிற நாடுகள்/மொழிகளில் உள்ள மொழிப் பாடத்தில் இப்படித்தான் கடினமான பழம் இலக்கியப் பாடல்களை ஆரம்பம் முதல், இறுதி வரை நீக்கமறப் புகுத்திக் கற்பிக்கிறார்களா?

அதற்காக சங்க இலக்கியமே வேண்டாம் என்று சொல்லவில்லை; பாடல்களுக்கு பதிலாக எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க அவற்றின் உரை, சுலபமான செய்யுள்களை மனனம் செய்யும் பயிற்சி, இத்யாதிகள் இருக்க வேண்டும். அவற்றைப் பற்றி அறிஞர்கள் சிந்திக்கட்டும்.

மொழிப் பாடத்தை எளிமைப்படுத்தி தமிழிலும் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாமல் நிறைய மதிப்பெண்கள் எடுக்கும் நிலை வந்தால் ஒருவேளை அது நிறையப் பேரை யோசிக்க வைக்கும். அச்சூழ்நிலையில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயப்படுத்து என்னும் சிந்தனையே மறுபரிசீலனைக்கு உரியதாகலாம்.

இக்காலத்து மாணவர்கள் படுசுட்டியானவர்கள், கோடு போட்டுக் காண்பித்தால் 'ரோடே' போட்டுவிடுவார்கள். அவ்ளோதாங்கறேன்!

Monday, April 18, 2005

ஸெஹ்ஸலொய்ட்டன்-2005

அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டிருக்கிறது! நேற்றுத்தான் இவ்விழாவினைக் கண்டதுபோல இருக்கிறது. இன்று எற்பாடு மூன்று மணிக்குத் தொடங்கி இவ்வாண்டிற்கான பனிமனிதனை எரிக்கும் விழா சில மணி நேரங்கள் ஜூரிக் நகரில் நடைபெற்றது.

சென்ற வருடத்தைய பதிவு.

குளிர்காலம் போய்விட்டாலும், தற்போது இருந்து கொண்டிருக்கும் மேகமூட்டமும் மழைத் தூறலும் முந்தைய ஓரிரு வாரங்களின் இளவெயிலின் போது பூத்து மலர்ந்த மலர்களின் பொலிவை (தற்காலிகமாக) இழக்கச் செய்துவிட்டதோடு, இலேசான குளிரையும் தந்துகொண்டுள்ளது.

[எற்பாடு - "...பகல் என்பது 10 மணியில் இருந்து 14 மணிவரை, எற்பாடு என்பது 14ல் இருந்து 18 வரை, மாலை என்பது 18ல் இருந்து 22 வரை..." - http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html]

Sunday, April 17, 2005

Google Maps

பல அற்புதங்களைச் செய்துவரும் கூகிளின் மற்றொரு சேவையான 'கூகிள் மேப்ஸ்' வடஅமெரிக்காவின் பல முக்கியமான இடங்களின் வரைபடங்கள், செயற்கைக் கோள் படங்கள் போன்றவற்றை வழங்குகிறது. வரும்நாட்களில் மற்ற உலக நாடுகளின் படங்களும் வரக்கூடுமென்கிறார்கள்.

அமெரிக்காவின் முக்கியமான இடங்களைப் பின்வரும் தளத்தில் தொகுத்து வெளியிட்டுக்கொண்டுள்ளார்கள்:
http://www.shreddies.org/gmaps/index.php

செய்தி மூலம்: http://news.bbc.co.uk/2/hi/technology/4448807.stm

Saturday, April 16, 2005

இதிலுமா??

இதிலும் கூடவா இவர்களுடைய படங்களைப் போட வேண்டும்?



கஷ்டமடா சாமி!

Wednesday, April 13, 2005

சென்னை வாழ் நண்பர்களுக்கு

வரும் ஏப்ரல் 15-ம் தேதியன்று மாலை 5 மணிக்கு சென்னை பார்க்-ஷெரட்டனில் CDAC நிறுவனம் தமிழ் கணிமை குறித்த நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இயன்றவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுதுங்கள்.

தகவலுக்கான சுட்டி: http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31867

Tuesday, April 12, 2005

இணையத்தில் தமிழ் அகராதிகள்

சிகாகோ பல்கலைக்கழகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சில மொழிகளுக்கான அகராதிகளை இணையத்தில் தேடும் வசதியுடன் வழங்கியுள்ளது. தமிழில் ஆறு அகராதிகளுக்கான பட்டியல் கொடுக்கப்பட்டு அவற்றில் ஐந்திற்கு சுட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்குறி(யுனிகோடு)யில் தேடும் வசதியும் உள்ளது. தமிழுக்கான மற்றுமொரு சிறந்த பங்களிப்பு, அயலிலிருந்து.

அகராதிகளுக்கான சுட்டி: http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil

தகவல் உபயம்: திரு.கல்யாணசுந்தரம், மதுரைத்திட்டம் யாஹூ மடற்குழு.

Friday, April 01, 2005

சாலையோர ஓவியங்கள்

சென்ற ஞாயிறன்னு படம் பிடித்தவை.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Wednesday, March 30, 2005

இக்கட்டில் பூமி

அது தெரிந்ததுதானே என்கிறீர்களா? இருந்தாலும், இன்றைக்கு ஐ.நா. மற்றும் வேறு சில அமைப்புகளின் சார்பில் கடந்த நான்காண்டுகளாக சூழமை/சூழியல் தொடர்பாக விரிவானதோர் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வறிக்கையின்படி, பல்கிப் பெருகும் உணவு, உறையுள், உடை, எரிபொருள் போன்ற தேவைகளுக்கான முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஐம்பதாண்டுகளில் மனித இனம் சூழமையை அதிவேகமாகவும் பரந்த அளவிலும் மாற்றிவிட்டது. இதுகாறும் மனிதன் பெற்ற நல்வாழ்வு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் இயற்கையை அழித்தே பெற்றவை.

இயற்கையின் மீதான இந்த அழிவுப் படலம் இந்நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் மேலும் கணிசமான அளவிற்கு அதிகரிக்கப்போவதாக எச்சரிக்கிறது அவ்வறிக்கை.

சீர்குலைந்து கொண்டிருக்கும் சூழமையைச் சரிசெய்வதும், அதேசமயத்தில் பெருகி வரும் தேவைகளை ஈடுகட்டுவதும் சில கடினமான மாற்றங்களால் சாத்தியமானது என்றும் தெரிவிக்கிறது.

சூழமைச் சீர்கேட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது வழக்கம்போல ஏழை, எளியோர்தான். (உடனடியாக மனதில் தோன்றும் உதாரணம்: ஜப்பான் தன்நாட்டில் மரம் வெட்டுவதைத் தடைசெய்துவிட்டு இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் கடைசியில் பெரிதும் பாதிக்கப்படப்போவது இந்நாட்டு மக்களல்லவா.)

இதையும் மற்றோர் அறிக்கை என்று அலட்சியப்படுத்தாமல் ஒவ்வொருவரும் விழித்துச் செயல்பட்டால் நல்லது.

இவ்வறிக்கை சார்ந்த சில சுட்டிகள்:

Experts Warn Ecosystem Changes Will Continue to Worsen, Putting Global Development Goals At Risk
Study highlights global decline
Millennium Ecosystem Assessment-Synthesis Reports

Monday, March 28, 2005

இறைந்து கிடக்கும் செல்வம்

ஏதோ ஒரு தகவலுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருக்க, பின்வரும் தகவல் கண்ணில்பட்டது:

தோரணை என்ற வார்த்தையும், style என்ற வார்த்தையும் தனித்தனியே பழக்கமானவையே ஆயினும் அவற்றை ஒன்றுசேர்த்துப் பார்க்கத் தோன்றியதில்லை, இக்குறிப்பை வாசிக்கும் வரை.

//style sheet என்பதை அலங்காரக் குறிப்பு என்று சொல்லுவதைக் காட்டிலும் தோரணைத் தாள் என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும். style என்பது இரண்டு வகைப் பயன்பாட்டில் இருக்கிறது. ஒன்று நடையுடை பாவனையை ஒட்டியது. இன்னொன்று ஒரு படிவம் எழுதுவதற்கான மாதிரி.

style comes via Old French stile from Latin stilus, which denoted a 'pointed writing istrument'. It came to be used metephorically for 'something written,' and hence for 'manner of writing'. The spelling with y instead of i arose from the misapprehension that the word was of Greek origin. It also invaded stylus, which was acquired directly from Latin.

கூர்மை என்ற பொருள் துளைப்பதின் தொடர்ச்சி. துள்>தூர் என்று விரியும். தூர்தலைச் செய்யும் கருவி தூரிகை. தூரிகை என்பதுதான் stylus கருவியைக் குறிக்கும் தமிழ்ச் சொல். (தூரிகை>தூலிகை என்ற திரிவை, இந்தையிரோப்பியச் சொற்கள் பலவற்றில் வரும் முதல் எழுத்தான சகரவொலியை ஒதுக்குவதோடு, எண்ணிப் பார்த்தால், stylus என்ற சொல்லுக்கு உள்ள தொடர்பு புலப்படும். தூரிகையின் உதவியோடு செய்வது தோரணை என்னும் அலங்காரம், அழகு படுத்தல், ஒப்பனை செய்தல். தோரணை வரைந்த துணி தோரணம்; தோரணை வரைந்த கட்டுமானம் கூடத் தோரணம் என்று தெலுங்கில் வழங்கும்.

அதோ, அவன் தோரணையாகப் போகிறான் என்றால் style - ஆகப் போகிறான் என்று பொருள். நீங்கள் எழுதும் தோரணை இப்படி இருக்கலாம் என்னும் பொழுது இந்த style-ல் எழுதலாம் என்று பொருள்.

அன்புடன்,
இராம.கி.//

மூலம்: http://kasi.thamizmanam.com/?item=167&catid=3

இராம.கி. அவர்களின் இவ்வாறான எழுத்துகள் தமிழ்-உலகம் மடற்குழு (கொஞ்ச காலமாக), அவரது வலைப்பதிவு, மற்றும் அவர் அளிக்கும் மறுமொழிகளின் வாயிலாக மட்டுமே தெரியும். அவையல்லாது அவர் வேறு இடங்களிலும் எழுதியிருக்கக்கூடும். எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ஆய்வுப்பூர்வமாகச் சிந்தித்து ஒருவர் எழுதும் எழுத்துகள் சிதறிவிடாமல் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டால் அச்சிந்தனைகள் வீண்போகாது. அவ்வாறான எழுத்துகள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, March 26, 2005

செம்மறியாடு

சில நாட்களுக்கு' முன்பு சிறுவர் பாடல்கள் வலைப்பதிவிற்காக எழுத முயற்சித்த பாடலொன்று. சந்தேகமே வேண்டாம், ஆங்கிலப்பாடலின் 'உல்டா'தானிது. என்ன செய்வது, கற்பனை அந்த அளவுக்குத்தான் வேலை செய்யுது :(

ம்மே ம்மே ஆடே கம்பளி இருக்கா?
ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!
ஒன்றெங்கள் இடையனுக்கு ஒன்றுங்களுக்கு
ஒன்றடுத்த ஊரில் இருக்கும் சின்னப் பையனுக்கு
செம்மறி ஆடே கம்பளி இருக்கா?
ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!

[முதல் வரியில் 'ம்மே ம்மே'-வுக்கு பதில் 'ஆடே ஆடே' அல்லது 'செம்மறி ஆடே' என்றும் சொல்லலாம், இருந்தாலும் ஆடெழுப்பும் ஒலியைச் சொல்லும்போது கொஞ்சம் நன்றாக உள்ளதாக நினைக்கிறேன்.]

ஆங்கிலப் பாடலுக்கான மெட்டு: http://www.englishbox.de/song25.html

செம்மறியாடுகள் கூட்டமாகச் சாலைகளில் ஓட்டிச்செல்லப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா? குட்டியாட்டைக் கம்பளி போர்த்திய தோளில் சுமந்துகொண்டு கையில் பெரிய கோலுடன் ஆட்டுக்காரன் நடக்க, அவனருகே ஒன்றிரண்டு நாய்களும் ஓட, இரண்டு மூன்று கூட்டங்களாக (ஒவ்வொரு கூட்டத்திலும் பலநூறு ஆடுகள் இருக்கும்) ஆடுகள் செல்லும். இதேபோல வாத்துக் கூட்டத்தையும் ஒரே ஒருமுறை திருமூர்த்திமலை செல்லும் வழியிலுள்ள கிராமமொன்றில் மிகவும் சிறிய வயதில் கண்டிருக்கிறேன்.

Wednesday, March 23, 2005

அரோகரா!

வேல் வேல் வெற்றிவேல்!
வேல் வேல் வெற்றிவேல்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோ....கரா!
பழனியாண்டவனுக்கு அரோ....கரா!
அரகர அரகர அரோ....கரா!

இப்படியான சத்தங்களுக்கு வருடத்தின் ஒருசில மாதங்களில் எங்கள் ஊர்ப் பகுதியில் பஞ்சமே இருக்காது (எல்லாம் சில,பல வருடங்களுக்கு முந்தைய அனுபவம், இப்போது எப்படி என்று தெரியவில்லை). அதுவும் எங்கள் வீடு பிரதான சாலையைத் தொட்டபடியாதலால் இதிலிருந்து தப்பிக்கவே வழியில்லை. இருந்தாலும் கூட்டங்களைப் பார்ப்பதற்கும், ஒலிகளைக் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும்.

தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனியை நோக்கி நடந்தே செல்வர். மேற்கே கேரளா, பொள்ளாச்சி, கோவை பகுதிகளின் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஒருவர் இருவர் எனச் சன்னமாக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் சாலை முழுவதும் ஆக்கிரமித்துச் செல்லுமளவிற்குக் கூட்டமிருக்கும்.

வெறுங்கால்களுடன் குடும்பத்தோடு நடக்கும் இக்கூட்டங்களில் விவசாயிகள், உழைக்கும் மக்கள், நகர்ப்புறத்தார் என பலரைக் காணமுடியும். சிலர் மாலை போட்டிருப்பர் - அதற்கு அடையாளமாகப் பச்சை, கருப்பு, மஞ்சள் நிறமொன்றில் வேட்டி, சட்டை, துண்டும், உருத்திராட்சக் கொட்டை மாலைகளும் தெரியும்.

இந்த நடைப் பயணங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சில ஊர்களிலிருந்து வரும் கூட்டங்கள் இசைக்கும் இசையும், அதற்கான காவடி ஆட்டங்களும். எங்கள் வீட்டிற்கு எதிர்புறமுள்ள பஞ்சாலைக்கு முன்பாகப் புளியமர நிழலுடன் தாரால் வேயப்பட்ட பெரிய இடமொன்று உள்ளது. அந்தி சாயும் நேரத்திற்கே வரும் கூட்டங்கள் அப்படியே இரவுத் தங்கலுக்காக அங்கு இருந்துவிடுவார்கள். வந்து சேர்ந்தவுடன் வட்டமாக நின்று பெரும் இசையுடன் காவடியோடு ஆட்டம் போடுவார்களே, கேட்டுக் காண கண்கோடி வேண்டும்! (இதை எழுதும்போதே மனது குதூகலிக்கிறது).

காவடி என்றால் வெறும் கட்டைகளை நிறுத்தி அட்டைகளை ஒட்டியதல்ல. பழுப்பு நிறத்தில் (தேக்கோ?) பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய கனமான காவடிகள். அதில் மணிகள், மாலைகள், படங்கள், சந்தனம், பொட்டு என சகலத்தையும் காணலாம். காவடியின் இரண்டு பக்கங்களிலும் மயிற்தோகைகளைச் செருகி மேலும் வனப்பேற்றியிருப்பார்கள். (சின்னப் பையன்களான எங்களில் சிலரின் நோட்டுப் புத்தகத்தில் மறுநாள் சில மயில் தோகைகள் குட்டிபோட்டுக் கொண்டிருக்கும்). இக்காவடிகளை மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் தரையில் துண்டை விரித்துத்தான் வைப்பார்கள்.

அவ்வளவு கனமான காவடிகளைத் தூக்குவதென்பதே கஷ்டமான காரியமாக இருக்கும் போது அதைத் தோளிலும் கழுத்திலும் சுழற்றி ஆட்டம் போடுவதைப் பார்க்க மலைப்பாக இருக்கும். இசைக்கு மேளம், நாதஸ்வரங்களுடன், பெரிய குழல்போன்று ஒன்றையும் வைத்து ஊதுவார்கள் (அதன் பெயர் தெரியவில்லை). இசையே ஆட்டம்போட வைக்கும்.

பஞ்சாலையை ஒட்டியிருந்த (இப்போது எல்லாவற்றையும் தூக்கிவிட்டார்கள்) ஓடுவேயப்பட்ட தரைப்பகுதி முழுவதும் மக்களோ மக்கள்தான். விடிந்ததும் காலையில் எழுந்துவந்த பார்த்தால் சாலையோர வீட்டு வாசல்களின் முன்பு பந்தல்களில் பெருங்கூட்டங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். ஒரு சில கூட்டங்கள் இப்படி ஓய்வெடுக்க, அருகாமை ஊர்களிலிலிருந்து நடக்கத் தொடங்கியோர் விடிய விடிய சென்று கொண்டே இருப்பார்கள். அவர்களை ஒதுக்க வாகனங்கள் எழுப்பும் ஒலியோ சொல்லி மாளாது.

பக்தி முத்தியிருந்த காலத்திலும், ஓடுற பாம்பை கண்டு மேலும் ஓடின வயசிலும் எனக்கும் பழனிக்கு நடந்து செல்ல ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தன. காவடியெல்லாம் இல்லை, சும்மா போய்விட்டுவருவதே பெரிய விஷயம் இதுல காவடி வேறயா? :-)

முதல் தடவை வீட்டருகாமையில் இருந்த தையல்காரர் அழைத்துச் சென்றார். பழனிக்கு முன்பாக சுமார் பத்து கி.மீ தூரத்தில் மேற்கொண்டு நடக்கமுடியாமல் அவர் நின்றுவிட்டார். வேறு வழியின்றி அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டிப்பட்டதால் முதல் பயணம் தோல்வி(?)யில் முடிவடைந்தது. பிறிதொருமுறை பள்ளி நண்பர்கள் சிலருடன் வெற்றிகரமாக நடந்து சென்ற போது பழனி முருகனுக்கு எங்களைத் தரிசிக்கும் பாக்கியம் உண்டானது.

அம்முறை ஏதோ தேர்தல் சமயமாக இருந்ததால் வழியெங்கும் கட்சிக் கொடிகளும், வளைவுகளும் நிறையக் காணப்பட்டன. சில இடங்களில் குச்சிகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை அவிழ்த்துவிட்டுச் சென்றதைக் கட்சிக்காரர்கள் யாரேனும் பார்த்திருந்தால் பெண்டு நிமிர்த்தியிருப்பார்கள். நல்லவேளை, ராத்திரியாகப் போய்விட்டதால் அவர்கள் புண்ணியம் தேடிக் கொண்டார்கள்.

மும்பைக்கு அடுத்த படியாக, பழனி எப்போதும் என்னை முகம் சுழிக்க வைக்கும் இடம் - கூட்டமும், நாற்றமும் (மற்ற ஊர்கள் மட்டும் என்ன வாழுதுவென்கிறீர்களா? இருந்தாலும் அங்கு கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது, அதான் சொன்னேன்; பழனிக்காரர்கள் கோவித்துக்கொள்ளவேண்டாம்).

ம்...எல்லாத்தையும் இப்ப நினைச்சு மட்டும் பாத்துக்க வேண்டியதுதான்.

அப்புறம், அரோகரா-வென்றால் என்னவென்று சொல்பவர்களுக்கு பழனி சித்தன்ன விலாஸ் விபூதி பொட்டலமும், பஞ்சாமிருத டப்பா ஒன்றும் அனுப்பிவைக்கப்படமாட்டாது ;-)

[அறுபத்து மூவர் விழா-வில் வந்த காவடியின் தாக்கம் மேற்கண்ட பதிவு. பத்ரிக்கு நன்றி!]

Tuesday, March 22, 2005

தூரக் கணிப்பி

கோயம்புத்தூருக்கும் சென்னைக்கும் இடையில் (அதேபோல வெவ்வேறு இடங்களுக்கு இடையிலும்) இத்தனை கி.மீ தூரம் என்கிறோம். இதை ஏதாவது ஓர் அட்டவணையிலிருந்தோ அல்லது வழிகாட்டிகளில் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டோ அறிகிறோம். கோவையிலிருந்து சென்னையை அளக்க இரண்டு புள்ளிகள் தேவை அல்லவா? உண்மையில் இங்கு கோயம்புத்தூர் அல்லது சென்னை என்பது எந்தப் புள்ளி? நிச்சயமாக அளப்பீடு தொடர்புடைய துறை (சர்வே டிபார்ட்மெண்ட்?) ஒவ்வொரு ஊரிற்கும் என ஒரு புள்ளியைக் குறித்து வைத்திருப்பார்கள். இவ்வுரல் தமிழகத்தின் முக்கிய இடங்களின் ஆயத்தொலைகளைக் (coordinates) காட்டுகிறது. ஊரில் எந்த இடத்திற்கு இப்புள்ளி பொருந்தும் என்பது அறிந்துகொள்ள ஆவலூட்டுமொன்று.

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த செய்திமடல் (newsletter) ஒன்றின் ஓரத்திலிருந்த நிரல் துண்டொன்று கவனத்தை ஈர்த்தது. அதில் பெருவட்டச் சூத்திரத்தைக் (Great Circle formula-வை இப்படி சொல்லலாமா?) கொண்டு இரு புள்ளிகளுக்கிடையிலான தூரத்தைக் கணக்கிடும் முறை எழுதப்பட்டிருந்தது. புவியில் ஒவ்வொரு இடத்திற்கும் வரையறுக்கப்படுள்ள அச்சரேகை (அல்லது குறுக்குக் கோடு), தீர்க்கரேகை (அல்லது நெடுங்கோடு) அளவுகள் இக்கணக்கீட்டிற்கு முக்கியமானவையாகும்.

மேற்கண்ட உரல் சுட்டும் பட்டியலிலிருந்து சில ஆயத்தொலைகளை எடுத்து அவற்றை டிகிரியிலிருந்து ரேடியன்களுக்கு மாற்றி அச்சூத்திரத்தைக் கொண்டு கணக்கிட்டுப் பார்த்த போது கிடைத்த விடைகள் வழக்கமாக அறிந்த தூரங்களிலிருந்து வேறுபட்டிருந்தன!

கோவை-சென்னை => 413 கி.மீ.
கோவை-பொள்ளாச்சி => 68 கி.மீ.

பெருவட்டம் பற்றிய சிறு குறிப்பை இங்கே காணலாம் (உபயம் கூகிள்).

சொல்லப்பட்ட நிரல்துண்டு பின்வருமாறு:

/* அச்சரேகை, தீர்க்கரேகைகள் ரேடியன்களில் */
செயற்கூறு (அச்சரேகை1 உள்ளே எண், தீர்க்கரேகை1 உள்ளே எண்,அச்சரேகை2 உள்ளே எண், தீர்க்கரேகை2 உள்ளே எண்) திரும்பு எண்
அறிவி
புவியின்ஆரம் := 6378.7;
தொடக்கம்
அச்சரேகை1=அச்சரேகை2 மற்றும் தீர்க்கரேகை1=தீர்க்கரேகை2 இருப்பின்
திரும்பு 0;
திரும்பு புவியின்ஆரம் * ACOS(SIN(அச்சரேகை1) * SIN(அச்சரேகை2) + COS(அச்சரேகை1)* COS(அச்சரேகை2) * COS(தீர்க்கரேகை2-தீர்க்கரேகை1));
புறநடை பிற இருப்பின்
திரும்பு வெற்று;
முடிவு;

இப்படியான நிரலை ஏற்றுப் புரிந்துகொண்டு விடையைத் தரும் மென்கலன்கள் இல்லாத நிலையில் :-) ஆர்வமுள்ளோர் இப்பக்கத்திற்குச் சென்றால் (பிப்.2005) மூல நிரலைக் காணலாம்.

Friday, March 11, 2005

மாண்புமிகு?

"முதல்வருக்குப் பேரவைத் தலைவர் வணக்கம் சொல்கிறார் என்பதை விட என் தலைவிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்; என் உயிர் காத்த தாய்க்கு வணக்கம் செலுத்துகிறேன். இதை எந்த நாய் கேலி செய்தாலும் எனக்கு கவலை இல்லை." [நன்றி: தினமணி 11.03.2005]

மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று சொல்லக்கூடிய பொறுப்பிலிருப்பவர், இப்படியா 'நாய்' என்றெல்லாம், அதுவும் சட்டப் பேரவையில், பேசுவது?

Wednesday, March 09, 2005

தேசியக் கொடியைத் தலைகீழாகக் குத்தாமலிருக்க

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பெருந்தலைகளே சில சமயங்களில் தேசியக் கொடியைத் தங்கள் உடையில் தலைகீழாகக் குத்திக்கொண்டுவிட்டு, பிற்பாடு அங்குள்ளவர்கள் எவரேனும் சுட்டிக்காட்டும்போது சங்கடத்தில் நெளிவது ஒன்றும் புதுமையான செய்திகளல்ல. சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூட அவ்வாறு குத்திக்கொண்டு வந்தார் என்று செய்திகள் வந்தன. கம்பங்களில் பறக்கவிடப்படும் கொடிகளுக்கும் இந்த கதி நடப்பதுண்டு.

தேசியக் கொடியிலுள்ள மூவர்ணங்களின் சரியான வரிசையை நினைவிற் கொள்ளும் வழிமுறை ஒன்றை நம்மூர் ஆசிரியர் ஒருவர் தம் மாணவர்களுக்குச் சொல்லித்தந்ததாக வந்த செய்தியை எங்கோ படித்ததாக மனைவி தெரிவித்தார். அது என்னவென்று கேட்டேன். வாழை இலையை விரித்து, அதில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றுவதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டுமாம். பச்சை கீழே வந்து விடுகிறதல்லவா? அடங்கப்பா! உதாரணம் நன்றாகத்தான் உள்ளது; சோற்று விஷயமாயிற்றே அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா என்ன!

Tuesday, March 08, 2005

உலக மகளிர் தினம்

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் மகளிரின் தினம் தானோ!

Image hosted by Photobucket.com
[அல்பேனியா]

Image hosted by Photobucket.com
[செர்பியா]

Image hosted by Photobucket.com
[அயர்லாந்து]

Monday, March 07, 2005

கற்பனை வறட்சியா?

விண்வெளி செல்ல ராக்கெட்டு
பஸ்ஸில் போக டிக்கெட்டு;
காய்கறி வாங்க மார்க்கெட்டு
மாடியில் ஏறிட படிக்கட்டு;
இரும்பை இழுப்பது மாக்னெட்டு
அண்ணன் ஆடுவது கிரிக்கெட்டு;
தம்பிக்குப் பிடித்தது ரவா லட்டு
எனக்குப் பிடித்தது பிஸ்கெட்டு;
மிட்டாய் தாரேன் கைநீட்டு.

தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது முதலில் இதை வாசித்த போது. எதுகை மோனையாக இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் எழுதி விற்க ஆரம்பித்து விடுகின்றனர். [புத்தகம்: எனது முதல் மழலை மொழி பாடல்கள்; ISBN:81-7478-233-8]

'அப்பா பாட்டு'க்கும், 'கத்தரி வெருளி'க்கும் முன்பு இது குப்பையாகத் தெரிகிறது.

Sunday, March 06, 2005

வணக்கம்!

Image hosted by Photobucket.com

இப்படத்தைச் சில நிமிடங்கள் பார்ப்பதால் தோன்றும் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல :-)

[படம்:சு.குமரேசன் (அ) கே.ராஜசேகரன்; ஜூனியர் விகடன்-http://www.vikatan.com/jv/2005/mar/09032005/jv0103.asp]

Wednesday, March 02, 2005

புதிய எண், பழைய எண்

தமிழகத்தில் கொஞ்ச நாட்களாக ஒரு கூத்து நடந்து கொண்டுள்ளது. அஞ்சல் முகவரிகளில் வீட்டின் புதிய இலக்கம், பழைய இலக்கம் என்று எழுதப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். புதிய எண்கள் எப்போதிருந்து, எதற்காகக் கொடுக்கப்பட்டன, இவ்வெண்கள் யாரால் நிச்சயிக்கப்படுகின்றன, அஞ்சல் முகவரியில் இரு இலக்கங்களையும் குறிப்பிட்டாக வேண்டுமா, இருப்பின் எவ்வளவு காலத்திற்கு அவ்வாறு செய்யவேண்டும் முதலான தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் கேள்விப்பட்டதில்லை (அப்படியொன்று இருந்தால்தானே என்கிறீர்களா?), தெரிந்தவர்கள் சொல்லவும்.தினத்திற்கு நான்கு கடிதங்கள் எழுதி அனுப்புவதில்லையென்றாலும் தெரிந்துகொள்ளலாமே ஒரு நப்பாசைதான், வேறு என்ன!