படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, November 11, 2004

யாசர் அராஃபாத் (1929 - 2004)

கடந்த பத்து நாட்களுக்குள் அரபுப் பிரதேசத்திலிருந்து மற்றொரு முக்கிய மரணச் செய்தி. யாசர் அராஃபத்தின் மரணச் செய்தி இன்று அதிகாலை பிரான்ஸில் அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக இறுதிவரை தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி, இறுதியில் நோய்வாய்பட்டு மாய்ந்த மனிதர். பாலஸ்தீனர்களின் தனிநாடு என்ற கனவுச் சுடர் அழியாமல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்ததற்கு முக்கிய காரணமாக விளங்கினார். ஆயுதமேந்திய போராட்டங்களாலும், பின்னர் சமாதானப் பேச்சு வார்த்தைகள் வாயிலாகவும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருந்தார். இஸ்ரேலுடன் கண்ட சமாதான உடன்படிக்கைக்காக 1994-ல் கூட்டாக நோபல் பரிசைப் பெற்றார். இன்று ஒரு சகாப்தம் முடிவுற்றது; பாலஸ்தீன மக்கள் தங்களது மாபெரும் தலைவரை இழந்து நிற்கின்றனர்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் அராஃபத்தின் உடல் இறுதிச் சடங்கிற்காக கெய்ரோவை அடைந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. பல நாட்டுத் தலைவர்கள், பிரதமர்கள், வெளியுறவு அமைச்சர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அங்கு செல்கின்றனர். இந்தியாவின் சார்பில் சோனியா காந்தியும், வெளியுறவு அமைச்சரும் செல்வதாக ஒரு செய்தி தென்பட்டது. (இந்தியாதான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கரித்த முதல் முஸ்லிம்கள் அல்லாத அரசாகும்; ஆனால் சமீப காலத்தில் இஸ்ரேலுடன் இந்தியா தொடர்பை பலப்படுத்தியுள்ளது; என்ன காரணங்களோ?!) கெய்ரோவில் இறுதிச் சடங்கு முடிந்தபின் அவரது உடல் மேற்குக் கரைப்பகுதியிலுள்ள ரமல்லாவிற்கு எடுத்துவரப்பட்டு வரும் சனிக்கிழமையன்று அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

யாசர் அராஃபாத்தின் மரணச் செய்தி மேற்குலகின் செய்தி ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு கோணங்களில் (வாழ்க்கை, போராட்டம், அரசியல், சொத்து, அடுத்த தலைமை....) அலசல்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

9/11க்குப் பிறகு தீவிரவாதம் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசும் அமெரிக்க, இஸ்ரேலிய அரசுகள் அவை உருவானதற்கான காரணங்களை வசதியாக கண்டுகொள்ள மறுக்கின்றன. தீவிரவாதத்தால் சாதாரண மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தோடு மட்டுமன்றி ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். அதே சமயத்தில், இவர்களால் அனைத்தும் இழந்து, நாதியின்றி தினம்தினம் செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களைப் பற்றி இவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை. அடுத்தவர் வாழ்ந்த இடத்தை அதிகாரம், படைபலம் கொண்டு அடித்துத் துரத்திவிட்டு குடியேற்றங்களை ஏற்படுத்தி பெரும் பாதுகாப்பின் கீழ் வாழும் இம்மக்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர்களும் தங்களை நாகரிகமடைந்தோர், அமைதி விரும்புவோர் என்று கூறிக்கொள்வது மகா வெட்கக்கேடு. அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான ஒருதலைப்பட்ச ஆதரவு தொடரும் வரை பாலஸ்தீனப் பிரச்சனை ஓயப்போவதில்லை. இப்பிரச்சனையைத் தனியாகத் தீர்த்து வைக்கும் சூழ்நிலையில் அவர்களை விட்டால் வேறு எந்த நாடும் இப்போதைக்கு இல்லை. பிரச்சனை ஓயாத வரையில் இஸ்ரேலின் கையே இதில் ஓங்கி நிற்கும். அவ்வாறான நிலையில், கடைசியில் பாலஸ்தீனர்கள் ஒன்றுமில்லாதவர்களாகவோ அல்லது வேறு வழியின்றி இட்டதைப் பெற்றுச் செல்லும் பரிதாபத்திற்குரியவர்களாகவோ ஆக நேரிடலாம் (இப்போதே கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் உள்ளது).

யாசர் அராஃபாத்தின் மறைவினைத் தொடர்ந்து அவரது இடத்தில் யார் அமர்வார்கள், எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற அனுமானங்கள் தொடங்கி பலநாட்களாகிவிட்டன. அங்குள்ள தலைவர்கள் குழப்பமில்லாமல், ஒற்றுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டால் வருங்காலத்தில் ஏதேனும் உருப்படியான வழி உருவாகலாம். நம்பிக்கை வைப்போம்.

1 comment:

இராதாகிருஷ்ணன் said...

"இவர் இசுலாமியர்..இவர் கிறிஸ்துவர் என்று பேதம் பார்த்து அமெரிக்கா ஆதரவு செய்ததாலேயே இவ்வளவு நாட்கள் இப்பிரச்னை தீர்க்கப்படாமலேயே உள்ளது." இதைவிட அமெரிக்காவில் இருக்கும் யூத அமைப்புகளின் அரசியல், பொருளாதார செல்வாக்கே முக்கிய காரணமாயிருக்கும் என நினைக்கிறேன்.