படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, April 03, 2006

கொசுறுகள்

ஜெனிவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், போதை மருந்து முதலான பழக்கப்பற்று (addiction)களுக்குச் சிகிச்சையளிக்கும் வழிமுறையொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றனர். இது மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், வருங்காலத்தில் மருந்து நிறுவனங்கள் மனது வைத்தால் பலர் இப்பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வாய்ப்புள்ளது.
செய்திக்கான சுட்டி

இலங்கையில் இரண்டு 'அரசாங்கங்கள்' நடைபெற்று வருவது அறிந்த ஒன்று. கால நேரமும் அவ்வாறே இரண்டாக உள்ளதை இன்றுதான் கேள்விப்படுகிறேன். புலிகளின் பகுதியில் இந்திய நேரத்தைப் போலவே ஜிஎம்டி+5.30ம், தெற்கில் ஜிஎம்டி+6 மணி நேரமாகவும் உள்ளது. இலங்கை அரசாங்கமும் அரை மணி நேரத்தைக் குறைத்துக் கொண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தைக் கொண்டுவரும் போலுள்ளது. இதேபோல எல்லாவற்றிலும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி.
செய்திக்கான சுட்டி

உலாவியைத் திறந்ததும் கூகுள் கொண்டுவந்து கொட்டிய செய்திகளில் கவனத்தை ஈர்த்தது: உடற்பருமன் காரணமாக அமெரிக்காவில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் 'காரில்' அமர இயலாமல் சிரமமுறுகின்றனர். இப்போது கடைகளில் கிடைக்கும் இருக்கைகள் அக்குழந்தைகளுக்குப் பொருந்தாமல் போவதால் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இக்கு(risk) அதிகம் என்றும் தெரிவிக்கிறது. ஏழ்மையில் இருப்போர்கள் விலை மலிவான கொழுப்புத் தன்மையுடைய தீனிகளைத் தொடர்ந்து நொறுக்குவதால் வந்த விளைவும் இந்நோய்க்கு ஒரு காரணம் என்று படித்த நினைவு. பெரியவர்களுக்கு ஏற்படுவதைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் குழந்தைகளுக்கு? மரபுவழியாகத் தொடர்கிறதோ?

Thursday, March 09, 2006

அணு ஆயுத வல்லரசு

"எது அணு ஆயுத வல்லரசு என்பதை 1968-ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் (என்பிடி) தெளிவாக வரையறுத்துள்ளது. 1967 ஜனவரி முதல் தேதிக்கு முன்பாக அணு குண்டையோ, இதர அணு வெடிபொருள்களையோ தயாரித்து, வெடித்து பரிசோதித்த நாடுதான் அணு ஆயுத வல்லரசு என்று அது கூறுகிறது." (தினமணி-10.03.2006, அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி)

என்னே ஒரு வரையரை!! ஒருவேளை இது முன்னமே தெரிந்திருந்தால் இன்றைக்குப் பல 'வல்லரசுகள்' இருந்திருக்குமோ?

Sunday, March 05, 2006

பனிப்பொழிவு



நேற்றைக்கு சுவிஸ் முழுவதிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பல இடங்களில் சாதனை அளவாக இருந்துள்ளது. இயல்பு வாழ்க்கை, முக்கியமாக சாலைகளில், பெரிதும் பாதிப்படைந்திருந்தது. மரங்களில் பனி இலைகள்!

Friday, March 03, 2006

ஸ்விஸ் தமிழர்கள், கீழ்வெண்மணி

பெர்ன் பல்கலைக்கழகத்தின் இனவியலாளர் டமாரிஸ் லூதி சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களைக் குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளார். அச்செய்திக்கான சுட்டி இங்கே.

கீழ்வெண்மணிச் சம்பவம் என்று எப்போதோ கேட்டதுண்டு. அதைப் பற்றி இன்றுதான் சரியாகத் தெரிந்து கொள்ளமுடிந்தது. (கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.) குற்றமிழைத்தோர் யாரெனத் தெரிந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது!

Thursday, March 02, 2006

கண்காட்சிகள், வாசகர்கள், புத்தகங்கள்

சென்ற ஜனவரியில் கோவை நஞ்சப்பா சாலையில் இருக்கும் சிறைச்சாலை மைதானத்தில் 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' (நிசெபுஹ) புத்தகக் கண்காட்சியொன்றைப் போட்டிருந்தார்கள். 10% விலைக்கழிவு என்று பெரிதாக வெளியில் எழுதிப் போட்டிருந்தார்கள். உள்ளேதான் கூட்டத்தைக் காணோம்! பணியாளர்கள் இருவரைத் தவிர வாசகர்கள் ஒன்றிரண்டுபேர்தான் தென்பட்டனர்.

நிசெபுஹ என்றாலே முன்பெல்லாம் பெரும்பாலும் கம்யூனிச புத்தகங்கள், அக்கால ரஷ்ய மொழியாக்கங்கள், அவர்களது பதிப்பகப் புத்தகங்கள், 'நேஷனல் புக் டிரஸ்ட்' புத்தகங்கள் என்றிருக்கும். ஒரு காலத்தில் பேருந்து ஒன்றை நடமாடும் புத்தகக் கடையாக மாற்றி ஊர் ஊராகச் சென்று புத்தகங்களை விற்றனர்; இன்றும் உள்ளதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சிக்கு அப்படியொருமுறை வந்தபோது சில புத்தகங்களை வாங்கிய நினைவுள்ளது. அப்பேருந்துப் புத்தகக் கடை மிகவும் பிடித்திருந்தது.

தற்சமயம் வழக்கமான புத்தகங்களோடு, பிற பதிப்பக வெளியீடுகளும் நிறைய காணப்பட்டது. கண்காட்சியில் வாங்கியதைவிட நேரு விளையாட்டரங்கத்திலிருக்கும் அவர்களது கடையில்தான் அதிகப் புத்தகங்களை வாங்கினேன். அனைத்தும் ஊரிலேயே உறங்கிக் கொண்டுள்ளது :(

அக்கடைக்கு இரண்டுமுறை சென்றபோதும் மருந்துக்கும் புத்தகம் வாங்குவாரில்லை. இப்படி விற்பனை செய்து எப்படி வியாபாரத்தை நடத்துகிறார்களோ! வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் அங்கிருந்தும் அவற்றின் நிலையைக் கண்டு வாங்க மனம் ஒப்பவில்லை. ஒன்று-'வளம் தரும் மரங்கள்' என்னும் தொகுதி (இராம.கி. அவர்கள் பதிவின் மூலமாக அறிந்து கொண்டது). இத்தொகுதியைப் பல்லாண்டுகளுக்கு முன்பு நிசெபுஹ பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்புகள் வருவதே இல்லை என்று கடையை நிர்வகிப்பவர் சொன்னார். அங்கிருந்த அப்புத்தகங்கள் செல்லரிக்கப்பட்டு, கிழிந்து, பழுப்பேறிக் கிடந்தன. பழையவற்றிற்குத்தான் அக்கதியென்றால் 'நரிக்குறவர்களின் இனவரைவியல்'-க்கு (வெங்கட் பதிவின் மூலம் அறிந்தது) என்ன? இருந்த ஒரே ஒரு புதிய புத்தகமும் அங்கங்கு அழுக்காகிக் கிடந்தது. எப்படி வாங்குவது? கடைசி வரை அப்புத்தகம் கிடைக்கவேயில்லை :(

புதிய புத்தகங்கள் எவ்வாறு அழுக்காகின்றன?
ஒன்று பதிப்பாளர்களிடமிருந்து வரும் கட்டுகளிலேயே கதை ஆரம்பித்திருக்கலாம்.
அப்புறம் வந்த புத்தகங்களைக் கடைக்காரர்கள் பிரித்து வைக்கும்போது.
வைக்கப்படும் இடத்தின் 'அழகால்'.
அங்கு வைக்கப்படும், கையாளப்படும் முறையால்.
வாசகர்கள் தொடும்போதும், புரட்டும்போதும் அவர்களது கைகளிலிருந்து படிவதால்(இரண்டு சக்கர வாகனங்களில் கடைக்கு வருபவர்கள் - அதன் கைப்பிடியில் எவ்வளவு அழுக்கிருக்கும் என்பது கழுவும்போதுதான் தெரியும்! - அப்படியே புத்தங்களைத் தொடும்போது உயவு நெய் கூட புத்தகத்தில் படுகிறது).
....
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரரிடம் கேட்டேன், "ஏங்க இதுக்கெல்லாம் ஒரு பாலித்தீன் உறை மாதிரி ஏதாவது போட்டு வைக்கலாமல்ல? இல்லை, பதிப்பகத்துக் காரங்ககிட்டையாவது சொல்லலாமே?". "எங்களுக்கு வரும் போதே அப்படித்தாங்க வருது" என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

புத்தகங்களையெல்லாம் நன்றாக உறையிட்டு அழுக்குப்படாமல் வைக்கலாம் என்ற அக்கறை பெரும்பாலானோருக்கு இல்லை. கடைக்காரர்களைவிட பதிப்பாளர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காரியம் இது. இப்போதெல்லாம் உலகத்தரத்தில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அவற்றை ஒரு பாலித்தீன் உறையில் இறுகக் கட்டி கடைகளுக்குக் கொடுத்தால் புத்தகங்கள் நன்றாக இருக்குமே. ஒவ்வாரு புத்தகக் கடைக்கும் 'புரட்டும் பிரதி' என்று ஒன்றை இலவசமாகக் கொடுக்கலாம். கட்டப்பட்ட புத்தகங்களுடன் இப்பிரதியும் இருந்தால், மற்ற புத்தகங்கள் நொந்து நூலாகும் நிலை தவிர்க்கப்படும்.

அப்புறம், விஜயா பதிப்பகத்திற்குச் சொந்தமான கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். இங்கும் கூட்டம் சொற்பமே! (சற்று தொலைவிலிருக்கும் துணிக்கடைகளுக்குள் எப்போதும் மூச்சு விடமுடியாத கூட்டம்!!) வாசகர்களின் வசதிக்காக தள வசதிகள் செய்து கொண்டிருந்ததை உரிமையாளர் கூட்டிச் சென்று காண்பித்தார். இவ்வேலைகள் முடிந்துவிட்டால் நிறைய செலவு செய்து வெளியில் கண்காட்சி நடத்த வேண்டியிருக்காது என்று அவர் சொல்லக் கேட்டதாக நினைவு!! கணினி மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பட்டைக் கோடு, வருடி (scanner) போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பக்கம் வந்து பணிசெய்யும் பெண்களிடம் ஒரு புத்தகத்தைக் கேட்க பல நிமிடங்கள் தேடி எடுத்துக் கொண்டுவந்துதான் கொடுத்தார்கள். அடுத்தமுறை இந்நிலை மாறியிருக்கலாம்.

Wednesday, March 01, 2006

வரப் போகிறது அகல ரயில் பாதை!

சென்ற வெள்ளிக்கிழமையன்று (24.02.2006) நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட 'ரயில்வே பட்ஜெட்'டில் உள்ள நல்ல செய்திகளுள் ஒன்று கோவை-பொள்ளாச்சி, பாலக்காடு-பொள்ளாச்சி-திண்டுக்கல் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்படுவதற்காகப் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது. முழுமையாகப் பணம் ஒதுக்கப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொஞ்சம் மகிழ்ச்சியடைவேன். நிறைய மகிழ்ச்சியடைய, இன்னும் ரயில்வே எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட (அப்படித்தான் சிறுவயதில் சொல்லக் கேட்டுள்ளேன்) இப்பாதையில் ஒரு நாளைக்கு சில வண்டிகளே சென்று கொண்டிருக்கும். ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் (எனக்குத் தெரிந்த கோவை வட்டாரத்தில்), மக்களுக்கு ரயில் நிலையம் 'தொலைவில்' என்றாகிவிட்டது. மக்களும் ரயில்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. ரயில் நிலைய ஊழியரும், வண்டி ஓட்டியும் பிரம்பு வளையம் ஒன்றைப் பரிமாறிக் கொண்டு நிறுத்திச் சென்ற வண்டிகளும், நிற்காமலேயே போகின்றன. அவ்வளவுதான், சென்றதினி மீளுமா தெரியவில்லை.

நிற்க. என்னைக் கேட்டால் ரயில்வே நிர்வாகமெல்லாம் இன்னும் பிழைக்கத்தெரியாத அல்லது வருமானத்தில் மேலும் அக்கறை செலுத்தாததாக இருக்கும் நிர்வாகம் என்றுதான் சொல்வேன். உதாரணத்திற்கு, கோவை-பொள்ளாச்சிக்கு இடையே ஒரு நாளைக்கு சென்று வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமானது. பல நேரங்களில் யோசிப்பேன், இவ்வூர்களுக்கிடையில் மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்குமென்று! ரயில்வேக்கும் நல்ல வருமானம், மக்களுக்கும் செளகரியம், பேருந்துப் புகைகளால் ஏற்படும் சூழமைச் சீர்கேடு கொஞ்சமாவது குறையும், இத்யாதி.

இன்றிருக்கும் பொருளாதார நிலையில் பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நல்ல முனைப்போடு தொலைநோக்குள்ள நிர்வாகமும், சிறந்த திட்டமிடலும், அதனைச் செயற்படுத்துதலும்தான். இப்போதைக்குக் கனவு காண்போம்!

Monday, February 27, 2006

பறவையின் மரணம்

தேசாந்திரி என்னும் தொடரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். சென்ற இரண்டு வாரங்கள் வாசித்தேன். இவர் நிறையப் பயணம் செய்துள்ளார் போலுள்ளது. அதன்மூலம் கிடைத்த பல்வேறு அனுபங்களை எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். இவர் எழுதும் விதமோ என்னவோ, வாசிக்க நன்றாக உள்ளது.

முன்பொருமுறை எப்போதோ வாசித்த கட்டுரையில் மதுரை அருகே ஒரு மலைக்குகைகளில் கண்ட சமணப் படுக்கைகள் பற்றி எழுதியிருந்தார். ஒரு வேரின் சாறு, கல்லைப் பொடியாக்கச் செய்யும் விந்தையைப் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாரம் பறவைகளைப் பற்றிய தனது அனுபங்கள் சிலவற்றைச் சொல்கிறார். அதில் குக்குறுவான் ஒன்று. "குக்குறுவான் மிக அழகான பறவை. குருவி போன்று இருக்கும். மேல் பாகம் பச்சையாகவும், அடியில் இளமஞ்சளும், கால்கள் லேசான சிவப்பு நிறத்திலும் இருக்கும். இடைவிடாமல் கூவும் இப்பறவை தலையை உதறி அசைப்பதைப் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்"-என்கிறார்.

குக்குறுவானில் உள்ள மூன்று வகைகளைப் (இன்னும் கூட இருக்கலாம்) பற்றி 'தமிழ்நாட்டுப் பறவைகள்' என்ற புத்தகத்தில் காணலாம். காட்டுப் பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet, Megalaima zeylanica), சின்னக் குக்குறுவான் (White-Checked Barbet, Megalaima viridis) மற்றும் செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet, Megalaima haemacephala). மேற்குறிப்பிட்டதில் கடைசியில் வரும் குக்குறுவானைப் பற்றித்தான் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். இப்பறவையை நேரில் கண்டதாக நினைவில்லை. நாம் காணும் பறவைகள், தாவரங்களின் பெயர்கள் எல்லாவற்றையும் அறிந்தா வைத்திருக்கிறோம்! ஏதோ ஒரு பறவை, செடி என்று பொதுமைப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகிறோம்.

நான் பணிபுரியும் அலுவலகம் பெரிய கோபுரத்தையுடைய(tower) கட்டிடத்தில் உள்ளது. அதன் பக்கச் சுவர்களின் பெரும்பாலான பகுதியைக் கண்ணாடிகளே ஆக்கிரமித்திருக்கும். சென்ற வருட இறுதியில் ஒருநாள் காலையில் தொப்பென்று ஏதோ கீழே விழுந்ததைப் போலிருந்தது. கண்ணாடி வழியாக வெளியே பார்க்கையில் அது ஒரு சிறு பறவை (பெயர் தெரியவேண்டுமே!). வேகமாகப் பறந்து வந்து கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்திருக்க வேண்டும். கண்ணாடி ஜன்னலைத் திறக்கமுடியாத அமைப்பு வேறு. பரிதாபமாகக் கிடந்த அப்பறவையைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. உயிர் இருந்தது; உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். காலோ வேறொரு திசையில் மடங்கியிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தது. பிறகு சிறிது நகர்ந்த மாதிரி தெரிந்தது. சற்று நேரம் கழித்துப் பார்க்கையில் அது இருந்த சுவடு மட்டும் தான் தெரிந்தது. ஒருவேளை நிலைதிரும்பி எழுந்து பறந்திருக்கலாம்.

பறவையின் இயற்கையான மரணத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்! எங்கேயோ போய் எப்படியோ சாகிறது.

Sunday, February 26, 2006

நன்றி!

சன்னாசி, தாணு, தங்கமணி, தேன் துளி ஆகியோருக்கு முதலில் நன்றிகள் - இந்தியா செல்வதற்கு முன் (சென்ற டிசம்பர் கடைசி வாரத்தில்) எழுதியிருந்த பதிவில் (அழிக்கப்பட்டுள்ளது, பிறகு சொல்கிறேன்) வாழ்த்துச் சொன்னமைக்கு. அதை இவ்வளவு தாமதமாகச் சொல்வதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரில் இருந்தபோது மின்னஞ்சல்களைப் பார்க்க மட்டுமே இணையப்பக்கம் ஓரிரு முறை வரமுடிந்தது. திரும்பி வந்து சில வாரங்களாயினும் வேறு வேலைகள், ஆர்வமின்மையே அதிகமான இருந்தது.

சென்ற வார இறுதியில் தமிழ்மணத்தைப் பார்த்தபோது முற்றிலும் மாறியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன். அவ்வப்போது ஒருசில பதிவுகளை மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. இன்று எப்படியோ மனது வந்து ப்ளாக்கர் அடைப்பலகையில் மாற்றங்களைச் செய்து தமிழ்மணத்தில் இணைந்து கொண்டாயிற்று. தொடர்ந்து எழுத முயல்வேன்.

அழிக்கப்பட்ட அப்பதிவைப் பற்றி: என்னுடைய பதிவை இன்றுதான் ஒழுங்காகத் திறந்து, பின்னூட்டங்களைப் பார்த்தேன். அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'போலி'யின் கைவரிசைதான். பிப்ரவரி 14ந் தேதியன்று படிக்க முடியாத ஒரு பின்னூட்டத்தை இட்டுச் சென்றுள்ளது. காரணம், நான் டோண்டு அவர்களின் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேனாம்!! எப்பொழுது என்று எனக்கே தெரியாது! அப்படியே இட்டிருந்தாலும், அதற்காக இப்படியா?! மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுகள், பாவம்!

Tuesday, November 22, 2005

எம்.எம்.எஸ்-ஸில் பயணச் சீட்டு!

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பயணச் சீட்டுகளை எம்.எம்.எஸ் மூலமாகப் பெறும் வசதியினை ஸ்விஸ் ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் முதலில் ஒருமுறை தங்களது எம்.எம்.எஸ் கொண்ட செல்பேசி, செல்லுபடியாகும் கடனட்டை போன்ற விவரங்களை ரயில் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எந்நேரமும் இயங்கும் தொலைபேசி எண்ணிற்கு (இதற்குத் தனிக் கட்டணம் என்பது வேறு) அழைத்துச் சொன்னால் வேண்டிய பயணச் சீட்டு செல்பேசிக்கு எம்.எம்.எஸ் செய்தியாக அனுப்பப்பட்டுவிடும். அதில் வரும் இருபரிமாண பட்டைக் கோட்டை(2D-barcode), பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் தங்களிடமுள்ள விசேட உணரி மூலம் சரிபார்த்துக் கொள்வர். பயணச் சீட்டிற்கான தொகை கடனட்டை மூலம் வசூலித்துக் கொள்ளப்படும். ஆரம்ப கட்டமாக 780 ரயில் இணைப்புகளுக்கு இவ்வசதி வழங்கப்படும் என்கிறார்கள். நவீனத் தொலை நுட்பியலைக் கொண்டு மற்றுமொரு சேவை!

[எம்.எம்.எஸ் - செல்பேசிகளின் வழியாகப் பல்லூடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நுட்பியல். இதன் மூலமாக உரைச் செய்தி, படங்கள், ஒலி, ஒளி முதலானவைகளை அதனை ஆதரிக்கும் செல்பேசிகளில் அனுப்பவும் பெறவும் முடியும்.]

ரிப்பன் கட்டிடம்

கட்டிடம் மட்டும்தான் பார்க்க நன்றாக உள்ளது. மற்றவை பரிதாபம்!

Sunday, November 20, 2005

ஊழலை மறைக்கப்போகும் சட்டமா?

பின்வரும் செய்திக்கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் வந்துள்ளது:

பல பொதுத்துறை நிறுவனங்களின் பித்தலாட்டங்களை புட்டுபுட்டு வைத்து, பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் முகங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிய, தணிக்கைத் துறை அதிகாரிகள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் வேலைக்கே வேட்டு வைக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது என்பதுதான் காரணம்.

‘இனிமேல் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் தணிக்கையை தனியார்கள் மூலமே முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வரவிருக்கும் சட்டம்.

‘‘ஊழலுக்குத் துணைபோகும் இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. இது நிறைவேறினால் மத்திய & மாநில அரசுகளில் நடைபெறும் ஊழல்கள் இனி வெளியே தெரியாமலே போய் விடும். இப்படியரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து ஊழலுக்குத் துணைபோகத் துடிக்கும் இந்த ஆட்சியை பதவியிலிருந்து இறக்கு வோம்...’’ என்று அதிரடி முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி.யும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ரூப்சந்த் பால். இவர்தான் மத்திய & மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார்.

ரூப்சந்த் பால் தலைமையில் அணிதிரண்டிருக்கும் தணிக்கைத் துறை அதிகாரிகள், வரவிருக்கும் புதிய சட்டத்தினால் ஏற்படும் கேடுகளை பொது மக்களுக்கு விளக்கும் வேலையில் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். அந்த சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ‘அகில இந்திய வணிக தணிக்கை அதிகாரிகள் சங்க’த்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். நம்மிடம் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் ஆக்ரோஷமாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே...

‘‘இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாக 1,230 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தணிக்கை செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாடு முழுவதும் 900 தணிக்கை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். இவ்வளவு அதிகமாகப் பணம் புழங்கும் இடத்தில் அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள்தான் தணிக்கை செய்ய வேண்டும். ‘இந்த அதிகாரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ கட்டுப்படுத்தக் கூடாது. அது சுதந்திரமான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் தணிக்கை முறை, வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதாக இருக்கும்’ என அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் கம்பெனி சட்டத்தின் 619 பிரிவை ஏற்படுத்தினார்.

இப்போது இந்த சட்டத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பதிலாக புதிய கம்பெனி சட்டத்தை அறிவிக்கப்போகிறது. இந்த புதிய சட்டப்படி பார்த்தால் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் எந்த ஒரு தனியார் தணிக்கை நிறுவனத்தையும் தங்கள் கணக்குகளை சரிபார்க்க அமர்த்திக் கொள்ளலாம். இதன்மூலம் இதுவரை இந்திய மக்களின் பிரதிநிதிகளாக பொருளாதாரத்தின் கண்காணிப்பாளர்களாக வலம்வந்த நாங்கள், வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் வெளியில் தெரியாமலே போய்விடும்.

இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களையெல்லாம் கண்டுபிடித்தது எங்கள் கண்கள்தான். சுர்ஹித் லாட்டரி ஊழல், பீகாரைக் கலக்கிக் கொண்டிருக்கும் மாட்டுத் தீவன ஊழல், போஃபர்ஸ் ஊழல், யூரியா ஊழல், பழைய வீராணம் ஊழல், டான்ஸி நில விற்பனை முறைகேடு, கலர் டி.வி. ஊழல் என எல்லாவற்றையும் கண்டுபிடித்தது நாங்கள்தான்.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும். சரியாகச் சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

தனியார் தணிக்கை முறையில் என்னென்ன முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம். அண்மையில் மூடப்பட்ட ‘குளோபல் டிரஸ்ட் வங்கி’ தான் அதற்கு சரியான உதாரணம். இந்த வங்கியின் 2003-04ம் ஆண்டுக்கான தணிக்கையை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த வங்கியாக, பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் வங்கியாக குளோபல் டிரஸ்ட் வங்கியை வர்ணித்திருந்தது. ஆனால், அடுத்த வருடத்திலேயே வங்கியின் நிதி நிலைமை படுபாதாளத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் அரசியல்வாதிகளின் துணையோடு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகள் இனி சுலபமாக வாங்கி விட முடியும். எப்படியென்றால் தனியார் முதலாளிகள் கண் வைக்கும் பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தணிக்கை செய்து அதையே காரணமாகக் காட்டி நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராக இருக்கும். இடதுசாரிகள் எவ்வளவுதான் கத்தினாலும் விற்கத் துணிபவர்கள் தணிக்கை அறிக்கையை காரணம் காட்டிப் பேசுவார்கள் என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்கள்.

பிறகு, எல்லாம் போகட்டும், எங்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிபோட முடியவில்லை என்பதுதான். இதன் அர்த்தம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நேர்மையற்ற முறையில் குறுக்கு வழிகளை மட்டுமே கடைப்பிடித்து தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும். இதற்காக முறை கேடாக செலவிடப்படும் தொகைக்கு கணக்கு வழக்கு இருக்காது. காரணம் அவையெல்லாம் தனியார் பணம். ஆனால், இந்திய பிரஜைகளின் வரிப்பணம் சம்பந்தப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அப்படியொரு குறுக்கு வழிகளில் பயணம் செய்ய எங்கள் தணிக்கைத்துறை அனுமதிக்காது. காரணம் இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டின் இமேஜும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறோம்... ஈரானி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி கொடுத்த பரிந்துரையின்படிதான் மத்திய அரசு இப்படியரு முடிவு எடுப்பதாக அறிவிக்கிறார்கள். ஈரானி என்பவர் யார் என்றால் மத்திய அரசுக்குச் சொந்தமான வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முறைகேடாக வாங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர் என்று எங்களால் விமரிசிக்கப்பட்டவர்.

உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்பதை பொதுமக்கள்தான் யோசிக்க வேண்டும்’’ என்று கொதித்து முடித்தார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பவர் மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன். இவர் ‘பொதுத்துறை நிறுவனங்களின் நாடாளுமன்ற கமிட்டி’ யின் தலைவராகவும் இருந்தவர். ‘‘ஒட்டு மொத்த இந்தியர்களும் வரவிருக்கும் மோசமான ஒரு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய புனிதப் பணியை செய்ய வேண்டிய வேளை இது’’ என்று தனது பிரசாரத்தைத் துவக்கி இருக்கிறார் செழியன்.

Wednesday, November 16, 2005

2006 உலகக் கோப்பை கால்பந்தில் ஸ்விஸ்

போன வார சனிக்கிழமை ராத்திரி சுமார் 8.30 மணி வாக்குல சும்மா ஒரே ஒரு விநாடிக்கு ஓர் அதிர்வு. முந்தின வருஷமும் ஒரு தடவ ராத்திரியில லேசா வீடே ஆடுச்சு, இந்தத் தடவை அவ்வளவுக்காத் தெரியல. இப்பெல்லாம் அடிக்கடி பூமிக்கடியில ஏதோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த ஆட்டம் முடிஞ்ச பின்னால அன்னைக்கு பெர்ன்-ல நடந்த ஸ்விஸ்-துருக்கி கால்பந்தாட்டத்தை தொ.காவுல பார்த்து முடிச்சப்போ, முதல் ஆட்டத்தைப் பத்தின பயம் கொஞ்சம் மறந்து போயிருந்தது. ஸ்விஸ் ஆளுக நல்லாவே ஆடி ஜெயிச்சிருந்தாங்க. அரங்கத்துல ஒரே கொண்டாட்டமா இருந்தது. அங்கயும் நிலம் ஆடுச்சான்னு தெரியல, இவங்க ஆட்டத்துல ஒரு வேள நிலம் அடங்கியிருந்துச்சோ என்னவோ! :)

அன்னைக்கு ஆடுனது முக்கியமானதுன்னாலும், இன்னைக்கு நடந்த போட்டிதான் இந்த ரெண்டு பேர்ல யாருக்கு அடுத்த வருஷம் ஜெர்மனியில போய் ஆடுற வாய்ப்பு இருக்குங்கறதத் தீர்மானிக்கறது. வழக்கமா போட்டி ஆரம்பிக்கற நேரத்துல தொ.காவப் போட்டுக்கலான்னு விட்டுட்டு அப்புறம் வந்து போட்டா, ஒரு மணி நேரம் ஆட்டமே முடிஞ்சிருந்தது :( இஸ்தான்புல்லுல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாலயே ஆரம்பிச்சுட்டாங்கங்கறது அப்பத்தான் பட்டது. திரையில முதல்ல பாத்தது ஸ்கோர் பட்டிதான், பகீர்னுதான் இருந்தது (ஏற்கனவே இன்னைக்கு இந்தியா தோத்துப்போனதக் கேட்ட சோகம் வேற, அதுகூட இதுவும் சேந்துக்கிச்சு). துருக்கி 3, ஸ்விஸ் 1 - ன்னு இருந்தது. இன்னும் இருக்கற முப்பது நிமிஷத்துல ஏதாவது அதிசயம் நடக்கப் போகுதான்னு பாத்துக்கிட்டு இருக்கறப்போ, முடியறதுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னால ஸ்விஸ் அணிக்காரங்க இன்னொரு கோலைப் போட்டுட்டாங்க, அரங்கத்துல ஈ ஆடல. அப்புறம் கடைசி நிமிஷத்துல துருக்கியும் ஒன்னைப் போட்டு 4-2க்கு கொண்டு வந்துடாங்க. இருந்தாலும் அவங்களுக்கு பழைய பந்தயங்களோட கணக்குப்படி இந்தப் போட்டில 3-0 ன்னு ஜெயிச்சாத்தான் மேல போகமுடியும். ஆனா தோத்தாலும் (ஆனா இவ்வளவு நாளா தொடர் முழுசும் நல்லாவே கஷ்டப்பட்டுத்தான்) ஸ்விஸ் பசங்க உலகக் கோப்பைல ஆடறதுக்கு முன்னேறிருக்காங்க. இந்த வாட்டி உலகக்கோப்பைல ஆடப் போறது அவங்களுக்கு எட்டாவது தடவையாம். ஜெயிக்கறாங்களோ இல்லையோ அதுக்குள்ள நுழையறதே பெரிய விஷயம்தான். வாழ்த்தறோம்!

Monday, November 14, 2005

சிறை-விவசாயி

என்னய்யா நடக்கிறது நாட்டில்?! ஆயிரம் பேர் சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தங்களுக்கு வேண்டியவர்களை 'விடுவித்துச்' செல்வதென்பதை என்னவென்று சொல்வது? தாக்குதல் திட்டங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது அதுபோன்றவைகளைக் காட்டும் சினிமாக்கள் தோற்றுவிடவேண்டும் போலுள்ளது. உளவு அமைப்புகள் என்பதே அங்கு இல்லையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா? பிகார் போன்ற சில மாநிலங்களில் மக்களை வளரவிடாமல் தடுக்கும் சமூக நோய் ஆழப் பரவியுள்ளது. அவைகளுக்குத் தீர்வு காணும் வரையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டேதானிருக்கும்.

திறந்து கிடந்த சிறைக்குள்ளிருந்து தப்பிச் செல்ல விரும்பாமல் அங்கேயே சிலரும், தாக்குதலின் போது உயிர் பிழைக்கத் தப்பி விட்டு மீண்டும் சிறைக்கே வந்தோரும் இருக்கிறார்களாம். இதை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

-----------

ஒரு விவசாயிதான் விவசாய நிலத்தை வாங்க வேண்டுமென்று மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமுள்ளதாம், இன்றுதான் கேள்விப்படுகிறேன். "அமிதாப்பச்சன், நீங்கள் நடிகரா, விவசாயியா? முதலில் தெளிவுபடுத்துங்கள்". பாவம் அமிதாப், இப்படியெல்லாம் கஷ்டமான கேள்வியைக் கேட்கலாமா? ஒருவர் தான் செய்யும் தொழிலை நிரூபிக்கச் சான்றிதழைக் கூடப் பெறலாமோ! ஒன்னும் தெரியமாட்டேங்குது போங்க :(

Tuesday, November 08, 2005

வெண் பாஸ்பரஸ்

தானாக எரியக்கூடிய வேதிப் பொருள் - போர்களங்களில் ஒளியை ஏற்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும்.
உடம்பில் பட்டால் தோலும் சதையும் எரிந்து விடும்.
இப்படிப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்ட ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தம் உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் பெரியண்ணன் கையெழுத்திடவில்லை.

ஆகவே, அதை உபயோகப்படுத்தாமல் விடுவானேன். யார் எரிந்தாலென்ன, செத்தாலென்ன, யார் கேட்பது? முடிந்த வரை அழித்து விட்டு, அழித்ததற்கான தடயங்களையும் அழித்துவிட்டால் அப்புறம் அழிவைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/4417024.stm

Sunday, October 09, 2005

துயரங்களும் அவலங்களும்

இமாலயப் பகுதியில் நடந்த நிலநடுக்கம் மக்களை அளவிட முடியாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஜீவன்களைக் காணும்போது மனம் பதைக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீட்புதவி சென்றடைவதற்குள் இழப்புகள் இன்னும் அதிகமாகக் கூடும். வெறும் கையால் எவ்வளவு செய்துவிட முடியும் அவர்களால்? அமுங்கிய பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்து ஓலக்குரல் கேட்பதாகச் சொன்னார்கள், மிகவும் வருத்தமாயிருந்தது.

க்வடமாலா, எல்சல்வடார் முதலான மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றிரண்டு நாட்களாகப் பெய்துவரும் பேய்மழையில் ஒரு கிராமமே நிலச்சரிவில் புதைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆற்று வெள்ளத்தின் சீற்றத்தைப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கொடுமையாக உள்ளது.

சமீப காலங்களில் நடக்கும் இயற்கையின் சீற்றங்களைப் பார்க்கும்போது உலக நாடுகள் அனைத்தும் மீட்புதவி மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் தயாராக வைத்திருக்க வேண்டும் போலுள்ளது.

பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கிவிட்டது போலுள்ளது. இம்முறை ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில். சகட்டு மேனிக்கு கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் போன்றவற்றைப் பெரிய குழிகள் தோண்டி உயிருடனோ, பாதிகொன்றோ அதற்குள் போட்டுத் தீமூட்டிச் சாகடித்துக் கொண்டுள்ளனர். சைபீரியாவிலிருந்து மேற்கு நோக்கிப் பறக்கும் பறவைகளால் அமெரிக்கக் கண்டத்தில்கூடப் பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

மொராக்கோ வழியாக ஸ்பெயின் நாட்டுச் சார்ந்த பகுதிக்குள் நுழைய முற்பட்டு இயலாமற்போனவர்களை, மொராக்கியக் காவலர்கள் பேருந்துகளில் அள்ளிச் சென்று பாலைவனத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போய்விட்டுக் கொண்டுள்ளார்களாம். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, எங்காவது ஏதாவது வேலை பெற்றுவிடும் நோக்கோடு, கடல் வழியாக உயிரைப் பணயமாக வைத்துப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகளுக்கு வர சதா முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு அது எட்டாக் கனியாகவே போய்விடுகிறது. எல்லாவற்றையும் தாண்டி வந்து ஐரோப்பிய நாட்டுக் காவலர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் வந்த நாட்டிற்கே ஏற்றிவிடப்படுபவர்கள் ஏராளம்.

ஓரிரு நாட்களாகச் செய்திகளில் அதிகம் தென்படுபவை இவைதான். ம்...

Thursday, September 29, 2005

தோற்ற மயக்கங்களோ?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com
நடுவுல இருக்கற தூணப் பாருங்க!

Image hosted by Photobucket.com
இந்தப் படத்துல நெறைய முகங்கள் இருக்குங்க. 4-5 முகங்களப் பாக்கறவங்க சாதாரணவங்களாம். அப்படியே 8, 9-ன்னு ஒவ்வொன்னுக்கும் ஒன்னைச் சொல்றாங்க. அத்தனையையும் பாத்திருக்கறவங்க அதிஉன்னிப்பா கவனிப்பவராம். எத்தனைன்னு கேக்கறீங்களா? இன்னொரு தடவை எண்ணிப்பாத்துக்குங்க. எண்ணிட்டீங்களா? ஒரு டசனுக்கு ஒன்னு கம்மியா இருந்ததுங்களா?

தலைப்பு உபயம்: முண்டாசுக்கவி

Tuesday, September 27, 2005

பட்டாம்பூச்சி

பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
நல்ல நல்ல கதைகள் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
வண்ண வண்ண படங்கள் பேசும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
அறிவை வளர்க்க அன்பாய் உதவும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பாட்டு சொல்லி பாடச் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
புதுமை உலகம் இனிமை உலகம்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி....

என்ற இனிமையான பாடலுடன் கோயம்புத்தூரிலிருந்து 'தமிழில் முதன்முறையாக' பட்டாம்பூச்சி என்ற பெயரில் 'சிறுவர்களுக்கான சி.டி.மாத இதழ்' ஒன்று சென்ற ஆண்டில் (அல்லது அதற்கு முந்தைய ஆண்டில்) ஆரம்பிக்கப்பட்டது. வெளிவந்த சில மாதங்களிலேயே நின்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாங்குவோரின்மையாலா இல்லை வேறேதும் காரணமா என்று தெரியவில்லை. தமிழுலகில் இதுபோன்று ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் விடப்படும் முயற்சிகள் ஒன்றிரண்டல்ல. இருந்தாலும் நல்ல முயற்சி ஒன்று தொடர்ந்திருக்கலாம்.

பட்டாம்பூச்சி இதழ் 2-ல், கிராமத்துப் பாட்டி குழந்தைகளுக்கு குட்டிக் கதை ஒன்றைச் சொல்கிறார். அக்கதையில் மீனிடம் அகப்பட்ட 'நெலப்புழு' (மண்புழு அ நிலப்புழு), மீன்களைப் பார்த்து இவ்வாறு சொல்கிறதாம்:

வாரீர் வாரீர் என்னாலே
வந்து நிற்கிறீர் முன்னாலே
சாகப் போகிறே என்னாலே
செத்துக் கிடக்கிறேன் உன்னாலே

Sunday, September 25, 2005

நின்னைச் சரணடைந்தேன்!

எங்கோ தூரத்தில் மெதுவாக ஒலிப்பது போன்று அடுத்த அறையில் ஒலிக்கவிடப்பட்டிருந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமித்துக் கொண்டது. தாக்கியது கவியா? பாடலா? இசையா? இல்லை அனைத்தும் சேர்ந்தா?

பாடலைக் கேட்க...


நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

5.
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

[நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்]

Monday, September 19, 2005

செம்மறியாட்டு உரோமம்

ஜூரிக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத் தூரத்திலே (ரயிலில்) இருக்கும் ஜெர்மனிக்குச் செல்ல கொஞ்சம் மெனக்கெடவேண்டியுள்ளது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிற்காவது விசா இல்லாமல் போக முடியுமா என்று தெரியவில்லை. விசா வாங்குவதற்கு ஒரு நாள் வேலையைக் கெடுத்துக் கொண்டு பெர்ன் நகருக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவும் சும்மா நினைத்த போதெல்லாம் சென்றுவிட முடியாது. பிரத்யேகத் தொலைபேசி எண் ஒன்றிக்கு அழைத்து நேரம் வாங்க வேண்டும். இத்தொலைபேசியின் மறுமுனையில் பேசுபவருக்கு அவரை அழைப்பவரிடமிருந்துதான் சம்பளம் பெற்றுத் தருவார்களோ என்னவோ (சும்மா ஒரு பேச்சுக்கு), அவ்வெண்ணை அழைக்க ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட CHF 3.15 (~$2.5) ஆகுமென்றால் என்னவென்பது! அழைத்தவுடன் விரைவில் நேரம் கிடைத்து விட்டால் நன்றாக இருக்குமா? அதனால் அழைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் நேரத்தைக் கொடுப்பார்கள்!

சென்ற ஜூன் மாதம் ஒருநாள் அதே தூதரகத்திற்குச் சென்றிருந்தபோது உப்புப் பெறாத காரணத்திற்காக விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். என்னுடைய கவனக் குறைவால் அவர்கள் கேட்ட ஒரு கடிதம் விண்ணப்பத்துடன் இணைக்காமல் விடுபட்டு விட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் தொலைநகல் மூலம் அக்கடிதத்தை உரியவர்களிடமிருந்து பெற்றுத் தர உறுதியளித்ததைக் காதில்கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் சாலையோரம் நின்று விண்ணப்பங்களைச் சரிபார்த்து மக்களை உள்ளே அனுப்பும் கணவான் ஒருவர். விளைவு, அடுத்த நேரம் கிடைக்கும் வரை, அதாவது மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அன்றே விசா வாங்கிக் கொண்டு மறுநாளே ஜெர்மனி போகுமளவிற்கு தலை போகும் வேலையொன்றும் இல்லைதான்; என்றாலும் விசா வாங்குவதற்கான நடைமுறைகள் சில சமயங்களில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.

அனில் அம்பானிக்கும், ஆனந்த மகிந்திராவிற்கும் ரஷ்யா விசா கொடுக்க மறுத்துவிட்டது என்ற செய்தியை நேற்றைய தினமணியில் படித்த போது, முன்பு ஏற்பட்டிருந்த தேவையற்ற உளைச்சலெல்லாம் கேலிக்குரியதாகிவிட்டது. அப்பேர்ப்பட்டவர்களுக்கே விசா மறுக்கப்படும் போது நம் போன்ற சாதாரண ஆசாமிகளெல்லாம் எம்மாத்திரம்!

சென்ற ஜூலை ஒன்றாம் தேதி கூப்பிட்டிருந்ததற்கு இன்றைக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். இம்முறை அவர்கள் கேட்டதெல்லாம் சரியாக இருக்க விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

பெர்ன் நகரில் (இங்கு எல்லா இடத்திலுமே) குளிராகவே இருந்தது, மேகமூட்டம் வேறு. தூதரகத்திலிருந்து திரும்பி வரும்போது சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் சுமாரான அளவில் இருக்கும் திறந்த வெளியில் கூட்டம் கொஞ்சம் இருப்பதைப் பார்த்து பேருந்திலிருந்து அங்கேயே இறங்கிக் கொண்டேன். வழக்கமாகக் நடக்கும் வாரச் சந்தைகளுக்குக் கொஞ்சம் மாறாகவே இருந்தது. பெரியவர்கள் அமர்ந்து சூடாகப் பருகிக் கொண்டிருந்த கூடாரம், பால் பொருட்களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வகை வகையான Cheese-களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வேலி போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளும் பன்றிகளும், உருளைக் கிழங்கை மண்பெட்டியொன்றில் போட்டு அதைத் தோண்டி எடுக்கும் சிறு போட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் சிலர், அந்தக் குளிரில் உட்கார்ந்து கொண்டு கம்பளியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் என்று பல காட்சிகள். பெர்ன் வட்டார விவசாயம், கால்நடை முதலானவை சார்ந்த தொழில்களை முன்னிருத்தும் கண்காட்சி போலிருந்தது. கேமராவையும் எடுத்துக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது.

கண்கவரும் நாட்டுப் புற உடையணிந்த இரு விவசாயிகள், செம்மறியாடு ஒன்றின் கால்களைக் கட்டி மேசையின் மீது படுக்க வைத்து முடிவழிக்கும் இயந்திரமொன்றில் சர்சர்ரென வழித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் காண மக்களுக்கு ஒரு காட்சியானது அது. கொஞ்ச நேரத்தில் முடி அனைத்தையும் இழந்து வெறும் தோலுடன் மற்ற ஆடுகளுக்கு மத்தியில் போய் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு குளிரில் அதற்குக் குளிராதா என்ற கேள்வி மனதை ஆக்கிரமித்தது. அங்கிருந்தவரிடம் மெல்ல விசாரிக்க, ஒவ்வொரு வருடமும் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் செம்மறியாடுகளின் உரோமம் வழிக்கப்படவேண்டும்; இல்லையென்றால் அவை நோய்த்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கமளித்தார். அப்படியும்கூட இருக்கிறாதா என்று ஆச்சரியத்துடன் இடத்தைக் காலிசெய்து கொண்டு வந்தேன். செம்மறியாட்டு உரோமத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வழிசெய்த தூதரகத்தாருக்கு நன்றி!