படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, January 15, 2004

போகி - பொங்கல்

ஊரில் வழக்கமாக போகிப் பண்டிகை நாளுக்கு முன்பே வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடித்து முடித்திருப்பார்கள். இந்நாளன்று முக்கியமான ஒரு வேலை வீட்டிற்குக் காப்பு கட்டுவது. அக்கம்பக்கம் இருக்கும் வேப்ப மரங்களுக்கு வாயிருந்தால் அழுதே விடும், அந்த அளவிற்கு அதன் சிறு கிளைகள் ஒடிக்கப்பட்டுவிடும். வேப்ப இலைகளோடு பூழைப் பூக்குச்சிகள் வெள்ளையடித்த வீடுகளின் ஓட்டு இடுக்குகளில் அந்தி சாயுமுன் சொருகப்பட்டுவிடும். மாலை ஒவ்வொரு வீட்டிலும் வாசலை சாணத்தால் மெழுகி வண்ணக் கோலங்களால் நிரப்புவார்கள். வருடங்களாயிற்று இவற்றையெல்லாம் பார்த்து!

இப்போது போகிப் பண்டிகையைக் கொண்டாடுவதாகச் சொல்லிக் கொண்டு ரப்பர் டயர்கள், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை எரித்து விமானப் போக்குவரத்தையே சற்று பாதிக்குமளவிற்கு செய்துவிட்டதாம் சென்னையில் ஒரு கூட்டம்! (நேற்றைய thatstamil.com-ல் வந்த செய்தி). அபத்தங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

பொங்கல் நாள் பெரும்பாலும் வெறுமனே கழியும், இல்லையென்றால் உறவினர்/நண்பர் யாராவதின் தோட்டத்திற்கு மாட்டுப் பொங்கல் கொண்டாட பயணிப்போம். இந்நாளை ஒட்டிய பல நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

No comments: