படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, June 24, 2005

தலைவர்களின் எழுத்தும் பேச்சும்

அனாமிகாவின் பசித்திரு! விழித்திரு!! பதிவைப் படித்ததும் அண்மையில் பத்ரி எழுதியிருந்த சத்யம் ஏவ ஜயதே பதிவு நினைவிற்கு வந்தது. அதில், இந்நாளைய அரசியல் தலைவர்கள் யாரும் அவ்வளவாக எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எழுத முடியாத பின்னூட்டத்தை இங்கு இட்டுவைக்கிறேன்.

அறிவுசார் விவாதங்கள், கருத்துகளை இக்கணவான்கள் யாரும் நினைக்கிறார்களா என்றே தெரியவில்லை; பிறகுதானே பேச்சும் எழுத்தும். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் தலைவர்களின் பேச்சுகள் கருத்து செறிவானவையாகவும், மக்களுக்குப் பயனுள்ளவையாகவும் இருப்பதாகக் கேட்டுள்ளேன். சுருக்கெழுத்து கற்றுக் கொள்ளச் சென்ற காலங்களில், அங்குள்ள ஆசிரியர் மூத்த மாணவர்களுக்கு நேரு முதலான தலைவர்களின் நாடாளுமன்றப் பேச்சைப் புத்தகங்களிலிருந்து பயிற்சிக்கு வழங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது அப்பேச்சுகளைப் பற்றியும் சிலாகித்துச் சொல்வார். இப்போதுள்ள பல நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி யாவரும் அறிந்ததே! இவர்களிடமிருந்து எந்தப் பேச்சை, எழுத்தை எதிர்பார்ப்பது?

அதேபோல நம்நாட்டு நிறுவனத் தலைவர்களின் நிலைமை எப்படியோ?!

Wednesday, June 22, 2005

ஸ்விஸ் ரயில் வலை ஸ்தம்பிப்பு

அலுவலகத்திலிருந்து இன்று மாலை வீடு வர கொஞ்சம் தாமதமானது. பேருந்திலிருந்து இறங்கியதும் பார்த்தால் அருகாமையிலிருந்த பேருந்து மற்றும் ட்ராம் நிறுத்தங்களில் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில், ட்ராமின் தடத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பிரச்சனை சரியாகும் வரை (ஒரு சில மணி நேரங்கள்) அதன் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, ட்ராமிற்கு பதிலாக பேருந்துகளை இயக்குவார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் விபத்து நடந்திருக்குமோ (அப்படியொரு விபத்தும் அப்பாதையில் நடந்ததாக இதை எழுதுவதற்குச் சற்று முன்னர் நண்பரொருவர் தொலைபேசியில் தெரிவித்தார்) என்று நினைத்துக் கொண்டே சாலையைக் கடந்து கொண்டிருக்க இரயில் நிலையத்தின் ஒலிபெருக்கியில் ஏதோ சொல்லி முடித்திருந்தார்கள்.

வீடு வந்த சேர்ந்த சில மணி நேரங்கள் கழித்து இணையத்தில் செய்திகளைப் பார்த்தபோதுதான் விதயமே தெரிந்தது. மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறின் காரணமாக முழு ஸ்விஸ் ரயில் வலையும் ஸ்தம்பித்து விட்டது. இங்கு மின்தடை கேட்டறிந்திராத ஒன்றால், இச்செய்தி ஆச்சரியமளித்தது. மின்கோளாறிற்கான காரணங்களை வரும் நாட்களில் அலசிக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடுவார்களென்றாலும், இன்றைய பிரச்சனையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருங்கே பாதிக்கப்பட்டுவிட்டனர்-அதுவும் வேலை முடிந்து வீடு செல்லும் நேரத்தில்! 20:00 மணி வாக்கில் முதல் இரயில் ஓடத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இப்பிரச்சனையின் பாதிப்பு நாளை (காலை) வரை இருக்கக்கூடும்.

இந்நாட்டுப் போக்குவரத்தில் இரயில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. இங்குள்ள இரயில் அமைப்பானது நம்பகத்தன்மை, காலந்தவறாமை, நேர்த்தித்திறன் முதலானவைகளுக்குப் பெயர்பெற்றது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே!

Tuesday, June 21, 2005

பூங்காவில் நேற்று

ஜூரிக் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் நேற்று எற்பாடு (14:00-18:00 வரை உள்ள நேரம்) எடுத்த படங்களில் சில:

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Sunday, June 19, 2005

தமிழகத்தில் புலிகளின் இரண்டாவது சரணாலயம்

இன்று காலையில் மகிழ்ச்சியானதொரு செய்தி கண்ணில்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலைப் பகுதியில் இருக்கும் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தைத் தமிழ்நாடு மாநில வனத்துறை புலிகளின் சரணாலயமாகவும (ஏற்கனவே இது யானைகளின் சரணலாயமாக உள்ளது) அறிவிக்கச் செய்த பரிந்துரையைப் புறத்திட்டு-புலி வழிநடத்துக் குழு (Project Tiger Steering Committee) ஏற்றுக்கொண்டு, அதை மையத் திட்டக்குழுவின் ஒப்புதலுக்கு முன்வரித்துள்ளது (forward). இந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால் இவ்விடம் தமிழகத்தில் அமையப்போகும் இரண்டாவது புலிகளின் சரணாலயமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 88 (2001 கணக்கெடுப்பின்படி) என்றும், அவற்றில் 29 திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் காலக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ளன என்பது புதிதாகத் தெரிந்துகொண்ட செய்தி; ஏதோ இத்தனை எண்ணிக்கையிலாவது அவை பிழைத்திருக்கிறதே என்று ஆறுதல் அடையவேண்டியதுதான்.

செய்திக்கான சுட்டி.
தனது அண்மைய டாப்சிலிப் அனுபவத்தை அழகாக வடித்திருக்கும் நாராயணனின் வலைப்பதிவிற்கான சுட்டி.

Friday, June 17, 2005

கமலம் பாதக் கமலம்

இன்று மாலை திடீரென ஏனோ இந்தப் பாடலைக் கேட்கத் தோன்றியது.

Monday, June 13, 2005

படிக்காத புத்தகங்கள்

வலைப்பதிவில் எழுதி வாரங்கள் பலவாகிவிட்டன. அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டும், கொஞ்சம் கிடைக்கும் சந்தில் எப்போதாவது பின்னூட்டங்கள் இட்டுவந்தாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிகிறது, இருந்தும்.... எப்படியோ இப்புத்தக விளையாட்டின் மூலம் உள்ளே வந்தாயிற்று. அதற்காக செல்வராஜிற்கு மிக்க நன்றி, தாமதத்திற்கு வருத்தம் சொல்லிக்கொள்கிறேன்.

என்னுடைய வாசிப்பனுபவம் இதுவரை சொல்லப்பட்டவைகளிலிருந்து எந்த விதத்திலும் பெரிதும் வேறுபடாததால் அதைக் கூறத் தவிர்க்கிறேன். வாசித்தவை சில காலம் நினைவில் இருந்துவிட்டு பின்னால் ஏதோ 'கனவு' போலாகிவிடுகிறது (ஞாபக மறதிக்கு இப்படியொரு பூச்சு, கண்டுக்காதீங்க ;-) ). அவற்றிலுள்ள பெயர்கள், இடங்கள், நிகழ்வுகள் ஏதேனுமொரு நொடிப்பொழுதில் மின்னல் போல வந்து செல்லக்கூடும். இருந்தாலும் வாசிப்பென்பதே அச்சமயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அனுபவம், தெரிதல் என்று கொள்ளலாம்.

அப்படிக் கனவாக நிற்கும் மற்றும் சமீபத்தில் வாசித்த சில படைப்புகள் (தற்போக்கான வரிசை):

ஞானரதம் - சுப்ரமண்ய பாரதியார்
காதுகள் - எம்.வீ.வெங்கட்ராம்
சம்ஸ்காரா - யூ.ஆர்.அனந்தமூர்த்தி
தமிழகத்தில் கல்வி - வே.வசந்தி தேவியுடன் சுந்தர ராமசாமியின் உரையாடல்
குவாண்டம் கணினி - வெங்கடரமணன்
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
பூரணி கவிதைகள் - பூரணி
கொங்கு வட்டாரச் சொல்லகராதி - பெருமாள் முருகன் (உசாத்துணை நூலென்றாலும் வாங்கிய காலத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது)
Education and significance of life - J.Krishnamurthy
Resurrection - L.Tolstoy
Life of birds - David Attenborough
O Jerusalem - Larry Collins, Dominique Lappiere
Five Past Midnight in Bhopal - Dominique Lappiere, Javier Moro
Nineteen Eighty-Four - George Orwell
New rulers of the world - John Pilger
போதும்..போதும்..

நிறைய நாட்களாக வாசித்துக் கொண்டிருப்பவை:

தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர் க.ரத்னம்
Savaging the civilized - Ramachandra Guha

படிக்க, வாங்க வேண்டியவை என ஒரு பெருஞ்சரம் உள்ளது, எப்போது என்றுதான் தெரியாது.