படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, May 14, 2005

கள்ளிக்காட்டு இதிகாசம்

சிறுகதை, புதினம் போன்றவற்றை ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியொன்று எப்போதாவது வருவதுண்டு - பொழுதுபோக்கிற்கா, நானும் இலக்கியம் படிக்கிறேன் என்று பறைசாற்றிக் கொள்வதற்கா, அதிலிருந்து ஏதேனும் 'கற்றுக்' கொள்வதற்கா, எதையாவது வாசிக்க வேண்டுமென்பதற்காகவே வாசிப்பதா, இல்லை வேறெதெற்காவதா? கேள்வி மட்டுந்தானுண்டு, இப்போதைக்கு பதிலில்லை, இருக்கட்டும்.

புத்தகக் கண்காட்சியொன்றின் முன்வரிசையில் புதிதாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் கவர்ச்சியா, வைரமுத்து என்ற பிரபலமான திரைப்பாடலாசிரியரின் புதினம் என்பதாலா, காசு சேர்த்து வைத்து புத்தகத்தை வாங்க வேண்டிய காலம் போயாச்சு என்பதாலா தெரியாது, வாங்கியாயிற்று. எல்லா அவசரமும் வாங்கும் வரைதான். இருக்கும் புத்தகங்களுக்கு துணையாக, வாங்கியதும் பக்கத்தில்போய் நின்றுகொள்ள வேண்டியதுதான். எப்படியா, வாங்கி வைத்து ரொம்ப நாட்களாக அலமாரியில் நின்று கொண்டிருந்த இந்த 'இதிகாச'த்திற்கு சென்ற வாரம் விமோசனம் கிடைத்தது. நீளமான வாரவிடுமுறை வந்ததால் இப்பொழுதேனும் படிக்க முயற்சிப்போம் என்றவோர் எத்தனிப்பைத் தொடர, சில நாட்களில் வாசிப்பு முடிந்தது. தொடர்ந்தும், வேகமாகவும் வாசிக்க முடிபவர்களுக்கு அரைநாள் கூட எடுக்காது.

1950களிலும் (அதற்கு முன்னரும்?) "வெவ்வேறு குடும்பங்களுக்கு - வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்து முடிந்த நிஜங்களை..ஒரு குடும்பத்திற்கு நேர்ந்ததாகச் செய்தது மட்டுமே" தனது "கற்பனை அல்லது உத்தி" என்கிறார் வைரமுத்து. அப்படிச் சொல்லப்பட்ட குடும்பம் பேயத்தேவர் என்பவருடையது. குடியானவர்களைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ, கேட்கும்போதே ஒருவிதப் பரிவும் ஒட்டுதலும் உண்டாகிறது. துன்பத்தையே வாழ்க்கையாகக் கொண்டுவிட்ட பேயத்தேவருக்கு அடுத்தடுத்து நிகழும் இடர்ப்பாடுகள் அப்பாத்திரத்தின் மீது பரிவை ஏற்படுத்துகிறது. கிராம வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் (தேவையோ இல்லையோ) சுவாரசியமாகவே விவரிக்கப்பட்டுள்ளன - மாட்டுப் பிரசவம், சவரத் தொழில், சாராயம் காச்சுதல், கிணறு வெட்டுவதல், மார்க்க கல்யாணம், இத்யாதி இத்யாதி. கிராம வாழ்வையே கேட்டறியாதோருக்கு புதிதாகத் தெரிந்துகொள்ள பல செய்திகள் கிடைக்கும்.

உள்ள துன்பம் தாங்காது வாழும் குடும்பங்கள், கிராமங்கள், அரசாங்கம் கொண்டுவந்த வைகை அணைக்கட்டுத் திட்டத்தால் சிலதலைமுறைகளாகப் பிழைத்து வந்த வீடு, நிலங்களை விட்டுத் துரத்தப்படும் நிலைக்கு ஆளாகின்றன. வழக்கம்போல அரசாங்கத்திற்கு இம்மக்கள் கிள்ளுக்கீரைகள்தான் (மக்களுக்கு ஒரு திட்டத்தைக் குறித்த சரியான தகவல்களைச் சரியான நேரத்தில் தெளிவாகச் சொல்லாத நடைமுறை இன்றைக்கும் தொடர்கிறது). அணைகட்டி முடிக்கப்பட்டு நீர்தேங்க, ஊர்கள் மூழ்க, கள்ளிப்பட்டியில் பேயத்தேவர் இறக்க, கதை முடிக்கப்படுகிறது. கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது பேயத்தேவர் தற்கொலைக்கு ஒப்பான காரியத்தால்தான் இறந்துபோனார் என்ற எண்ணம் வந்துவிடவே 'கனத்த மனது' ஏற்படவில்லை. ஊர்களெல்லாம் துரத்தப்பட்டு இவருக்கும் இந்நிலையாகிவிட்டதே என்ற வருத்தம் வேறு.

ஆரம்பத்தில் உரைநடை பாணியில் கதை சொல்லத் தொடங்கும் ஆசிரியர், அத்தியாயங்கள் செல்லச் செல்ல வட்டார வாசனையுடன் கூடிய பேச்சு வழக்கிற்கு மாறிவிடுகிறார். உணர்ச்சிவயப்படல், மிகைப்படுத்திச் சொல்லப்படும் சிறுசிறு நிகழ்வுகள் வைரமுத்துவின் படைப்புகளில் இல்லாதிருந்தால்தான் ஆச்சரியம். இருந்தாலும், கதையும் சொல்லப்பட்ட விதமும் வாசிப்பின் விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. வாசிக்கலாம்.

4 comments:

jeevagv said...

//பொழுதுபோக்கிற்கா, நானும் இலக்கியம் படிக்கிறேன் என்று பறைசாற்றிக் கொள்வதற்கா, அதிலிருந்து ஏதேனும் 'கற்றுக்' கொள்வதற்கா, எதையாவது வாசிக்க வேண்டுமென்பதற்காகவே வாசிப்பதா, இல்லை வேறெதெற்காவதா?//
இதே கேள்விதான் எனக்கும்!. சுயத்திற்கு பயனில்லை எனத்தெரியதொடங்கிவிட்டால், விட்டுவிடுகிறேன் வாசிப்பை. படிப்பதைக் காட்டிலும் எழுதுவதே பிடித்திருக்கிறது!

இராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி!

Anonymous said...

எனக்கு இப்புத்தகம் வாசிக்கு 3 நாள் பிடித்தது... அன்மையில் பாரிஸ் போனபோது வாங்கியது 49 € என நினைக்கிறேன் குடுத்த காசுக்கு தகுந்த புத்தகம் தான்... கிராமத்து வாழ் முறைகளை அறியமுடிந்தது...

இராதாகிருஷ்ணன் said...

49 யூரோக்களா?!!! ம்...