படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, May 05, 2005

கிராமத்து இசைக்கருவிகளும் இசைஞர்களும்

பத்ரியின் பதிவிலிடப்பட்டிருந்த பம்பை வாத்தியத்தைக் கண்டதும் நினைவு எங்கோ ஓடியது. கிராமங்களில் நடக்கும் திருவிழா, திருமணம், இழவு போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் நடக்கும் இசைகளில் (கொஞ்ச காலத்திற்கு முன்பேனும்) ஏதோ ஒருவகையில் இடம்பிடிக்கும் இசைக் கருவிகள் தப்பட்டை, மத்தளம், நாதசுரம் (பீப்பீ-ன்னுதான் சொல்லுவோம்), பம்பை போன்றவை. தோல் கருவிகளை அவற்றை வாசிக்கும் மக்களே (அல்லது அவர்களைச் சார்ந்தவர்களே) செய்து கொள்ளவார்கள் எனச் சொல்லக் கேட்டுள்ளேன். தப்பட்டையை ஒருசில சுற்றுகள் அடித்து ஓய்ந்தபின் தீ மூட்டி அச்சூட்டில் காயவைத்து சரிசெய்வதைப் பார்க்க நன்றாக இருக்கும். தூண் அல்லது சுவற்றோரத்தில் சாய்த்துப் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் மத்தளம், பம்பையை யாருக்கும் தெரியாமல் (?!) ஒன்றிரண்டு முறை கொட்டிவிட்டு ஓடுவதில் அப்போது ஒருவகை மகிழ்ச்சி.

இவ்விசைஞர்கள் பெரும்பாலும் கேள்வி ஞானம் மற்றும் தன்முயற்சியால் தாங்களாகவே கற்றுக் கொண்ட வித்துவான்கள். ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்து அழைத்துவரப்பட்ட இக்கலைஞர்கள் யாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கிராமத்தார்கள் இவர்களை கவனித்துக் கொண்ட விதம் எப்போதுமே கவலையளிக்கச் செய்துள்ளது. "அவனுகளுக்கு ஒரு பட்டைய வாங்கிக் கொடுங்கடா போதும்" என்பதுதான் அவ்வரிய கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை. அவர்களும் அதற்குப் பழகியே போனார்களோ என்னவோ? இழவு வீடென்றால் பம்பைக்காரர் அதை இசைத்துக் கொண்டே இறந்தவரைப் பற்றி ஏதோ பாட, விசாரிக்க வந்தவர்கள் போடும் ஒன்றிரண்டு உரூபாய்களும், அரிசி போன்றவைகளும்தான் அவர்களுக்குக் கிடைத்த சன்மானம்! என்ன உலகமிது! :-(

1 comment:

சுந்தரவடிவேல் said...

உண்மையிலேயே அநதப் பறை, மத்தள ஒலிகள் உயிருள்ளவையாகவும் என் நெஞ்சுக்குப் பக்கத்தில் ஒலிப்பவையாகவும் உணர்கிறேன்.