படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, February 06, 2005

ஆகாயத் தாமரை

"பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு (தாமிரபரணி) இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது. இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்."

மேற்கண்டதை வாசித்தபின்பு அச்செடியைப் எண்ணம் மனதில் சற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆகாயத் தாமரையை (வெங்காயத் தாமரை, ஆம்பல் என்பவையும் அதே செடியைக் குறிப்பனவா என்பதை அறிந்தவர்கள் சொல்லவும்) அதிக அளவில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்குப் பின்புறமுள்ள எஞ்சி நிற்கும் குளத்திலும், திருச்சி சாலையிலிருக்கும் சிங்காநல்லூர் குளத்திலும் கண்டிருக்கிறேன். நீரின் மீது பச்சைக் கம்பளம் விரித்தாற்போல பார்பதற்குப் அழகாக இருக்கும் இத்தாவரம் தானிருக்கும் பகுதி பசுமையால் பூத்துக் குலுங்குவதுபோலத் தோன்றச் செய்யும். அழகான இத்தாமரை அழிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது எவ்வாறு ஆறு, குளம் முதலான நீர்நிலைகளை அழிக்கிறது என்று தெரிந்துகொள்ளத் தலைப்பட்டு கூகிளில் தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன.


ஆகாயத் தாமரையின் அழகில் மயங்கி அதை சென்ற நூற்றாண்டுகளில் அமேசான் படுகையிலிருந்து இறக்குமதி செய்து மக்கள் தம் வாழுமிடத்தைச் சுற்றி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இருக்க இடங்கொடுத்தால் படுக்கப் பாய் கேட்கிறதைப் போல், தனது அசுர வளர் திறனால் அங்கிங்கெனாதபடி உலகெங்கும் பரவிவிட்டது இச்செடி. மனிதன் எதையுமே தனக்குப் பாதகம் என்று வந்தால் தானே அதைப்பற்றி கவலைப்படுவான்!

ஆங்கிலத்தில் Water hyacinth என்றழைக்கப்படும் ஆகாயத் தாமரையின் தாவரவியல் பெயர் Eichhornia crassipes. இதை ஒரு மிதக்கும் நீர்க்களை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் சில பின்வருமாறு:

குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
சாகாவரம் பெற்ற கொசுக்களுக்கு இது ஒரு சொர்க்க பூமிதான்.
வெள்ள காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன்பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.

இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. தமிழகத்திலும் அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் போன்ற அமைப்புகளும், தன்னார்வலர்களும் இது குறித்து ஆய்வுகள் செய்திருக்கக்கூடும். ஆனால் எந்த அளவிற்கு அவை நடைமுறையில் இருக்கிறதென்று தெரியவில்லை. சாதாரண மக்களுக்கு இச்செடிகள் தினமும் வழியில் பார்த்துச் செல்லும் மற்றொரு காட்சியே.



பல்கிப் பெருகிவிட்டன இச்செடிகளை அழிப்பதோ, கட்டுப்படுத்துவதோ சாதாரண காரியங்களாகத் தெரியவில்லை. வேதியல் மற்றும் உயிரியல் வழிமுறைகள் சில இருந்தாலும் நம்மூரில் அதிக அளவில் கிடைக்கும் மனித வளத்தைக் கொண்டு (நிபுணர்களின் வழிகாட்டல், அரசு மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன்) கையால் அழிப்பது பல்வேறு வழிகளில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். மாவட்ட நிர்வாகங்கள் இதை ஒரு தற்காலிக வேலைவாய்ப்பாகக் கூட வேலையற்ற இளைஞர்களுக்கு அளிக்கலாம். அல்லது உணவிற்கு வேலை என்று ஏதோ ஒரு திட்டம் இருக்கிறதென்று சொன்னார்களே அதன் மூலமாகக்கூட முயற்சிக்கலாம்.

இச்செடியால் ஏதேனும் பயனுள்ளதா என்றுகூட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயு, காகிதம் தயாரித்தல், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுவதாகத் தெரிகிறது.

சென்ற டிசம்பர் (9-13.12.2004) புவனேஸ்வரில் நடந்த 'Lake 2004' என்ற கருத்தரங்கிலும் ஆகாயத்தாமரை பற்றி விவாதித்துள்ளனர்.

இணையத்தில் ஆகாயத்தாமரையைக் குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, அச்செடியைப் போலவே.

செடியைப் பற்றிய பொதுவான தகவல்கள் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றிற்கான சுட்டிகள்:
http://www.invasivespecies.gov/profiles/waterhyacinth.shtml
http://www.water-hyacinth.com/
http://www.nrm.qld.gov.au/factsheets/pdf/pest/PP6.pdf
http://www.pbs.org/wgbh/nova/algae/impact.html
http://www.worldfishcenter.org/naga/naga-ntafp%20news.pdf
http://www.issg.org/database/species/ecology.asp?si=70&fr=1&sts=sss

No comments: