படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, June 16, 2004

சதாக்குப்பைகளும் மின்குப்பைகளும்

இந்தியா போன்ற மக்கள்தொகை நிறைந்த நாடுகளில் அன்றாடம் விழும் குப்பைகளைப் பற்றி பெரும் ஆய்வே நடத்தலாம். பொது இடங்களில் குப்பைகளைப் போடுகிறோமே என்ற உணர்வு எந்த மட்டத்திலும் காணப்படவில்லை. எங்கெங்கு காணினும் குப்பையடா! தூய்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைதான் தென்படுகிறது. இவ்வாறாகச் சிதறிக் கிடக்கும் குப்பைகளை ஏதோ ஒரு விதத்தில் சேகரித்து நகராட்சி/பஞ்சாயத்து ஊழியர்கள் நகருக்கு/ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடங்களில் கொண்டுபோய் அப்படியே கொட்டிவிடுகின்றனர் (அவ்வளவுதான் அவர்களால் செய்யமுடியும்). திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துக் கவலைப்பட யாருக்கும் அவகாசமோ, அவசியமோ இல்லை; இதுதான் பரந்துவிரிந்த பூமியாயிற்றே!

இந்நிலையில் சமீபத்தில் கண்ட செய்தியொன்று மிகவும் அச்சுறுத்துவதாயிருந்தது. சென்னையில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அது. ஆஸ்த்ரேலிய நிறுவனமொன்று தமிழக அரசிடம் இன்னும் முழுமையாக சோதிக்கப்பட்டு முடிப்படாத தொழில்நுட்பமொன்றை இதற்காக முன்வைத்துள்ளதாம். இத்திட்டத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் ஆபத்துகளையும் பற்றி விரிவாக இந்த இணையப் பக்கத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். முக்கியமாக சென்னைவாசிகள் கவனித்து விவாதிக்க வேண்டிய விஷயமிது (மற்றவர்களும்தான்).

சாதாக்குப்பைகளின் சங்கதிகளே இதுவென்றால் புதிதாக அச்சுறுத்தும் அடுத்த சமாச்சாரம் மின்குப்பைகள். இந்தியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்கள் வலுவாக இல்லாத காரணத்தாலும், மலிவான கூலிக்கு வேலைகள் நடப்பதாலும் வளரும் நாடுகளில் முறையாகச் சுழற்சிக்கப்பட வேண்டிய மின்சாதனக் குப்பைகள் இந்தியாவிற்குத் திருப்பிவிடப்படுகின்றனவாம். அந்நாடுகளில் சுழற்சிக்க ஆகும் செலவைவிட இந்தியா போன்ற நாடுகளில் கொட்டிவிடுவது அவர்களுக்கு மிகவும் செலவு குறைந்ததும், வசதியானதுமாகும். சட்டங்களும், விதிமுறைகளும் வலுவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தாவிடில் விரைவில் இந்தியா ஒரு மின்குப்பை மேடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுபற்றிய விளக்கமான கட்டுரை ஒன்றை இங்கே காணலாம். ஜப்பானுக்கு சீனா மின்குப்பை மேடென்றால், அமெரிக்காவிற்கு இந்தியா. ம்...!

No comments: