படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, September 29, 2005

தோற்ற மயக்கங்களோ?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com
நடுவுல இருக்கற தூணப் பாருங்க!

Image hosted by Photobucket.com
இந்தப் படத்துல நெறைய முகங்கள் இருக்குங்க. 4-5 முகங்களப் பாக்கறவங்க சாதாரணவங்களாம். அப்படியே 8, 9-ன்னு ஒவ்வொன்னுக்கும் ஒன்னைச் சொல்றாங்க. அத்தனையையும் பாத்திருக்கறவங்க அதிஉன்னிப்பா கவனிப்பவராம். எத்தனைன்னு கேக்கறீங்களா? இன்னொரு தடவை எண்ணிப்பாத்துக்குங்க. எண்ணிட்டீங்களா? ஒரு டசனுக்கு ஒன்னு கம்மியா இருந்ததுங்களா?

தலைப்பு உபயம்: முண்டாசுக்கவி

Tuesday, September 27, 2005

பட்டாம்பூச்சி

பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
நல்ல நல்ல கதைகள் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
வண்ண வண்ண படங்கள் பேசும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
அறிவை வளர்க்க அன்பாய் உதவும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பாட்டு சொல்லி பாடச் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
புதுமை உலகம் இனிமை உலகம்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி....

என்ற இனிமையான பாடலுடன் கோயம்புத்தூரிலிருந்து 'தமிழில் முதன்முறையாக' பட்டாம்பூச்சி என்ற பெயரில் 'சிறுவர்களுக்கான சி.டி.மாத இதழ்' ஒன்று சென்ற ஆண்டில் (அல்லது அதற்கு முந்தைய ஆண்டில்) ஆரம்பிக்கப்பட்டது. வெளிவந்த சில மாதங்களிலேயே நின்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாங்குவோரின்மையாலா இல்லை வேறேதும் காரணமா என்று தெரியவில்லை. தமிழுலகில் இதுபோன்று ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் விடப்படும் முயற்சிகள் ஒன்றிரண்டல்ல. இருந்தாலும் நல்ல முயற்சி ஒன்று தொடர்ந்திருக்கலாம்.

பட்டாம்பூச்சி இதழ் 2-ல், கிராமத்துப் பாட்டி குழந்தைகளுக்கு குட்டிக் கதை ஒன்றைச் சொல்கிறார். அக்கதையில் மீனிடம் அகப்பட்ட 'நெலப்புழு' (மண்புழு அ நிலப்புழு), மீன்களைப் பார்த்து இவ்வாறு சொல்கிறதாம்:

வாரீர் வாரீர் என்னாலே
வந்து நிற்கிறீர் முன்னாலே
சாகப் போகிறே என்னாலே
செத்துக் கிடக்கிறேன் உன்னாலே

Sunday, September 25, 2005

நின்னைச் சரணடைந்தேன்!

எங்கோ தூரத்தில் மெதுவாக ஒலிப்பது போன்று அடுத்த அறையில் ஒலிக்கவிடப்பட்டிருந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமித்துக் கொண்டது. தாக்கியது கவியா? பாடலா? இசையா? இல்லை அனைத்தும் சேர்ந்தா?

பாடலைக் கேட்க...


நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

5.
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

[நன்றி: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்]

Monday, September 19, 2005

செம்மறியாட்டு உரோமம்

ஜூரிக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத் தூரத்திலே (ரயிலில்) இருக்கும் ஜெர்மனிக்குச் செல்ல கொஞ்சம் மெனக்கெடவேண்டியுள்ளது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிற்காவது விசா இல்லாமல் போக முடியுமா என்று தெரியவில்லை. விசா வாங்குவதற்கு ஒரு நாள் வேலையைக் கெடுத்துக் கொண்டு பெர்ன் நகருக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவும் சும்மா நினைத்த போதெல்லாம் சென்றுவிட முடியாது. பிரத்யேகத் தொலைபேசி எண் ஒன்றிக்கு அழைத்து நேரம் வாங்க வேண்டும். இத்தொலைபேசியின் மறுமுனையில் பேசுபவருக்கு அவரை அழைப்பவரிடமிருந்துதான் சம்பளம் பெற்றுத் தருவார்களோ என்னவோ (சும்மா ஒரு பேச்சுக்கு), அவ்வெண்ணை அழைக்க ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட CHF 3.15 (~$2.5) ஆகுமென்றால் என்னவென்பது! அழைத்தவுடன் விரைவில் நேரம் கிடைத்து விட்டால் நன்றாக இருக்குமா? அதனால் அழைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் நேரத்தைக் கொடுப்பார்கள்!

சென்ற ஜூன் மாதம் ஒருநாள் அதே தூதரகத்திற்குச் சென்றிருந்தபோது உப்புப் பெறாத காரணத்திற்காக விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். என்னுடைய கவனக் குறைவால் அவர்கள் கேட்ட ஒரு கடிதம் விண்ணப்பத்துடன் இணைக்காமல் விடுபட்டு விட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் தொலைநகல் மூலம் அக்கடிதத்தை உரியவர்களிடமிருந்து பெற்றுத் தர உறுதியளித்ததைக் காதில்கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் சாலையோரம் நின்று விண்ணப்பங்களைச் சரிபார்த்து மக்களை உள்ளே அனுப்பும் கணவான் ஒருவர். விளைவு, அடுத்த நேரம் கிடைக்கும் வரை, அதாவது மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அன்றே விசா வாங்கிக் கொண்டு மறுநாளே ஜெர்மனி போகுமளவிற்கு தலை போகும் வேலையொன்றும் இல்லைதான்; என்றாலும் விசா வாங்குவதற்கான நடைமுறைகள் சில சமயங்களில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.

அனில் அம்பானிக்கும், ஆனந்த மகிந்திராவிற்கும் ரஷ்யா விசா கொடுக்க மறுத்துவிட்டது என்ற செய்தியை நேற்றைய தினமணியில் படித்த போது, முன்பு ஏற்பட்டிருந்த தேவையற்ற உளைச்சலெல்லாம் கேலிக்குரியதாகிவிட்டது. அப்பேர்ப்பட்டவர்களுக்கே விசா மறுக்கப்படும் போது நம் போன்ற சாதாரண ஆசாமிகளெல்லாம் எம்மாத்திரம்!

சென்ற ஜூலை ஒன்றாம் தேதி கூப்பிட்டிருந்ததற்கு இன்றைக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். இம்முறை அவர்கள் கேட்டதெல்லாம் சரியாக இருக்க விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

பெர்ன் நகரில் (இங்கு எல்லா இடத்திலுமே) குளிராகவே இருந்தது, மேகமூட்டம் வேறு. தூதரகத்திலிருந்து திரும்பி வரும்போது சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் சுமாரான அளவில் இருக்கும் திறந்த வெளியில் கூட்டம் கொஞ்சம் இருப்பதைப் பார்த்து பேருந்திலிருந்து அங்கேயே இறங்கிக் கொண்டேன். வழக்கமாகக் நடக்கும் வாரச் சந்தைகளுக்குக் கொஞ்சம் மாறாகவே இருந்தது. பெரியவர்கள் அமர்ந்து சூடாகப் பருகிக் கொண்டிருந்த கூடாரம், பால் பொருட்களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வகை வகையான Cheese-களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வேலி போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளும் பன்றிகளும், உருளைக் கிழங்கை மண்பெட்டியொன்றில் போட்டு அதைத் தோண்டி எடுக்கும் சிறு போட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் சிலர், அந்தக் குளிரில் உட்கார்ந்து கொண்டு கம்பளியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் என்று பல காட்சிகள். பெர்ன் வட்டார விவசாயம், கால்நடை முதலானவை சார்ந்த தொழில்களை முன்னிருத்தும் கண்காட்சி போலிருந்தது. கேமராவையும் எடுத்துக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது.

கண்கவரும் நாட்டுப் புற உடையணிந்த இரு விவசாயிகள், செம்மறியாடு ஒன்றின் கால்களைக் கட்டி மேசையின் மீது படுக்க வைத்து முடிவழிக்கும் இயந்திரமொன்றில் சர்சர்ரென வழித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் காண மக்களுக்கு ஒரு காட்சியானது அது. கொஞ்ச நேரத்தில் முடி அனைத்தையும் இழந்து வெறும் தோலுடன் மற்ற ஆடுகளுக்கு மத்தியில் போய் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு குளிரில் அதற்குக் குளிராதா என்ற கேள்வி மனதை ஆக்கிரமித்தது. அங்கிருந்தவரிடம் மெல்ல விசாரிக்க, ஒவ்வொரு வருடமும் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் செம்மறியாடுகளின் உரோமம் வழிக்கப்படவேண்டும்; இல்லையென்றால் அவை நோய்த்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கமளித்தார். அப்படியும்கூட இருக்கிறாதா என்று ஆச்சரியத்துடன் இடத்தைக் காலிசெய்து கொண்டு வந்தேன். செம்மறியாட்டு உரோமத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வழிசெய்த தூதரகத்தாருக்கு நன்றி!

Monday, September 12, 2005

தீவிரவாதிகளும் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?

அசோசியேட்டட் பிரஸ்ஸை ஆதாரம் காட்டி உள்ளூர்ப் பத்திரிக்கையொன்று இன்று போட்டிருந்த தலைப்புச் செய்தி சற்று திக்கென்றுதான் இருந்தது. அதன்படி (அதை நான் புரிந்துகொண்டவரையில்), அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது குடிமக்கள் மீது எந்த ஒரு நாடோ, பயங்கரவாதக் குழுக்களோ பேரழிவு ஆயுதங்களைக் (WMD) கொண்டு தாக்கத் திட்டமிட்டால், அவற்றை 'வருமுன் காக்கும்' பொருட்டு எதிர்காலத்தில் அந்நாடு/குழுக்களின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது எனப் பென்டகன் திட்டமிடுவதாகச் சொல்கிறது. கூடவே, பதுங்கு குழிகளை அழித்தெறியவும் ஓர் அணுஆயுதத்தைத் தயாரிக்கப் போகிறார்களாம். ஏற்கனவே பன்னாட்டுப் படையினரின் சில தாக்குதல்களில் கதிரியக்கத்தை உண்டுபண்ணும் வஸ்துகள் ஒளிந்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது சொல்லப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்டாகும் விளைவுகள், எதிர்விளைவுகள் எங்கு போய் முடியுமோ! கவலையாக உள்ளது. ஆயுதங்களால் உண்டாக்கப்படுவதா அமைதி? ம்...

[வேறு]
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேச்சு ஒன்றிற்கு மாநில அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அச்செய்தியின்படி பார்த்தால் மத்திய அமைச்சர் சென்னை உஷாராக இருப்பது நல்லது என்ற தொணியில் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஒரு மறுப்பை (அல்லது விளக்கத்தை) மாநில அமைச்சர் அறிவிக்க விரும்பினால் "தங்கள் அக்கறைக்கு நன்றி, ஏற்கனவே தமிழக அரசு அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, விவரங்களை இங்கே காணவும்" என்று சொல்லி ஒரு சுட்டியைக் கொடுத்தால் கண்ணியமாகப் போயிற்று.

அதைவிடுத்து, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வரும் 'அரைவேக்காடு', 'ஆதாரமில்லாத புத்தி', 'உளறுதல்', 'கேலிக்கூத்து' போன்ற வார்த்தைகளைக் கூறுவது அமைச்சர் பதவிக்கு நயம் சேர்ப்பதாகத் தோன்றவில்லை. அக்கருத்தை அமைச்சராகத் தெரிவித்தாரா அல்லது அவரது கட்சி உறுப்பினராகத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பின் என்ன?

மக்களும் இதுபோன்ற சொற்களைக் கேட்டு வெட்கும் நிலையை இழந்து விடத்தானே பொதுவில், அதுவும் உயர் பதவியிலுள்ளவர்களால் கூட அவை உபயோகிக்கப்படுகின்றன.