படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, January 27, 2005

மாலன் அவர்களுக்கு...

தங்களது 'வாசகன்' வலைப்பதிவில் பின்னூட்டமிட முனைந்தபோது, 'Comments are for team members only.' என்ற செய்தி வந்ததால் அப்பின்னூட்டத்தை இங்கேயே இடுகிறேன். இது உங்களைச் சென்றடைந்தால் மகிழ்வடைவேன்.

புத்தகங்கள் சிலவற்றைப் பற்றி அருமையாகச் சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள்; ஆவலுடன் வாசித்துக்கொண்டுள்ளேன். எனது வேண்டுகோள் என்னவெனில், ஒவ்வொரு புத்தக அறிமுகத்தின்போதும் அதன் முழு விவரங்களையும் (பெயர், ஆசிரியர், பதிப்பகம், ISBN [இருந்தால்], விலை முதலானவை) தெரிவித்தீர்களேயானால், அவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு பின்னாளில் வாங்கி வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

அன்பும், நன்றியும்.

Wednesday, January 26, 2005

எப்படி சுகம்? - பரோபகாரி - சைவம்

அதுவோர் ஈரடுக்கு ரயில் வண்டி ('புகைவண்டி', 'புகையிரதம்[ஈழத்தில்]', 'தொடர்வண்டி', 'ரயில்', 'ட்ரெயின்' - ஒரு வண்டியைக் குறிக்கத்தான் எத்தனை சொற்கள்!!; இதற்கு 'இருவுள்' என்ற நல்லதொரு தமிழ்ச் சொல்லை இராம.கி. கையாள்கிறார்). சென்றவாரக் கடைசியில், வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது குழந்தை-வண்டியை ரயில் பெட்டியின் வாயிலுக்கு அருகில் நிறுத்திவிட்டு, செல்லும் தொலைவு ஒரு சில நிமிடங்களே என்பதால் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம். மேலடுக்கிலிருந்து பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து எங்களிடம் சோதனையை முடித்துவிட்டு கீழ்த்தளத்திலிருக்கும் சக பரிசோதகர் வருவதற்காக காத்திருந்தார். கீழ்தளத்தில் சோதனையை முடித்துக்கொண்டு சர்ரெனப் படிக்கட்டில் ஏறி வேகமாக வந்தவர் எங்களைப் பார்த்தும்,

"வணக்கம்!"
"எப்படி சுகம்?"
"நன்றி!"

என்று வரிசையாகச் சொல்லி ஆச்சரியப்படுத்திவிட்டு, எங்களின் பதிலைக் காதில் வாங்கியவாறே புன்முறுவலுடன் அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். தமிழ், தமிழர் என்று அயல்நாடுகளில் இன்று பரவலாக அறியப்படுகிறதென்றால் அதற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே முக்கியமான காரணம் என நம்புகிறேன்.
----------

philanthropist = பரோபகாரி என்கிறது கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி.
பரோபகாரி = one who is willing to help others, தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர் (க்ரியாவின் தற்காலத் தமிழகராதி)
பரோபகாரம் = பிறர்க்குதவி (கழகத் தமிழகராதி)

ஆங்கில விக்கிபீடியாவின் விளக்கம்: "A philanthropist is someone who devotes her or his time, money, or effort towards helping others. The label is most often applied to someone who gives large amounts to charity."

ஒன்னுமில்லீங்க, நம்ம பில்கேட்ஸ் உலகத்தின் முன்வரிசைப் பரோபகாரிங்களாம். சரி, இதுக்கு நம்ம அகராதிகள்ளாம் என்ன சொல்லுதுன்னு பாத்தப்பக் கெடச்சதுதாங்க மேல இருக்கறதெல்லாம்.
----------

மாமிசம் அல்லாத உணவிற்கு 'சைவம்' என்ற சொல்லை எப்படிப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்களென்பது வியப்பாக உள்ளது. இதைக்கொண்டு புலால் உணவை 'அசைவம்' என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள். சமயத்தின் (சைவம், வைணவம் போன்ற) பெயரிலிருந்து வந்ததா இது? அப்படியானால் சைவ சமயத்தைப் பின்பற்றியோர் புலால் உணவை மறுத்தவர்களா? "இந்தக் குழம்பில் கறி சேர்க்கப்பட்டுள்ளதா?" எனக் கேட்டால் "இல்லை, இது மரக்கறி" என்றே சொல்வார் எங்கள் அலுவலகத்திலுள்ள உணவகத்தின் ஊழியர், ஈழத்துக்காரர். இதை நினைக்கத் தூண்டிய தகவல்.

Sunday, January 16, 2005

அவியல்

கடந்த வெள்ளிக்கிழமை (14.01.2005) சென்னையில் அகலப்பட்டைச் சேவையைத் தொடங்கிவைத்த மையத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ஜூன் மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் விலையில் கணினி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ("அகண்ட அலைவரிசைச் சேவை தொடக்கம்: ஜூன் மாதத்துக்குள் ரூ.10 ஆயிரத்துக்குக் கணினி" - தினமணி, ஞாயிறு 16.01.2005 மின்பதிப்பு). மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், திரையின் விலையே ஏறக்குறைய ரூ.5000 இருக்கும் சமயத்தில் இக்கணியில் என்னென்ன வசதிகள் இருக்குமென்று தெரியவில்லை. அதுபோல மாதத்திற்கு ரூ.500-ஐ சாதாரண வீடுகளில் அகலப்பட்டை இணைப்பிற்காகச் செலவழிப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. வணிகப் போட்டிகள் பெருகும்போது இத்தொகை மேலும் குறையக்கூடும்.

மைக்ரோசாஃப்ட்டின் தமிழ் மென்பொருள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறதாம்-'ஆபீஸ்' தொகுப்பாக இருக்குமோ? வரட்டும் வரட்டும்!

இந்தியாவில் கணிப்பொருட்களுக்கான இறக்குமதி வரி (35% ?) மிக அதிகம் என்று தெரிகிறது. இந்த அளவிற்கு அதிகமாக வரிவிதிக்க வேண்டிய அவசியம் என்னவோ - உள்ளூர் தயாரிப்புகளைக் காப்பாற்றுதலா?

-----

சென்ற ஆண்டு ஈராக்கின் சிறைச்சாலையில் (அபு க்ராயிப்) நடந்த அக்கிரமங்களுக்காக அமெரிக்கச் சிப்பாய், சார்லஸ் க்ரானெர் (36), பத்தாண்டுகள் சிறைவாசம் பெற்றுள்ளார் (செய்தி). தொ.காவில் பார்த்தபோது இத்தீர்ப்பால் அவர் ஒன்றும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 'மேலிடத்து உத்தரவுகளை'யே அமல்படுத்தியதாகவும், 'போர் நடந்துகொண்டுள்ளது, அங்கு கெட்ட செயல்களும் நடக்கும்' என்ற வியாக்கியானம் வேறு. இந்த 'மேலிடங்களுக்கெல்லாம்' விசாரணை என்றே ஒன்று இருக்குமா என்பது சந்தேகம்தான். இத்தீர்ப்புகள் வெறும் கண்துடைப்பாக இல்லாமலிருந்தால் சரி.

-----

மனிதன் உருவாக்கிய வேறொரு சுனாமி
[அவுட்லுக் இந்தியா, ஜன.11 2005, The Other, Man-Made Tsunami]

-----

'இந்த வார நட்சத்திரம்'-ஆக அழைத்து, எழுதத் தூண்டிய தமிழ்மணம் குழுவிற்கு மிக்க நன்றிகள்! சுமாராக எழுதப்பட்டதாக இருந்தாலும் அவைகளையும் வாசித்து, பின்னூட்டம் அளித்து வந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஒரு வாரத்தில் நான் கவனித்த வரைக்கும் ரோஸாவசந்த் தான்-படித்த வலைப்பதிவுகளில் பெரும்பாலானவற்றிற்குப் பின்னூட்டமிட்டுள்ளார் என்றே சொல்வேன். இது அந்தந்த வலைப்பதிவாளர்களை நிச்சயம் உற்சாகம் அளிக்கும். அதற்காக அவருக்கு மேலும் ஒரு நன்றி! எல்லாப் பதிவுகளுக்கும் எல்லோராலும் எல்லா சமயத்திலும் பின்னூட்டம் அளிக்க இயலாது. இருப்பினும், முக்கியமான பதிவுகளுக்கு (குறிப்பாகத் துறை சார்ந்து எழுதுவோருக்கு) பின்னூட்டம் இடுவது, அதை எழுதுவோர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். இல்லையெனில், இவ்வளவு சிரமமெடுத்து எதற்கு எழுதினோம் என்ற சலிப்பே ஏற்படும். அதேபோல வலைப்பதிவாளரும், பின்னூட்டமளிப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் அளித்தல் நலம் (குறைந்தபட்சம் கேள்விகள் எழுப்பப்படும் போதாவது).

அடுத்த வார நட்சத்திரத்தை வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி!

Saturday, January 15, 2005

நடை

நடைப் பிரியர்களுக்கு சுவிஸ் ஒரு சொர்க்க பூமி என்று சொன்னாலது மிகையாகாது. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துவைத்துள்ளனர். துவங்கும் இடத்தையும், அங்கிருந்து சென்று சேர வேண்டிய இடத்தை மட்டும் நிர்ணயித்துக் கொண்டால் போதும், யாரிடமும் வழிகூடக் கேட்காமல் நடந்து கொண்டேயிருக்கலாம்.

பெரும்பாலும் வெயில் இருக்கும் சமயங்களிலெல்லாம் மக்கள் நடப்பதைக் காணமுடியும், குளிர்காலத்தில்கூட (என்ன, இச்சமயங்களில் நடப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்). ஊர்கள் வழியாக, மேய்ச்சல் நிலங்களில், ஏரிகளைச் சுற்றி, மரங்கள் நிறைந்த காடுகளின் ஊடே, மலைகளின் மேலே என்று சகல இடங்களிலும் நடைபாதைகள் இருப்பதைக் காணலாம். அந்தந்த இடத்தைச் சார்ந்த அமைப்புகள் (ஊராட்சி போன்றவை) இப்பாதைகளைப் பராமரித்து வருவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் தங்கள் விருப்பம், நேரத்திற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாகவோ, ஜோடியாகவோ, குடும்பமாகவோ நடந்து செல்வர். நடப்பதற்கென்றே இருக்கும் கைத்தடிகளுடன் கரடுமுரடான மலைப்பாதைகளில் அறுபது, எழுபது வயதைத் தாண்டியவர்களைக் கண்டு ஆச்சரியப்படத் தேவையில்லை.

நடைபாதைகளுக்கான வரைபடங்களும் தனியாகக் கிடைக்கின்றன. சில இடங்களுக்கு வழியில் பார்க்க வேண்டியவைகளுக்கான குறிப்புகளுடன் சிறு புத்தங்கள்கூட இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நடக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான வரைபடத்தை எடுத்துக் கொண்டு போனால் போதுமானது, சில சமயங்களில் அதுவும் தேவையில்லை. இங்குள்ள பொதுப் போக்குவரத்து அமைப்பு ரயிலை மையமாகக் கொண்டது (இம்முறைமையைப்பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதவேண்டும், முறைமை=system). பெரும்பாலும் எல்லா நடைப்பாதைகளும் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையில் இருப்பதால் (இடையில் உள்ள பாதை மேற்சொன்னபடி எங்கு வேண்டுமாலும் இருக்கும்), வசிப்பிடத்திலிருந்து அவ்வூருக்கு ரயில், தேவைப்பட்டால் அங்கிருந்து பேருந்தில் சென்று நடையைத் துவங்கவேண்டும். சென்று சேருமிடமும் ரயில் நிலையமாகவோ அல்லது பேருந்து நிறுத்தமாகவோ இருக்கும்.

நடக்கத் தோதான ஒவ்வோர் இடத்தின் ரயில் நிலையங்களின் முன்பாகவும் மஞ்சள் நிறத்தில் திசைகாட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் அவ்விடத்தின் பெயர், அது கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மீட்டர் உயரத்தில் உள்ளது, அங்கிருந்து எங்கெல்லாம் செல்ல முடியும் (ஊர்கள்/இடங்களின் பெயர்கள்), நடந்து சென்று அடைவதற்கான நேரம் (பெரும்பாலும் இது சரியாகவே இருக்கும்) போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வழியில் விளக்குக் கம்பங்கள், மரங்கள், சுவர்கள், பெருங்கற்கள் போன்றவற்றில் குறிகளைப் போட்டுவைத்துள்ளனர். இது வழியைத் தொடர்ந்து காண்பிக்கும். இக்குறிகள் பாதைகளுக்கேற்றவாறு வேறுபடும். உதாரணமாக, மலைப்பாதையென்றால் சிவப்பு-வெள்ளைக்குறி, சாதாரண பாதையென்றால் வைரவடிவில் மஞ்சள் குறி என்றிருக்கும். முக்கியமான சந்திப்புகளில் மீண்டும் திசைகாட்டிகள் இருப்பதைக் காணமுடியும்.


ரயில் நிலையம் ஒன்றினருகே, நடையைத் துவங்க...

இடத்திற்கேற்ற நல்ல காலணிகளும் அவசியம். பனியில் நடப்போருக்கு மேலும் சில உபகரணங்கள் தேவைப்படும். உண்பதற்கு பெரும்பாலும் பழங்கள், உலர் பழங்கள், தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்லவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்றால் வழியில் முக்கியமான இடங்களில் உணவுவிடுதிகளும் இருக்கும்.

வழியில் இயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. பனிபடர்ந்த மலைகள், பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்களால் இருட்டான காடுகள், சலசலக்கும் நீரோடைகள், மேய்ச்சலில் மேயும் பசுக்கள், அவற்றின் கழுத்தில் தொங்கும் பெரிய மணிகளின் ஓசை (இம்மணிகளை கடைகளில் சுற்றுப்பயணிகளுக்கு பரிசுப்பொருட்களாக விற்பர்) நடையின் அலுப்புத் தெரியாத வண்ணம் விரிந்து செல்லும். பள்ளத்தாக்குகளிலுள்ள கிராமங்களின் வழியாக நடக்கும் போது அருகிலுள்ள மலைகளைப் மேலெடுத்துப் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் பிரமிக்கச் செய்யும்.


கிராமம் ஒன்றை நோக்கி...


கிராமமொன்றிலிருந்து மரங்கள் செறிந்த காடொன்றிற்கு...

எல்லாப் பாதைகளும் நடப்பதற்கு சுலபமாக இருந்துவிடுவதில்லை. அதுவும் வெயில்காலத்தில் மலைகளில் ஏற்றம் மிகுந்த பாதையில் நடப்பதற்குக் கேட்கவே வேண்டாம். முகட்டை ஏறி அடைந்துவிட்டு வந்த பாதையைத் திரும்பிப் பார்த்ததால், களைப்பெல்லாம் காணாமல் போய்விடும்.


இதுவும் ஒரு பாதை...


அதோ அந்த மலையுச்சியிலிருந்து இங்கு வர மூன்றரை மணிநேரங்கள் ஆகும்.

கோடைகாலத்திற்குக் காத்திருக்கிறேன்.

Friday, January 14, 2005

ஒருத்தன் போனாலென்ன?

சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றி வலைப்பதிவுகளில் வந்து கொண்டிருக்கும் தகவல்களை அவ்வப்போது படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சில விஷயங்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன.

பல மாதங்களாக இங்கே வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அச்சுப்பிரதி ஒரு நாள் நின்றுவிட்டது. எப்பொழுது சந்தா முடிகிறதென்று பார்க்க நானும், சந்தா முடியப்போகுமுன் சந்தாதாரருக்கு நினைவூட்ட அவர்களும் மறந்துவிட்ட சமயத்தில் (விற்பவர்கள் இப்படியா இருப்பது?!), காலச்சுவடு இணையத்திலேயே படிக்கக் கிடைப்பது தெரியவர, அதிலேயே எப்போதாவது படிக்கிறேன். சமீப காலத்தில் காலச்சுவட்டைப் பற்றிக் கேட்கும் சில செய்திகளும் சந்தாவைப் புதிப்பிப்பதற்கு உள்ள ஆர்வத்தைத் தள்ளிப்போடுகிறது, பார்க்கலாம்.

டாலர் தேசம் என்கிற புத்தகம் வருவதற்குமுன் பா.ராகவன் தனது வலைப்பதிவில் இந்தத் தேதிக்கு முன்னால் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு 30% தள்ளுபடி தரப்படும் என்று அறிவித்திருந்தார். மலிவாகக் கிடைக்கிறதே, அப்படியாவது ஊரில் இருப்போர் படிக்கட்டுமேயென அதை இந்தியாவிலிருக்கும் உறவினர் பெற்றுக்கொள்ளும் வகையில், கடைசி நாளன்று குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு மின்னஞ்சலொன்று அனுப்பினேன். அது கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதென்று நினைக்கிறேன். அவ்வஞ்சலிலேயே, ஒருவேளை தள்ளுபடிக்கான தேதி முடிவடைந்திருந்தாலும் சாதாரண விலையிலேயே அங்கு அனுப்பி வைக்கும்படியும் எழுதியதாக நினைவு. அனுப்பும்போதே ஒருவிதத் தயக்கத்துடன் இருந்த எனக்கு, பதிலொன்றும் வராமையைக் கண்டு ஏன் அனுப்பினோம் என்றாகிவிட்டது. ஒரு பிரதியை நான் வாங்காததாலோ அல்லது அதை எனக்கு விற்காததாலோ இருவருக்கும் ஒன்றும் நஷ்டம் வந்துவிடப்போவதில்லை.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை வைத்துப்பார்த்து, கணிசமாக விற்க ஆரம்பித்துவிட்ட நிலையில் பதிப்பாளர்களுக்கு ஒரு-வாசகன் என்ன பெரிய பொருட்டாகிவிடப்போகிறான் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.

கிடக்கட்டும் விடுங்கள், நல்ல இசையொன்றைக் கேட்போம்.

யொஹான் ஸெபாஸ்டியான் பாஹ் (Johann Sebastian Bach, 1685-1750)-ன் Air. இந்த Air-லேயே பல வடிவங்கள் (D-Dur, G,...)இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த இசை பல்வேறு கருவிகளால் இசைத்துப் பார்க்கப்பட்டுள்ளது. நான் கேட்டதில் (குழல், வயலின், ஆர்கன்), வயலினைக் கொண்டு வாசிக்கப்பட்ட D-Durதான் அருமையாக இருந்தது. இணையத்தில் தேடிப்பார்த்ததில் சுமாரான இந்த சுட்டி கிடைத்தது.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

Thursday, January 13, 2005

பொங்கலுக்கு முந்துன நாள்

நம்மூர்ல இன்னிக்கு போகீங்களா, ஒன்னுந் தெரியமாட்டேங்குதுங்க இங்க! இந்நேரம் எல்லா வூட்லயும் பூசி மொழிகி கோலம்போட்டு காப்புக் கட்டீருப்பாங்க. அத்தோட அத முடிச்சுக்கிட்டாப் பத்தாதுங்களா?

வெநாயகர் சதுர்த்தியன்னைக்கு எங்கூர் புள்ளயார் கோயிலுக்கு கொழுக்கட்டகளக் கொண்டுக்கிட்டுப்போயி வேண்டிக்குவாங்க. அதுக்கப்புறம் அதயே அங்க பெரசாதம்ன்னு திருப்பித் தருவாங்க. கோயில்ல அன்னைக்குக் கொஞ்ச நேரம் சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டுக பாடிக்கிட்டு இருக்கும். அந்தளவுக்குத்தான் வெநாயகர் சதுர்த்திங்கறது நடந்துக்கிட்டிருந்தது. இன்னிக்கென்னடான்னா வண்ண வண்ணமா அந்த வெநாயகர், இந்த வெநாயகர்ன்னு பல தினுசுல, அளவுல கண்ட ரசாயனச் சாமாங்களப் போட்டுச் செய்யறதோட நிக்காம, அதுகளத் தண்ணீல கரைக்கெறேம் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு கூட்டங்கூட்டமா சத்தம் போட்டுக்கிட்டுப் போய் கடல்ல கொட்டி நாறடிக்கறாங்க. அதப்பாத்துட்டு மித்த ஊரு சனம் சும்மா இருக்குங்களா, தம் பங்குக்கு ஆறு, கொளம் குட்டைகள ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

அதமாதிரியே போகியக் கொண்டாடரேன்னுட்டு கண்டதப் போட்டு எரிச்சு கூத்தடிச்சிட்டிருக்காங்க. இப்படி குப்ப கூளத்த வழில போட்டு எரிக்கற சமாச்சாரத்த எங்கயும் பாத்ததில்லீங்க. எதெதுலயோ முன்னேறறோங்கறோம், இதுகள்ல மட்டும் ஏம்பின்னுக்குப் போறோம்னு தெரீலீங்க!

Wednesday, January 12, 2005

ரயிலை மறந்தோம்!

தமிழகத்தில் பிரயாணம் என்பது பேருந்தை மையமாகக் கொண்டே இருப்பது என்னளவில் கேள்விக்குரியது. கோவையிலிருந்து நாற்பது கி.மீக்குள் இருக்கும் பொள்ளாச்சியானாலும் சரி, சுமார் ஐந்நூறு கி.மீ தொலைவில் இருக்கும் சென்னையானாலும் சரி, பேருந்தில் சென்று நொந்து நூலாக யாரும் தயங்குவதில்லை. குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டியானாலும் சரி, குறிப்பிட்ட தொலைவிற்குமேல் பேருந்துப் பயணம் விரும்பத்தக்கதாகத் தோன்றவில்லை. பேருந்துகளிலேயே பெரும்பாலானோர் பயணிப்பது பின்வரும் காரணங்களினால் இருக்கலாம்:

பேருந்துக் கட்டணங்கள் குறைவு (ரயில் கட்டணங்களுடன் ஒப்பிடும்பொழுது).
நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிச் சென்றுவிடுமளவில் அவை மலிந்துள்ளன.
செல்ல வேண்டிய இடங்கள் (கோவை போன்ற நகரங்களில்) பேருந்து நிலையங்களைச் சுற்றியே அமைந்துவிட்டன.
ரயில் இணைப்புகளின் போதாமை.
சரியான இணைப்புகள் இருப்பினும் எப்போதாவது ஒரு(அல்லது சில) முறை வரும் ரயில்கள்.
...
...

ரயில் நிர்வாகம் பயணிகளைத் தன்பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை விட்டுவிட்டு இருப்போர்களையும் இழந்து கொண்டிருக்கிறது (http://news.bbc.co.uk/1/hi/business/4152575.stm). இலாபமீட்டும் குறிக்கோளைக் கொண்டிருந்தார்களேயானால் சேவை, நேர்த்தித்திறன் முதலானவற்றில் முன்னேற்றம் தென்படும். இல்லையெனில் ஹைதரலி காலத்துச் சாமான்களையும் (அழுக்குப்படிந்த பெட்டிகள், ஐம்பதாண்டுகளுக்கு முன் வடிவமைத்த அதேபெட்டிகள், மோசமாகக் கையாளப்படும் ரயில்நிலையங்கள்...), முறைமைகளையும் வைத்துக் காலம் தள்ளிக் கொண்டிருக்கமாட்டார்கள். இங்கு குற்றம் சொல்வது என் நோக்கமல்ல; வளர மறுக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம்தான்.

அடிக்கடி ஒன்றை நினைத்துப்பார்ப்பேன். கோவை-மதுரைக்கிடையில் பரிதாபமான ஒற்றையடிப்பாதை போல ஒரு ரயில் பாதை செல்கிறது. இப்பாதையில் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு முறையே ரயில்கள் செல்கின்றன என நினைக்கிறேன். இப்பாதையை மின்சார ரயில்கள் இயங்கும்வண்ணம் இருவழிப்பாதைகளாக மாற்றி, குறைந்தபட்சம் மணிக்கொரு முறையாவது ரயில்களை இயக்கினால் எவ்வளவு பேர் பயணடைவர்! உதாரணமாக, கோவை-பொள்ளாச்சிக்கு இடையில் மட்டும் கிட்டத்தட்ட தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நொடிக்கொருமுறை செல்லும் பேருந்துகளில் சென்று கொண்டுள்ளனர். இக்கூட்டத்தினர் கணிசமான அளவில் ரயில்களைப் பயன்படுத்தத் துவங்கினால் அச்சாலையில் பெருமளவிற்குப் போக்குவரத்துக் குறைவதுடன், எரிபொருளும் எவ்வளவோ மிச்சமாகும். ரயில்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துமாறு செய்தால் பயணச்செலவு தானாகக் குறையப்போகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற நிலையே இருக்கலாம். ம்...நாம் மட்டும் கனவு கண்டு என்ன பயன்?

-----------------

படம்:


சுவிஸில் உள்ள பிலாட்டுஸ் என்ற மலைமீது எடுத்த படம்.

இசை:

நான் வாங்கிய முதல் குறுந்தகட்டில் இருந்த பாடலென்று நினைக்கிறேன். பேத்தோவனின் [Ludwig van Beethoven (1770-1827)] Moonlight Sonata, 1st movement. அத்தகட்டில், பியானோ இசையுடன் பின்புலத்தில் வேறு சில வாத்தியங்களையும் இசைத்திருந்தனர். தூங்குமுன் கேட்டுப்பாருங்கள், இரவின் அமைதியைக் கூட்டும். mp3-ல் இப்பாடலுக்கான சுட்டி ஒன்று.

Tuesday, January 11, 2005

Pictures at an Exhibition

வரும் நாட்களில் நான் ரசித்த மேற்கத்திய செவ்வியல் (Classical, நன்றி: வெங்கட்) இசைகள் சிலவற்றைப் பற்றி தற்போக்காகச் (random) சொல்லலாமென்றுள்ளேன். எனவே, முதலில் சொல்லப்போகும் இசைக்கும் பின்னால் சொல்லப்போவதற்கும் ஏற்ற தாழ்வுகள் ஏதும் கிடையாது. இசையின் நுணுக்கங்களைப் பற்றியெல்லாம் அலசி ஆராயும் திறனில்லா நிலையில் நம்மால் முடிந்தது கேட்க மட்டுமே. பள்ளிகளில் இசை ஒரு பாடமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் (உருப்போடற இடத்துல உசுருள்ள சமாச்சாரத்துக்கு என்ன வேலன்னு கேக்கறீங்களா?).

இசை தொடர்பான சில சாதாரண சொற்களுக்குக்கூட ஓரளவு துல்லியமான தமிழ்ப்பதங்களைச் சொல்லச் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது; இது வருத்தமளிக்கும் நிலை. காட்டாக எதற்கெடுத்தாலும் இசையமைப்பாளர் என்றே பழகிவிட்ட பிறகு Musician, Composer-க்கு இடையிலுள்ள வித்தியாசத்தைச் சொல்வது எளிதாக இல்லை. அதேபோல Orchestra, Orchestration என்பவற்றிற்கெல்லாம் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது; 'சேர்ந்திசை' என்பதெல்லாம் இதற்கு இணையான சொல்லாகத் தெரியவில்லை. தமிழில் ஒரு சொல்லைச் சொல்லும்போது நுட்பமாக இல்லாமல் பொதுப்படையாகவோ அல்லது சுற்றி வளைத்துச் சொல்லும் நிலையே உள்ளது. 'வாத்திய இசைக் கலைஞர்' என்று நீட்டி முழக்காமல் 'வாத்தியக்காரர்' என்று சொல்லிவிட்டுப் போகலாமே! சரி, அவ்வாராய்ச்சியை விட்டுவிட்டு எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்ல வருகிறேன்.

இன்றைக்கு முஸ்ஸோர்க்ஸ்க்கியின் Pictures at an Exhibition பற்றிக் காண்போம். மோடஸ்ட் முஸ்ஸோர்க்ஸ்க்கி (Modest Mussorgsky, 1839-1881) ரஷ்ய இசையமைப்பாளர். அவரது புகழ்பெற்ற உருவாக்கங்களில் ஒன்றுதான் மேற்சொன்னது.

இளவயதிலேயே இறந்துவிட்ட கட்டிடக் கலைஞரும் (architect), ஓவியருமான தன் நண்பர் விக்டோர் ஹார்ட்மானின் (Viktor Hartmann) நினைவாக பியானோவில் இசைப்பதற்காக எழுதிய இசையது. குறுந்தகட்டில் பல்வேறு வாத்தியங்களைக் கொண்டு இசைக்கப்பட்ட பதிவைக் (இப்போதைக்கு இதையே நான் பரிந்துரைப்பேன்) கேட்டுப் பழகிவிட்டு, இணையத்தில் கொஞ்சம் தேடிக் கண்டுபிடித்து பியானோவில் மட்டும் இசைக்கப்பட்டதைக் கேட்க (அதுவும் 'சாம்பிள்'கள்தான்) என்னவோ போல்தானிருந்தது. குறுந்தகட்டில் பதினான்கு துண்டுகளை(pieces)/பாடல்களை அடக்கிய இவ்விசை சுமார் 33.5 நிமிடங்களுக்குள் முடிகிறது.

Pictures at an Exhibition, ஹார்ட்மானின் ஓவியக் கண்காட்சியில் சுற்றி நடப்பதை விவரிக்கும் வண்ணமாக எழுதப்பட்டது.

Promenade - பார்வையாளர் (முஸ்ஸோர்க்ஸ்க்கி?) கண்காட்சியில் நுழைந்நது ஒரு படத்திலிருந்து மற்றொன்றிருக்கு செல்வதைக் குறிப்பதுடன், அப்படங்கள் ஏற்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தும்விதமாகவும் உள்ளன. இவை நான்கைந்து முறை திரும்ப வருகின்றன.
Gnom - இது க்னோம் போல இருக்கும் ஹார்ட்மானின் பாக்குவெட்டி போன்ற பொம்மையின் வடிவமைப்பு ஓவியத்தைப் பார்க்கும்போது வெளிப்படும் உணர்வு. க்னோம் என்பது லத்தீன் சொல், அர்த்தம் தேடிப்பார்க்கவேண்டும்.
Promenade 2 - இது இத்தாலியின் பழைய கோட்டையின் படத்திற்கு இட்டுச் செல்கிறது.
Il vecchio castello - அக்கோட்டையின் முன்பு நின்று பாடும் ஒருவரின் ஓவியத்திற்கான இசை.
Promenade 3 - இப்பாடல் பாரீஸில் இருக்கும் தோட்டமொன்றிற்கான படத்திற்கு அழைத்துச் செல்கிறது.
Tuileries - அத்தோட்டத்தில் குழந்தைகள் சத்தமிட்டு விளையாடிக்கொண்டிருக்கும் படத்திற்கான உணர்வு.
Bydlo - போலந்து நாட்டின் மாட்டுவண்டியின் படத்தைப் பார்த்து.
Promenade 4
Ballet des Poussins dans leurs coques - பாலே நடமொன்றிற்காக ஹார்ட்மான் வரைந்த உடைகளின் வடிவமைப்பு.
Samuel Goldenberg et Schmulye - நான் மிகவும் ரசித்த இசையிது. இங்கு முஸ்ஸோர்க்ஸ்க்கி பணக்கார, ஏழை யூதர்களிருவரின் படங்களைக் கண்டு வெளிப்படுத்தும் உணர்வு.
Le Marche de Limoges - சந்தை ஒன்றின் ஓவியம், இசையில்.
Catacombae (Sepulcrum Romanum) - சுடுகாட்டு ஓவியமொன்றிற்கான இசை.
Die Huette d.Baba Yaga-La Cabane - பாபா யாகா ரஷ்ய கதைகளில் வரும் ஒரு சூனியக்காரி. பாபா யாகாவின் குடிசையைப் போன்றதொரு கடிகாரமொன்றிற்கான வடிவமைப்பு ஓவியத்தைப் பார்த்து எழுந்த இசை.
La Porte de Kiev - கடைசியாக, ஹார்ட்மானின் ஓவியமான கியேவ் (சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் தலைநகரம்) நகரத்திற்கான மாபெரும் கதவிற்கான அற்புதமான இசை.

முஸ்ஸோர்க்கியைப் பற்றியோ அவரது இசைகளைப் பற்றியோ மேலும் தெரிந்துகொள்ள.....என்ன அதற்குள் கூகிளுக்குப் போய்விட்டீர்களா?

Monday, January 10, 2005

தங்கங்களே!...

புகைப்படங்கள் சிலவற்றை இங்கே இடப்போவது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதற்கு வேண்டிய படமொன்றை மாலையில் தெரிவு செய்துகொள்ளலாமென நினைத்திருந்த வேளையில், சில படங்கள் மின்னஞ்சலில் வந்தன. சரி அவற்றையே இட்டுவிடலாமென்று...இதோ அவை:


ஆமாங்கோ, தங்கக் கட்டிகளேதான்!


இங்கிருந்து எடுத்ததைத்தான் அப்படி அடுக்கீருக்காங்க. இதென்ன பாதாளச் சொரங்கமா?

ம்.ஹும்..

அட, 'டாங்கர்' வண்டி!! இவங்கள எல்லாம் எங்கயோ பாத்த மாதிரி இருக்கே!

ஆமாமாம், அவங்களேதான். குழிக்குள்ளார இருந்து புடிச்சதாச் சொல்லி ஒருத்தரோட பல்லப் புடிச்சு பாத்தாங்களே, நெனவிருக்குங்களா? அவரோடதுங்களாம் இந்தத் தங்கமெல்லாம்!!! என்னமோ போங்க!

நான் ஆணையிட்டால்...

12.01.2005 'ஜூனியர்' விகடனில் வந்திருக்கும் ஒரு கட்டுரை ("வேதனையில் சமூக சேவகி"), சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற தமிழக அமைச்சர் ஒருவர் பிறப்பித்த சில உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்கிறது. தனிப்பட்ட முறையில் அமைச்சராக இருக்கும் மனிதர் ஒருவர் எப்படிப்பட்டவராகவோ, எக்கட்சியைச் சார்ந்தவராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அமைச்சர் என்று வரும்போது அது மதிக்கப்பட வேண்டிய பொறுப்பு. அந்நிலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, "நீங்கள் சொல்லி, நாங்கள் என்ன கேட்பது" என்று உதாசீனம் செய்தால் என்னவென்பது? அமைச்சர் ஆணையிட்டால் அதிகாரிகள் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென்ற விதிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அவ்வாறு இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

அதேபோன்று, சென்ற வெள்ளியன்று (07.01.2005) சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்து முடிந்தபின் திமுக துணைப்பொதுச் செயலாளர் அளித்துள்ள பேட்டியில் " 'ஆணையிட்டிருக்கிறேன்' என 25 முறை முதல்வர் கூறினார். அந்த ஆணைகள் எல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல்வடிவம் பெற வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற வேண்டும். இதுவே எங்களது விருப்பம்." என்கிறார் (நன்றி: தினமணி 08.01.2005). ஆணையிட்டாலும் அது நிறைவேறாமல் போகக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட நம்பிக்கையாகவே இது உள்ளது. ஆணைகளுக்கு ஏன் இந்த நிலைமை?

ஆணைகள் தொடர்பான வேறொரு செய்தி.

இந்த வார நட்சத்திரம் - எதிர்பாரா அழைப்பு

மாதத்திற்குச் சில முறை எழுதிக் கொண்டிருந்தேன். இனி ஒரு வாரத்திற்கு தினமும் எழுதியாக வேண்டும். சுதந்திரத்தைப் பறித்த தமிழ்மணம் வாழ்க! :-)

அனைவருக்கும் வணக்கம்!

எதை எழுதுவது? சென்ற வாரம் தமிழ்சசி, அதற்கு முன் வெங்கட் போன்றோர் ஓரு துறையை எடுத்துக்கொண்டு அதில் தூள்கிளப்பினார்கள், அதுபோல் இங்கு நடக்காது. ஆகவே வழக்கம்போல எதையாவது எழுதிச்செல்ல முயல்கிறேன். தினமும் புகைப்படம் ஒன்றை இடலாமென்று ஓர் எண்ணமுள்ளது, முடிந்தால் அதைப்பற்றிய சிறு குறிப்பும். கூடவே, நான்கேட்ட சில மேற்கத்திய செவ்வியல் இசைகளில் பிடித்தவற்றைச் சொல்லலாமென்றுள்ளேன், குறைந்தபட்சம் பெயர்களையாவது.

எழுதப்போகும் பதிவுகள் அளவில் சுமாரானவையாக இருக்கலாம் (சட்டி-அகப்பையை நினைத்துக் கொள்ளவும்), ஒருவாரம் எப்படியேனும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

Thursday, January 06, 2005

டியேகோ கார்சியா (Diego Garcia)

அமெரிக்காவின் இராணுவ தளங்கள் ஜெர்மனி, தென்கொரியா போன்ற நாடுகளில் இருப்பது தெரியும். ஆனால் இந்தியப் பெருங்கடலின் தென்முனையில் உள்ள ஒரு தீவில்கூட இருப்பது இன்றுதான் தெரியவந்தது, சுனாமியின் பாதிப்பு இத்தீவிற்கு வரவில்லை என்ற செய்தியின் வாயிலாக. அத்தீவு மட்டும் எப்படித் தப்பித்தது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

டியேகோ கார்சியா இந்தியப் பெருங்கடலின் தென்முனையிலுள்ள பெரிய தீவு; இந்தியாவிலிருந்து 1000 மைல்களுக்கு அப்பாலுள்ளது. பிரிட்டிஷாருக்குச் சொந்தமான இத்தீவில் இப்பொழுது அமெரிக்க விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கிருந்தும் வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதான விமானத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சி.ஐ.ஏவின் சில வேலைகளுக்கும் இத்தீவு உபயோகப்படுத்தப்படுகிறதாம்.

டியேகோ கார்சியாவைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம். அதன் வரலாறைப் படிப்பதால் ஏற்படுவது வழக்கமான குமுறல்தான், அதனால் ஆகிவிடப்போவது ஒன்றுமில்லை.

தொடர்புடைய சில செய்திகள்:
Diego Garcia Navy base reports no damage from quake, tsunamis
Diego Garcia Escapes Tsunami Damage

Wednesday, January 05, 2005

ஐரோப்பாவின் அஞ்சலி

சுனாமியின் தாக்குதலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஐரோப்பாவின் பெருநகரங்கள் பலவற்றில் இன்று மதியம் 12.00 மணிக்கு மூன்று நிமிட மெளனம் அனுசரிக்கப்பட்டது. தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன; கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. விமான நிலையங்கள், பங்குச் சந்தைகள், பள்ளிகள், நகரின் முக்கிய வளாகங்கள் முதலான பொதுவிடங்களில் மக்கள் அப்படியே நின்று அஞ்சலி செலுத்தியதைச் செய்திகளிலும் காணமுடிந்தது. பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அம்மூன்று நிமிடங்களுக்கு ஒலியை நிறுத்தியிருந்தனவாம்.

நிறுவனங்கள் தங்களது இணைய அகத்தின் (intranet) வாயிலாக அழைப்பு விட்டிருக்கக்கூடும் (எங்களுக்கு அப்படித்தான் செய்திருந்தார்கள்).

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகபட்ச உதவித்தொகையை (500 மில்லியன் யூரோக்கள்) ஜெர்மனி இன்று அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இன்று தேசிய நிதிச் சேகரிப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பொது ஒலி(ளி)பரப்பு ஸ்தாபனத்தின் அங்கமான ஓர் அறக்கட்டளை மூலம் நிதி சேகரிக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் அனுப்பப்படுகிறது. நிதியை இலவசத் தொலைபேசி எண், ஒரு குறிப்பிட்ட அஞ்சல்வங்கிக் கணக்கு மற்றும் இணையத்தின் மூலமாகச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இத்துடன், பிரதானத் தொ.கா அலைவரிசையொன்றில் 100 நிமிடங்களுக்கான நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பி அதன் மூலமும் நிதியைச் சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் (கொஞ்ச நேரம் பார்த்ததில்), பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து (இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து) செய்தியாளர்கள் மூலம் நேரடி தகவல்களைப் பெறுதல்; பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்கள் அல்லது அவர்களைச் சார்ந்தோரைப் பற்றிய செய்திகள்; அரங்கத்தில் குழுமியுள்ள பல்வேறு நாட்டைச் சார்ந்த மக்களிடையே உரையாடுதல்; பாடல்/நடனம் போன்ற ஒன்றிரண்டு கலை நிகழ்ச்சிகள் (மூன்று பேர் அடங்கிய குழுவொன்று பரத நாட்டியம் ஆடினர்) போன்றவை இடம் பெற்றிருந்தன.

இதுவரை 50 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் (1 CHF = .857 USD) மேல் குவிந்துள்ளதாகத் தெரிகிறது (ஆன்-லைன் வழியாக மட்டும்). 100 மில்லியன்களைத் தாண்டக்கூடும்.

Tuesday, January 04, 2005

ஒன்னு ரெண்டு மூனு

ஒன்று - யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு - முகத்தில் கண் இரண்டு
மூன்று - முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு - நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து - ஒருகை விரல் ஐந்து
ஆறு - ஈயின் கால் ஆறு
ஏழு - வாரத்தின் நாள் ஏழு
எட்டு - சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது - தானிய வகை ஒன்பது
பத்து - இருகை விரல் பத்து.

மேற்கண்ட பாடல் 'எனது முதல் மழலை மொழி பாடல்கள்' என்ற புத்தகத்தில் (ISBN: 81-7478-233-8) இடம்பெற்றுள்ளது. இதை வாசித்துக் காட்டும் போதெல்லாம் ஏனோ கீழ்க்கண்ட பாடல்தான் நினைவுக்கு வந்து காற்றில் கலக்கிறது:

ஒன்னு - உங்க வீட்டுப் பொண்ணு
ரெண்டு - ராமலிங்கம் கண்ணு
மூனு - முருங்கப் பட்டத் தோலு
நாலு - நாய்க்குட்டி வாலு
அஞ்சு - அவரக்காப் பிஞ்சு
ஆறு - ரோட்டுமேல காரு
ஏழு - எலிக்குட்டி வாலு
எட்டு - டொம் டொம் தட்டு
ஒம்போது - ?
பத்து - ?

ஒம்போது, பத்து? - ம். ஹும்.. ஞாபகத்திற்கு வருவேனா என்கிறது; யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். நன்றி!

நல்லது செய்தல் ஆற்றீராயினும்

Criminals target tsunami victims

மனித குலம் தொடர்ந்து சீரழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறதென்று கவலைப்படுவதா?
மனிதனுக்குப் பணத்தின் மீது மட்டுமே பிடித்த பேராசை என்பதா?
இவர்களையும் சுனாமி கொண்டு சென்றிருக்கலாமே என்று சபிப்பதா?
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! என்று நொந்துகொள்வதா?

'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'-என்று நன்றாகவேதான் சொல்லிவைத்தார்கள், கேட்பார்தான் யாருமில்லை.

Saturday, January 01, 2005

பொருது-கும்மாளம்-விளையாட்டு

விளையாட்டு, விளையாட்டு வீரர், வீராங்கனை போன்ற சொற்களையே பொதுப்படையாக எல்லா 'sports and games'-தொடர்பானவைகளுக்கு உபயோகித்துப் பழகிவிட்டோம். 'sports'-ற்கும், 'games'-ற்கும் இடையே உள்ள நுணுக்கத்தைக் கண்டுகொள்கிறோமா? மடற்குழு மின்னஞ்சலொன்றில் இராம.கி. அவர்களின் கீழ்க்கண்ட விளக்கம் காணக்கிடைத்தது:

"ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் கீழே உள்ளவாறு கொடுத்திருக்கிறது.

sport - c.1400, from Anglo-Fr. disport, from O.Fr. desport "pastime,
recreation, pleasure," from desporter "to divert, amuse, please, play" (see
disport). Meaning "game involving physical exercise" first recorded 1523.
Sense of "stylish man" is from 1923. Verb meaning "to wear" is from 1778.
Sportsmanship is from 1745.

sport என்பது சண்டை, போர் ஆகியவை செய்யாத காலங்களில் போர்ச் செயலுக்குப் பகரி(substitute)யாகவே எழுந்தது. மற்போர் என்பதில் இரண்டு பேர் பொருதுகிறார்கள். வாள் போரில் இருவர் பொருதுகிறார்கள். பொருதுதல் என்ற வினையே போர் என்னும் பெயர்ச்சொல்லை உருவாக்கிற்று. sport என்பதும் ஒரு பொருதுதலே. (என்ன, வல்லடி - violence இல்லாத ஒரு போர்) பொருது என்றாலும் பெயர்ச்சொல் தான். sport என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் பொருது.

sportsman = பொருதாளன். /பொருதர்
sportswoman = பொருதாளி / பொருதி
sportsperson = பொருதாளர் / பொருதர்
sportsmanship = பொருதாண்மை / பொருதுமை
sportive = பொருதாக

விளையாட்டு என்ற சொல்லை வைத்துக் கொண்டால் மேலே உள்ளது போல் தொடர்புள்ள சொற்களைச் சொல்லுவது இடரலாய் இருக்கும்.

game என்பதற்கு கீழே உள்ளதை ஆங்கில வழியில் அறிகிறோம்.

game (n.) - O.E. gamen "joy, fun, amusement," common Gmc. (cf. O.Fris.
game, O.N. gaman, O.H.G. gaman "joy, glee"), regarded as identical with
Goth. gaman "participation, communion," from P.Gmc. *ga- collective prefix
+ *mann "person," giving a sense of "people together." Meaning "contest
played according to rules" is first attested c.1300. Sense of "wild animals
caught for sport" is c.1290; hence fair game (1825), also gamey "having the
flavor of game" (1863). Adjective sense of "brave, spirited" is 1725, from
the noun, especially in game-cock "bird for fighting." Game plan is 1941,
from U.S. football; game show first attested 1961.

கும்முதல் என்ற வினை குழுமுதல் என்ற பொருளில் வருவுதான். கும் என்பது தமிழில் கூட்டம் என்ற பொருள் தரும் முன்னொட்டு. வடமொழியில் இது சம் என்று ஆகும். கும்மாளம் என்பது கும்மிக் களிக்கும் செயல் தான். ஆட்டமும் கும்மாளமுமாய் என்று சொல்லுகிறோம் அல்லவா? ஆட்டம் என்பது act. "இந்தக் கும்மாளத்திற்கு நான் வரவில்லை; இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை" என்று சொல்லுவதை நினைவு கூரலாம். ஆட்டம் என்ற சொல் இந்தக் காலத்தில் மிக்க பொதுமைப் பொருள் பெற்றுவிட்டது. அதைக் குறுக்கி மீண்டும் விதப்பாக game என்பதற்குக் கொண்டு வருவதைக் காட்டிலும், கும்மாளம் என்பதைச் சுருக்கிக் கும்மை என்று சொல்லலாம். அது சொல்லுவதற்கு ஒரு மாதிரி இருந்தால் கும்மாளம் என்பதையே புழங்கலாம். நாளாவட்டத்தில் பழகிவிடும். கும்மாளம் என்பது மகிழ்வுக்காக உள்ளது என்ற நல்ல உள் உணர்வும் அதில் இருக்கும்.

gamesman = கும்மாளன். / கும்மைக்காரன்
gameswoman = கும்மாளி / கும்மைக்காரி
gamesperson = கும்மாளர் / கும்மைக்காரர்
gamesmanship = கும்மாளுமை /

அப்பொழுது விளையாட்டு என்பது என்ன? field event. விளை என்பது இங்கே விளைந்து முடிந்த வயற்காட்டில் உள்ள தட்டை நிலத்தை ஆகுபெயராய்க் குறிப்பது. 135-150 நாட்களுக்குப் பின் விளைநிலம் தரிசாகத்தானே கிடக்கும்? அங்கு நாட்டுப்புற விளையாட்டுக்கள் நடக்கும். விளையாட்டு இடம் விளைக்கு அருகில் உள்ள
மேடாகவும் இருக்கலாம். குமரி, நெல்லை மாவட்டங்களில் களியக்கா விளை, திசையின் விளை என்றெல்லாம் பல ஊர்களின் பெயர் இருக்கும். விளை என்பது field என்பதைத்தான் குறிக்கிறது. விளையில் ஆடுவது விளையாட்டு.

Sports consists of field events and games. பொருதுகள் என்பவை விளையாட்டுக்களையும், கும்மாளங்களையும் உள்ளடக்கியவை.
individual field event = தனியாள் விளையாட்டு.
team field event = தோம விளையாட்டு (தோமம் = கூட்டம், குழு; a group consists of many teams = ஒரு குழு பல தோமங்களைக் கொண்டது.)"